வெள்ளி, 31 டிசம்பர், 2010

2011 இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!


இன்று புத்தாண்டு மட்டும் அல்ல! கண்ணாடி புத்தகத்தின் இரண்டாம்

பிறந்தநாள். இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அனைத்து வாசகர்களுக்கும் என்

மனமார்ந்த நன்றியே தெரிவித்துக் கொள்கிறேன். கண்ணாடி புத்தக வாசகர்கள்

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2011.

இளமை இதோ இதோ!

ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். இது சினிமாப் பாட்டு மட்டுமல்ல, வாழ்க்கைத் தத்துவமும் கூட.

ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் நம்மை விட்டு ஒரு ஆயுள் ஆண்டு விடை பெறுகிறது. இது பலருக்கும் கவலையைக் கொடுத்தாலும், கடந்து போனதை நினைக்காமல் நாம் இனி கடக்கப் போவதை நினைத்து தொடர்ந்து நடை போடுவதே பாசிட்டிவ் மனப்பாங்கு.

அந்த வகையி்ல் 2010ம் ஆண்டு விடை பெற்று விட்டது. குடும்ப வாழ்க்கையில் இந்த ஒரு ஆண்டில் நாம் எத்தனையோ சோதனைகளைச் சந்தித்திருப்போம். சில சாதனைகளையும் செய்திருப்போம்.

2010ல் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று எத்தனையோ தீர்மானங்களைப் போட்டிருப்போம். அதில் பலவற்றை செய்ய மறந்திருப்போம், சிலவற்றை செய்ய முயன்றிருப்போம். மொத்தத்தில் பாதிக் கிணறுதான் தாண்டியிருப்போம்.

ஆணாகட்டும், பெண்ணாகட்டும், வயது கூட கூட பலருக்கும் தாம்பத்யம் குறித்த கவலையும், சோர்வும் மெதுவாக எட்டிப் பார்க்கும். இதனால் ஏற்படும் மன அழுத்தம் பல குழப்பங்களைக் கூட்டி வந்து நடு வீட்டில் உட்கார்த்தி வைத்து விடும்.

வயது போனால் என்ன, உடல் நலிந்தால் என்ன, உண்மையான இளமை இவற்றில் இல்லை, உள்ளத்தில்தான் என்பதைப் புரிந்தால் நிச்சயம் எல்லாம் இனிமையாகும்.

2010ல் நமது குடும்ப வாழ்க்கையில், தாம்பத்ய வாழ்க்கையில் பல சந்தோஷங்களையும், சில சங்கடங்களையும் பார்த்திருப்போம். இவற்றை இன்றோடு விட்டு விடலாம். பிறக்கும் 2011ல் மனம் முழுக்க இளமையோடும், இனிமையோடும் வாழும் வழிகளைத் திட்டமிடலாம்.

எந்த விஷயத்தைச் செய்தாலும் அதைத் திட்டமிட்டு செய்ய உறுதி எடுப்போம். ஒரு காரியத்தில் இறங்கும்போது அதை வெற்றிகரமாக முடிப்பது எப்படி என்ற திட்டமிடலோடு ஈடுபட்டால் நிச்சயம் வாகை சூடலாம்.

2010ல் செய்ய நினைத்ததை, செய்ய முடியாமல் போனதை இந்த ஆண்டில் சாதிக்க முற்படுவோம்.

மனைவியுடனான உறவுகளை மேம்படுத்த இந்த ஆண்டும் உறுதி பூணுங்கள். கணவருடனான உறவுகளை வலுப்படுத்த மனைவியர்களும் இந்த ஆண்டில் உறுதி எடுக்கலாம்.

சந்தோஷமான, இனிமையான ஆண்டாக, பூரண திருப்தியுடன் கூடிய குடும்ப ஆண்டாக இது மலரட்டும், குதூகலம் கூடட்டும். உடலிலிருந்து கரைந்து கொண்டிருக்கும் இளமையை கருத்தில் கொள்ளாமல், உள்ளத்து இளமையைக் கூட்டி, வாழ்வில் இனிமை சேர்க்க 2011 அனைவருக்கும் உதவட்டும்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

ரூ.80 லட்சம் கோடியைத் தாண்டும் இந்திய ஊழல்கள்!

ஆண்டின் இறுதியில் வழக்கமாகப் பார்க்கப்படும் செய்தி கண்ணோட்டமாக இதனைப் பார்க்க முடியாது... மக்களின் வியப்பு, கோபம், விரக்தி, வெறுப்பு என மோசமான உணர்வுகள் அத்தனையையும் வென்றுவிட்ட சமாச்சாரம் இது. அதுதான் இந்திய ஊழல்கள். எதில் சர்வதேசத்துக்கு சவால் விடுகிறோமோ இல்லையோ... ஊழல்களில் உலக நாடுகள் போட்டி போட முடியாத அளவுக்கு முன்னேறி வருகிறது நாடு. கூடிய சீக்கிரம் ஊழல் தேசங்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தானை அடித்து வீழ்த்திவிடுவோம் என்று எதிர்ப்பார்க்கலாம்... காரணம் ஓரிரு கோடிகளிலிருந்து ஓரிரு லட்சம் கோடிகள் என ஊழலில் புரமோஷன் பெற்றிருக்கிறது இந்தியா.

இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா... ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு பெரிதாக பேசப்பட்டு வரும் 2 ஜி, ஆதர்ஷ், காமன்வெல்த் விளையாட்டு, ஐபிஎல், வங்கித்துறை, எல்ஐசி முறைகேடுகள் மட்டுமல்லாமல், கடந்த 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மொத்த மதிப்பு இது.

பத்திரிகைகள் / இணையங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தரப்பட்டுள்ள மதிப்பீடுதான் இது. நிஜத்தில் இதைவிட அதிகமாகவும் இருக்கலாம் ஆனால் நிச்சயம் குறைவாக இருக்க வாய்ப்பில்லை!

இந்த 12 ஆண்டுகளாக நடந்த ஊழல்களில் மட்டுமல்ல, இந்திய சரித்திரத்தின் உச்சகட்ட ஊழல் என்றால் அது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள முறைகேடுகளும் அதற்கு பிரதிபலனாக அதிகாரத்திலிருந்தவர்கள் அமுக்கிய பெரும் தொகையும்தான்.

இதோ அந்த ஊழலில் சில 'துளிகளை' இங்கே பார்க்கலாம்:

1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - ரூ 1.76 லட்சம் கோடி

இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். ஆனால் 2001-ம் ஆண்டிலிருந்தே இதுபோல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள இந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் அடித்துள்ள கமெண்ட் இது: 'இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களை வெட்கப்படச் செய்துள்ளது 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு' ('The spectrum scam has put 'all other scams to shame!'.)

2. சத்யம் மோசடி -ரூ 14000 - 25,000 கோடி:

இவ்வளவுதான் ஊழல் நடந்தது என்று இன்னும் கூட அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு தோண்டத் தோண்ட முறைகேடுகள் வரைமுறையற்று கொட்டிக் கொண்டே இருப்பது ராமலிங்க ராஜுவின் சத்யம் மோசடி ஸ்பெஷல்!

இது தனியார் துறையில் நடந்ததுதானே என்று விட்டுவிட முடியாது. பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டது.

இவ்வளவையும் செய்துவிட்டு, சிறையில் செல்போன், சாட்டிலைட் டிவி, பிராட்பேண்ட் இணைப்புடன் லேப்டாப், ஷட்டில்காக் விளையாட்டு என ராஜபோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்க ராஜூ.

சின்னதாகத் திருடி மாட்டிக் கொள்பவர்களை செக்குமாடாய் அடித்தே கொல்கிறார்கள்!

3. எல்ஐசி - வங்கித் துறை கடன் ஊழல் - மதிப்பைக் கணிக்க முடியாத அளவு பெரும் தொகை!

மாணவர்கள் படிக்க கடன்கேட்டால், வீட்டுப் பத்திரம் தொடங்கி அனைத்தையுமே அடமானமாக பிடுங்கப் பார்க்கும் இந்திய வங்கித் துறை, பெரும் பணக்காரர்களின் டுபாக்கூர் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக வாரி வழங்கியுள்ளதை சிபிஐ கண்டுபிடித்தது. காரணம்... இந்தக் கடன்களில் குறித்த சதவீதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கைமாறியதுதான்.

இன்னொரு பக்கம் எல்ஐசி எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுக் கடன் பிரிவு பல ஆயிரம் கோடிகளை வாரி வாரி பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கியுள்ளன. இந்தத் தொகைதான் ரூ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே முக்கிய அடிப்படை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

வங்கித் துறை - எல்ஐசி ஊழலில் கைமாறிய லஞ்சத் தொகை எவ்வளவு என்பதை இன்னும் கூட மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. இப்போதைக்கு உத்தேசமாக ரூ 1 லட்சம் கோடி என்கிறது சிபிஐ.

4. ஹர்ஷத் மேத்தா (ரூ 5000 கோடி)

லட்சம் கோடிகளில் ஊழலைப் பார்த்துவிட்டவர்களுக்கு, ஹர்ஷத் மேத்தாவின் இந்த ஊழல் 'ஜுஜுபி'தான். ஆனால் இந்த ஊழல் நிகழ்ந்த 1991-ம் ஆண்டில் இது மாபெரும் தொகை. இன்றைய ஸ்பெக்ட்ரமுக்கு நிகரானது என்றுகூடச் சொல்லலாம்.

அதிகப்படியான விலை ஏற்றத்தை உருவாக்கி பங்குகள் விலையை ஏற்றி மக்களின் பல ஆயிரம் கோடியை ஸ்வாஹா செய்தவர் இவர்.

2002-ல் ஹர்ஷத் மேத்தா செத்துப் போய்விட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் இன்னும் முடியவில்லை.

5. ஹஸன் அலிகான் (ரூ 80,000 கோடி)

ஹவாலா பணம் கடத்தியது மற்றும் வரி ஏய்ப்பின் மூலம் மட்டுமே ரூ 39120 கோடி பணத்தை கொள்ளையடித்தவர் இந்த ஹஸன் அலி. புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பார்ட்டி.

பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத வகையில் இதுதவிர ரூ 40000 கோடிக்கு செட்டில் செய்யுமாறு வருமான வரித்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

6. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் (ரூ 21 லட்சம் கோடி)

கிட்டத்தட்ட தினத்தந்தியின் சிந்துபாத் கதை மாதிரி ஆகிவிட்டது, இந்திய விவிஐபிக்களின் கறுப்புப் பணத்தைக் கண்டறியும் முயற்சியும். சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் இந்திய தொழிலதிபர்களின் பணம் ரூ 21 லட்சம் கறுப்பாக பதுக்கி வைக்கப்ட்டுள்ளது. இது நன்கு தெரிய வந்துள்ள தொகை. இன்னும் வெளியில் தெரியாத தொகை எத்தனை லட்சம் கோடி என்று தெரியவில்லை.

7. தேயிலை ஊழல் (ரூ 8000 கோடி)

தேயிலைப் பயிர் சாகுபடியில் முதலீடு என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் ரூ 8000 கோடிக்கு மேல் வசூலித்து நாமம் போட்ட இந்த ஊழல் பலருக்கு நினைவிருக்குமா என்று கூடத் தெரியவில்லை.


8. கேதன் மேத்தா (ரூ 1000 கோடி)

ஹர்ஷத் மேத்தான் இந்த கேத்தனுக்கு குரு. இவரும் பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்து பணம் குவித்தார். போலிப் பெயர்களில் பங்குகளை வாங்கி, செயற்கையான டிமாண்டை உருவாக்கி, விலையை உயர வைத்து பங்குகளை விற்றார் இந்த கேத்தன். இதில் அடிக்கப்பட்ட கொள்ளை ரூ 1000 கோடி.

9. உர - சர்க்கரை இறக்குமதி ஊழல் (ரூ 1300 கோடி)

உரம் மற்றும் சர்க்கரை இறக்குமதி மூலம் மட்டுமே ரூ 2300 கோடி ஊழல் நடந்துள்ளது தொன்னூறுகளில். மேலும் மேகாலயா வனத்துறை ஊழல் ரூ 300 கோடி, யூரியா ஊழல் ரூ 133 கோடி மற்றும் பீகார் மாட்டுதீவன ஊழல் ரூ 950 கோடி (லாலு - ராப்ரி தேவி சம்பந்தப்பட்டது).

10. ஸ்கார்பென் நீர்மூழ்கி ஊழல் (ரூ 18,978 கோடி)

பிரான்ஸிடமிருந்து 6 நீர்மூழ்கிகளை வாங்கிய வகையில் 1997-ல் நடந்த மிகப் பெரிய ஊழல் இது. இதே காலகட்டத்தில் ராணுவத்தில் மேலும் ரூ 5000 கோடி ஊழல் வெளிவந்தது. பீகார் நில மோசடி ஊழல் ரூ 400 கோடி, பீகார் வெள்ள நிவாரண ஊழல் ரூ 17 கோடி, சுக்ராம் டெலிகாம் ஊழல் ரூ 1500 கோடி, எஸ்என்ஸி லாவாலின் மின்திட்ட ஊழல் ரூ 374 கோடி... என ஊழல் மலிந்த ஆண்டாகத் திகழந்தது 1997.

இவை தவிர மேலும் சில ஊழல்களும் இந்த 12 ஆண்டுகளில் நடந்துள்ளன.

2010 ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், சிஆர் பன்சாலி நிதித்துறை ஊழல் (1300 கோடி), இந்திய பங்கு வெளியீட்டு ஊழல் ரூ 1000 கோடி, அப்துல் கரீமின் முத்திரைத் தாள் மோசடி ரூ 500 கோடி, ஜார்கன்ட் மருத்துவ உபகரண மோசடி ரூ 130 கோடி, போலி சொஸைட்டிகளை உருவாக்கி செருப்பு தைக்க கடன் பெற்ற ஊழல் ரூ 1000 கோடி, தினேஷ் டால்மியாவின் பங்குச் சந்தை ஊழல் ரூ 595 கோடி, ஆர் பி ஜி குழுமத்தின் வீரேந்திர ரஸ்தோகி செய்த 43 கோடி ஊழல், யுடிஐ வங்கியின் ரூ 32 கோடி ஊழல், மரம் நடுவதன் மூலம் பெரிய லாபம் பார்க்கலாம் என்று கூறி பெரும் பணம் வசூலித்து நாமம் போட்ட உதய் கோயலின் ரூ 210 கோடி ஊழல், சஞ்சய் அகர்வாலின் ரூ 600 கோடி மோசடி... இப்படி பட்டியல் நீள்கிறது.

இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களில் ஓரிருவருக்குத்தான் தண்டனை அறிவிக்கப்பட்டது. மற்ற பெரும் ஊழல்களில் சம்பந்தப்பட்டோர், பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! மக்களின் பலருக்கு இந்த ஊழல்களில் பெரும்பாலானவை மறந்தே போய்விட்டது.

இங்கே பட்டியலிடப்பட்டுள்ள ஊழல்களைப் படித்த பிறகு, "இது எப்போ நடந்தது?" என்று கேட்கிற அளவுக்கு மரத்துப் போயிருக்கிறார்கள். அதிகார வர்க்கம் இதற்காகத்தானே ஆசைப்பட்டது... அனுபவிக்கட்டும். இப்போதைக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை!

மன்மதன் அம்பு – விமர்சனம்!


நடிப்பு – கமல்ஹாஸன், த்ரிஷா, மாதவன், சங்கீதா

ஒளிப்பதிவு – மனுஷ் நந்தன்

இசை – தேவி ஸ்ரீ பிரசாத்

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் – கமல் ஹாஸன்

இயக்கம் – கே எஸ் ரவிக்குமார்

தயாரிப்பு – உதயநிதி ஸ்டாலின்

எந்தக் கலை வடிவமாக இருந்தாலும் முதலில் அது மக்களை ஈர்க்கிற வகையில் இருக்க வேண்டும். தனக்குத் திருப்தி அளித்தால் போதும் அல்லது தனது ஈகோவை திருப்தி செய்தால் போதும் என்ற அதிமேதாவித்தன நினைப்பில் ஒருவர் உருவாக்கும் படைப்புகளை, வைக்க வேண்டிய இடத்தில் வைத்து பாடம் கற்றுத் தருகிறார்கள் மக்கள்.

மன்மதன் அம்பு என்ற வெறுமையான படமெடுத்த கமல்ஹாஸனுக்கு இப்போது அப்படியொரு பாடம் கற்றுத் தந்துள்ளனர் மக்கள் என்று முதலிலேயே சொல்லிவிடுவதில் நமக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

மன்-கமல், மதன் – மாதவன், அம்பு – த்ரிஷா… இந்த மூவரின் முக்கோண காதல்தான் இந்தப் படம். மன்-மதன்-அம்பு தலைப்புக்கான பெயர்க் காரணம் தெரிந்துவிட்டதா…

ஹிட்ச் (2005) மற்றும் ரொமான்ஸ் ஆன் தி ஹை ஸீஸ் (1948) ஆகிய இரண்டு ஆங்கிலப் படங்களின் பாதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள கதை மன்மதன் அம்பு.

பிரபல நடிகையான அம்புஜாக்ஷி என்கிற அம்பு (த்ரிஷா)வும், தொழிலபர் மதன கோபாலும் (மாதவன்) காதலிக்கிறார்கள். ஆனால் பல ஹீரோக்களைக் கட்டிப் பிடித்தும் நெருக்கம் காட்டியும் நடிக்கும் நடிகை என்பதால் அம்பு மீது வழக்கம் போல சந்தேகம் மதனுக்கு. அந்த சந்தேகம் ஒரு உயிரைக் கொல்லக் காரணமாகிறது, அவர்கள் அறியாமலே… கூடவே அவர்களின் காதலையும் அதே சந்தேகம் கொன்றுவிட, வெனிஸில் உள்ள தனது தோழி தீபா (சங்கீதா)விடம் போகிறாள் அம்பு.

அங்கே அவளுக்குத் தெரியாமல் மேஜர் மன்னாரை (கமல்) உளவு பார்க்க அனுப்புகிறான் மதன். தன் காதலி வேறு ஹீரோ யாருடனாவது வெளிநாட்டில் ஜாலியாக இருப்பாளோ என்ற சந்தேகம் அவனுக்கு (“கூட நடிக்கும் ஹீரோவுடன் செக்ஸ் வச்சிக்க கேரவன் தேவையில்லை… அதுக்கு வசதியா எத்தனையோ இருக்கு… அவுட்டோர், வெளிநாட்டு ஷூட்டிங்! – வசனம்: கமல்)

கேன்சரில் உயிருக்குப் போராடும் தன் நண்பனை காக்க இந்த உளவு அஸைன்மெண்டுக்கு ஒப்புக் கொள்கிறார் மேஜர். ஆனால், மதன் சந்தேகப்படும்படி அம்பு எதுவும் செய்யவில்லை, அவள் நல்லவள் என்று மேஜர் ரிப்போர்ட் தர, சப்பென்றைாகிவிடுகிறது மதனுக்கு. நல்லவளை நல்லவள் என்று சொல்ல எதற்கு பணம் தர வேண்டும்… என்று கூறி பணம் தர மறுக்கிறான். இதனால் அம்புவுக்கு ஒரு காதலன் இருப்பதாக பொய் கூற ஆரம்பிக்கிறார் மேஜர்.

இறுதியில் அந்தக் காதலன் யார் என்று பார்க்க வெனிசுக்கே புறப்பட்டு வருகிறான் மதன். அதற்குள் மேஜரும் அம்புவும் நிஜமான காதலர்களாக மாறிப் போகின்றனர். மதனை எப்படிச் சமாளிப்பது என்று திட்டம் போடுகின்றனர். விசுவின் பழைய டிராமாக்களை மிஞ்சும் அரதப் பழசான, ஆனால் யாருக்கும் விளங்காத அந்த டிராமாவின் இறுதியில் ஜோடி மாறினாலும் சுபமாக முடிகிறது படம்.

கமல்ஹாஸன் ஹீரோ என்பதற்காகவே வலிந்து திணிக்கப்பட்ட க்ளைமாக்ஸ் இது என்பது சராசரி ரசிகனுக்கும் நன்கு புரியும் அளவுக்கு திரைக்கதையில் பொத்தல்கள்.

கமலைப் பொறுத்தவரை, நடிப்பில் பெரிய சாகஸம் செய்வதற்கான வேடமில்லை இது. படம் ஆரம்பித்து 20 நிமிடம் கழித்து ஒரு உளவு பார்க்கும் முன்னாள் ராணுவ வீரராக வருகிறார். ஆனால் சொல்லிக் கொள்கிற மாதிரி ஒரு காட்சியும் அமையவில்லை அவருக்கு. அவரும் த்ரிஷாவும் சந்திக்கிற, பேசிக் கொள்கிற, கமலின் ப்ரெஞ்ச் மனைவிக்கு நடந்த சோகத்தை பரிமாறிக் கொள்கிற காட்சிகளில் வேட்டையாடு விளையாடு படத்தின் அழுத்தமான சாயல். ஆனால் அவரது அறிமுகத்தின் போது வரும் முதல் சண்டைக் காட்சி நச்சென்று உள்ளது.

கதைப்படி மனைவியை இழந்தவர் கமல்… கணவனை விவாகரத்து செய்தவர் சங்கீதா. ஆனால் திருமணமாகாத த்ரிஷாவை கமலுடன் கோர்ப்பதாக காட்சிகள்.. இதற்கு காரணம் படத்தின் ஹீரோ கமல் என்ற ஒரே விஷயம்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லையே…

லாஜிக், யதார்த்த சினிமா என உபதேசம் படிப்பவர்கள் இப்போது எங்கே போனார்களோ…

த்ரிஷா முகத்தின் வயதின் முகவரி தெரிய ஆரம்பித்துவிட்டது. சொந்தக் குரல் தமிழ் உச்சரிப்பு அதை மன்னிக்க வைக்கிறது.

படத்தின் ஹீரோ எனும் அளவுக்கு நடிப்பில் கலக்கி இருக்கிறார் மாதவன். பாரில் தண்ணியடித்துவிட்டு நாக்குழற தொழிலதிபர் என்ற வார்த்தை அவர் உச்சரிக்கும் விதம்… ஒரிஜினல் குடிகாரனின் பாடிலாங்குவேஜ் அது. ஆனால் அந்த வில்லத்தனம் கலந்த மதனை, இறுதி நெருங்க நெருங்க கோமாளியாக்கிவிடுகிறார் இயக்குநர்.

அதே போல சங்கீதாவும் அனுபவித்து நடித்திருக்கிறார். விவாகரத்து பெற்று, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக, எக்க சக்க ஜீவனாம்சத்துடன் வசிக்கும் ஒரு வெளிநாட்டு இந்தியப் பெண்ணை அப்படியே சித்தரிக்கும் அளவுக்கு எக்ஸ்பிரஷனில் கலக்கியிருக்கிறார்.

எப்போதும் ஸ்கிரிப்டுடன் த்ரிஷா பின்னாலே அலையும் அந்த மலையாள தம்பதிகள் எரிச்சலூட்டுகிறார்கள்.

படத்தில் நன்றாக இருக்கிறது என சொல்ல வைப்பவை மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவும் தேவி ஸ்ரீ பிரசாதின் இசையும். ஆனால் அந்த இசையும் கூட சில இடங்களில பஞ்ச தந்திரத்தின் பாதிப்புடன் ஒலிப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

கமல்ஹாஸன் அறிவுஜீவிதான் ஒப்புக் கொள்றோம். அதற்காக இப்படியா படம் முழுக்க அலுப்பு சலிப்பில்லாமல் தமிங்கிலத்தில் பேசிக் கொண்டே இருப்பார்கள்… இந்த லட்சணத்தில் ‘மெல்லத் தமிழ் சாகும், தெருப் பொறுக்கும்’ என்ற கவலை வேறு!

சரி.. இந்தக் கதை யார் மீது பயணிக்கிறது? மனைவியை இழந்த கமல் மீதா, அந்த இழப்புக்கு காரணமான த்ரிஷா மீதா அல்லது காதலை மறந்துவிட்டு சந்தேகத்தை மட்டுமே காதலிக்கும் மாதவன் மீதா…? கடைசி வரை எந்த நிலைப்பாட்டிலும் நில்லாமல் அலைபாய்கிறது திரைக்கதை.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்றவற்றில் எந்த இயல்புத் தன்மையும் இல்லை. முழுக்க முழுக்க நாடகமே. அதனால்தான் படம் ஆரம்பித்ததிலிருந்து ஒத்திகை ஒத்திகை என்று சொல்லிக் கொண்டிருந்தார் போலிருக்கிறது, கமல்ஹாஸன்!

அர்த்தமற்ற, இலக்கு தவறிய அம்பு!

வியாழன், 30 டிசம்பர், 2010

2010ல் இந்தியா-முக்கிய நிகழ்வுகள்.. ஒரு பார்வை!


ஜனவரி

4- ஆந்திராவை கலவர பூமியாக்கிவிட்ட தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவை நாடு கடத்த வேண்டும் என்று மறைந்த ஆந்திர முன்னாள் முதல் மந்திரி என்.டி.ராமராவி்ன் மனைவியும் என்.டி.ஆர். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவியுமான லட்சுமி பார்வதி கூறினார்.

6- கன்னட சூப்பர்ஸ்டார் விஷ்ணுவர்த்தன் மரணமடைந்தார்.

- சமாஜ்வாடிக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அமர்சிங் விலகினார்.

7 - ஸ்ரீநகரில், ஒரு ஹோட்டலுக்குள் தீவிரவாதிகள் புகுந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த 23 மணி நேர சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

- உடல் நிலை குன்றி கவலைக்கிடமான நிலையில் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான ஜோதிபாசுவை பிரதமர் மன்மோகன் சிங் பார்த்தார்.

- ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக கூட்டணி ஆட்சி வெற்றி பெற்றது.

9- சமாஜ்வாடிக் கட்சியிலிருந்து சஞ்சய் தத் விலகினார்.

12 - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்திரா காந்தி அமைதி விருது வழங்கப்பட்டது.

17 - ஜோதிபாசுவின் உடல் கொல்கத்தா மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

18 - 44 நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தது.

20 தெலுங்கானாவில் வெடித்த கலவரத்திற்கு 10 மாவட்டங்கள் முடங்கிப் போயின.

23 - டெல்லியில் தேசிய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டன. பாலா சிறந்த இயக்குநராக அறிவிக்கப்பட்டார்.

25 - இசைஞானி இளையராஜா, இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

31 - மும்பையைச் சேர்ந்த ஹிரென் மோகினி என்பவர் நியூசிலாந்தில் சிலரால் குத்திக் கொல்லப்பட்டார்.

பிப்ரவரி

1 - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மரணத்தை உறுதி செய்யும் ஆவணத்தை இலங்கை அரசு சிபிஐக்கு அனுப்பியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

2- சமாஜ்வாடிக் கட்சியிலிருந்து அமர்சிங்கும், ஜெயப்பிரதாவும் இன்று நீக்கப்பட்டனர். இருவரையும் ஊடுறுவல்காரர்கள் என்று அக்கட்சி சாடியது. கட்சிப் பெயரை இருவரும் கெடுத்து விட்டதாகவும் சமாஜ்வாடிக் கட்சி கூறியது.

8- சிறுமி ருசிகா கற்பழிப்பு வழக்கில் சாதாரண அளவிலான தண்டனை பெற்ற மாஜி டிஜிபி ரத்தோரை, இன்று சண்டிகர் கோர்ட் வளாகத்தில் தேசிய வடிவமைப்புக் கழக முதுநிலை மாணவர் ஒருவர் சரமாரியாக குத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

9 - பாஜக தலைவராக நிதின் கத்காரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

12 - சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மை நேம் இஸ் கான் திரைப்படம் பெரும் பதட்டம், பரபரப்புக்கு மத்தியில் நாடு முழுவதும் திரையிடப்பட்டது.

13 - மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஜெர்மன் பேக்கரியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர்.

14- ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கானாவைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர்.

15 - மேற்கு வங்க மாநிலத்தில் ராணுவ முகாமில் மாவோயிஸ்ட் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் 20 வீரர்கள் உயிரிழந்தனர்.

23 - பெங்களூர் கார்ல்டன் டவர்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் மேலிருந்து கீழே குதித்து தப்ப முயன்றபோது உயிரிழந்தனர்.

மார்ச்

4 - உ.பி. மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 71 பேர் உயிரிழந்தனர்.

8 - நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

9 - லோக்சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் ராஜ்யசபாவில் எதிர்ப்பு காரணமாக நிறைவேற்றப்படவில்லை.

ஏப்ரல்

1 - நாடு முழுவதும் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது.

6 - சட்டிஸ்கர் மாநிலம் தான்டேவாடாவில் சிஆர்பிஎப் படையினர் மீது மாவோயிஸ்ட் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் 76 வீரர்கள் உயிரிழந்தனர்.

14 - ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்தது. ராக்கெட் திசை மாறி கடலில் போய் விழுந்தது.

17 - பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

18 - ஐபிஎல் கொச்சி அணி தொடர்பான சர்ச்சையில் சிக்கிய மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

23 - ரூ. 2 கோடி லஞ்சப் பணத்துடன் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதன் தேசாய் கைது செய்யப்பட்டார்.

27 - பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இந்திய தூதரக அதிகாரி மாதுரி கைது செய்யப்பட்டார்.

- பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் நடத்தின.

- பாஜக கூட்டணியில் இருந்து கொண்டு மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மீது கோபம் கொண்ட பாஜக, ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றது.

30 - ஆஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் தொடர்புடைய அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சந்திரசேகர் பரோட் என்பவர் கைது செய்யப்பட்டார்.

மே

2 - கர்நாடக அமைச்சர்கள் பலரும் சர்ச்சைகளில் சிக்கி வருவதால் முதல்வர் பதவியிலிருந்து எதியூரப்பா விலகக் கோரி அவரது வீட்டை முற்றுகையிட்ட இளைஞர் காங்கிரஸார் கல்வீசித் தாக்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

- ஐபிஎல் கொச்சி விவகாரத்தில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்த சசி தரூர், வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டார்.

3- மும்பைத் தீவிரவாத தாக்குதல் வழக்கில் கசாப் மீது சாட்டப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி தஹிளியானி அறிவித்தார். இணைக் குற்றவாளிகளான இந்தியர்களான பஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகிய இருவரும் குற்றமற்றவர்கள் என கோர்ட் அறிவித்தது. மேலும், லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத், ஷகியூர் ரஹ்மான் லக்வி உள்பட 20 பேர் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பு தெரிவித்தது.

- நான்கு வருடங்களாக தனது செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சரும், திரினமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கூறினார்.

- நண்பரின் மனைவியை கற்பழிக்க முயன்ற கர்நாடக உணவுத்துறை அமைச்சர் ஹாலப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

5- உண்மை கண்டறியும் சோதனை, மூளை வரைபட சோதனை, நார்கோ அனாலிசிஸ் போன்றவற்றை நடத்துவது சட்ட விரோதமானது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.

- கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் இணைந்தார்.

- ஐபிஎல் போட்டிகளுக்கு பொழுதுபோக்கு வரி விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கில் மத்திய அமைச்சர் சரத் பவாரையும் பிரதிவாதியாக சேர்க்குமாறு பாம்பே உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

- மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் மீதான 86 குற்றச்சாட்டுகளில் 4 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவனுக்கு தூக்கு தண்டனையும், 5 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார் தனி நீதிபதி தஹிளியானி.

- சாமியார் நித்தியானந்தா தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு பெங்களூர் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

- டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம், மாவோயிஸ்ட் ஆதரவு மாணவி விபா என்பவர் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

7 - கிருஷ்ணா கோதாவரி படுகையில் எடுக்கப்படும் எரிவாயு தொடர்பாக முகேஷ், அனில் அம்பானிகள் இடையே ஏற்பட்ட மோதலில் முகேசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 3 நீதிபதிகள் இடையே ஒத்த கருத்து ஏற்படாததால் 2:1 என்ற விகிதத்தில் முகேசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

8 - நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜகவும், சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் உடன்பாடு செய்து கொண்டன.

10 - குஜராத் கலவர வழக்கில் விஸ்வ இந்து பரிஷத் சர்வதேசத் தலைவர் பிரவீன் தொகாடியா இன்று சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

11 - வருமானத்தை மீறி சொத்துக் குவித்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாபஸ் பெற்றார்.

12 - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.எச். கபாடியா பொறுப்பேற்றார்.

15 -முன்னாள் துணை குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் மரணமடைந்தார்.

- ஊழல் புகார்கள் காரணமாக இந்திய மருத்துவக் கவுன்சில் கலைக்கப்பட்டது.

22 - மங்களூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர விமான விபத்தில் 158 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பல உடல்கள் அடையாளமே தெரியாத அளவுக்குக் கருகிப் போய் விட்டன. 8 பேர் உயிர் பிழைத்தனர்.

28 - மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் இரு ரயில்கள் மோதி 148 பேர் பலியானார்கள்.

30 - பெங்களூர் வாழும் கலை அமைப்பின் ஆசிரமத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் காயமின்றித் தப்பினார்.

- ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவியிலிருந்து சிபு சோரன் விலகினார்.

ஜூன்

2 - மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

7 - போபால் விஷ வாயு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவர் ஆன்டர்சன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அவருக்கும் மேலும் 6 பேருக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சைகளையும், நாட்டு மக்களிடையே கொதிப்பையும் உருவாக்கியது.

24 - பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார்.

28 - இந்தியா, கனடா இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஜூலை

1 - திருப்பதி கோவிலுக்கு கிருஷ்ண தேவராயர் அன்பளிப்பாக வழங்கிய பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நகைகள் காணாமல் போனதாக பரபரப்பு ஏற்பட்டது.

3 - தெலுங்கானாவுக்கு எதிராக பேசுபவர்களின் தலையை வெட்டுவேன் என்று ஆவேசமாக பேசிய நடிகை விஜயசாந்தி கைது செய்யப்பட்டார்.

15 - ரூபாய்க்கான புதிய குறியீடு வெளியிடப்பட்டது. தமிழரான உதயக்குமார் இந்த குறியீட்டை வடிவமைத்திருந்தார்.

24 - சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் குஜராத் முன்னாள் அமைச்சர் அமீத் ஷா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

27 - புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக குரேஷி நியமிக்கப்பட்டார்.

- ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து நளினி, முருகன் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

- தெலுங்கானா பகுதியில் 12 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 11 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும், ஒரு தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றன.

- இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேஹ்வால் கேல் ரத்னா விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆகஸ்ட்

6 - ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் ஏற்பட்ட பெரும் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

10 - காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்கத் தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.

11 - ஜாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு மத்திய அரசு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்தது.

15 - ஸ்ரீநகரில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியின்போது முதல்வர் உமர் அப்துல்லா மீது ஷூ வீசப்பட்டது.

17 - கர்நாடக குண்டுவெடிப்பு சம்பவத்தில் கேரளாவின் அப்துல் நாசர் மதானி கொல்லத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

செப்டம்பர்

2 - காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி 4வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

7 - ஊழல் வழக்கில் சிக்கிய பி.ஜே. தாமஸ் எப்படி ஊழல் கண்காணிப்பு ஆணையராக செயல்பட முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

- ரஷ்யாவில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில், 66 கிலோ பிரிவில் இந்தியாவின் சுஷில்குமார் தங்கப் பதக்கம் வென்றார்.

11 - ஜார்க்கண்ட் மாநில முதல்வராக அர்ஜூன் முண்டா பதவியேற்றார்.

13 - காஷ்மீரில் வெடித்த கலவரத்தில் ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்தனர்.

- தமிழகத்தில் பந்த் நடத்த விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

- ஜார்க்கண்ட் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக கூட்டணி அரசு வெற்றி பெற்றது.

- காஷ்மீருக்கு அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்பி வைக்க பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

- தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகராக அமிதாப் பச்சன் அறிவிக்கப்பட்டார். பசங்க படம் 3 விருதுகளைப் பெற்றது. சிறந்த பின்னணி இசைக்கான விருது இசைஞானி இளையராஜாவுக்கு கிடைத்தது.

19 - டெல்லி ஜும்மா மசூதியில் 2 மர்ம நபர்கள் சரமாரியாக சுட்டதில் 2 பேர் காயமடைந்தனர்.

- மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த உலக குத்துச் சண்டைப் போட்டியில், இந்தியாவின் மேரி கோம் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

20 - மத்தியப் பிரதேசத்தில் நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 23 பேர் உயிரிழந்தனர்.

- காஷ்மீர் சென்னை அனைத்துக் கட்சிக் குழு, பிரிவினைவாத தலைவர்களை சந்தித்தது.

21 - காமன்வெல்த் போட்டிக்காக டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திற்கு வெளியே கட்டப்பட்டு வந்த நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது.

- 2008ம் ஆண்டுக்குப் பின்னர் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 20,000 புள்ளிகளைத் தாண்டியது.

23 - டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடிய வளாகத்தில் அமைந்த பளு தூக்கும் போட்டிக்கான அரங்கின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

- அயோத்திநில வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பை அளிக்க உச்சநீதிமன்றம் ஒரு வார கால தடை விதித்தது.

24 - ஆமிர்கான் நடித்த பீப்ளி லைவ் படம் ஆஸ்கர் விருதுப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டது.

25 - காஷ்மீர் அமைதிக்காக 8 அம்சத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

26 - தென் ஆப்பிரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி 20-20 போட்டித் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. அந்த அணியின் முரளி விஜய்க்கு சிறந்த பேட்ஸ்மேனுக்கான தங்க பேட்டும், பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு சிறந்த பந்து வீச்சாளருக்கான தங்க பந்தும் பரிசாக கிடைத்தது.

29 - இந்திய மக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் மகாராஷ்டிர மாநிலத்தில் தொடங்கி வைத்தார்.

30 - 60 ஆண்டுகால அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று பங்காக பிரித்து இரு பங்கை இந்து அமைப்புகளுக்கும், ஒரு பங்கு முஸ்லீம் அமைப்புக்கும் வழங்க அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

- இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார்.

அக்டோபர்

3 - பெரும் சர்ச்சைக்களுக்கு மத்தியில் டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் தொடங்கின. தொடக்க விழாவைக் கண்டு உலகமே அதிசயித்தது.

5 - கர்நாடகத்தில் முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது.

6 - அயோத்தி தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வோம் என்று முஸ்லீம் சன்னி வக்பு வாரியம் அறிவித்தது.

- ஐசிசியின் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த டெஸ்ட் வீரராக ஷேவாக் அறிவிக்கப்பட்டார்.

9 - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக 19 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தேர்வானது இந்தியா. பெரும் வாக்கு வித்தியாசத்தில் அது வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

11- கர்நாடக சட்டசபையில் கடும் அமளிக்கு மத்தியில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எதியூரப்பா அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். இதை எதிர்க்கட்சிகள் நிராகரித்தன. கர்நாடக ஆட்சியைக் கலைக்கலாம் என்று கூறி சபாநாயகர் பரத்வாஜ் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.

12 - கர்நாடக சட்டசபையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர ஆளுநர் உத்தரவிட்டார். அதை எதியூரப்பா ஏற்றார்.

14 - கர்நாடக சட்டசபையில் நடந்த 2வது நம்பிக்கை வாக்கெடுப்பில் எதியூரப்பா அரசு வெற்றி பெற்றது.

- டெல்லி காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்தன. இதில் இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களைப் பெற்று 2வது இடத்தைப் பிடித்து புதிய சாதனை படைத்தது.

- டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர், பேட்டிங் தரவரிசையில் சச்சின் முதல் இடத்தைப் பிடித்தார்.

17 - காமன்வெல்த் போட்டி ஊழல்கள் குறித்த விசாரணையை வருமான வரி மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தொடங்கினர்.

18 - தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது.

19 - காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக நாடு முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

21 - பீகார் சட்டசபைக்கு முதல் கட்டமாக 47 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.

22 - காமன்வெல்த் போட்டிகள் தொடர்பான கான்டிராக்டுகள் விடப்பட்ட விதம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

- தேசிய பாரம்பரிய விலங்காக யானை அறிவிக்கப்பட்டது.

25 - குதிரை பேரம் நடத்தி மாற்றுக் கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக தரப்பு விலைக்கு வாங்குவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து 3 அமைச்சர்கள், 4 பாஜக எம்.எல்.ஏக்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

26 - ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரது பெயர்கள் நீக்கப்பட்டன.

27 - கேரள மாநில உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிக் கூட்டணிக்கு பெரும் தோல்வி கிடைத்தது.

29 - கர்நாடக பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 11 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

30 - மும்பை ஆதர்ஷ் சொசைட்டி ஊழலில் சிக்கிய முதல்வர் அசோக் சவான் சோனியா காந்தியை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

நவம்பர்

2 - ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.

- விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடை நீடிக்கப்பட்டது சரியா என்பது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட டிரிப்யூனலின் தலைவர் நீதிபதி விக்ரம்ஜித் சென் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

- தென் ஆப்பிரிக்க வேகப் பந்து வீச்சாளர் மக்காயா நிடினி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

4 - மும்பை ஆதர்ஷ் சொசைட்டி வீட்டு ஊழல் குறித்து விசாரணை நடத்த பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது.

6 - 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனது மனைவி மிஷலுடன் இந்தியா வந்தார்.

7 - பீகார் சட்டசபைத் தேர்தலில் நிதீஷ் குமார் தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.

- விக்கிலீக்ஸ் தனது முதல் பரபரப்பு அமெரிக்க ஆவணங்களை வெளியிட்ட நாள் இது.

9 - ஸ்பெக்ட்ரம் ஊழலைக் காரணம் காட்டி இன்று தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை முடக்கின எதிர்க்கட்சிகள். கூட்டத் தொடரின் கடைசி நாளான டிசம்பர் 13ம் தேதி வரை நாடாளுமன்றம் சுத்தமாக இயங்கவில்லை.

10 - மகாராஷ்டிர மாநில புதிய முதல்வராக பிருத்விராஜ் சவான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜா மற்றும் அமைச்சகத்தின் செயல்பாடுகள் காரணமாக நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்தார். இந்தஅறிக்கை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

14 - தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவியிலிருந்து ஏ.ராஜா விலகினார்.

15 - தொலைத் தொடர்புத்துறையை திமுகவுக்குத் தராமல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் கபில் சிபலிடம் கொடுத்தார் பிரதமர் மன்மோகன் சிங்.

- காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக சுரேஷ் கல்மாடியின் உதவியாளர்களான தர்பாரி, மஹேந்திரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

- காஷ்மீரை தீர்க்க முடியாத பிரச்சினைகள் பட்டியலிலிருந்து நீக்கியது ஐ.நா.

16 - ஸ்பெக்ட்ரம் வழக்கில் சுப்பிரமணியம் சாமியின் கடிதங்களுக்குப் பதில் அனுப்பவும், ராஜா மீது வழக்கு தொடர அனுமதி தரவும் தாமதம் செய்தது ஏன் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

- டெல்லியில் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்து 60 பேர் பலியானார்கள்.

17 - மகன்கள், மகள் உள்ளிட்ட உறவினர்களுக்கு நில ஒதுக்கீடு செய்ததில் ரூ.6000 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீது எதிர்க்கட்சிகள் புகார் கூறியதால் புதிய பரபரப்பு ஏற்பட்டது.

18 - ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

19 - பிரதமர் சார்பில் ஆஜராகி வந்த சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் நீக்கப்பட்டு, அட்டர்னி ஜெனரல் வாஹன்வாதி நியமிக்கப்பட்டார்.

20 - சுப்பிரமணியம் சாமி அனுப்பிய கடிதங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டன. அதில் தாமதம் ஏதும் செய்யப்படவில்லை என்று பிரதமர் அலுவலகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

21 - நில ஊழல் புகார்கள் தொடர்பாக தான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக முதல்வர் எதியூரப்பா அறிவித்தார்.

- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை அவதூறாக சித்தரித்து செய்தி வெளியிட்ட ஜெகன் மோகன் ரெட்டியின் டி வி நிறுவனம் மீது ஜெகன் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

- பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கில் சிக்கிய பி.ஜே. தாமஸ், எப்படி ஊழல் கண்காணிப்பு ஆணையராக செயல்பட முடியும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி விடுத்தது.

- நாக்பூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியது.

24 - ஆந்திர மாநில முதல்வர் ரோசய்யா பதவி விலகினார். புதிய முதல்வராக கிரண் குமார் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- பீகாரில் நடந்த சட்டசபைத்தேர்தலில் நிதீஷ் குமார்தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றது. 2வது முறையாக நிதீஷ் குமார் முதல்வரானார்.

- எல்ஐசி மற்றும் பொதுத் துறை வங்கிகளில் கடன் வழங்குவதில் பல நூறு கோடி முறைகேடு நடந்தது அம்பலமானது. இதுதொடர்பாக 8 உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

25 - தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

28 - 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வந்த நாடாளுமன்ற அமளியை முடிவுக்குக் கொண்டுவர அரசுத் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

- மும்பை ஆதர்ஷ் சொசைட்டி ஊழல் தொடர்பான ஆவணங்கள் மாயமனதாக சிபிஐ தெரிவித்தது.

29 - ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரஸ் கட்சியிலிருந்தும், எம்.பி. பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். அவரது தாயார் விஜயலட்சுமி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

- பல்வேறு உலக நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் செய்யும் உளவு வேலைகளை அம்பலப்படுத்தும் பல தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

- நித்தியானந்தா வழக்கில் கர்நாடக சிஐடி போலீஸார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.

30 - தனது கண்காணிப்பின் கீழ் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான சிபிஐ வழக்கு விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.

டிசம்பர்

1 - ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவுரைகள், யோசனைகளை தொலைத் தொடர்பு மதிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

2 - நீரா ராடியாவின் தொலைபேசி பேச்சுக்களின் பதிவை உச்சநீதிமன்றத்தில் ஒப்படைத்தது மத்திய அரசு.

3 - நில ஊழல் வழக்கில் சிக்கிய கர்நாடக பாஜக அமைச்சர் கட்டா சுப்பிரமணியம் நாயுடு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

4 - மிஸ் எர்த் போட்டியில், இந்தியாவின் நிக்கோல் பரியா பட்டம் வென்றார்.

6- இந்தியா, பிரான்ஸ் இடையே சிவில் அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

7 - காசியில் நடந்த குண்டுவெடிப்பில் குழந்தை பலியானது. இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது.

9 - அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா குமார், அமெரிக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அவமதிக்கப்பட்டார்.
16 - ரூ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பான சிபிஐயின் விசாரணையைக் கண்காணிப்போம் என அதிரடியாக அறிவித்தது உச்சநீதிமன்றம்.

- பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்களை விட இந்தியாவில் அதிகரித்து வரும் இந்து தீவிரவாத அமைப்புகளால்தான் இந்தியாவுக்கு பேராபத்து உள்ளது என்று ராகுல் காந்தி கூறியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலால் பெரும் சர்ச்சை எழுந்தது.

- ஸ்பெக்ட்ரம் கொள்கை தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான கமிஷனை அறிவித்தது மத்திய அரசு.

13 - நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்த தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

15 - சீனப் பிரதமர் வென் ஜியாபோ இந்தியாவுக்கு வருகை தந்தார்.

17 - தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த ஓராண்டில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கினார்.

23 - கேரளாவைச் சேர்ந்த பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் கருணாகரன் மரணமடைந்தார்.

- மும்பைக்குள் 4 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

24 - காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக சுரேஷ் கல்மாடியின் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடந்தது.

25 - தொலைக்காட்சி, தொலை மருத்துவம் மற்றும் தொலைக் கல்வி போன்றவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை இஸ்ரோ அதிக எடை கொண்ட ஜிசேட் 5 பி- செயற்கைக் கோளை செலுத்தும் முயற்சி இன்று தோல்வியில் முடிந்தது. ராக்கெட் வெடித்துச் சிதறியது.

- காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடியின் வீட்டில் நடத்திய சோதனையின்போது அவருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் கடிதம் ஒன்றை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர்.

- ஆஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட காரை ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

26 - நீரா ராடியாவுக்கு பல்வேறு வகைகளில் உதவியாக இருந்தார் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்த் குமார் என்று பரபரப்புத் தகவலை வெளியிட்டார் நீரா ராடியாவின் முன்னாள் பங்குதாரரான ராவ் தீரஜ் சிங்.

- தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பான நடைமுறைகளை காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி தொடங்கினால், உடனடியாக எனது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை கலைத்து விடத் தயார், சோனியாவுக்கு பாத பூஜை செய்யவும் தயார் என்று கூறினார் கட்சித் தலைவரான கே.சந்திரசேகர ராவ்

27 - ஸ்பெக்ட்ரம் விசாரணைக்காக நேரில் ஆஜராகத் தயார் என்று பொதுக் கணக்குக் கமிட்டித் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதினார்.

- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக எப்படி கணக்கிடப்பட்டது என்பது குறித்து இன்று நாடாளுமன்ற பொதுக் கணக்கு கமிட்டி முன்பு மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

- ஒரிசாவில், பிஜு ஜனதாதளம் கட்சியின் கூட்டத்தில், முதல்வர் நவீன் பட்நாயக் முன்னிலையில் தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதாக கூறி போலீஸில் புகார் தரப்பட்டது.

28 - முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் பெருமளவில் சொத்துக் குவித்தது தொடர்பான சர்ச்சை எழுந்த நிலையில் நீரா ராடியாவுடன் பாலகிருஷ்ணனுக்குத் தொடர்பு இருந்ததும், அம்பானிகள் இடையிலான கேஜி இயற்கை எரிவாயு படுகை வழக்கில் ராடியா தலையிட்டு முகேஷ் அம்பானிக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாக உதவியதாகவும் செய்தி வெளியானது.

- 2011ல் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் திமுகவுடனும், மேற்கு வங்கத்தில் திரினமூல் காங்கிரஸுடனும் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக தெரிவித்தது.

29 - ரூ. 200 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தனியார் ஒருவருக்கு முறைகேடாக ஒதுக்கியது தொடர்பான வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ரோசய்யா சிக்கியுள்ளார். அவர் மீது இன்று ஊழல் தடுப்புப் போலீஸார், நில மோசடி வழக்குப் பதிவு செய்தனர். அவர் உள்பட மொத்தம் 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

- டர்பன் டெஸ்ட் போட்டியில் இந்தியா 87 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை அபாரமாக தோற்கடித்து டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

- ஹரியானா மாநிலம் கர்கானில் உள்ள சிட்டி வழங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், வங்கிக் கணக்குகளிலிரு்து ரூ. 400 கோடியை தனது பெயருக்கு மாற்றி பெரும் மோசடியில் ஈடுபட்டது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதன், 22 டிசம்பர், 2010

'உறவுக்கு' ஆயிரம் காரணங்கள்!


ஒரு ஆண், உடலுறவை விரும்ப ஒன்று அல்லது இரண்டு காரணங்களே இருக்க முடியும். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 200 காரணங்கள் இருக்கிறதாம். அதில் காதல், காமம் ஆகியவற்றுக்குக் கிட்டத்தட்ட கடைசி இடம்தானாம்.

போரடிப்பதால் சில பெண்கள் உடலுறவுக்கு உட்படுகிறார்களாம், தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு செக்ஸ் உறவு நல்ல மருந்தாக இருக்கிறதாம். சே, பாவமா இருக்கு 'இதைப்' பார்த்தா என்று ஆண்கள் மீது பாவப்பட்டு, பச்சாதாபப்பட்டு உறவுக்கு ஒத்துழைப்பவர்களும் உண்டாம். ஒரே தலைவலி ஒரு 'டீ' சாப்டா தேவலாம் என்று நினைத்து உறவுக்கு வருபவர்களும் உண்டாம்.

ஆக, பெண்களைப் பொறுத்தவரை உடல் ரீதியான இன்பம், காதல், காமம், ஆசை என்பதைத் தாண்டி ஏகப்பட்ட காரணங்கள் இருக்கிறது அவர்கள் உடலுறவுக்கு வருவதற்கு என்கிறார்கள் இதுகுறித்து ஆராய்ந்தவர்கள்.

ஒரு பெண் உடலுறவை விரும்புதவற்கு கிட்டத்தட்ட 200 காரணங்களை அவர்கள் வகைப்படுத்துகிறார்கள். மன அமைதி விரும்புவோர், செய்த உதவிக்கு நன்றி கூற விரும்பி என்று இதில் வித்தியாசமான காரணங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு பெண்களை நேரில் சந்தித்து அவர்களின் உடலுறவு அனுபவங்களை கண்டறிந்து அதன் மூலம் இந்தக் காரணங்களை வகைப்படுத்தியுள்ளனர்.

பெரும்பாலான பெண்களுக்கு, ஆண்களைப் பார்த்தவுடன் பிடிப்பதில்லையாம். வெளியில் எவ்வளவுதான் நட்பாக பேசினாலும் கூட மனசுக்குள் அந்தப் 'பார்ட்டி'யை தராசுத் தட்டில்தான் உட்கார வைத்திருப்பார்களாம். மேலும் ஆண்களைப் பார்த்தவுடன் மோகம் பிறப்பது என்பது பெண்களுக்கு அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லையாம். அதாவது, மன 'ஸ்கேனரில்' விதம் விதமாக ஆராய்ந்து, அக்கு வேறாக பிரித்துப் பார்த்த பின்னர்தான் ஒரு ஆண்மீது பெண்ணுக்கு முழுமையான காதலும், காம உணர்வும் வருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒரு ஆணிடம் தனது உடலைத் தரும் முடிவுக்கு பெண் வரும்போது அந்த ஆணைப் பற்றிய அனைத்தையும் அவள் அறிந்து வைத்திருப்பாள் என்றாலும் கூட உடல் ரீதியான திருப்திக்காக மட்டுமே பெண்கள் ஆண்களை அணுகுவதில்லை என்பதும் இந்த ஆய்வின் ஒருபகுதி கருத்து.

உடலுறவில் ஈடுபடும் பெண்கள் சொன்ன சில காரணங்கள் -எனது செக்ஸ் திறமை சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்ள அதில் ஈடுபடுகிறேன், உடலின் மினுமினுப்பு குறைந்து விட்டது அதை சரி செய்ய ஈடுபடுகிறேன், அவனிடம் சற்று கோபமாக பேசிவிட்டேன்சமாதானப்படுத்த ஈடுபடுட்டேன் என்ற ரீதியில் போகிறது. இன்னும் சிலர் சொன்ன காரணங்கள், அவன் எனக்குப் பிடித்த ஒரு விஷயத்தை செய்து கொடுத்தான், அதற்கு நன்றி கூற விரும்பினேன், அதற்காக உடலுறவுக்கு ஒத்துக் கொண்டேன் என்பது.

இருப்பினும் கிட்டத்தட்ட 85 சதவீதம் பெண்கள், செக்ஸ் உறவு மன திருப்தியையும், மன அமைதியையும், உடல் ரீதியான உற்சாகத்தையும் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். அதாவது, என்னதான் சப்பைக் காரணமாக இருந்தாலும் கடைசியில் அந்த உடலுறவு அவர்களுக்கு ஒரு வித திருப்தியைத் தருவதை ஒப்புக் கொள்கின்றனர்.

பெண்களின் மனதைப் புரிந்து கொள்வது கடினம் என்பார்கள். இந்த ஆய்வைப் பார்த்தால், எந்த விஷயத்திலும் பெண்களைப் புரிந்து கொள்வது ரொம்பக் கஷ்டம் போலத்தான் தெரிகிறது.

பொம்பங்களைப் புரிஞ்சுக்கிறது ரொம்பக் கஷ்டம்ய்யா ...என்று 'பாப்பையா' ஸ்டைலில் சொல்லி மனசைத் தேத்திக்கிட வேண்டியதுதான்!

பிப்ரவரி 27-ம் தேதி விஏஓ தேர்வு!


சென்னை: கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வு பிப்ரவரி 27-ல் நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2 ஆயிரத்து 400 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

மேலும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களுக்கும் சேர்த்து தேர்வு நடத்தப்படும் என அறிவிப்புச் செய்யப்பட்டது.

இதன்படி புதிதாக 831 காலி இடங்கள் சேர்க்கப்பட்டு மொத்த பணி இடங்களின் எண்ணிக்கை 3,484 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி கடைசி நாள் என்றும், தேர்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தத் தேர்வுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே என்பதால் பல்வேறு தரப்பினரும் தேர்வில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தேர்வு தேதி அறிவிப்பு:

தேர்வு தேதி அறிவிக்கப்படாத நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். இந்த நிலையில், பிப்ரவரி 27-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தேர்வு ஒரே தாளாக இருக்கும். பொது அறிவுப் பிரிவில் 100 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலப் பாடத்தில் 100 வினாக்களும் கேட்கப்படும் (இரண்டுமே பத்தாம் வகுப்பு தரம்).

இரு பிரிவுகளுக்கும் 150 மதிப்பெண்கள் வீதம், மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வுக்குத் தகுதி பெற 90 மதிப்பெண்கள் பெறுவது அவசியம். காலை 10 மணிக்குத் தொடங்கும் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.

காலி இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பதால் புதியவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 28-ந் தேதி மாலை 5.45 மணி ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் 26-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. வி.ஏ.ஓ. தேர்வுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது. எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே பணி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிளஸ் 2 தேர்வெழுதுவோர் அவதி…

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்குகின்றன. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக கிராம நிர்வாக அலுவலர் தேர்வு நடத்தப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிளஸ் 2 படிக்கும் மாணவர்களும் வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களின் பொதுத் தேர்வுகளும், வி.ஏ.ஓ. தேர்வும் அடுத்தடுத்த நாட்களில் வருவதால் எந்தத் தேர்வுக்கு முழு அளவில் தயாராவது என்ற கேள்விக் குறி பிளஸ் 2 மாணவர்களிடையே எழுந்துள்ளது.

எந்த அறிவிப்பும் இல்லாமல் உணவு விலையை உயர்த்திய ஹோட்டல்கள்!


சென்னை: சென்னையில் பெரும்பாலான ஹோட்டல்களில் உணவுப் பண்டங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் 10 முதல் 15 சதவீதம் வரை விலையை உயர்த்தியுள்ளன.

வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை பெரிதும் உயர்ந்துவிட்டதாலேயே இந்த நிலை என்று ஹோட்டல்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து காய்கறிகளின் விலைகளும் பெருமளவு உயர்ந்துவிட்டன. இன்றைய நிலையில் வெங்காயம் கிலோ ரூ 88 முதல் 100 வரையிலும், தக்காளி கிலோ ரூ 44 முதல் 60 வரையிலும் விற்கப்படுகிறது.

பீன்ஸ், உருளை, முருங்கை என அனைத்து காய்கறிகளின் விலைகளும் பருவ மழை காரணமாக உயர்ந்துள்ளன.

காய்கறிகளின் இந்த விலையேற்றம் ஹோட்டல் தொழிலை பெரிதும் பாதித்துள்ளது.

உணவு பண்டங்களின் விலையை உயர்த்தாமல் இந்த விலை உயர்வை சமாளிக்க முடியவில்லை என்று தெரிவித்தனர் ஹோட்டல் நடத்துபவர்கள்.

சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள பெரிய ஹோட்டல்களில் 10 முதல் 15 உணவு பண்டங்களின் விலையை ஏற்றியுள்ளனர். எந்த அறிவிப்பும் செய்யாமல் ஓசையில்லாமல் உயர்த்திவிட்டனர்.

வெங்காயம் விலை உயர்வை தங்களால் சமாளிக்கவே முடியவில்லை என்று புலம்புகின்றனர் ஹோட்டல் நிர்வாகத்தினர்.

நட்சத்திர உணவகங்களில் கூட வெங்காய சாலட் மட்டும் தர முடியாது என்று அறிவிக்கும் அளவுக்கு நிலைமை போய்விட்டது.

தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர் சங்கம் தரப்பில் இதுவரை ஹோட்டல் பண்டங்களின் விலை உயர்த்தப்ட்டது குறித்து எந்தத் தகவலுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் பேருந்துகள்: பயணிகளே உஷார்!


மதுரையில் இருந்து இரவு 10.30க்கு புறப்பட்டது அந்த தனியார் பேருந்து. 25க்கும் மேற்பட்ட வட நாட்டுப் பயணிகள், மீதமுள்ளவர்கள் தமிழகத்தினர். இரண்டு மணி நேர பயணத்திற்குப் பின், பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, ஒரு பாலத்தின் மீது சென்றுக் கொண்டிருந்த பேருந்து தீடீரென ஒரு பக்கமாகத் திரும்பியது. வேகமாகச் செல்கையில் இவ்வாறு நிகழ்ந்தது ஏன் என்று புரியவில்லை. அச்சத்துடன் நிமிர்ந்து பார்த்தபோது, ஓட்டுனர் மிக மெதுவாக பேருந்தை பாலத்திற்குக் கீழ் கொண்டுவந்து சாலையின் ஓரமாக நிறுத்தினார்.

பேருந்தின் டையர்களில் ஒன்று வெடித்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் எல்லா டயர்களையும் ஆராய்ந்தார். பயணிகளும் பின்னால் சென்று பார்த்தனர். டயர்களில் எந்த பாதிப்பும் இல்லை. பிறகு எதனால் பேருந்து அவ்வாறு திரும்பியது...ஓட்டுனர் தூங்கிவிட்டாரா? புரியவில்லை. என்ன ஆனது என்பதை அறிந்துகொள்ள பேருந்தின் இயந்திரத்திற்கு அடியில் சென்று கிளீனர் பார்த்தார். ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. பேருந்து மீண்டும் புறப்பட்டது. அவ்வப்போது அது ஒரு பக்கமாக லேசாக அசைந்தது. ஆனால் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

திருச்சி நகரை நெருங்கிக்கொண்டிருந்த பேருந்து, தேச நெடுஞ்சாலையில் தொடர்ந்து செல்லாமல், குறுக்கே வேறு சாலையில் திரும்பியது. விழித்துக்கொண்டிருந்த எங்களைப் போன்ற சிலருக்கு எதுவும் புரியவில்லை. அதன் பிறகு நெடுஞ்சாலையை தவிர்த்தே பேருந்து செலுத்தப்படுவதைக் கண்டோம். சில மணி நேர பயணத்திற்குப் பிறகு பார்த்தால், திண்டிவனத்தை அடைந்திருக்க வேண்டிய அதிகாலை வேளையில் பேருந்து உளுந்தூர்பேட்டைக்கு குறுக்கு வழித் தேடிக்கொண்டிருந்தது. பயணிகளில் சிலர் சென்று ஓட்டுனருடன் சண்டை போட்டனர். எதற்காக ஊருக்குள் நுழைந்து ஓட்டிக்கொண்டிருக்கிறாய் என்று வினவ, அப்போதுதான் புரிந்தது, அந்த பேருந்து கேரளத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதும், அதற்கு எல்லா மாநிலங்களிலும் ஓட்டும் பர்மிட் இல்லை என்பதும்.

சண்டைக்குப் பின்னரும் நெடுஞ்சாலைக்கு வராமல் தொடர்ந்து ஊருக்குள் புகுந்து ஓட்டிக்கொண்டிருக்க சென்னைக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய நேரத்தில் விழுப்புரம் வந்திருந்தது!அதற்குப் பிறகும் நெடுஞ்சாலையில் ஓட்டாமல், செஞ்சி சாலையில் நுழைய ஓட்டுனர் முற்பட பெரும் சண்டை வெடித்தது. சில பயணிகள் நெடுஞ்சாலையில் பணியில் இருந்த காவலர்கள் இருவரை அழைத்துவர, அவர்கள் மிரட்டி, நெடுஞ்சாலையில் பேருந்து ஓட்டிச் செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.

நெடுஞ்சாலைக்கு வந்து ஒரு அரை மணி நேரம்தான் இருக்கும், போக்குவரத்து ஆணையாளர் ஒருவர் பேருந்தை மடக்கி, கட்டு சாலை வரியை என்று நிர்பந்தித்து ரூ.5,000 வாங்கிவிட்டார். ஓட்டுனரும் கிளீனரும் பயணிகள் மீது கோவப்பட, பயணிகள் பெருத்த குரலில் திருப்பிக் கத்த, மீண்டும் பயணம் தொடர்ந்தது. சவ வேகத்தில் காலை 10 மணிக்கு பெருங்களத்தூருக்கு வந்தது.

காலையில் பணிக்குச் செல்லவிருந்த பயணிகள் அனைவரும் திட்டிக்கொண்டே இறங்கிச் சென்றனர்.

தனியார் பேருந்து என்றால், நல்ல நிலையில் இருக்கும், குறித்த நேரத்தில் அல்லது அதற்கு முன்னதாகவே கொண்டு போய் (பாதுகாப்பாக) சேர்த்து விடுவார்கள் என்பது அனுபவத்தால் நாம் கண்டதுதான். ஆனால் அந்த நம்பிக்கையுடன் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பயணம் புறம்பட்டால் நீங்கள் ஏமாற்றத்திற்குள்ளாவீர்கள். தனியார் பேருந்துகளில் பயணச் சீட்டுப் பெறும்போது நாம் எந்த பேருந்தில் ஏற்றப்படப்போகிறோம் என்பதை அவர்கள் தெரிவிக்காமலேயே, கடைசி நேரத்தில் இதுமாதிரியான நீண்ட காலம் பயன்பாட்டில் இல்லாத (நாங்கள் பயணம் செய்த அந்த பேருந்து ஒவ்வொரு ஆண்டும் முழுமை செய்யப்பட்டு பெற வேண்டிய சான்றிதழை (எஃப்.சி) பெற்றிருக்கவில்லை) பேருந்தை கொண்டுவந்து அதில் அவசர, அவசரமாக ஏற்றி அனுப்பி வைத்து விடுகின்றனர். ஒரு இரவு பயணத்தில் ரூ.12,000 முதல் 15,000 வரை கிடைக்கிறதே!

இதனை தனியார் பேருந்துகளில் முன் பதிவு செய்யும் எல்லா முகவர்களும் சேர்ந்தே செய்கின்றனர், தெரிந்தே செய்கின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் சங்கீதா என்கிற தனியார் போக்குவரத்து நிறுவனம், ஒரு குளிர் வசதி செய்யப்பட்ட பேருந்தை இரவு 12 மணிக்கு கொண்டு வந்து கோவை செல்ல முன்பதிவு செய்திருந்த பயணிகளை அனுப்பி வைத்தது. அது 4 மணி நேரத்திற்குப் பிறகே வேலூரைத் தாண்டியிருந்தது. பேருந்தில் பிரச்சனை. அப்போதுதான் பார்த்தோம்...டயர்கள் எல்லாம் பழையவை (அவைகள் எங்கள் கண் முன்னே உருட்டிக்கொண்டு போனபோது, அது நம்ம வண்டிக்குத்தான் என்று தெரியாமல் இருந்தேன்!). அப்போதுதான் அவைகளை முன்பே பார்த்த ஞாபகம் வந்தது.

என்னய்யா இப்படி என்று கேட்கப்போனால்... பேசவில்லை. பிறகு பேசினார்கள்... தூய தெலுங்கில். அப்போதுதான் சங்கீதா அலுவலகத்திற்கு எனது நண்பர் வழி கேட்டபோது, ஒரு முகவர் சொன்ன வார்த்தைகள் அவருக்கு நினைவிற்கு வந்தது, “ஓ.. அந்த ஏழரை பஸ்ல டிக்கட்டா... அப்படி போங்க” என்று கூறியுள்ளார், நமக்குத்தான் அப்போது புரியவில்லை.

எங்கள் பேருந்தில் அன்றைக்கு பயணம் செய்தவர்கள் அனைவரும் படித்தவர்கள், இணையத்தின் வாயிலாக பயணச் சீட்டை முன் பதிவு செய்தவர்கள்! மோசமான வண்டியில் பயணம் செய்ய இணையத்தில் முன் பதிவு!
கிழிந்து தொங்கிய டயர் பகுதிகளை அந்த இருட்டில் அறுத்து எறிந்து விட்டு, தொடர்ந்து ஓட்டினார்கள். பீதியுள்ள நாங்கள் (அதற்குள் விடிந்தே விட்டது, வண்டி ஜோலார்பேட்டையை தாண்டவில்லை) பேருந்தை நிறுத்த சொல்லி இறங்கி, இரயிலைப் பிடித்து ஈரோடு சென்றோம்.

இப்படிப்பட்ட அனுபவங்களை பலரும் பெற்றுள்ளனர். இவை யாவும் திட்டமிட்டுச் செய்யப்படுகிற மோசடிகளே. பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இப்படிப்பட்ட தில்லுமுல்லு வேலைகள் ஏகத்திற்கு நடக்கின்றன. இதில் நடுவழிச் சண்டை மட்டுமின்றி, விபத்தில் சிக்கும் சாத்தியமும் உள்ளதால், அச்சமுற்றவர்கள் பாதி வழியில் வண்டியில் இருந்து இறங்கி, வேறு வண்டி பிடித்துச் செல்கின்றனர்.

இது மட்டுமல்ல, மதுரைக்கு என்று கூறி, ஏற்றிக்கொண்டு திருச்சி வந்ததும், வேறு வண்டியில் ஏறிப் போங்கள் என்று கூறுவதும் நடக்கிறது. இதனை தட்டிக்கேட்க அரசோ, போக்குவரத்துக் காவல் துறையோ (அந்த நேரத்தில்) முன்வருவதில்லை. “கம்ளைண்ட் கொடு, போ” என்று் ஓட்டுனர்களும், கிளீனர்களும் துணிச்சலாக பேசுகின்றனர். பேருந்தில் ஏற்றும்வரைதான் மரியாதை, அதன் பிறகு அதனை கவலைப்படாமல் கப்பல் ஏற்றுகின்றனர்.

நடு இரவில்... சாலையைக் கம்மியுள்ள இருட்டில், எந்தக் காவல் துறை அங்கே வரப்போகிறது? விடியும் வரை காத்திருக்க முடியுமா? சாத்தியமில்லை. எனவே சகித்துக் கொண்டு, தங்களையே (நம்ம நேரம்!) சபித்துக்கொண்டு, ஆபத்தான பயணத்தை தொடர்கின்றனர்.

இதனை காவல் துறையோ அல்லது அரசோ எந்த விதத்திலும் தவிர்க்கப் போவதில்லை. தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்து பேருந்துகளை பார்த்தாலே போதுமே! அரசின் நிர்வாக யோக்கிதை பளிச்சிடுகிறதே! எனவே நாம் தான் எச்சரிக்கையாக பேருந்துகளை தேர்வு செய்ய வேண்டும்.

நன்கு பிரபலமான தனியார் பேருந்துகளில் மட்டும் இணையத்தின் வாயிலாக பதிவு செய்யுங்கள்.
இணையத்தில் உள்ளது என்பதற்காகவே அந்த நிறுவனத்தின் பேருந்துகள் நல்லவையாக இருக்கும் என்று படத்தைப் பார்த்து முடிவு செய்யாதீர்கள்.

சென்னை கோயம்பேடு அல்லது மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட எந்த நகரத்திற்குச் சென்றாலும், பயணம் செய்கின்ற பேருந்தை பார்த்துவிட்டு பயணச் சீட்டைப் பெறுங்கள். குறிப்பாக, நாம் அமரும் இடத்திற்கு மேல் உள்ள மின் விசிறி, விளக்குகள் ஆகியவற்றின் நிலைகளைக் கண்டாலே பேருந்தின் தரம் தெரிந்துவிடும்.

பயணம் செய்யும் பேருந்தின் டயர்களை ஒரு சுற்று சுற்றுப் பாருங்கள். இது மிக மிக முக்கியம்.

அரசு பேருந்துகளில் இயன்றவரை முன் பதிவு செய்து பயணிக்காதீர்கள். ஏ.சி. பேருந்தில் பதிவு செய்வீர்கள். பேருந்து வந்து நின்றவுடன் “ஏ.சி. வேலை செய்யவில்லை, இப்போதே சொல்லிவிட்டேன்... அப்புறம் பாதி வழியில் கத்தக் கூடாது” என்று ஓட்டுனர் பொறுப்புடன் உங்களை எச்சரிப்பார்! காசை கொடுத்துவிட்டுத் தேவைதானா?

திருடானா பார்த்து திருந்தாவிட்டால் என்பது போல், தனியார், அரசு போக்குவரத்து நிறுவனங்களே பார்த்து திருந்தாவிட்டால், அவர்களை யாராலும் திருத்த முடியாது. எனவே முன் எச்சரிக்கையுடன் பயணத்தை திட்டமிடுங்கள். மகிழ்ச்சியான பயணம் என்பது நமது நாட்டில் பயணச் சீட்டில் மட்டும்தான். எனவே பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்துகொண்டு பயணியுங்கள்.

ம‌க்களை வா‌ட்டி வதை‌க்கு‌ம் கா‌ய்க‌றி ‌விலை!


த‌‌மிழக‌த்‌‌தி‌ல் கட‌ந்த ‌சில நா‌ட்களு‌க்கு மு‌ன்பு கொ‌ட்டி ‌தீ‌ர்‌த்த மழை காரணமாக அ‌‌ண்ணா‌ந்து பா‌ர்‌க்கு‌ம் அளவு‌க்கு ரெ‌க்கை ‌க‌ட்டி‌ப் பறக்கிறது கா‌ய்க‌‌றி ‌விலைக‌ள். அ‌ன்றாட பய‌ன்பா‌ட்டு கா‌ய்க‌றிக‌ளான வெ‌ங்காய‌ம், த‌‌க்கா‌ளி‌‌ ஆகியவற்றின் ‌விலைக‌ள் கட‌ந்த ‌சில நா‌ட்களாகவே அ‌திக‌ரி‌த்து கொ‌ண்டே இரு‌க்‌கிறது. கா‌ய்க‌றி ‌விலை உய‌ர்‌ந்‌திரு‌ந்தா‌லு‌ம் வேறு வ‌ழி‌யி‌ன்‌றி அவ‌ற்றை வா‌ங்‌கி செ‌‌ல்‌கி‌ன்றன‌ர் பொதும‌க்க‌ள்.

‌விலை உய‌ர்வு‌‌க்கு காரண‌ம் தெ‌ன்‌‌னி‌ந்‌தியா முழுவது‌ம் பெ‌ய்து வரு‌ம் மழை எ‌ன்று அனைவரு‌ம் உண‌ர்‌ந்த ‌விஷய‌ம். இது ஒருபுற‌ம் இரு‌க்க இ‌ந்த ‌திடீ‌ர் ‌விலை உய‌ர்வா‌ல் கா‌ய்க‌றி ‌வியாபா‌ரிகளு‌ம் அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்து‌ள்ளன‌ர்.

எ‌தி‌ர்பா‌‌ர்‌த்த‌ற்கு மேலாகவே ‌விலைக‌ள் அ‌திக‌ரி‌த்து‌‌வி‌ட்டன எ‌ன்று ‌கூறு‌ம் வியாபா‌ரிக‌‌‌ள், க‌‌த்‌தி‌ரி‌க்கா‌ய், வ‌ெ‌‌ண்டை‌க்கா‌ய் அ‌திகப‌ட்ச ‌விலையாக உய‌ர்‌‌ந்த‌ிரு‌க்‌கிறது எ‌ன்‌கி‌ன்றன‌ர்.

கட‌ந்த வார‌ம் மொ‌த்த ‌வி‌ற்பனை‌யி‌ல் 45 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்ற ஒரு ‌கிலோ வெ‌ங்காய‌த்‌தி‌ன் ‌விலை த‌ற்போது 70 ரூபாயாக உய‌ர்‌ந்து‌ள்ளது. மழை காரணமாக வெ‌‌ங்காய‌ம் உ‌ள்‌ளி‌ட்ட ‌விளை ப‌யி‌ர்க‌ள் சேத‌ம் அடை‌ந்து‌ள்ளதா‌ல் தொட‌ர்‌‌ந்து ‌விலை உய‌ர்வு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாக கூறு‌ம் கோய‌ம்பேடு ‌வியாபா‌ரிக‌ள், ‌விலை உய‌ர்வு‌எ‌ன்பது ‌வியாபார யு‌க்‌தி அ‌ல்ல, இய‌ற்கை ‌சீ‌ற்‌ற‌ம்தா‌ன் காரண‌ம் எ‌ன்று‌ம் கூறு‌‌கி‌ன்றன‌ர்.

கு‌றி‌ப்பாக தெ‌ன் மா‌நில‌ங்களான த‌‌மி‌ழ்நாடு, ஆ‌ந்‌திர, க‌ர்நாடகா போ‌ன்ற மா‌நில‌ங்க‌ளி‌ல் அப‌ரி‌மிதமான மழை பெ‌ய்ததா‌ல் ‌விளை ப‌யி‌ர்க‌ள் அ‌திக அள‌வி‌ல் நாச‌ம் அடை‌ந்து‌வி‌ட்டது. இத‌ன் காரணமாகவே ‌‌விலை உய‌ர்‌ந்து‌‌வி‌ட்டதாகவு‌ம் அவ‌ர்க‌ள் கூறு‌கி‌ன்றன‌ர்.

பெங்களூரு கத்திரிக்காய், நூ‌க்கோ‌ல் போ‌ன்ற கா‌ய்க‌றிக‌ளி‌ன் ‌‌விலை ஓரளவு குறை‌ந்தே உ‌ள்ளன. எ‌‌னினு‌ம் அவரை‌க்கா‌‌ய், பாக‌‌ற்கா‌ய், வெ‌‌ண்டை‌க்கா‌ய், ‌பீ‌ட்ரூ‌ட், முரு‌ங்கைக்கா‌ய், க‌த்‌தி‌ரி‌க்கா‌ய் உ‌ள்‌ளி‌ட்ட கா‌ய்க‌றிக‌ளி‌ன் ‌விலைகளு‌ம் எ‌தி‌ர்பாராத ‌விதமான உய‌ர்‌ந்து‌ள்ளன. மொ‌த்த மா‌ர்‌க்கெ‌‌ட்டி‌ல் இருந‌்து வா‌ங்‌கி வ‌ந்து ‌வி‌ற்போ‌ர் ‌விலை சொ‌ல்வதை ‌விட ம‌க்களு‌க்கு காரண‌ம் சொல்‌லியே ஓ‌ய்‌ந்து போ‌‌‌கி‌ன்றன‌ர்.

‌சி‌ல்லறை ச‌ந்தை‌‌யி‌ல் கா‌ய்க‌றி ‌விலைக‌ள் அ‌திக‌ரி‌த்து‌ள்ளதே எ‌‌‌ன்று கோய‌ம்பேடு மா‌ர்‌க்கெ‌‌ட்டு வ‌ந்த பொதும‌க்களு‌ம், அ‌ங்கு‌ம் ‌விலை உய‌ர்‌ந்‌திரு‌ப்பதை க‌ண்டு கா‌ய்க‌றி ‌வி‌ற்பனை கடைக‌ளை க‌ண்கா‌ட்‌சி போல பா‌‌ர்‌த்து ‌நி‌ன்றன‌ர்.

வெ‌ங்காய‌ம் ‌‌த‌க்கா‌ளி ‌விலை ‌வி‌ல்‌லிவா‌க்க‌ம் மா‌ர்‌க்கெ‌ட்டி‌ல் உய‌‌ர்‌திரு‌ப்தபா‌ல் கோய‌ம்பே‌ட்டி‌ற்கு வ‌ந்தோ‌ம் எ‌ன்று‌ம் அ‌ங்கு‌ள்ள‌தை போ‌ல்தா‌ன் ‌விலை இரு‌‌க்‌கிறது. இதனை வா‌ங்‌கி சமைய‌ல் செ‌ய்வது க‌ஷ்ட‌ம் எ‌ன்றாலு‌ம் சமைய‌ல் செ‌ய்துதா‌ன் ஆக வே‌ண்டு‌ம் எ‌ன்று பொதும‌க்க‌ள் செ‌ல்‌கி‌ன்றன‌ர்.

''கா‌ய்க‌றி ‌விலைக‌ள் கடுமையாக உய‌ர்‌ந்து‌ள்ளதா‌ல் வா‌ங்கவே முடிய‌வி‌ல்லை. எதனா‌ல் ‌விலை உய‌ர்‌ந்தது எ‌ன்று‌ம் தெ‌ரிய‌வி‌‌‌ல்லை. ‌விலை உய‌ர்‌கிறதே த‌விர குறைய‌வி‌ல்லை'' எ‌ன்று‌ம் பொதும‌க்க‌ள் வேதனையுட‌ன் கூறு‌கி‌ன்றன‌ர்.

அ‌ன்றாட தேவை‌க்கான கா‌‌ய்க‌றிக‌ள் அனை‌த்துமே கிலோவிற்கு 30 ரூபா‌ய்‌க்கு மே‌ல் ‌விலை உய‌ர்‌ந்‌திரு‌ப்பதாக இ‌ல்ல‌த்தர‌சிக‌ள் கூறு‌கி‌ன்றன‌ர்.

வெ‌ங்காய ‌விலை உய‌ர்வை போ‌ன்று பூ‌ண்டு ‌விலையு‌ம் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. மூ‌ன்று மாத‌ங்களு‌க்கு மு‌ன்பு ஒரு ‌‌கிலோ 150 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்க‌ப்ப‌ட்ட பூ‌ண்டு த‌ற்போது 250 ரூபாயாக உய‌ர்‌ந்து‌ள்ளது. பூ‌ண்டு சாகுபடி தாமதமானது‌ம், அ‌திக அள‌வி‌ல் ஏ‌ற்றும‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டதுமே பூ‌ண்டி‌ன் ‌விலை உய‌ர்வு‌க்கு காரண‌ம் எ‌‌ன்று ‌வியாபா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

அதே நேர‌த்த‌ி‌ல் பூ‌ண்டி‌ன் ‌விலை ஜனவ‌ரி மாத‌ம் ம‌த்‌தி‌யி‌ல் குறைய‌த் தொட‌ங்கு‌ம் எ‌ன்று‌‌ம் ‌வியாபா‌ரிக‌ள் கூறு‌கி‌ன்றன‌ர்.

கோய‌ம்பேடு மா‌‌ர்‌க்கெ‌ட்டி‌ல் இ‌ன்று ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌ம் கா‌ய்க‌றி ‌விலை:

கோ‌ஸ் ரூ.20
கேர‌ட் ரூ.40
‌‌பீ‌ட்ரூ‌ட் ரூ.30
ச‌வ்ச‌வ் ரூ.18
நூ‌க்கோ‌ல் ரூ.20
மு‌‌ள்ளங்‌கி ரூ.24
‌‌பீ‌ன்‌ஸ் ரூ.40
க‌த்‌திரி‌க்கா‌ய் ரூ.30
அவரை‌க்கா‌ய் ரூ.40
புடல‌ங்கா‌ய் ரூ.28
வெ‌ண்டை‌க்கா‌ய் ரூ.35
மிளகா‌ய் ரூ.20
குடை ‌மிளகா‌ய் ரூ.25
முரு‌ங்கைகா‌ய் ரூ.150
இ‌‌ஞ்‌சி ரூ.70
தே‌ங்கா‌ய் (ஒ‌ன்று) ரூ.15
சேனை‌க் ‌கிழ‌ங்கு ரூ.18
சேம்பு ரூ.22
உருளை‌க்‌கிழ‌ங்கு ரூ.24
கோவ‌க்கா‌ய் ரூ.20
சுர‌க்கா‌ய் ரூ.20
நா‌‌ட்டு த‌க்கா‌ளி ரூ.35
பெ‌‌ங்களூ‌ரு த‌க்கா‌ளி ரூ.36
பூச‌ணி ரூ.15
பெ‌ரிய வெ‌ங்கா‌ய‌ம் ரூ.70
சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம் ‌ ரூ.50
ப‌ட்டா‌ணி ரூ.35
பா‌க‌‌ற்கா‌ய் ரூ.30
கா‌‌லி‌பிளவ‌ர் (ஒ‌ன்று) ரூ.25
பர‌ங்‌கிகா‌ய் ரூ.28

வியாழன், 16 டிசம்பர், 2010

அடிக்கடி 'அணைப்பு'-அளவில்லா மகிழ்ச்சி!


புதிதாக கல்யாணமானவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் எப்போதும் சேர்ந்தே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதைப் பார்த்து பலரும் கிண்டலடிப்பது சகஜம். ஆனால் உண்மையில் புதிதாக கல்யாணம் செய்தவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டுமாம். அதுதான் அவர்களது மண வாழ்க்கை பெரும் மகிழ்ச்சிக்குரியதாக மாற நல்ல அடித்தளமாக அமையும் என்கிறார்கள்.

அதை விட முக்கியமாக இதில் ஒரு விஞ்ஞான விஷயமும் புதைந்திருக்கிறது. அதாவது நியூராட்டிசம் என்ற பிரச்சினையை அடியோடு குறைக்க இந்த அடிக்கடி செக்ஸ் உதவுகிறதாம்.

நியூராட்டிசம் பிரச்சினை இருப்பவர்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள், சள்புள் என்று எரிச்சல் படுவார்கள். யாராவது ஏதாவது சொன்னால் சட்டமென்று மூக்கு நுனியில் கோபம் வந்து விடும். இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கு திருமணமும், செக்ஸும் மிகப் பெரிய நிவாரணமாக அமைகிறது என்கிறது ஒரு ஆய்வு.

புதிதாக மணமாணவர்களுக்கு செக்ஸ் குறித்த ஆர்வமும், வேகமும் அதிகமாக இருக்கும். எனவே ஒரு நாளைக்கு இரண்டுக்கும் மேற்பட்ட முறை கூட உறவு வைத்துக் கொள்ள விரும்புவார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார்கள் டாக்டர்கள். அதிக அளவிலான உறவால் உண்மையில் நியூராட்டிசம் போன்றவை மட்டுப் பட உதவுகிறது. முடிந்தவரை உறவு வைத்துக் கொள்வதிலும் தவறில்லை என்பதும் டாக்டர்கள் தரும் அட்வைஸ்.

இதுகுறித்து நடத்தப்பட்ட ஒருஆய்வில், புதிதாக மணமான ஜோடியை சோதனைக்கு உட்படுத்தினர். அவர்களிடம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முதல் நான்கு ஆண்டுகளுக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் ஆரம்பத்தில் அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை அவர்களுக்கு (ஆண் மற்றும் பெண்களுக்கு) எந்தவிதமான டென்ஷனும் வரவே இல்லையாம். பதட்டம் குறைந்து, மிகுந்த மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருந்துள்ளனர்.

இதற்கு முக்கியக் காரணம், இந்த கால கட்டத்தில் அவர்கள் அதிக அளவில் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதே காரணம். ஒரு ஆண்டு கழித்து செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும் அளவு குறையத் தொடங்கியுள்ளது. இதனால் அவ்வப்போது எரிச்சல் வந்து எட்டிப் பார்த்துள்ளது அவர்களிடம். அதேசமயம், பெரிய அளவி்ல் டென்ஷனுக்குள்ளாகவில்லை. காரணம், வாரத்திற்கு குறைந்தது 3 முறையாவது அவர்கள் உறவு வைத்துக் கொண்டதால்.

4வது ஆண்டுவாக்கில் அவர்களுக்குள் உறவுகள் குறைந்து வந்திருப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்தனர். அதாவது மாதத்திற்கு 3 அல்லது 4 முறை மட்டுமே உறவு கொள்ள ஆரம்பித்துள்ளனர் ஜோடிகள். இதனால் நியூராட்டிசம் அவர்களிடையே எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளது.

இதன் மூலம் செக்ஸ் உறவு நரம்பியல் கோளாறுகளுக்கு நல்ல மருந்து என்பது டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

எனவே புதிதாக திருமணமானவர்கள் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு உறவு கொள்வதில் ஆர்வம் காட்டலாம். உடல் நலம் பாதிக்காத அளவுக்கு பார்த்துக் கொண்டு, செக்ஸ் உறவில் அதிக அளவில் ஈடுபடுவது அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பக்குவப்படுத்த உதவும் என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்கிறார்கள் ஆய்வில் ஈடுபட்ட டாக்டர்கள்.

இதை நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே (ஆய்வு எதுவும் செய்யாமலேயே) உணர்ந்திருக்கிறார்கள் போல. அதனால்தான் முரட்டுத்தனமாக, யார் பேச்சையும் கேட்காமல், வம்பிழுத்துக் கொண்டு ஊர் சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு மூக்கணாங்கயிறு போட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று கல்யாணத்தை செய்து வைத்து சாந்தப்படுத்தும் பழக்கத்தை கடைப்பிடித்துள்ளனர்.

எனவே எதற்கெடுத்தாலும் வெக்ஸ் ஆகும் பழக்கம் உடையவர்கள், டென்ஸ் ஆகும் குணமுடையவர்கள், பேசாமல் காலாகாலத்தில் கல்யாணம் செய்து கொண்டு செக்ஸ் வாழ்க்கையில் செட்டிலானால், எல்லாம் ஃபிக்ஸ் செய்யப்படும் சாத்தியம் உண்டு.

யு ட்யூபுக்காக வீடியோ தயாரிப்பு நிறுவனத்தை வாங்கும் கூகுள்!


யு ட்யூபில் யார் வேண்டுமானாலும் வீடியோக்களை அப்லோட் செய்து பார்க்கலாம் என்ற நிலை உள்ளது. விரைவில் இதற்கு சில வரைமுறைகள் கொண்டுவர உத்தேசித்துள்ளது கூகுள்.

தொழில்முறை நிறுவனம் மூலம் ஒருஜினல் வீடியோக்களை உருவாக்கி அவற்றை ட்யூப்பில் ஒளிபரப்பும் முயற்சியில் மும்முரமாக உள்ளது கூகுள். இதன் முதல் முயற்சியாக நெக்ஸ்ட் நியூ நெட்வொர்க் எனும் வீடியோ தயாரிப்பு நிறுவனத்தை வாங்க திட்டமிட்டுள்ளது.

புதிய குறும்படங்கள், திரைப்படங்களையும் கூட யு ட்யூபில் வெளியிடும் திட்டமும் உள்ளதாம். இதன் மூலம் அதிக விளம்பர வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூகுள் கருதுகிறது.

யு ட்யூபுக்காக கூகுள் வாங்கும் முதல் நிறுவனம் இது என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கர்ப்பிணிகள் தெரிந்துகொள்ள வேண்டியவை!


எடை!

கர்ப்பக் காலத்தில் கர்ப்பிணிகள் எடை 12 கிலோ வரை கூடலாம். இதில் கரு, பனிக்குடம், அதில் உள்ள திரவம் ஆகியவற்றின் எடை 4.4 கிலோ, கருப்பையும், மார்பகமும்1.1 கிலோ, ரத்த அதிகரிப்பு 1 கிலோ, கொழுப்பு சேர்வது 2 கிலோ, நீர் தேங்குவது 4 கிலோவும் ஆகும்.

உணவு முறை!

புழுங்கல் அரிசியில் வைட்டமின் பி சத்து அதிகம் உள்ளது. ஆனால் பாலிஷ் செய்யப்பட்ட புழுங்கல் அரிசியில் இருந்து இச்சத்து பிரிக்கப்படுவதால் சத்து கிடைக்காது. வைட்டமின் பி சத்து நீரில் கரையும் தன்மை உள்ளது. வேகவைத்து கஞ்சியை வடித்துவிடும் போது அதில் சென்று அச்சத்து வீணாகிறது. அதனால் கஞ்சித் தண்ணீர் குடிப்பது நல்லது.

விலங்கு உணவுகளில் இருந்து மட்டுமே வைட்டமின் பி12 சத்து கிடைக்கிறது. ரத்த அணுக்கள் உண்டாக வைட்டமின் பி12 தேவை. ரத்த சோகை உண்டாவதற்கு இதன் பற்றாக்குறையும் ஒரு காரணம். மீன், முட்டை, பால் இறைச்சி ஆகியவற்றை அதிகமாகச் சாப்பிட்டு இச்சத்தைப் பெறலாம்.

தினமும் குறைந்த கொகுப்புள்ள பால் 750 மில்லி கிராம் அருந்தினால், அன்றையத் தேவையில் சுமார் 80 விழுக்காடு கால்சியத்தைப் பூர்த்தி செய்யும். பால் சாப்பிடாதவர்கள், சிறிய வகை மீன்கள், பச்சைக் காய்கறிகள், சோயா, ஆரஞ்சு ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

கருச்சிதைவு?

ஏழில் ஒரு கரு சிதைகிறது. அவற்றில் பெரும்பாலானவை ஆறு முதல் பத்து வாரங்களில் சிதைந்து போகின்றன. குறிப்பாக, 25 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவர்களுக்குப் பத்தில் ஒரு கரு வீதம் சிதையலாம். முப்பத்தைந்து வயதுக்கு மேலானால் ஐந்தில் ஒரு கரு கலைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கர்ப்பத்தின் போது ஏற்படும் எந்த ரத்தப் போக்கும் கருச்சிதைவின் தொடக்கமாக இருக்கக்கூடும். ரத்தப் போக்கு ஏற்பட்டு அதிகமான ரத்த இழப்பு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

ஒரு முறை கருச்சிதைவு ஏற்பட்டால், அடுத்தமுறை நலமான மகப்பேறு அடையும் வாய்ப்பு 80 விழுக்காடு இருக்கும். இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால் 75 விழுக்காடும், மூன்று முறை ஏற்பட்டிருந்தால் 70 விழுக்காடு வாய்ப்பும் இருக்கும்.

உடற்பயிற்சி!

உடற்பயிற்சி செய்ய விரும்பும் கர்ப்பிணிகள், ·பிசியோதெரபி நிபுணரின் ஆலோசனை மற்றும் உதவியுடன் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. பயிற்சியின் போது கணவர் உடன் இருந்தால் இன்னும் சிறப்பாக பயிற்சி செய்யலாம்.

பிரசவ காலம்!

பிரசவ நேரத்தின் போது எதையும் சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் கூறுவர். இதனால் பிரசவ நேரத்தில் நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்கலாம். தவிர, இத்தகைய நிலைகளில் மயக்க மருந்து மருத்துவரின் உதவி தேவைப்படுவதால் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

கோரைப்பா‌ய் தயா‌ரி‌ப்‌பு மு‌ன்ன‌ணி‌யி‌ல் ‌சீ‌ர்கா‌ழி!

வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று களை‌த்து ‌வீ‌ட்டு‌க்கு வ‌ந்தது‌ம் ‌பாயை வி‌ரி‌த்து படு‌த்தா‌‌ல் ‌கிடை‌க்‌கிற சுக‌மான தூ‌க்க‌ம் இரு‌க்‌கிறதே அடடா அ‌த‌ற்கு ஈடு இணையேது. இந்த பாய் தயாரிப்பில் உலக புக‌ழ் பெ‌ற்றது ‌திருநெ‌ல்வே‌‌லி மாவ‌ட்ட‌‌‌த்‌தி‌ல் உ‌ள்ள ப‌‌த்தமடை.

இதற்கு அடுத்தபடியாக, ஏழைக‌ளி‌ன் மெ‌த்தையான கோரைப்பா‌ய் தயாரிப்பில் மு‌ன்ன‌ணி‌யி‌ல் இரு‌‌க்‌‌கிறது ‌சீ‌ர்கா‌ழி. இ‌ங்கு‌ள்ள தை‌க்கா‌ல்‌ ‌கிராம‌த்தி‌ல் ‌வீடு தோறு‌ம் பா‌ய் உ‌ற்ப‌த்‌தி சேய்யப்படு‌கிறது. த‌மிழக‌ம் ம‌ட்டு‌மி‌ன்‌றி, வெ‌ளி மா‌நில‌ங்க‌ளிலு‌ம் புக‌ழ்பெ‌ற்ற இ‌ந்த பா‌ய்க‌ள், நூ‌ற்றா‌ண்டு பார‌ம்பரிய‌ம் ‌மி‌க்கதாகு‌ம். பா‌ய் தயா‌ரி‌க்கு‌ம் தொ‌ழி‌ல் பர‌ம்பரையாக அ‌டு‌த்தடு‌த்த தலைமுறை‌யினரா‌ல் நட‌த்த‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

கோரைக‌ள் அ‌திக அ‌ள‌வி‌ல் ‌கிடை‌ப்பதே இ‌ப்பகு‌தி‌யி‌ல் இ‌த்தொ‌ழி‌ல் செ‌ழி‌த்து வளர காரணமாகு‌ம். சுமா‌ர் 200 ஏ‌க்க‌‌ர் பர‌ப்பள‌வி‌ல் கோரை உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌கிறது. கோரைகளை விளை‌‌வி‌க்க தேவையான ‌கிழ‌ங்குக‌ள் வா‌ய்‌க்கா‌ல் வர‌ப்புக‌ளி‌ல் இரு‌ந்தே பெற‌ப்படு‌கி‌ன்றன. கோரை‌ப் ப‌யி‌ரி‌ட்ட 6வது மாத‌த்‌தி‌ல் அறுவடை‌க்கு தயாராக வள‌ர்‌ந்து ‌‌நி‌ற்கு‌ம். கோரைகளை அறுவடை செ‌ய்து இர‌ண்டாக ‌‌கி‌ழி‌த்து அவ‌ற்றை இர‌ண்டு முறை காயவை‌‌த்து க‌ட்டு‌க்க‌ட்டி தொ‌ழி‌ற்கூ‌ட‌த்‌தி‌ற்கு கொ‌ண்டு வ‌ந்து சு‌த்த‌ம் செ‌ய்‌கி‌ன்றன‌ர். ‌‌பி‌ன்ன‌ர் தேவையான வ‌ண்ண‌த்‌தி‌ல் நனை‌த்து காயவை‌த்து ‌பா‌யா‌க்கி‌ன்றன‌ர். ஒருமுறை ப‌யி‌ரி‌ட்ட கோரை தொட‌‌ர்‌ந்து வள‌ர்‌ந்து கொ‌ண்டே இரு‌ப்பதுட‌ன் 10 ஆ‌ண்டுக‌ள் வரை பல‌ன் தரு‌கிறது.

கோரையை வள‌‌ர்‌ப்பவ‌ர்களே பா‌ய் தயா‌ரி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதி‌ல்லை. ஒரு ஏ‌க்க‌ர் ‌நில‌ம் வை‌த்‌திரு‌க்கு‌ம் ‌விவசா‌யிக‌ள் கோரை ‌விளை‌வி‌த்து அவ‌ற்றை பா‌ய் தயா‌ரி‌ப்பாள‌ர்களு‌க்கு ‌வி‌ற்பத‌ன் மூல‌ம் ஆ‌ண்டு‌க்கு 40 ஆ‌யிர‌ம் ரூபா‌ய் வரை ச‌ம்பா‌தி‌த்து வரு‌கி‌ன்றன‌ர். இ‌த்தொ‌ழி‌லி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ள கூ‌லி‌த் தொ‌ழிலாள‌ர்களு‌க்கு நா‌ள் ஒ‌ன்று‌க்கு 100 ரூபா‌ய் முத‌ல் 150 ரூபா‌ய் வரை ‌கிடை‌ப்பதா‌ல் அவ‌ர்க‌ள் ம‌கி‌ழ்‌ச்‌சியோடு இ‌த்தொ‌ழி‌லி‌ல் ஈடுப‌ட்‌‌டு‌ள்ளன‌ர்.

ப‌ந்‌தி‌‌ப் பா‌ய், ‌வ‌ண்ண‌ப் பா‌ய், திருமண‌ப் பா‌ய், தொழுவை‌ப் பா‌ய், சிறிய அளவிலான மேசை விரிப்பு என பல‌வித பா‌ய்க‌ள் இரு‌ந்தாலு‌ம், ‌திருமண‌ப் பா‌ய்‌க்கு த‌னி மவுசு உ‌ண்டு. மணம‌க்க‌ள் பெய‌ர், ‌திருமண நா‌ள் ‌‌போ‌ன்ற விவர‌ங்களை கொடு‌த்து‌வி‌ட்டா‌ல் க‌ச்‌சிதமாக பா‌ய் நெ‌ய்து த‌ந்து ‌விடு‌கி‌ன்றன‌ர். ஒரு ‌கிராமமே ‌‌திருமண‌ப் பா‌ய் செ‌ய்து வரு‌‌கிறது எ‌ண்ணு‌ம்போது இ‌த‌ற்கு‌ள்ள தேவை எ‌ன்ன எ‌ன்பது தெ‌ளிவா‌கிறது. ‌திருமண‌ப் பா‌ய்க‌ள் 500 ரூபா‌ய் முத‌ல் 1000 ரூபா‌ய் வரை ‌வி‌ற்க‌ப்படு‌கி‌ன்றன.

தொ‌‌ழி‌ல் த‌ற்போது எ‌ந்‌திரமயமா‌கி ‌வி‌ட்டாலு‌ம், இ‌ன்னு‌‌ம் கைத்த‌‌றி மூல‌ம் பா‌ய் கோ‌‌ர்‌ப்பு நடைபெ‌ற்று‌க் கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கிறது. பெரு‌கிவரு‌ம் தேவைகளு‌க்கு ஏ‌ற்ப த‌ங்களா‌ல் உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய முடியாத ‌நிலை இரு‌ப்பது இ‌த்தொ‌ழி‌லி‌ன் தொட‌ர் வெ‌‌ற்‌றி‌க்கு ‌கிடை‌‌த்த க‌ட்டியமாகு‌ம்.

கோரை பு‌ற்களை சம அள‌‌வி‌ல் வெ‌ட்டி அதனை எ‌ந்‌திர‌த்‌தி‌ல் வை‌த்து‌விட‌்டா‌ல் ‌‌நீலமாக வரு‌ம் பா‌யி‌ன் இருப‌க்கமு‌ம் அளவாக க‌த்‌தரி‌த்து தைய‌ல்போ‌ட்டு க‌ச்‌சிதமான பாயாக மா‌ற்‌றி‌விடு‌‌கி‌ன்றன‌ர். ‌இ‌ந்த பா‌ய்களை தைக்கா‌ல் ‌கிராம‌த்‌தி‌ற்கே வ‌ந்து வா‌ங்‌கி செ‌ல்‌கி‌ன்றன‌ர் பல‌ர். நா‌ள் ஒ‌ன்று‌க்கு சுமா‌ர் 1000 பா‌ய்களு‌க்கு மே‌ல் ‌வி‌ற்பனையா‌கிறது தை‌க்கா‌ல் பா‌ய்க‌ள்.

பா‌ய்க‌ள் தயா‌ரி‌ப்பவ‌ர்க‌ளிட‌ம் இரு‌ந்து வா‌‌ங்‌கி‌ச் செ‌ன்று அவ‌ற்றை ‌வி‌ற்பத‌ற்கு‌ம் அ‌திக‌ம் பே‌‌ர் ஆ‌ர்வ‌‌ம் கா‌ட்டி வருவதா‌ல் ‌வி‌ற்பனை வா‌ய்‌ப்பு‌ள்ள தொ‌‌ழிலாகவு‌ம் இது உ‌ள்ளது. பெ‌ண்களு‌ம் கூட இ‌த்தொ‌ழி‌லி‌ல் ஈடுப‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர்.

40 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு ஜ‌ப்பா‌‌னி‌ல் இரு‌ந்து இற‌க்கும‌தி செ‌ய்‌ய‌ப்ப‌ட்ட எ‌ந்‌திர‌ங்களை கொ‌‌ண்டு பா‌ய் உ‌ற்ப‌த்த‌ி நடைபெ‌ற்ற ‌நிலை மா‌றி செ‌ன்னை‌யிலேயே அவை வடிவமை‌க்க‌ப்படு‌கி‌ன்றன. த‌ற்போது 5 ஆ‌யிர‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ப‌‌ணியாள‌ர்க‌ள் உ‌ள்ள இ‌த்தொ‌ழி‌ல் இளைஞ‌ர்க‌ளு‌க்கு வேலைவா‌ய்‌ப்பு வழ‌ங்கு‌ம் தொ‌ழிலாகவு‌ம் உ‌ள்ளது.

இ‌த்தொ‌ழி‌லி‌ல் ஒ‌ன்றரை ல‌ட்ச‌ ரூபா‌ய் முதலீடு செ‌ய்து எ‌ந்‌திர‌ங்‌க‌ள் வா‌ங்‌கி தொ‌‌‌ழிலை தொட‌ங்க முடியு‌ம். மூல‌ப்பொரு‌ட்களு‌க்கு ஒரு ல‌ட்ச ரூபா‌ய் ஒது‌க்‌கி வை‌த்து பா‌ய் தொ‌ழி‌ற்சாலையை தொட‌ங்‌கினா‌‌ல் மாத‌ம் 20 ஆ‌யிர‌ம் ரூபா‌ய்‌க்கு குறையாத வருமான‌ம் வரு‌ம் தொ‌ழி‌ல் இதுவாகு‌ம்.

கோரை‌ப் பா‌ய்களு‌க்கு போ‌‌ட்டியாக ‌பிளா‌ஸ்டி‌க் பா‌‌ய்க‌ள் வ‌ந்தாலு‌ம் அவை மழை‌க் கால‌த்‌தி‌ல் ம‌ட்டுமே அ‌திகளவ‌ி‌ல் பய‌ன்படு‌கி‌ன்றன. கோரை‌ப் பா‌‌ய்களோ ஆ‌ண்டு முழுவது‌ம் ‌வி‌ற்பனையா‌கி‌ன்றன. அழகான, வ‌ண்ணமயமான, உடலு‌க்கு ‌தீ‌ங்‌‌கு இழை‌‌க்காத பா‌ய் தயா‌ரி‌க்கு‌ம் தொ‌ழிலு‌க்கு வ‌ங்‌கி‌க் கட‌ன் வா‌ய்‌ப்புகளு‌ம் உ‌ள்ளது. பலரு‌க்கு வேலை வா‌ய்‌ப்பு அ‌ளி‌ப்பது‌ட‌ன் மூல‌ப்பொரு‌ள் த‌ட்டு‌ப்பாடு இ‌ல்லாததா‌ல் ந‌ல்ல வருமான‌ம் தரு‌ம் தொ‌ழிலாக உ‌ள்ளது கோர‌ப் பா‌ய் தயா‌ரி‌ப்பு.

அவல ‌நிலை‌யி‌ல் செ‌ன்னை பற‌க்கு‌ம் இர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ள்!


மோசமான பராம‌ரி‌ப்புகளு‌க்கு மு‌ன்னுதாரமா‌ய் ‌திக‌ழ்‌கி‌ன்றன செ‌ன்னை பறக்கு‌ம் இர‌யி‌‌ல் ‌நிலைய‌ங்க‌ள். பெரு‌ம்பாலான இர‌யி‌ல் ‌நிலைய‌ங்களு‌க்கு‌ள் மாலை 6 ம‌ணி‌க்கு மே‌ல் செ‌ல்ல பய‌ணி‌க‌ள் அ‌ஞ்சு‌ம் ‌நிலை உ‌ள்ளது. ‌சில இர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ள் இரவு நேர‌‌ங்க‌‌‌ளி‌ல் சமூக ‌விரோத செய‌ல்க‌ளி‌ன் கூடாரமாக உ‌ள்ளதாகவு‌ம் ஏராளமான புகா‌ர்க‌ள்‌.

இரு‌ள் பட‌ர்‌ந்த குகை‌ப்போல இரு‌க்‌கிறது செ‌ன்னை சே‌ப்பா‌க்க‌ம் இர‌யி‌ல் ‌நிலைய‌ம். இலேசான மழை வ‌ந்தாலு‌ம் இர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ற்கு‌ள் ‌நி‌ற்க முடியாது. இ‌ங்கு நகரு‌ம் படி‌க்க‌ட்டு‌ம், ‌மி‌ன் தூக்‌கிகளு‌ம் இரு‌க்‌கி‌ன்றன. ஆனா‌ல் அவைக‌ள் இய‌ங்குவ‌தி‌ல்லை. அ‌‌ங்‌கிரு‌‌க்கு‌ம் ‌க‌ழிவறை‌க்கு‌ள் யாரு‌ம் நுழையவே முடியாது. ஆனா‌ல் க‌ட்டண‌ம் ம‌ட்டு‌ம் வசூ‌லி‌க்க‌ப்படு‌கிறது. இ‌ப்படி‌ப்ப‌ட்ட ஒரு இர‌யி‌ல் ‌நிலை‌ய‌த்‌தி‌ல் பய‌ணிக‌ள் எ‌ப்படி வருவார்கள்?

சே‌ப்பா‌க்க‌ம் இர‌யி‌ல் ‌நிலைய‌ம் ம‌ட்டும‌ல்ல, ‌கி‌ரி‌ன்வே‌‌ஸ் இர‌யி‌ல் ‌நிலைய‌ம் அதை‌விட மோச‌ம். குடி‌நீ‌ர் குழா‌ய்க‌‌ள் உ‌ள்ளன. ஆனா‌ல் குடி‌‌நீ‌ர் ‌கிடையாது. எ‌ங்கு பா‌ர்‌த்தாலு‌ம் கு‌ப்பை‌க் கூ‌ளங்க‌ளு‌க்கு‌ம், கொசு‌க்கடி‌க்கு‌ம் குறை‌‌வி‌ல்லை. பெ‌ண்க‌ள் ‌கி‌ரி‌ன்வே‌ஸ் இர‌யி‌ல் ‌நிலைய‌த்த‌ி‌ற்கு‌ள் த‌னியாக வருவதே ‌சிரம‌ம்.

‌‌கி‌ரி‌ன்வே‌‌ஸ் இர‌யி‌ல் ‌நிலைய‌‌த்‌தி‌ல் ‌சில மாத‌ங்களு‌க்கு மு‌ன்பு இளைஞ‌ர் ஒருவ‌ர் சமூக ‌விரோ‌திகளா‌ல் கொ‌ல்ல‌ப்‌ப‌ட்டா‌‌ர். அ‌ங்கு ‌நிலவு‌ம் இரு‌ட்டு கொலை‌க்கு சாதகமாக இரு‌ந்து‌ள்ளது. இத‌ன் ‌பி‌‌ன்னரு‌ம் பற‌க்கு‌ம் இர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ள் முறையான பராம‌ரி‌ப்‌பி‌ன்‌றி ப‌ரிதாப ‌நிலை‌யிலேயே உ‌ள்ளன.

சே‌ப்பா‌க்க‌ம், ‌கி‌ரி‌ன்வே‌‌ஸ் இர‌யி‌ல் ‌‌நிலைய‌‌ங்க‌ள் ம‌ட்டும‌ல்ல, செ‌‌‌ன்னை பூ‌ங்கா நக‌ரி‌ல் இரு‌ந்து வேள‌ச்சே‌ரி‌ வரை‌யிலான பற‌க்கு‌ம் இர‌யி‌ல் பாதை‌யி‌ல் உ‌ள்ள அனை‌த்து இர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ளிலு‌ம் ‌நிலைமை இ‌ப்படி‌த்தா‌ன்.

ஆன‌ா‌ல் அ‌திகா‌ரிகளோ, இர‌யி‌ல் ‌நிலைய‌ங்களை பராம‌ரி‌க்க ‌த‌னியா‌ரிட‌ம் ‌ஒ‌ப்ப‌ந்த‌‌ங்க‌ள் தர‌ப்ப‌ட்டு‌ள்ளதாக தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். பராம‌ரி‌க்காத ஒ‌ப்ப‌ந்ததார‌ர்க‌ளு‌க்கு அபராத‌ம் ‌வி‌தி‌க்க‌ப்பட உ‌ள்ளதாகவு‌ம் அவ‌ர்க‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

16 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு இர‌ண்டே இர‌‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ளுட‌ன் தொட‌ங்க‌ப்ப‌ட்ட அ‌தி‌விரைவு இர‌யி‌ல் போ‌க்குவர‌த்து‌ ‌தி‌ட்ட‌‌த்‌‌தி‌ன் ‌‌கீ‌ழ் த‌ற்போது 17 இர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ள் உ‌ள்ளன. இவ‌ற்‌றி‌ல் தகு‌ந்த பராம‌ரி‌ப்பு ப‌ணியை மே‌ற்கொ‌ண்டா‌‌ல் ‌சிற‌ந்த வச‌திகளை பய‌ணிக‌ள் பய‌ன்படு‌த்‌தி இ‌‌த்துறை‌க்கு வருவா‌ய் பெரு‌கிட வா‌ய்‌ப்பு ஏ‌ற்ப‌டு‌ம்.

அத‌ற்கு இர‌யி‌ல்வே ‌நி‌ர்வாக‌ம், ஒ‌ப்ப‌ந்ததா‌ர‌ர்க‌ள், பொதும‌க்க‌ள் ஆ‌கிய மூ‌ன்று தர‌ப்பு‌ம் சே‌ர்‌ந்து செய‌ல்ப‌ட்டா‌ல் உரு‌ப்படியாகு‌ம் இர‌யி‌ல் ‌நிலைய‌ம்.

4 கி.மீ. பரப்பிற்கு உருகியுள்ள அர்ஜென்டீனா பனிமலை!


அர்ஜென்டீனாவில் உள்ள அமீகினோ என்ற பனிமலை கடந்த 80 ஆண்டுகளில் புவிவெப்பமடைதல் காரணமாக சுமார் 4.கிமீ பரப்பளவிற்கு உருகியுள்ளதாக கிரீன்பீஸ் சுற்றுசூழல் அமைப்பு தெரிவித்துள்ளது.

1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், நடப்பு ஆண்டு மார்ச்சில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர் கீரீன்பீஸ் இயக்கத்தினர்.

மேலும் ஆண்டீஸ் மலைத்தொடர் சங்கிலி முழுதிலுமே புவிவெப்பமடைதலின் விளைவாக பனிச்சிகரங்களில் பனி உருகிவருவதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

அர்ஜென்டீனாவின் பனி மற்றும் பனிமலை ஆய்வுக்குழுவுடன் கிரீன்பீஸ் இயக்கத்தினர் இந்தப் பனிமலைப்பகுதிக்கு நேரடியாகச் சென்றுள்ளனர்.

1931ஆம் ஆண்டு இதெ பகுதியை புகைப்படம் எடுத்தவர் ஆல்பர்ட்டோ அகஸ்டினி என்பவர் குறிப்பிடத்தக்கது.

தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பனிமலைக்கு முன்பாக ஒரு பெரிய ஏரி உருவாகியுள்ளது. இது பழைய புகைப்படங்களில் இல்லை.

புவிவெப்பமடைதல் காரணமாக் உலகின் முக்கியப் பனிமலைப்பிரதேசங்களில் பனி உருகிவருவதன் வேகம் அதிகரித்துள்ளது இதற்கு தென் அமெரிக்கப் பனிமலைகளும் விதிவிலக்கல்ல என்று கிரீன் பீஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.

தெற்கு படகோனிய பனிப்புலத்தின் ஒரு பகுதிதான் அமீகினோ பனிமலையும். படகோனிய பனிப்புலத்தில் 13 மிகப்பெரிய பனிமலைகளும் 190 சிறு பனிமலைகளும் உள்ளன.

இவை அனைத்திலுமே ஏறக்குறைய புவிவெப்பமடைதலின் விளைவுகள் தாக்கம் செலுத்தியுள்ளதாக கிரீன்பீஸ் இயக்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

ஒன்இந்தியா இணையதளத்தில் பணியாற்ற வாய்ப்பு!


இணைய உலகின் முன்னணி தளமான ஒன்இந்தியாவின் தமிழ் செய்திப் பிரிவு தட்ஸ்தமிழ், பல்வேறு பிரிவுகளில் செய்திகளை அளித்து வருகிறது.

தற்போது ஆட்டோமொபைல் செய்திப் பிரிவை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது தட்ஸ்தமிழ்.

ஆட்டோமொபைல் பிரிவில் சப்-எடிட்டர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் குறித்த பரந்த அறிவு உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆட்டோமொபைல் துறையில் லேட்டஸ்ட் நிலவரங்கள் குறித்த விரிவான அறிவைப் பெற்றிருத்தல் அவசியம்.

நல்ல எழுத்தாற்றல், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கும் திறன் மிக மிக அவசியம்.

பத்திரிகை/ இன்டர்நெட் மீடியா துறையில் 2 அல்லது 3 ஆண்டு அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

தகுதி உடையவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களையும் பயோ-டேட்டாவையும் ak.khan@oneindia.co.in என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

விண்ணப்பங்களை அனுப்புபவர்கள், மெயிலின் சப்ஜெக்ட் லைனில், Automobile News/Copy Writer என்று குறிப்பிட்டு அனுப்பவும்.

பணியிடம்: பெங்களூர்

விண்ணப்பங்கள் சேர வேண்டிய கடைசி நாள் 30.12.2010

புள்ளி விவரங்களில் மட்டும் விலை குறையும் அதிசயம்!!


அது என்னமோ தெரியவில்லை… இந்தியாவில் மட்டும் விலைகுறைவு என்பது புள்ளிவிவரங்களில் மட்டுமே சாத்தியமாகிறது.

நடைமுறையில் ஏக விலை உயர்வும், குறியீட்டெண்களில் மளமள வீழ்ச்சியும் தொடரும் முரண்பாடுகளாகவே மாறிவிட்டன.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பொருளியலின் அடிப்படை விதிகளே இந்தியப் பொருளாதாரத்துக்கு மட்டும் பொருந்தாத நிலை உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஒரு சின்ன உதாரணம் பாருங்கள்:

இந்தியாவின் உணவுப் பணவீக்கம் தொடர்ந்து 7 வது வாரமாகக் குறைந்துள்ளது. நவம்பர் 20-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.6 சதவீதமாக இருந்தது உணவுப் பணவீக்கம். இதற்கு முந்தைய வாரத்தில் இது 10.15 சதவீதமாக இருந்துள்ளது.

அதாவது கடந்த 7 வாரங்களாக நாட்டில் உணவுப் பொருள்களின் விலை குறைந்துள்ளது என்று அர்த்தம். கரீப் பருவ விளைச்சல் சந்தைக்கு வரத் துவங்கியுள்ளதால் இந்த விலைக் குறைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த வாரத்தில் மட்டும் உணவு தானியங்களின் விலை 10 சதவீதம் குறைந்துவிட்டதாகவும், காய்கறிகள் மிகவும் மலிவாகிவிட்டதாக மத்திய புள்ளி விவரத்துறை கூறுகிறது.

உண்மை இதுதானா? சந்தையில் நிலவரம் என்ன?

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக காய்கறிகளின் விலை உயர்வு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சில்லறை விலைக் கடைகளில் காய்கறி வாங்க குறைந்தது ரூ 100 எடுத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு காய்கறியிலும் குறைந்தது கால்கிலோவாவது வாங்க முடியும் என்ற நிலை. வெங்காயம் விலை 50 ரூபாய்க்கும் அதிகமாகவும், பூண்டு ரூ 220 வரையிலும், இதர காய்கறிகள் இரண்டு மடங்கு அதிக விலையிலும் விற்கப்பட்டு வருகிறது. முருங்கைக்காய் விலை இன்றும் கிலோ ரூ 60 வரை விற்கப்படுகிறது. எனில், இதில் எங்கே வந்தது பணவீக்கக் குறைவு?

காய்கறிகள் விலை மட்டும்தான் என்றில்லை… உணவு தானியம், உணவுப் பொருள் அல்லாத பிறவற்றின் விலை, சிமெண்ட், கம்பி போன்ற கட்டுமானப் பொருள்களின் விலை… எதில் விலைக் குறைவு ஏற்பட்டுள்ளது?

யாரை ஏமாற்ற இந்த புள்ளி விவரங்கள்?

அப்படியானால் பணவீக்கம் – விலை நிலைக்கான தொடர்பே சும்மாவா? என்றால்…இல்லை. உலக நாடுகள் இந்த இரு விஷயங்களையும் வெகு அழகாக பேலன்ஸ் செய்கின்றன.

பணவீக்கம் என்பது விலை நிலையைக் காட்டும் தெர்மா மீட்டர் மாதிரி. அதில் உயர்வான நிலை காணப்பட்டால், உடனடியாக அதைக் குறைப்பதற்கான வைத்தியத்தை ஆரம்பித்துவிடுகிறார்கள் வெளிநாடுகளில்.

சமீபத்திய உதாரணம் சீனா.

நவம்பர் மாத ஆரம்பத்தில் சீனாவில் பணவீக்கம் 4.4 சதவீதத்தைத் தொட்டது. மாத இறுதியில் 5 சதவீதத்தைத் தொடும் என பொருளியல் வல்லுநர்கள் எச்சரித்தனர். அதாவது சாதாரண நிலையிலிருந்து விலைவாசி சற்றே உயரும் நிலை தோன்றியது.

அவ்வளவுதான், அடித்துப் பிடித்துக் கொண்டு அந்த நாடு எடுத்த நடவடிக்கைகளைப் பாருங்கள்…

நவம்பர் இரண்டாவது வாரத்திலேயே, மின்சாரம், எரிவாயு, உரங்கள் போன்றவற்றின் விலையைக் குறைக்குமாறு உள்ளூர் நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டது சீன அரசு. ரயில் கட்டணத்தை ஒரே நாளில் 20 சதவீதம் குறைத்தது.

தொடர்ந்து மின்சாரம் கிடைக்க, நிலக்கரி மற்றும் டீஸல் சப்ளையை தடையின்றி வழங்க அனைத்து நிறுவனங்களிடமும் உறுதிமொழி பெற்றுக் கொண்டது. மீறினால் உரிமம் ரத்தாகும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.

முக்கியமாக அனைத்து சாலைகளிலும் லாரிகள் போன்ற சரக்கு வாகனங்களுக்கு விதிக்கப்படும் கட்டணங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது (இந்தியாவில் இன்று இதுதான் முக்கியப் பிரச்சினை. இதற்காகத்தான் இன்று லாரி ஸ்ட்ரைக்கும் ஆரம்பமாகியுள்ளது!).

உணவுப் பொருள்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த, குளிர் பருவ காய்கறிகள் மற்றும் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இவற்றை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து, மக்களுக்கு நியாய விலையில் வழங்கும்.

கள்ள மார்க்கெட்டில் பொருள்கள் விற்பதை அடியோடு தடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் நம் நாட்டில் ஒருமுறையாவது அரசு இத்தனை சீரியஸாக நடவடிக்கை மேற்கொண்டதுண்டா… ம்ஹூம்!

பணவீக்கம் என்ற பேச்சு கிளம்பியதும் ரிசர்வ் வங்கி வட்டிகளை ஏற்றும் அல்லது இறக்கும். உடனே அனைத்து வணிக வங்கிகளும் இஷ்டத்துக்கு வட்டியை உயர்த்தும். அதாவது வட்டியை உயர்த்தினால், நாடடில் உள்ள உபரிப் பணமெல்லாம் வற்றிவிடுமாம். பணப்புழக்கம் குறைந்து, பணவீக்கம் குறைந்துவிடுமாம். வட்டி வீதத்தை உயர்த்துதல் என்பது ஒரு அவசர கால ஆயுதம் மாதிரி. ஆனால் இவர்களுக்கோ அது ஒன்று மட்டும்தான் தெரிகிறது… அல்லது சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு கொழுத்த லாபம் போய்ச் சேருவது தடைபடக் கூடாது என்பதற்காக இந்த உச்சகட்ட மூடத்தனத்தைத் தொடர்கிறார்களா தெரியவில்லை…

பிரதமரின் பொருளாதார ஆலோசகர்களும் புள்ளி விவரத்துறைக்குமே இது வெளிச்சம்!

மொத்தவிலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பொதுப் பணவீக்க கணக்கெடுப்பு முறை சரியான நிலவரத்தைக் காட்டுவதில்லை என்பதற்காகவே, இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து உணவுப் பணவீக்க முறையை கணக்கில் எடுத்துக் கொள்வதாக அறிவித்தது மத்திய அரசு.

ஆனால் இதிலும் நடைமுறைக்கும் புள்ளி விவரத்துக்கும் சம்பந்தமே இல்லாத நிலை தொடர்கிறது.

புள்ளிவிவரத்தில் எண்கள் மாறுகின்றன… ஆனால் அன்றாட வாழ்க்கையில் விலைவாசியோடு மல்லுக்கட்டும் நிலை இன்னும் இறுக்கமாகவே உள்ளது!

வியாழன், 9 டிசம்பர், 2010

3,323 ஆண்கள், 2,161 பெண்களுக்கு செக்ஸ் பாடம் நடத்திய ஜோடி!

செக்ஸ் ஆலோசனை என்ற பெயரில் 3323 ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொண்டுள்ளார் ஒரு பெண். அவரது 'விங்டுகெதர் பார்ட்னரோ' 2161 பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டுள்ளார்.

இந்த புள்ளி விவரத்தை அவர்களே பத்திரிகைகளுக்கு பெருமையுடன் தெரிவித்தனர்.

இங்கிலாந்தை சேர்ந்தவர் ஜெஃப் டேனியல்ஸ் (40). இவருடைய காதலி சாரா மூர் (39). இருவரும் திருமணமாகாமல், லிவிங்டுகெதர் ஸ்டைலில் சேர்ந்து வசிக்கிறார்கள்.

இவர்களுக்கு தொழிலே, செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்களைத் திருப்திப்படுத்துவது.

யாருக்கெல்லாம் செக்ஸில் திருப்தி கிடைக்கவில்லையோ, அவர்கள் இந்த தம்பதிகளிடம் வந்தால் போதும், திருப்திப்படுத்தி அனுப்பி வைப்பார்களாம்.

முதலில் செக்ஸ் மஸாஜிலிருந்து ஆரம்பிக்கிறார்களாம் தங்களது போதனையை. படிப்படியாக உணர்வைத் தூண்டி இறுதியில் செக்ஸ் வைத்துக் கொள்வது இவர்கள் இருவரின் ஸ்டைல். தங்களை நாடி வந்தவர்களுக்கு திருப்தி ஏற்பட்ட பிறகே திருப்பி அனுப்பி வைப்பார்களாம்.

இப்படி இதுவரை 3,323 ஆண்களை தான் திருப்திப்படுத்தியிருப்பதாக சாரா மூர் கூறுகிறார். டேணியல் கணக்கு 2,161 பெண்கள் [^] . சமயத்தில் ஜோடியாக உறவில் ஈடுபட்டதும் உண்டாம்.

இதுகுறித்து அவர்களிடம் கேட்டால், "இதிலென்ன தவறு இருக்கிறது... நாங்கள் செய்வது ஒரு சேவை, ஆராய்ச்சி. இதற்காக உலகம் [^] முழுவதும் சுற்றி வருகிறோம். இந்த தொழில் செய்வதால் எங்களை விபச்சாரி என்றும் யாரும் நினைத்துவிட வேண்டாம். ஒரு செக்ஸாலஜிஸ்ட் கூட செய்யாத பணியை நாங்கள் செய்கிறோம். எனவே நாங்களும் டாக்டர்கள்தான்", என்றார்.

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் படிப்பை படித்தபோதுதான் ஜெஃப்பை சந்தித்தாராம் சாரா மூர். இதுகுறித்து மூர் கூறுகையில், ஜெஃப்பை பார்த்தவுடன் காதல் கொண்டேன். அப்போது எனக்கு வயது 20. அன்று முதல் இருவரும் இணைந்தே இருக்கிறோம்.

நான் 15 வயதில் எனது கன்னித் தன்மையை இழந்தேன். அன்றே செக்ஸ் எனது வாழ்க்கையில் மிகப் பெரிய பங்காற்றும் என்பதை உணர்ந்தேன் என்கிறார்.

இந்தத் தம்பதிகளிடம் செக்ஸ் பிரச்சினை உள்ளவர்களை பல நேரங்களில் டாக்டர்களே அனுப்பி வைக்கிறார்களாம்.

நீங்க அவசரக்குடுக்கையா?


எந்தக் காரியத்திலும் அவசரப்படுவதோ, அதிவேகம் காட்டுவதோ கூடாது என்பார்கள் பெரியவர்கள். பதறிய காரியம் சிதறும் என்று பழமொழியே உண்டு. இது செக்ஸ் உறவுகளுக்கும் பொருந்தும்.

வாழை இலையை விரித்து, தண்ணீர் தெளித்து துடைத்து, ஒவ்வொரு காயாக வைத்து, சாதம் போட்டு சாம்பார் ஊற்றி, பிறகு ரசம், காரக் குழம்பு, மோர், தயிர், அப்பளம், வடை, பாயாசம் என்று சாப்பிட்டால் அது தனி சுகம்.

சாப்பாடும் வயிற்றுக்குள் பதமாக, இதமாக இறங்கும், சுவையும் நாவிலிருந்து அகல நெடு நேரமாகும். அதேசமயம், கவுண்டரில் போய் காசு கட்டி பில் வாங்கி, அதை இன்னொரு கவுண்டரில் போய் கொடுத்து, வெந்தும் வேகாமலும் தட்டில் போடப்படும் 'அன்னா சாம்பாரையும்', 'இட்லி வடா'வையும், காராபாத், பிசிபேளா பாத்களை கையில் ஏந்தியபடி, ரவுண்டு ரவுண்டாக போடப்பட்டுள்ள டேபிளில் இடம் பிடித்து (ரெண்டு பக்கமும் குண்டானவர்கள் சூழ்ந்து விட்டால் ரொம்ப சிரமம்), கால் கடுக்க நின்றபடி, வேகம் வேகமாக சாப்பிட்டு விட்டு அரக்கப் பறக்க ஓடுவதால் சாப்பிட்டது நிலைக்குமா, சாப்பாடுதான் செரிக்குமா.

செக்ஸ் உறவிலும் இந்த இரண்டு வகையும் உண்டு. சிலருக்கு ஆற அமர உறவு வைத்துக் கொள்வது பிடிக்கும். அதேசயம் சிலர் அவசரம் அவசரமாக முடித்துக் கொண்டு குறட்டை விட ஆரம்பிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர்.

ஆனால் இந்த 2வது வகை உறவுகள் இருவருக்குமே திருப்தி தருவதில்லை என்பது அனுபவம் கூறும் உண்மை.

கணவன், மனைவி என்ற உறவு பாஸ்ட் புட் போல அல்ல என்பது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை, புரிவதில்லை. கைக்கு எட்டிய தூரம் எல்லாம் இருந்தும் ஏன் இந்த வேகம், அவசரம் என்று யாரும் யோசிப்பதில்லை.

செக்ஸ் உறவில் ஈடுபடுவதை மிக மிக திட்டமிட்டு, அனுபவித்து ஈடுபடுவதே சாலச் சிறந்தது. நேரமின்மை, வீட்டுக்குள் நிலவும் கூட்ட நெரிசல் போன்ற பல காரணங்களால் கிடைக்கிற கேப்பில் உறவை முடித்துக் கொள்கிறார்கள் பலர்.

ஆனால் இதனால் எந்த லாபமும் இருப்பதில்லை. அது சரி, ஆனால் வசதி வாய்ப்பு வரும்போதுதானே எல்லாம் செய்ய முடிகிறது என்று அலுத்துக் கொள்ள வேண்டாம். வாய்ப்புகளையும், வசதிகளையும் நீங்கள்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த விஷயத்தில் டைம் மேனேஜ்மென்ட் மிக மிக முக்கியம்.

வீட்டில் குழந்தைகள் வளர்ந்து விட்டனரா, பெரியவர்கள் கூடவே உள்ளனரா, அடிக்கடி உறவினர்கள், நண்பர்கள் வருகை இருக்கிறதா. இதையும் தாண்டி உங்களது உறவை புனிதமாக்கவும், மகிழ்ச்சிகரமாக்கவும் பல வழிகள் உள்ளன.

இரவு நேரங்களை முறையாக திட்டமிடுங்கள். சீக்கிரமே சாப்பிட்டு தூங்கப் போவது ஒரு உத்தமமான வழி. இரவு 9 மணிக்கு மேல் குழந்தைகளை விழித்திருக்க அனுமதிக்காமல் லாவகமாக தடுக்க முயலுங்கள். இதன் மூலம் அவர்கள் விரைவாக தூங்கி விடுவார்கள், உங்களுக்கான நேரம் கை கூடி வரும்.

கூட்டுக் குடித்தனம் இருப்பவர்கள், பெரியவர்களால் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். வீட்டில் கூடுதலாக ஒரு அறை இருப்பது போல பார்த்துக் கொள்வது நலம். அப்படி செய்வதன் மூலம் அவர்களுக்கு தனி அறையை ஒதுக்கிக் கொடுத்து அவர்களை நிம்மதியாக இருக்கச் செய்வதோடு நீங்களும் உங்களது பிரைவசியை இழக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

அல்லது, அவ்வப்போது அவர்களை ஆன்மீக பயணத்திற்கோ அல்லது உற்றார், உறவினர்களின் இல்லங்களுக்கோ அனுப்பி வைப்பதன் மூலம் அவர்களுக்கும் ஒரு மன மாறுதல், மன உற்சாகம் கிடைக்க வழிசெய்யலாம். நீங்களும் உங்களது உல்லாசத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அதற்காக, உங்களது வசதிக்காக அவர்களை சிரமப்படுத்தும் அளவுக்கு போய் விடக் கூடாது. அது தவறு.

நண்பர்கள், உற்றார், உறவினர்களின் வருகை அடிக்கடி இருந்தாலும் நீண்டநேரம் வீட்டில் டேரா போடும் அளவுக்கு அதை அனுமதிக்காமல் லாவகமாக தடுப்பது நலம்.

இப்படி சின்னச் சின்னதாக யோசித்து ஒவ்வொன்றையும் முறைப்படுத்தினாலே உங்களுக்கான நேரம் கிடைத்து விடும். அந்தநேரத்தில் உங்களது உல்லாசத்தை வைத்துக் கொள்ளும்போது அதில் மன மகிழ்ச்சியுடன், உடல் ரீதியான திருப்தியும் நிறையவே கிடைக்கும்.

செக்ஸ் உறவு போன்ற விஷயங்களுக்கு உடல் திருப்தி என்பதை விட மிக மிக முக்கியமானது மன திருப்திதான். அது உங்களது கையில்தான் உள்ளது. வெந்தும் வேகாமலும் உள்ள சாப்பாட்டை சாப்பிட்டால் அஜீரணம்தான் மிச்சமாகும். அதேசமயம், நல்ல சாப்பாட்டை ஆற, அமர நிதானமாக சாப்பிட்டால் கிடைக்கும் இன்பத்தை சொல்லிப் புரிய வைக்க முடியாது, அனுபவித்தால்தான் தெரியும்.

முயற்சித்துப் பாருங்கள், முடியாதது எதுவுமில்லை!.

உள்ளாடை ரகசியங்கள்!


சொல்லித் தெரிவில்லை மன்மதக் கலை என்பார்கள். காதல் [^] என்பது நிச்சயம் ஒரு கலைதான். கலா ரசனை பொருந்தியவர்களுக்குத்தான் காதல் ரசிப்புக்குரியதாக மாறும். காதல் வயப்படுவதை விட அந்தக் காதலை அழுத்தம் திருத்தமாக மெயின்டெய்ன் செய்வதுதான் மிகப் பெரிய வேலை.

காதல் கலை என்று வரும்போது, ரசிப்புக்கு ஆண்கள் ஏங்கும்போது அவர்களை கவரும் பல விஷயங்களில் முக்கியமானது பெண்களின் உள்ளாடைகள். பெண்களின் உள்ளாடைகளை நினைக்கும்போதே ஆண்களுக்கு பெரும் உற்சாகமும், காதல் உணர்வும் பொங்கி விடுகிறது. ஆண்களும்தான் உள்ளாடைகள் அணிகிறார்கள். ஆனால் பெண்களின் உள்ளாடைகளுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு 'சக்தி' என்பது புரியவில்லை. ஆனாலும் பெண்களிடத்தில் ஆண்களை பெரிதும் கவரும் சக்திகளில் இந்த உள்ளாடைகளும் ஒன்றாக உள்ளது உண்மையே. ஒரு வேளை, கிழிந்து நைந்து போன, கரித் துணியாக பயன்படுத்தும் அளவுக்கு பாழாகிப் போன பனியன், துவைக்காமலேயே பல நாட்களுக்கு போடும் ஜட்டிகள் என ஆண்களின் உள்ளாடைகளில் கவர்ச்சி [^] யை விட 'கப்பு' ஜாஸ்தி இருப்பதாலோ என்னவோ...

சரி, மேட்டருக்கு வருவோம். பெண்களுக்கு இன்று ஏகப்பட்ட வெரைட்டிகளில், வடிவங்களில் உள்ளாடைகள் வந்து விட்டன. அழகை எடுத்துக் காட்டும் வகையில், கவர்ச்சியைத் தூக்கிக் காட்டும் வகையில் உள்ளாடைகள் மார்க்கெட்டில் இறைந்து கிடக்கின்றன. உள்ளாடைகளை மட்டுமல்லாமல் கவர்ச்சி ஆடைகளாகவும் மாறிப் போயுள்ளன.

இந்த உள்ளாடைகளுக்குள் பெண்களின் அந்தரங்கப் பகுதிகள் மட்டுமல்லாமல், பல ரகசியங்களும் புதைந்து கிடக்கின்றன. இது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. அது குறித்து சற்றே பார்ப்போம்...

- பெண்களுக்கு கருப்பு நிறத்திலான உள்ளாடைகள் மிகவும் கவர்ச்சி சேர்க்கக் கூடியவை. இந்த நிறத்திலான உள்ளாடைகளைத்தான் ஆண்கள் பெரிதும் ரசிக்கிறார்கள், ஈர்க்கப்படுகிறார்கள். மேலும் கருப்பு நிற உள்ளாடைகளில்தான் பெண்களின் அழகு அப்பட்டமாக தெரிகிறதாம். கருப்பு மட்டுமல்லாமல் சிவப்பு நிறமும் கூட கவர்ச்சியை மேலும் அதிகரித்துக் காட்ட உதவுகிறதாம். சிவப்பு நிறம் காம உணர்வுகளைத் தூண்ட உதவுகிறது என்பது ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்ட ஒரு விஷயமும் கூட.

- மென்மையான பருத்தி, சில்க் போன்றவற்றினால் ஆன உள்ளாடைகளை அணிவதே பெண்களின் கவர்ச்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பது அடுத்த அம்சம். அதிலும், 'லேஸ்' உள்ளாடைகளை அணியும் பெண்களிடம் ஆண்கள் கிட்டத்தட்ட அடிமை போல அடங்கிப் போய் விடுவார்களாம்.

- பெண்கள் [^] தங்களது வசீகரத்தை வஞ்சமில்லாமல் எடுத்துக் காட்டும் வகையிலான உள்ளாடைகளை அணியும்போது ஆண்கள் சட்டென்று அவர்களிடம் மயங்கிப் போய் விடுகிறார்கள். சிம்பிளாகவும் அதேசமயம், ஸ்டைலிஷானதுமான உள்ளாடைகளுக்கு மயங்காத ஆண்களே கிடையாது. அழகிய உள்ளாடைகளும், காற்றில் புரளும் நறுமணம் கமழும் தலை முடியும் கொண்ட பெண்கள் நிச்சயம் ஆண்களை வீழ்த்த அனைத்துத் தகுதியும் பெற்றவர்களாகிறார்கள்.

- பேன்டீஸ்களை அணியும் முன்பு அந்தரங்கப் பகுதியில் உள்ள உரோமங்களை சுத்தமாக ஷேவ் செய்து விடுவது அவசியமாகும். ஷேவ் செய்த பின்னர் பேபி எண்ணையை சற்று தடவி அந்தப் பகுதியை ஸ்மூத்தாக்கிக் கொள்வது கூடுதல் பலனைத் தரும். அக்குள் போன்ற இடங்களிலும் கூட உரோமங்கள் இல்லாமல் நீட்டாக இருந்தால் ஆண்களை அடக்குவது மிக மிக எளிதான வேலையாக இருக்கும்.

- உங்களது சருமத்திற்கேற்ற நிறத்திலான பேன்டீஸ்களை அணிவது இன்னும் உத்தமம். இது உங்களது அந்தரங்க அழகை மேலும் எடுப்பாக்கிக் காட்ட உதவும். காதல் கலையில் நறுமணத்தைக் கூட்ட உதவும்.

- எல்லாம் செய்த பின்னர் நறுமணம் இல்லாமல் போனால் நன்றாகவா இருக்கும். எனவே உங்களுக்கும், உங்களவருக்கும் பிடித்தமான வாசனை கொண்ட பர்ப்யூம்களை பயன்படுத்துவது அவசியம். மூக்கைத் துளைக்காத வாசனையுடன் கூடிய பர்ப்யூம்களை பயன்படுத்துங்கள். அதிகமாக வேண்டாம், ஜஸ்ட் ஜம்மென்று இருக்கும் வகையில் இருந்தால் போதும்.

இது ஒரு யோசனைதான். காதல் கலையில் கரை கண்டவர்களுக்கு இதை விட அதிக ஐடியாக்கள், அனுபவங்கள் இருக்கலாம். இருந்தாலும், இன்றைய இரவை இனியதாக்க இந்த ஐடியாக்கள் உதவினால் பெரும் சந்தோஷம்தான்.