திங்கள், 9 ஏப்ரல், 2012

தமிழகத்தில் சுற்றுலா பஸ், ஆம்னி பஸ், மேக்சி கேப், ஜே.சி.பி. எந்திரங்களுக்கு வரி அதிகரிப்பு!

சென்னை: சுற்றுலா வாகனங்கள், ஆம்னி பஸ்கள், மேக்சி கேப், மண் அள்ளும் எந்திரங்களுக்கான வரியை தமிழக அரசு அதிகரித்துள்ளது. இது தொடர்பான மசோதா இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: சுற்றுலா பஸ்களுக்கும் ஆயுட்கால வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இருக்கை எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு சுற்றுலா பஸ்களுக்கு காலாண்டு வரி விதிப்பதில் இடர்பாடு உள்ளது. எனவே 6 சதுர மீட்டருக்கு மேற்பட்ட தரை பரப்பு கொண்ட புதிய வாகனங்களுக்கு ஆயுட்கால வரி விதிப்பு செய்வது என்றும், ஏற்கனவே பதிவு செய்த வாகனங்களுக்கு தரை பரப்பின் அடிப்படையில் காலாண்டு வரி விதிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மண் அள்ளும் எந்திரங்கள், சாலையை செப்பனிடும் எந்திரங்கள், பளு தூக்கிகள், தளவாட வண்டிகள் உள்ளிட்ட கட்டுமான பணிகளில் ஈடுபடும் வாகனங்களும் தற்போது அதிகரித்துள்ளன. இதற்கான ஆண்டு வரி மிகவும் குறைவாக உள்ளது. எனவே இந்த வாகனங்களுக்கு ரூ.10,000 அளவில் ஆண்டு வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. உரிமையாளரின் வணிகம், தொழில் தொடர்புடைய நபர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பயன்பாடு (மேக்சி கேப்) அதிகரித்திருந்தாலும் மற்ற வாகனங்களை விட இந்த வாகனங்களுக்கு வரி குறைவாகவே உள்ளது. எனவே இந்த வாகனங்களை குளிர்சாதன வசதி, குளிர்சாதன வசதி இல்லாதவை என வகைப்படுத்தி இருக்கை அடிப்படையில் காலாண்டு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உபரி பேருந்துகள் (spare bus) ஒப்பந்த ஊர்திகளாக பயன்படுத்தப்படுவதால் அவை சிறப்பு நிகழச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் போது தனிப்பட்ட வரி ஒன்றை விதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. நமது மாநில வாகனங்களை கணக்கிடும்போது மற்ற மாநில ஒப்பந்த ஊர்திகள் அதிக அளவில் சாலையை பயன்படுத்துவதால் அந்த வாகனங்களுக்கு அதிக சதவீதத்திலான வரி விதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பஸ், மேக்சிகேப், ஜே.சி.பி. வாகனங்களுக்கு வரி உயருகிறது. மண் அள்ளும் ஜே.சி.பி. எந்திரத்திற்கு ஆண்டு வரி ரூ. 10 ஆயிரமாக உயரும். ரூ. 10 லட்சத்திற்கு மேல் உள்ள பழைய சுற்றுலா வாகனத்திற்கு 14.5 சதவீதம் ஆயுள் வரி விதிக்கப்படும். ரூ.10 லட்சம் மதிப்புள்ள வாகனத்திற்கு 10 சதவீத வரியும், ரூ. 10 லட்சத்திற்கு கீழ் உள்ள வாகனங்களுக்கு 15 சதவீத ஆயுட்கால வரியும் விதிக்கப்படுகிறது. கட்டுமான பணிகளில் ஈடுபடும் வாகனங்களின் வரியும் உயருகிறது.

வியாழன், 5 ஏப்ரல், 2012

ஒரு நிமிடத்தில் அப்படி என்னதான் நடக்கிறது இன்டர்நெட்டில்..!

இன்டர்நெட் யுகம் என்று அனைவரும் கூறுகையில், அப்படி இன்டர்நெட்டில் என்னதான் நடக்கிறது என்பதையும் ஒரு பார்வை பார்ப்போம். ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது இன்டர்நெட்டில். உலகம் முழுவதும் தகவல் களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் மூலம் 1 நிமிடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேடுதல்கள் நிகழ்கின்றன. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் 60 லட்சம் பேரால் பார்க்கப்படுகின்றன. அது மட்டும் அல்லாமல் ஃபேஸ்புக்கில் ஒரு நிமிடத்திற்கு 2 லட்சத்தி 77 ஆயிரம் லாகின்கள் செய்யப்படுகின்றன. மனதில் தோன்றியவற்றை அப்பொழுதே நம்மை ட்விட் செய்ய சொல்லும் ட்விட்டரில் ஒரு நிமிடத்திற்கு 1 லட்சம் ட்விட்கள் செய்யப்படுவதோடு, 320-திற்கும் மேற்பட்ட ட்விட்டர் அக்கவுன்டுகள் உருவாக்கப்படுகின்றன. ஃபோட்டோ ஷேரிங் மூலமாக மனதில் பட்டென்று ஒட்டி கொள்ளும் ஃப்லிக்கரில் ஒரு நிமிடத்திற்கு 3 ஆயிரம் ஃபோட்டோக்கள் அப்லோட் செய்யப்படுகின்றன. 2 கோடி ஃபோட்டோக்கள் பார்க்கப்படுகின்றன. ப்ரொஃபெஷனல் தோரணையில் கலக்கும் லின்க்டுஇன் சமூக வலைத்தளத்தில் 100-க்கும் மேற்பட்ட அக்கவுன்டுகள் புதிதாக ஆரம்பிக்கப்படுகின்றன. 47 ஆயிரம் அப்ளிக்கேஷன்கள் டவுன்லோட் செய்யப்படுகின்றன. இப்பொழுதெல்லாம் அதிக மக்களால் மொபைலில் நெட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1 நிமிடத்திற்கு 1,300 பேர்கள் மொபைல் மூலம் இன்டர்நெட்டிற்கு வருகை தருகிறார்கள். சமூக வலைத்தளங்கள் பெருகி வரும் காலத்தில் கூட இ-மெயில் மவுசு குறையவில்லை தான். 20 கோடியே 40 லட்சம் இ-மெயில்கள் ஒரு நிமிடத்திற்கு பரிமாறி கொள்ளப்படுகிறது. எதை பற்றிய சரியான குறிப்பேடுகள் தேவைப்பட்டாலும் பட்டென்று ஞாபகம் வருவது விக்கிப்பீடியா. இதில் 1 நமிடத்திற்கு 6 பக்கங்கள் உருவாக்கப்படுகின்றன. இப்பொழுது பயன்படுத்தப்பட்டு வருவதைவிட 2015-ஆம் ஆண்டில் 2 மடங்கு அதிகமாக நெட் டிவைஸ்கள் பயன்படுத்தப்படும் என்றும் சில முக்கிய தகவல்கள் கூறுகின்றன. 6 லட்சத்தி 39 ஆயிரத்தி 800 ஜிபி அளவு ஐபி தகவல் பரிமாற்றங்களும் நிகழ்கின்றன. அது மட்டும் அல்லாமல் ஆன்லைன் மூலம் அதிகமான புத்தகங்களை விற்பனை செய்து வரும் அமேசானில் 1 நிமிடத்திற்கு 83 டாலர் அதாவது ரூ.4,230 மதிப்புக்கு புத்தகங்கள் விற்பனையாகின்றன. இப்படி அடுத்து அடுத்து இன்டர்நெட் பற்றிய பெரிய தகவல்களை கூறுகிறது ஒரு பரபரப்பான ரிப்போர்ட். இந்த தகவலை படித்தவர்கள் மற்றவர்கள் போல் சும்மா இன்டர்நெட் உலகம் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்ற புள்ளி விவரத்தினையும் தெரிந்து கொண்டு சொல்லலாம், இது இன்டர்நெட் யுகமென்று.