வியாழன், 26 மே, 2011

கருவிலேயே கருகும் பெண் சிசுக்கள்-30 வருடத்தில் 1.2 கோடி சிசுக்கள் அழிப்பு!


பெண்களை தெய்வமாக வணக்கும் இந்தியாவில்தான் பெண் குழந்தைகைளை பெற்றுக்கொள்ள அநேகம் பேர் தயக்கம் காட்டுகின்றனர். ஆண் குழந்தைகளை மட்டுமே பலரும் விரும்புவதால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 12 மில்லியன் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சித்தகவல் தெரியவந்துள்ளது. பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த, அதிகம் படித்த பெண்களே இந்த பாதகச் செயலை செய்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆண், பெண் விகிதாச்சாரத்தில் அதிக வேறுபாடு எழுந்துள்ளது.

ஆண் குழந்தைக்கு முக்கியத்துவம்

இந்தியாவில் ஆண் குழந்தைகளுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பதன் காரணமாகவே முதலில் உருவாகும் பெண் குழந்தைகளை அபார்சன் செய்து விடுகின்றனர்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதி வந்தபின்னர் படித்த பெண்கள் பலரும் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தெரிந்து கொண்டு பெண் என்றால் தயங்காமல் கருக்கலைப்பு செய்து விடுகின்றனர். இப்படி கருவிலேயே கொல்லப்பட்ட பெண்குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த முப்பதாண்டுகளில் மட்டும் 12 மில்லியனை எட்டியுள்ளதாக கனடா நாட்டின் டொராண்டாவில் உள்ள உலக சுகாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

கருவில் முதலில் உருவாகும் குழந்தை ஆணாக இருக்கும் பட்சத்தில் அந்த குழந்தையை எதுவும் செய்யாமல் பெற்றுக்கொள்ளும் தாய்மார்கள் அதுவே பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்வதற்கு தயங்குவதில்லை.

இந்தியார்களின் சமூக வாழ்க்கையில் ஆண் குழந்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதே பெண் குழந்தைகளை கருவிலேயே கொல்ல காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்த மனப்பான்மை படித்த மற்றும் பணக்காரர்களை மட்டுமல்லாது பாமரர்களையும் தொற்றிக்கொண்டுள்ளது.

ஒரு குழந்தை பாலிசி

அண்டை நாடான சீனாவில் ஒரு குழந்தை கொள்கை கடைபிடிக்கப்படுவதால் முதலில் உருவாகும் பெண் குழந்தையை அபார்சன் செய்து விடுகின்றனர். ஆனால் இந்தியாவில் இந்த கட்டுப்பாடு கிடையாது. இருப்பினும் நகரத்தில் வசிக்கும் பெண்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதால் அவர்கள் ஆண் குழந்தை மட்டுமே பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்கேன் செய்து பார்த்து பெண்குழந்தையை அபார்சன் செய்து விடுகின்றனர். இதனால் கடந்த 30 ஆண்டுகளில் ஆண், பெண் பாலினத்திற்கு இடையேயான விகிதாச்சாரம் அதிகரித்துள்ளது.

1990 முதல் 2005 வரை எடுத்த கணக்கெடுப்பின்படி பார்க்கும் போது 1990 ஆம் ஆண்டில் 1000 ஆண்குழந்தைகளுக்கு 906 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில் குழந்தைகள் பிறப்பு இருந்தது. அதுவே 2005 ஆம் ஆண்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 836 பெண் குழந்தைகளே பிறந்துள்ளன என்ற அதிர்ச்சி கலந்த உண்மை தெரியவந்துள்ளது.

1980 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டுவரையிலான கடைசி 30 ஆண்டுகளில் மட்டும் 4 முதல் 1.2 கோடி பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டிருப்பதே இந்த விகிதாச்சார மாறுபாட்டிற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதே நிலை நீடித்தால் 2 : 1 என்ற விகிதத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு குறைந்து விடும். பெண் குழந்தைகளை திருமணம் செய்வதற்காக ஆண்கள் அதிகம் போராட வேண்டியிருக்கும்.

கேள்விக்குறியான ஸ்கேன் தடைச்சட்டம்

கருவில் இருக்கும் குழந்தை ஆணா , பெண்ணா என்பதை ஸ்கேன் பரிசோதனை செய்து பெண்குழந்தைகளை கருக்கலைப்பு செய்வதை தடை செய்வதற்காக இந்தியாவில் 1996 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இருப்பினும் பெண் குழந்தைகளை அபார்சன் செய்வதை எதன் மூலமும் தடுக்க முடியவில்லை. இதே நிலை நீடித்தால் வருங்கால தலைமுறை ஆண்கள் திருமணத்திற்கு பெண் தேடி வேற்றுகிரகத்திற்குத்தான் செல்ல வேண்டியிருக்கும்

ஞாயிறு, 15 மே, 2011

மூளை சுறுசுறுப்பாக செயல்பட...

இயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. எவ்வளவு தெளிவாக சிந்திக்க மூளை துணைபுரிகிறதோ, அவ்வளவு வியப்பூட்டும் வகையில் விஞ்ஞானிகளையே குழப்பத்துக்கு உள்ளாக்கிவிடுகிறது மூளை. அதன் செயல்பாடுகள் மிக நுண்ணியதாகவும் தெளிவாகவும் இருக்கின்றன.

மிகச் சாதாரண மனிதர்கள் மூளையை 2 சதவீதமே பயன்படுத்துகிறார்களாம். நாம், புத்திசாலி என்று பாராட்டுபவர்கள்கூட 5 சதவீத மூளையையே பயன்படுத்துகிறார்கள். ஆய்வாளர்கள் 7 சதவீத மூளையையும், விண்வெளி விஞ்ஞானிகள் 11 சதவீத மூளையையும் பயன்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது. அப்படியானால் முழு அளவு மூளையின் செயல்பாடுகளை வியக்காமல் இருக்க முடியுமா?

மற்ற விலங்கினங்களில் இருந்து நம்மை வித்தியாசப்படுத்தி, அர்த்தமுள்ள இனமாக நிலைநிறுத்தி வருவதே இந்த மூளைதான். ஒரு நொடிக்குள் பல தூண்டல்களை எதிர்கொண்டு செயல்களை செய்ய துரிதமாக இயங்குவது மூளை. மனிதர்களில் கூட நாம் பிறரில் இருந்து வேறுபட்டு இருந்தால் அது நமது மூளையை பயன்படுத்தும் ஆற்றலில்தான்.

எனவே நாம் துரிதமாகச் செயல்பட்டு வெற்றி பெற வேண்டுமானால் மூளையை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதற்கு மூளை எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். அதன் சுறுசுறுப்பை அதிகரிக்க இங்கே சில டிப்ஸ்...

* மூளை சுறுசுறுப்பாக செயல்பட முதலில் அதிகாலையில் எழ வேண்டும். பின்பு நல்ல காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து சுமார் 15 நிமிடம் காற்றை உள்ளிழுத்து வெளியிட வேண்டும். மூச்சுப்பயிற்சி பெற்றவர்களிடம் பயிற்சி பெற்று செய்வது சிறந்த பலன் தரும்.

மேலும் "ட்ரெட்மில்"லில் ஓடுவது, ஜாக்கிங் செய்வது, ஓட்டம் போன்ற பயிற்சிகளை செய்தாலும் மூளையின் செயல்பாடுகள் விரைவுபடுத்தப்படும்.

* இரண்டாவதாக, சத்துள்ள சரிவிகித உணவுகளை உண்ண வேண்டும். குறிப்பாக முளைகட்டிய தானியங்கள், பச்சைக்காய்கறிகள், பழவகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* அதே வேளையில் உணவுக் கட்டுப்பாடும் அவசியம். கண்ட கண்ட வேளைகளில் சாப்பிடுவதும், அளவை மீறிச் சாப்பிடுவதும் மூளையின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒழுங்கற்ற உணவுமுறை மந்தத் தன்மையையும், சில வியாதிகளையும் ஏற்படுத்தும்.

* உடல் பராமரிப்பில் அக்கறை செலுத்த வேண்டும். நோய்கள் தாக்காத வகையில் தேவையான விழிப்புணர்வுடன் சுத்தமாக இருக்க வேண்டும். டைப் 2 நீரிழிவு, அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் மூளையின் செயல்களை பாதிக்கக் கூடியவை. இவை அறிவுத்திறனை பாதித்து, கவலைகளை அதிகரிக்கும். எனவே இவற்றைத் தவிர்க்க சிகரெட் மற்றும் புகைப் பழக்கங்களை கைவிட வேண்டும். மேலும் கொழுப்பு குறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்.

* அடுத்ததாக மூளை புத்துணர்ச்சியுடன் செயல்படத் தேவையானது ஓய்வு. மூளைக்கு ஓய்வு என்பது தூக்கத்தில்தான் கிடைக்கிறது. எனவே வேலை, வயதுக்கு தக்கபடி போதிய அளவு தூங்கி ஓய்வெடுங்கள். சரியான ஓய்வு இல்லாவிட்டால் மந்தத்தன்மை, சோர்வு ஏற்படுவதோடு சில வியாதிகள் தொற்றவும் வாய்ப்பிருக்கிறது.

* ஒரு நாளைக்கு 2 முறை காபி அல்லது டீ குடியுங்கள். இதில் உள்ள "காபீன்" என்னும் ரசாயனப்பொருள் புத்துணர்ச்சியை தூண்டும் திறன் உடையது. குறிப்பாக மாலைநேர காபி மூளையின் செயல்பாட்டை அதிக அளவில் தூண்டுவதாக ஆய்வில் கண்டறிந்து உள்ளனர். தினசரி 4 முறைக்கு மேல் டீ பருகுவதையும் தவிர்க்க வேண்டும்.

* அதேபோல் மூளைக்கு புத்துணர்ச்சி ஊட்டும் உணவு மீன். அதில் உள்ள "ஃபேட்டி ஆசிட்", ஒமேகா 3 ஆகியவை மூளை செயல்படும் விதத்தை துரிதப்படுத்துகிறது. எனவே உணவில் மீனையும் கூடுதலாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

* மூளை சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமானால் கவலைகள் இருக்கக் கூடாது. மன அழுத்தம் தரும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். உடனடியாக மாற்று செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கவலையைத் திசை திருப்பி மீண்டும் புத்துணர்ச்சியாக செயல்பட முடியும். யோகா, உடற்பயிற்சி போன்றவற்றிலும் ஈடுபடலாம்.

* அறிவுத்திறனை வளர்க்கும் போட்டிகளில் பங்கேற்றுப் பழகுங்கள்.

* நினைவுத்திறனை அதிகப்படுத்துவதற்காக மருந்து மாத்திரைகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

மேற்கண்ட வழிகளை பின்பற்றினால் மூளையில் சுறுசுறுப்பு தொற்றிக் கொள்ளும். வெற்றி கைகளை நீட்டி தழுவிக் கொள்ளும்.

முதுகு வலி எப்படி - ஏன் வருகிறது?


நவீன வாழ்க்கையில் உள்ள அழுத்தம் (Stress) தான் முதுகுவலியின் முதற்பெரும் காரணமாகக் கூறலாம். எப்போதுமே நாம் தலைதெறிக்க ஓடும் அவசரத்திலும் பல்வகைச் சூழ்நிலை அழுத்தங்களுக்கு ஆளாகி இருக்கிறோம்.

எதிர்பாராமல் அதிகப் பளுவை ஒருவர் தூக்க முயலும்போது முதுகெலும்பை நிலை நிறுத்தியுள்ள தசைகள் போதிய இணக்கத்தைத் தரத் தவறிவிடுகின்றன. அது முதுகைப் பாதித்து வலியில் முடிகிறது.

முதுகைக் குனியவைத்த நிலையில் பொருள்களைத் தரையில் இருந்து தூக்க முயற்சிப்பது, அதிக உயரத்தில் இருந்து குதித்து சடாலென்று தரையில் இறங்குவது,இவை இரண்டுமே அபாயகரமானவை.

திடீரென்று திரும்புவது, அதுவும் ஒரு கனமான பொருளை வைத்த நிலையில் திரும்புவது முதுகுவலிக்கு வழி வகுக்கும்.

சிலரது பணிகள் (வேலை நிலை) முதுகுவலி வரக் காரணமாகி விடுகின்றன. அதுவும் முதுகிற்கு அதிகத் தொல்லை தரும் பணி செய்பவர்களுக்கே இந்த வலி வந்துவிடும்.

உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள், டைப்பிஸ்டுகள், கீ-போர்டு ஆபரேட்டர்கள், போர்ட்டர்கள் முதலியோரைக் கூறலாம்.

தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது முதுகெலும்பைத் தாங்கும் தசைகள் பலவீனமுற வாய்ப்பளிக்கின்றன.

பொருத்தமற்ற நாற்காலியில் அமர்வதில் இருந்து இசகு பிசகான முறையில் உட்கார்ந்தே நின்ற படியோ (உதாரணங்கள் : பீடி சுற்றுவோர், கண்டக்டர்கள்) வேலை செய்வது வரை முதுகு வலி வரக் காரணங்களாகிவிடும்.

எப்படி வெளிப்படுகிறது?

முதலித் தசைத்துடிப்பு லேசான வலி தென்படும். இது தாங்க முடியாத நிலை வருவதற்கு முந்திய கட்டம்.

வழக்கத்துக்கு மாறான ஒரு கடினமான வேலையில் ஈடுபட்டிருக்கும்போது பளிச்சென்று ஒரு வலி முதுகில் தோன்றக் கூடும். அல்லது அந்த வேலை முடித்து இரவு உறங்கிய பின் மறுநாள் காலையில் அது தோன்றக்கூடும்.

முதுகுவலியின் தாக்குதல் முழு வேகத்தில் இருக்கும்போது வலி மிகவும் கடுமையாக இருக்கும்.

நிற்கிற இடத்திலேயே உறைந்துவிட்டது போல் நகரவே முடியாத நிலை ஏற்படும்.

உடலே வித்தியாசமான முறையில் வளைந்து முறுக்கிக் கொண்டது போல் தோற்றமளிக்கும். இந்த நிலை இரண்டு அல்லது மூன்று வாரங்கள் நீடிக்கலாம்.

முதுகின் கீழ்ப்பகுதியில் தான் முதலில் இது தோன்றும்.

முதுகின் மேற்பகுதி மரத்துப்போதல், பளிச் பளிச்சென்று விட்டுவிட்டு வலித்தல் காணப்படும்.

வெள்ளி, 6 மே, 2011

பெண்ணின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?


அன்பும், அரவணைப்பும் நிறைந்த வாழ்க்கைதான் நிறைவானது என்று பெரும்பாலான பெண்கள் கருதுகின்றனர். தன் வாழ்க்கைத் துணைவரிடம் இருந்து வெறும் உடல்ரீதியான தொடர்பை மட்டுமே அவர்கள் விரும்புவதில்லை. நேசம் மிகுந்த வார்த்தைகளைத்தான் பெண்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

இந்த விசயம் ஆண்களுக்குத் தெரியாமல் போகும்போதுதான் கருத்து மோதல்கள் ஏற்பட்டு விரிசல்கள் தோன்றுகின்றன. பெண்களின் மனதை புரிந்து கொண்டு உரிமையோடு நேசத்தை வெளிப்படுத்தினால் உறவுகள் வலுப்படும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

ஆறுதலாய் பேசுங்கள்

பேச்சுதான் பெண்களின் விருப்பத்திற்குரிய செயல். திருமணத்திற்கு முன்பு வரை உறவுகளோடும், நண்பர்களோடும் சந்தோசமாய் பேசிக்கழித்த பொழுதுகள் அடிக்கடி பெண்களின் நினைவுகளில் நிழலாடும். இது போன்ற சமயங்களில் ஆறுதலாய் பேசினால் அது பெண்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும். உங்களின் காதலையும், அன்பையும் முதலில் பேச்சின் மூலம் வெளிப்படுத்துங்கள்.

நடந்து கொண்டே படிப்பது எத்தனை சுகமானதோ, அதுபோல இல்லறத் துணையுடன் நடந்து கொண்டே பேசுவது இனிமையானது. நீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த நடை பேச்சு உதவும்.

இதய சிம்மாசனம்

திருமணம் செய்தவர்களின் வாழ்க்கையில் உடலுறவு என்பது பிரிக்க முடியாதது. எந்த வித வருத்தமும், வலியும் இன்றி அதனை அனுபவிக்க வேண்டும். இந்த விசயத்தில் பெண்களை ஜெயித்த ஆண்கள் நிரந்தரமாக பெண்களின் இதய சிம்மாசனத்தில் அமரலாம்.

தனது வாழ்க்கைத் துணைவர் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து பெண்களுக்குமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். பல விசயங்களை அவர்கள் மனதுக்குள் கற்பனை செய்து பார்த்திருப்பார்கள். எனவே எனவே உறவுக்கு முன்பும் சரி, உறவின்போதும் சரி ஆண்கள் பெண்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

விளையாட்டாக விளையாடுங்கள்

பெண்களைப் பொறுத்தவரை மன ரீதியான திருப்தியையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஆண்களோ, காரியம் முடிந்தவுடன் மறந்து விடுவார்கள் சற்று முன் நடந்ததை. ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அந்த இனிய உணர்வின் நினைவுகளில் சில மணி நேரங்களாவது மூழ்கிக் கிடப்பார்கள்.

மடியில் தலைசாய்ப்பது, விரலால் தலைகோதுவது, அன்பான, ஆறுதலான முத்தம், என சின்னச் சின்ன ரொமான்ஸ்கள் பெண்களுக்குப் பிடித்தமானவை. இவற்றை நிறைய பேர் நிறைய செய்வதில்லை. இதில்தான் சிக்கலே ஆரம்பிக்கிறது.

நேரடியாக விசயத்தை தொடங்குவதை விதம் விதமான முன் விளையாட்டுகளை விளையாடுங்கள். இந்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தாலே உறவுகளில் விரிசல் விழ வாய்ப்பில்லை.

தலை முதல் கால் வரை!


தலை முதல் கால் வரை அழகாகத் தோன்ற கீழே உள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவும்.

கூந்தல்: எண்ணெய் மசாஜ் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்க உதவும்.

வாரம் ஒரு முறை: எண்ணெயை லேசாக சூடாக்கி கூந்தலின் வேர்களில் ஆரம்பித்து நுனிவரை தடவவும். விரல் நுனியால் வேர்களை நன்றாக தேய்த்து விடவும்.

மாதம் ஒரு முறை: மேலே உள்ளது போல் எண்ணெயை தடவவும். பிறகு வெந்நீரில் ஒரு துணியை நனைத்து, அதை நன்றாக பிழிந்து விடவும். சூடான துணியை தலையில் கட்டவும். 15 நிமிடம் கழித்து கூந்தலை சீயக்காய் அல்லது ஷாம்பூவால் கழுவவும். வேர்களுக்குள் எண்ணெய் ஊடுறுவ இது உதவும்.

முகம்: வாழைப்பழத்தை நன்றாக மசித்து முகத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து கழுவி விடவும். இது முகத்திற்கு பட்டுப்போன்ற மென்மையும், பளபளப்பும் தரும். இனி அளவுக்கு அதிகமாக பழுத்த வாழைப்பழங்களை எறிய வேண்டிய அவசியமும் இல்லை!

அழுக்கும், எண்ணெய் பசையும் ஒன்று சேர்ந்தால் விளைவு, பருக்கள்தான்! இதை தடுக்க ஒரே வழி முகத்தை சுத்தமாக வைப்பது. இதற்காக முகத்தை அடிக்கடி கழுவவும்.

கண்கள்: கண்களைச் சுற்றி கருவளயங்கள் இருந்தால், சோர்ந்த தோற்றத்தை உங்களுக்கு தரும். இதை தவிர்க்க சரியான தூக்கம் தேவை. கருவளயங்களை போக்க உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரித் துண்டை கண்கள் மீது 15 முத‌ல் 20 நிமிடம் வைத்திருப்பது நல்லது.

உதடுகள்: மென்மையான உதடுகளின் ரகசியம் ஈரப்பதம். நெய், வாசலீன் ஆகியவற்றை தடவுவதால் உதடுகளில் வெடிப்பு வருவதை தவிர்க்கலாம்.

உதடுகள் இளஞ்சிவப்பு நிறத்தைப் பெற தூங்குவதற்கு முன் பீட்ரூட் சாறு தடவவும்.

பற்கள்: மஞ்சள் கறைபடிந்த பற்கள் அழகான புன்னகையின் எதிரிகள்! டீ, காபி, புகையிலை போன்றவை பற்களில் கறைபடிய வைக்கும். இவற்றை முழுமையாக தவிர்க்க முடியவில்லை என்றால் அதன்பிறகு பற்களை தேய்ப்பது நல்லது. அதுவும் முடியவில்லை என்றால் தண்ணீரால் வாயை சுத்தம் செய்ய வேண்டும்.

சருமம்: உடலின் சருமத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு உயிரிழந்த சருமத்தை அகற்றுவது மிகவும் அவசியம். 2 தேக்கரண்டி சர்க்கரையை, 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயுடன் அல்லது மோருடன் சேர்க்கவும். இந்த கலவையால் உடலை தேய்த்து கழுவவும். இது சருமத்திற்கு புது பொலிவு தரும்.

கைகள்: கைகளை மிருதுவாக வைக்க கை கழுவியவுடன் க்ரீம் தடவவும். வீட்டு வேலை அல்லது தோட்ட வேலை செய்யும் போது மறக்காமல் கையுறை அணியவும்.

கால்கள்: கால்களில் வெடிப்பு வருவதை தவிர்க்க, கால்களை தேய்த்து கழுவ வேண்டும். இது சொரசொரப்பான தோலை நீக்கும். அதன் பிறகு காலில் க்ரீம் தடவினால் மெண்மையான கால்களைப் பெறலாம்.

தனி வருவாய் வரி செலுத்துவோர் பெரும் பண பரிமாற்றத்தைக் காட்ட வேண்டாம்: வருமான வரித் துறை!


தனி நபர் வருமான வரிச் செலுத்துவோர், வங்கிகளிலும், பரஸ்பர நிதிகளிலும், கடன் அட்டை வாயிலாகவும் மேற்கொள்ளும் பெரிய அளவிற்கான பண பரிமாற்றங்களை வருமான வரி விவர படிவத்தில் தெரிவிக்கத் தேவையில்லை என்று மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுவரை வருமான வரித் தாக்கல் செய்ய பயன்படுத்தப்பட்ட படிவங்களில் இருந்த ஆண்டு வருவாய்த் தகவல் (Annual Information Return) என்ற விவரக்கேட்பு பகுதி 2011-12ஆம் ஆண்டிற்கான சஹாஜ், சுகம், ஐடிஆர் 2, ஐடிஆர் 3 ஆகிய படிவங்களில் இருக்காது என்றும் வருமான வரித் துறை கூறியுள்ளது.

இதுவரை பரஸ்பர நிதிகளில் 2 இலட்சத்திற்கு மேல் முதலீடு செய்திருந்தாலோ அல்லது நிறுவன பத்திரங்களில் 5 இலட்சத்திற்கும் அதிகமாக முதலீடு செய்திருந்தாலோ அல்லது நிறுவனங்களின் பங்குகளில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக முதலீடு செய்திருந்தாலோ அதனை ஆண்டு வரு்வாய் விவரத்தில் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை இப்போது தனி நபர் வருமான வரி செலுத்துவோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வங்கிகளில் 10 இலட்சத்திற்கும் மேல் செலுத்தியிருந்தாலோ அல்லது கடன் அட்டைகளுக்கு 2 இலட்சத்திற்கு மேல் செலுத்தியிருந்தாலோ அல்லது அசையா சொத்துகளை வாங்க ரூ.30 இலட்சம் வரை செலவழித்திருந்தாலோ அதனை தனி நபர் வருமான வரி செலுத்துவோர் காட்ட வேண்டும் என்றிருந்தது. அதுவும் இப்போது நீக்கப்பட்டுவிட்டது.