திங்கள், 9 ஏப்ரல், 2012

தமிழகத்தில் சுற்றுலா பஸ், ஆம்னி பஸ், மேக்சி கேப், ஜே.சி.பி. எந்திரங்களுக்கு வரி அதிகரிப்பு!

சென்னை: சுற்றுலா வாகனங்கள், ஆம்னி பஸ்கள், மேக்சி கேப், மண் அள்ளும் எந்திரங்களுக்கான வரியை தமிழக அரசு அதிகரித்துள்ளது. இது தொடர்பான மசோதா இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: சுற்றுலா பஸ்களுக்கும் ஆயுட்கால வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இருக்கை எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு சுற்றுலா பஸ்களுக்கு காலாண்டு வரி விதிப்பதில் இடர்பாடு உள்ளது. எனவே 6 சதுர மீட்டருக்கு மேற்பட்ட தரை பரப்பு கொண்ட புதிய வாகனங்களுக்கு ஆயுட்கால வரி விதிப்பு செய்வது என்றும், ஏற்கனவே பதிவு செய்த வாகனங்களுக்கு தரை பரப்பின் அடிப்படையில் காலாண்டு வரி விதிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மண் அள்ளும் எந்திரங்கள், சாலையை செப்பனிடும் எந்திரங்கள், பளு தூக்கிகள், தளவாட வண்டிகள் உள்ளிட்ட கட்டுமான பணிகளில் ஈடுபடும் வாகனங்களும் தற்போது அதிகரித்துள்ளன. இதற்கான ஆண்டு வரி மிகவும் குறைவாக உள்ளது. எனவே இந்த வாகனங்களுக்கு ரூ.10,000 அளவில் ஆண்டு வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. உரிமையாளரின் வணிகம், தொழில் தொடர்புடைய நபர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் பயன்பாடு (மேக்சி கேப்) அதிகரித்திருந்தாலும் மற்ற வாகனங்களை விட இந்த வாகனங்களுக்கு வரி குறைவாகவே உள்ளது. எனவே இந்த வாகனங்களை குளிர்சாதன வசதி, குளிர்சாதன வசதி இல்லாதவை என வகைப்படுத்தி இருக்கை அடிப்படையில் காலாண்டு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உபரி பேருந்துகள் (spare bus) ஒப்பந்த ஊர்திகளாக பயன்படுத்தப்படுவதால் அவை சிறப்பு நிகழச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் போது தனிப்பட்ட வரி ஒன்றை விதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. நமது மாநில வாகனங்களை கணக்கிடும்போது மற்ற மாநில ஒப்பந்த ஊர்திகள் அதிக அளவில் சாலையை பயன்படுத்துவதால் அந்த வாகனங்களுக்கு அதிக சதவீதத்திலான வரி விதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பஸ், மேக்சிகேப், ஜே.சி.பி. வாகனங்களுக்கு வரி உயருகிறது. மண் அள்ளும் ஜே.சி.பி. எந்திரத்திற்கு ஆண்டு வரி ரூ. 10 ஆயிரமாக உயரும். ரூ. 10 லட்சத்திற்கு மேல் உள்ள பழைய சுற்றுலா வாகனத்திற்கு 14.5 சதவீதம் ஆயுள் வரி விதிக்கப்படும். ரூ.10 லட்சம் மதிப்புள்ள வாகனத்திற்கு 10 சதவீத வரியும், ரூ. 10 லட்சத்திற்கு கீழ் உள்ள வாகனங்களுக்கு 15 சதவீத ஆயுட்கால வரியும் விதிக்கப்படுகிறது. கட்டுமான பணிகளில் ஈடுபடும் வாகனங்களின் வரியும் உயருகிறது.

வியாழன், 5 ஏப்ரல், 2012

ஒரு நிமிடத்தில் அப்படி என்னதான் நடக்கிறது இன்டர்நெட்டில்..!

இன்டர்நெட் யுகம் என்று அனைவரும் கூறுகையில், அப்படி இன்டர்நெட்டில் என்னதான் நடக்கிறது என்பதையும் ஒரு பார்வை பார்ப்போம். ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது இன்டர்நெட்டில். உலகம் முழுவதும் தகவல் களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் மூலம் 1 நிமிடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேடுதல்கள் நிகழ்கின்றன. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் 60 லட்சம் பேரால் பார்க்கப்படுகின்றன. அது மட்டும் அல்லாமல் ஃபேஸ்புக்கில் ஒரு நிமிடத்திற்கு 2 லட்சத்தி 77 ஆயிரம் லாகின்கள் செய்யப்படுகின்றன. மனதில் தோன்றியவற்றை அப்பொழுதே நம்மை ட்விட் செய்ய சொல்லும் ட்விட்டரில் ஒரு நிமிடத்திற்கு 1 லட்சம் ட்விட்கள் செய்யப்படுவதோடு, 320-திற்கும் மேற்பட்ட ட்விட்டர் அக்கவுன்டுகள் உருவாக்கப்படுகின்றன. ஃபோட்டோ ஷேரிங் மூலமாக மனதில் பட்டென்று ஒட்டி கொள்ளும் ஃப்லிக்கரில் ஒரு நிமிடத்திற்கு 3 ஆயிரம் ஃபோட்டோக்கள் அப்லோட் செய்யப்படுகின்றன. 2 கோடி ஃபோட்டோக்கள் பார்க்கப்படுகின்றன. ப்ரொஃபெஷனல் தோரணையில் கலக்கும் லின்க்டுஇன் சமூக வலைத்தளத்தில் 100-க்கும் மேற்பட்ட அக்கவுன்டுகள் புதிதாக ஆரம்பிக்கப்படுகின்றன. 47 ஆயிரம் அப்ளிக்கேஷன்கள் டவுன்லோட் செய்யப்படுகின்றன. இப்பொழுதெல்லாம் அதிக மக்களால் மொபைலில் நெட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1 நிமிடத்திற்கு 1,300 பேர்கள் மொபைல் மூலம் இன்டர்நெட்டிற்கு வருகை தருகிறார்கள். சமூக வலைத்தளங்கள் பெருகி வரும் காலத்தில் கூட இ-மெயில் மவுசு குறையவில்லை தான். 20 கோடியே 40 லட்சம் இ-மெயில்கள் ஒரு நிமிடத்திற்கு பரிமாறி கொள்ளப்படுகிறது. எதை பற்றிய சரியான குறிப்பேடுகள் தேவைப்பட்டாலும் பட்டென்று ஞாபகம் வருவது விக்கிப்பீடியா. இதில் 1 நமிடத்திற்கு 6 பக்கங்கள் உருவாக்கப்படுகின்றன. இப்பொழுது பயன்படுத்தப்பட்டு வருவதைவிட 2015-ஆம் ஆண்டில் 2 மடங்கு அதிகமாக நெட் டிவைஸ்கள் பயன்படுத்தப்படும் என்றும் சில முக்கிய தகவல்கள் கூறுகின்றன. 6 லட்சத்தி 39 ஆயிரத்தி 800 ஜிபி அளவு ஐபி தகவல் பரிமாற்றங்களும் நிகழ்கின்றன. அது மட்டும் அல்லாமல் ஆன்லைன் மூலம் அதிகமான புத்தகங்களை விற்பனை செய்து வரும் அமேசானில் 1 நிமிடத்திற்கு 83 டாலர் அதாவது ரூ.4,230 மதிப்புக்கு புத்தகங்கள் விற்பனையாகின்றன. இப்படி அடுத்து அடுத்து இன்டர்நெட் பற்றிய பெரிய தகவல்களை கூறுகிறது ஒரு பரபரப்பான ரிப்போர்ட். இந்த தகவலை படித்தவர்கள் மற்றவர்கள் போல் சும்மா இன்டர்நெட் உலகம் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்ற புள்ளி விவரத்தினையும் தெரிந்து கொண்டு சொல்லலாம், இது இன்டர்நெட் யுகமென்று.

வெள்ளி, 30 மார்ச், 2012

ரூ.1.34 கோடி சம்பளத்தில் இந்திய மாணவரை பணியமர்த்திய ஃபேஸ்புக்!

ஆண்டுக்கு ரூ.1.34 கோடி சம்பளத்தில் இந்திய மாணவரை பணியமர்த்தியுள்ளது சமூக வலைதளமான ஃபேஸ்புக். அலஹாபாத்திலுள்ள மோதிலால் நேரு தொழில்நுட்ப கழகத்தில்(எம்என்என்ஐடி) அந்த மாணவர் பிடெக் பயின்று வருகிறார். இந்த தகவலை எம்என்என்ஐடியின் நிர்வாக இயக்குனர் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். இதை ஃபேஸ்புக் அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார். அந்த மாணவர் பற்றிய பெயர் உள்ளிட்ட இதர விபரங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடவில்லை என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஃபேஸ்புக்கில் பணியில் சேர இருக்கும் அந்த மாணவர் தற்போது இறுதியாண்டு பயின்று வருகிறார். இன்னும் 4 மாதங்களில் படிப்பை முடித்தவுடன் பணியில் சேர உள்ளார். எடுத்தவுடன் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான ஊதியத்தில் பணியில் சேரும் மாணவர் என்ற பெருமையை அவர் பெற இருக்கிறார்.

புதன், 28 மார்ச், 2012

தமிழில் இ-காமர்ஸ் தளம்.. மக்கள் ஆதரிப்பார்களா?

பர்ஸ் நிறைய பணம் எடுத்துக் கொண்டு, கடை கடையாக ஏறி இறங்கி, பார்த்துப் பார்த்து பொருள்களை வாங்கிக் கொண்டு வந்த காலம் இனி இல்லை எனும் நிலை உருவாகி வருகிறது. இப்படி ஷாப்பிங் போவதில் ரிஸ்க் அதிகம் என்பது ஒரு பக்கம், அலைச்சல், நேர விரயம் என பல அசௌகரியங்கள். நாமே நேரில் பார்த்து வாங்கினோம் என்ற திருப்தி மட்டும்தான். ஆனால், இப்போது இணையத்திலேயே பொருள்கள், சேவைகளைப் பெற முடியும் என்ற நிலை வந்துவிட்டது. பிராண்டட் பொருள்கள் என வரும்போது, அவற்றை நேரில் போய் பார்த்துதான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தரம் உறுதிப்படுத்த ஒன்று என்பதால் பிடித்த மாடல் அல்லது நிறத்தை மட்டும் பார்த்து ஆர்டர் கொடுத்துவிட்டால், வீடு தேடி வந்துவிடும். செல்போன், லேப்டாப், மியூசிக் சிஸ்டம்ஸ், நகைகள், துணிகள், டிவி, பிரிட்ஜ், ஏஸி உள்ளிட்ட மின்னணு பொருட்கள், இனிப்புகள் உள்ளிட்ட தின்பண்டங்கள்.... இப்படி எல்லாமே இ-காமர்ஸ் வர்த்தகத்துக்குள் அடங்கிவிட்டன. சர்வீஸ் இன்டஸ்ட்ரி எனப்படும் சேவைத்துறையும் இப்போது இ-காமர்ஸில் வந்துவிட்டது. முன்பெல்லாம் ரயில், விமான டிக்கெட் பதிவது, சுற்றுலா திட்டமிடுவது போன்றவற்றுக்காகத்தான் ஆன்லைனை பயன்படுத்தினர். இப்போது, வீட்டில் குழாய் ரிப்பேரா... பக்கத்தில் யாரும் ப்ளம்பர் இல்லையா.. உடனே ஒரு இ-காமர்ஸ் தளத்தில் விஷயத்தைச் சொன்னால், அடுத்த சில மணி நேரங்களில் வீட்டு வாசலில் ப்ளம்பர்! கம்ப்யூட்டர் சர்வீஸ், டிவி ரிப்பேர் அல்லது ஏஸி பராமரிப்பு... அட தோட்ட வேலைக்குக் கூட ஆள் தயார்! இ-காமர்ஸை பிரமாதமாகப் பயன்படுத்துவது ரியல் எஸ்டேட் துறைதான். கையில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு இருநதால் போதும், ஆன்லைனில் ஆர்டர் கொடுத்துவிடலாம். இ செக் அல்லது பொருளை டெலிவரி செய்யும்போது பணம் தருவது என இன்னும் கூட சுலபமான பரிமாற்றங்கள் இ-காமர்ஸில் வந்துவிட்டன. இந்தியாவில் ஆரம்பத்தில் பெரிதாக கவனிக்கப்படாத இந்த இ-காமர்ஸின் இன்றைய வளர்ச்சி என்ன தெரியுமா... கிட்டத்தட்ட 200 சதவீதம்! இந்திய சந்தையின் அளவைப் பார்த்த பல வெளிநாட்டு நிறுவனங்கள், இ-காமர்ஸ் மூலம் பொருட்களை விற்க தயாராக இந்தியாவில் கிளைகள் திறந்து, நல்ல சம்பளத்தில் பணியாளர்களையும் நியமித்துள்ளன. இந்த இ-காமர்ஸ் தளங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் இருக்கும். நம்பகமான, சரியான சேவை தரும் ஒரு இ-காமர்ஸ் தளத்தை தமிழில் கொண்டு வரவும் முயற்சிகள் நடக்கின்றன. அப்படி ஒரு இணையத்தளம் தமிழில் வந்தால் அதை நீங்கள் பயன்படுத்துவீர்களா..?. இல்லை ஆங்கிலத்தில் இருந்தால் தான் வசதி என்கிறீர்களா.. உங்க கருத்தை சொல்லுங்களேன்...

ஆரோக்கியமான பற்கள் வேண்டுமா? இதப்படிங்க !

ஆரோக்கியமான பற்களே ஆரோக்கியமான வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன என்கின்றது மருத்துவ உலகம். பண்டைய காலத்தில் பல் போனால் சொல் போச்சு என்ற பழமொழி உண்டு. இன்றைக்கு பற்கள் பாதிக்கப்பட்டால் இதயம், பக்கவாதம் போன்ற நோய்களும் எட்டிப்பார்க்கும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே பற்களை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டியது அவசியம். பற்களை பாதுகாக்க வீட்டில் உள்ள பொருட்களே உதவுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள் அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். சிறு வயதில் இருந்தே பல்லை ஆரோக்யமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்னை வந்து, வலிக்க ஆரம்பித்த பின்னர் தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கும் உள்ளது. குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததில் இருந்தே தினமும் இருமுறை பல்துலக்க வேண்டும். பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சிக்கிக் கொண்டால் வாய் கொப்பளித்து உடனடியாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும். கீரைகளை நன்றாக மென்று துப்பலாம். இதனால் பல் இடுக்குகளில் உள்ள உணவுப்பொருட்கள் வெளியேறிவிடும், பற்கள் ஆரோக்கியமடையும். பச்சை வெங்காயத்தை மூன்று நிமிடம் நன்றாக மென்று துப்ப வாய், பற்களில் உள்ள தேவையற்ற கிருமிகள் இறந்துவிடும். உணவு உண்டவுடன் வெதுவெதுப்பான நீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சேர்த்து நன்றாக கொப்பளிக்க வேண்டும். சத்தான உணவுகள் சத்துக் குறைபாடான உணவுகள் மற்றும் உடலில் ஏற்படும் சர்க்கரை உள்ளிட்ட மற்ற நோய்களின் காரணமாகவும் பல் ஆரோக்யம் விரைவில் கெட்டுவிட வாய்ப்புள்ளது. எச்சிலில் உள்ள அமிலம் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் சேர்ந்து பல்லில் சொத்தையை உருவாக்குகிறது. தினசரி உணவில் கால்சியம், வைட்டமின் சி போன்றவைகளை அதிகம் சேர்த்துக்கொள்வது பற்களின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். தினசரி அரை எலுமிச்சையை சாறு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்கலாம். பல் சொத்தை பெரிதாக வளர்ந்து பல்லின் வேரை தாக்கும் போது தான் வலி ஏற்படுகிறது. இந்த வலியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பல்லின் வேர்ப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு பல்லை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும். பல்வலியை போக்க பல்வலி ஏற்பட்டால் அந்த இடத்தில் சிறிதளவு வெள்ளைப் பூண்டை எடுத்து பல் வலிக்கும் இடத்தில் வைக்க நிவாரணம் கிடைக்கும். அதேபோல் கிராம்பு பொடி செய்து பல்வலி உள்ள இடத்தில் வைக்கலாம். வெள்ளைப் பூண்டு, கல் உப்பு சேர்த்து நன்றாக பல் தேய்க்க பல்வலி குணமாகும். வாய் துர்நாற்றம் போக தினசரி நன்றாக பல்துலக்க வேண்டும். வாய், நாக்கு உள்ளிட்ட இடங்களில் அழுக்குகளை நீக்க வேண்டும். கொத்தமல்லி இலைகளை நன்றாக மென்று சாறுகளை விழுங்கலாம். வெதுப்பான நீரில் ஒரு டீ ஸ்பூன் இஞ்சி, ஒரு டீ ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து நன்றாக கொப்பளிக்க வேண்டும். தினசரி மூன்று முறை இவ்வாறு செய்யலாம். சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும். வெதுவெதுப்பான வெந்நீரில் சிறிதளவு பேகிங் சோடா, சிறிதளவு தூள் உப்பு சேர்த்து வாய் கொப்பளிக்கலாம். ஆரோக்கியம் அவசியம் இதேபோல் பல்லில் ஏற்படும் பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் சொத்தை, வாய் நாற்றம் உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக பல் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பல்லின் ஆரோக்யத்தையும், உடல் ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாக்க முடியும்.

தாம்பத்யத்திலும் தன்னம்பிக்கை வேண்டும்!

எந்த ஒரு விசயத்திற்கும் தன்னம்பிக்கை வேண்டும். நம்பிக்கையில்லாமல் தொடங்கும் விசயம் வெற்றியடையாது என்கின்றனர் நிபுணர்கள். அதுபோலத்தான் தாம்பத்யத்தையும் தன்னம்பிக்கையோடு அணுகவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள். வெற்றிகரமான இல்லற வாழ்க்கைக்கு அவர்கள் கூறும் ஆலோசனைகளை கேளுங்களேன். பயத்தை விட்டொழியுங்கள் படுக்கையறையில் பயத்துக்கு எந்த வேலையும் இருக்கக் கூடாது. ஒரு கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ படுக்கையறை என்பது பயங்களின் கூடாரமாக இருந்தால் தாம்பத்ய சுகம் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.தேவையில்லாத பயத்தை விட்டொழியுங்கள். உங்கள் தன்னம்பிக்கைதான் தாம்பத்யத்தில் உங்களை வெற்றிகரமானவராக செயல்பட வைக்கும். எனவே படுக்கையறைக்கு பாம்பு, பூதம், எதுவும் இல்லை. எனவே தேவையற்ற பயத்தை விட்டுவிட்டு தன்னம்பிக்கையுடன் தொடங்குங்கள் வெற்றிகரமான வாழ்க்கை கிடைக்கும். சந்தோசமான சிரிப்பு படுக்கையறையில் நுழையும் போதே புன்னகையுடன் இருங்கள். முடிந்த அளவு மகிழ்ச்சியோடு சிரியுங்கள். தாம்பத்யம் என்பது மகிழ்ச்சிகரமானதுதானே. அங்கே எதற்கு சோகமும், கவலையும். எனவே சந்தோசமாக சிரியுங்கள். சிரிப்பே உங்கள் இருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சின்ன சின்ன விளையாட்டு படுக்கையறையில் நீங்கள் விளையாடும் சின்ன சின்ன விளையாட்டுக்கள் உங்களின் உற்சாகத்தை அதிகரிக்கும். விளையாட்டுக்களின் மூலம் உங்கள் உணர்வுகள் கிளர்ச்சியடையும் என்கின்றனர் நிபுணர்கள். இதன் மூலம் தன்னம்பிக்கையோடு தாம்பத்ய வாழ்க்கையை தொடரலாம். அமைதி அவசியம் படுக்கையறையில் எப்போதும் பூரண அமைதி நிலவ வேண்டும். படுக்கையறை தூய்மையின் இருப்பிடமாக தாம்பத்திய உறவும், ஆரோக்கியம் ததும்புவதாகவும், மிகுந்த பாதுகாப்பு கொண்டதாகவும் அமைந்திருக்க வேண்டும். புழுக்கமும் வியர்வையும் நங்கூரம் போடும் இடமாக இருக்கக் கூடாது. காற்றுக்கு எந்த பஞ்சமும் இருக்கக் கூடாது. உற்சாகமாக தொடங்குங்கள் கணவன் மனைவி இருவரும் இன்பம் பொங்க இணைவதற்கு இரண்டு பேரும் ஒருவரையருவர் தாம்பத்திய உறவில் விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு கணவன் மனைவி இருவரும் ஒருவரையருவர் விரும்பி ஏற்றுக் கொள்வதில் எந்த சிக்கல்களும். இருக்கக் கூடாது. சுத்தமின்மை, வழியும் வியர்வை, உடல் துர்நாற்றம், எரிச்சலூட்டும் வியர்க்குரு, நெருங்கவே முடியாமல் செய்யும் வாய் துர்நாற்றம் ஆகியவை இல்லற சுகத்தை பாதிக்கும். பெண்கள் கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, வால்மிளகு சேர்த்து அரைத்த குளியல் பொடியை பயன்படுத்தி தங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ளலாம். கணவனோ மனைவியோ தங்களுக்கு தோல் நோய்கள் இருந்தால் அதற்கு அம்மான் பச்சரிசி, மஞ்சள், வேப்பிலை, துளசி இலை போன்றவற்றை மைய அரைத்து உடம்பு பூராவும் பூசி வைத்து அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம். சிகரெட் புகைப்பவர்கள். மதுப் பழக்கம் உள்ளவர்கள் மேல் எப்போதும் ஒரு வித வாசனை வீசும். இது போன்ற பழக்கம் உள்ளவர்கள் படுக்கையறைக்குள் நுழையும் போது தங்கள் மேல் நாற்றம் அடிக்காமல் இருக்க ஒரு குளியலைப் போட்டு விட்டு நுழைவது நல்லது. மணக்கும் மலர்கள் நமது படுக்கையறையை தங்கமும் வைரமும் வைத்து இழைத்து வைத்திருக்க வாய்ப்பில்லை. நம்மால் எளிதில் வாங்கி சூடிக் கொள்ள முடிகிற பூக்களைக் கொண்டே நமது படுக்கையறையை கமகமக்க வைக்கலாமே. பூக்களின் நறுமணமே உற்சாகத்தையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். பகிர்ந்து கொள்ளுங்கள் கணவனோ மனைவியோ தாம்பத்தியத்தில் தங்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். இது உங்கள் மீதான தேவையற்ற அச்சத்தை விலக்க உதவும். இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்ளுங்கள். தாம்பத்யம் குறித்த பயம் விலகும்.

செவ்வாய், 20 மார்ச், 2012

புதுச்சேரியில் அரசு வேலை… ப்ளஸ் டூ, டிகிரி படிச்சிருந்தா போதும்!

புதுச்சேரி: புதுச்சேரி மாநில தொழிலாளர் காப்பீட்டு கழகத்தில் காலியாக உள்ள கிளார்க் – காசாளர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர்: 1. Upper Division Clerks/Upper Division Clerk (UDC) – Cashier -8 2. Multi Task Staff – 15 காலியிடங்கள்: UDC – 8 (பொது -5, பிசி-2, எஸ்சி -1) இவற்றில் ஒரு இடம் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. MTS – 15 (பொது 8, பிசி 5, எஸ்ஸி-2) முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரு இடம் உள்பட. சம்பளம்: UDC: ரூ.5,200 – 20,200/- தர ஊதியம் ரூ 2400 மற்றும் இதர படிகள். MTC: ரூ 5,200 – 20,200/- தர ஊதியம் ரூ 1800 மற்றும் இதர படிகள். கல்வித்தகுதி: UDC- பணிக்கு ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிப்பொறியில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும். MTS -பணிக்கு ஜஸ்ட் மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி பெற்றிருந்தால் போதும். வயதுவரம்பு: 31.01.2012 தேதியில் 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி SC/OBC/ESM/ Women/ ESIC பணியாளர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் கணினி திறன் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: UDC-க்கு ரூ 225. MTS-க்கு ரூ 125. SC/OBC/ESM/ Ladies/ ESIC பணியாளர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. இதனை Regional Director, ESI Corporation பெயரில் புதுச்சேரியில் மாற்றத்தக்க வகையில் SBI-ல் டி.டி.யாக எடுக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.esicpondicherry.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மின்னஞ்சல் முகவரி கட்டயாம் இருக்க வேண்டும். விண்ணப்பித்த விண்ணப்ப பதிவிறக்கம் மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும். (ஆன்லைனில் 31-ம் தேதிக்குள் விண்ணப்பித்து, அந்த படிவத்தை பின் தரவிறக்கம் செய்து சான்றிதழ்களுடன் தபாலில் அனுப்ப வேண்டும். அனைத்து அரசுப் பணிகளுக்கும் இப்போது இப்படித்தான் விண்ணப்பிக்க வேண்டும். எனவே மிக எச்சரிக்கையுடன் விண்ணப்பிக்கவும்). ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2012. விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 13.02.2012. விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Regional Director, Regional Office. ESI Corporation, 178, Anasari Duraisamy Nagar, 100 feet Road, Opposite to RTO Office, Puducherry – 05004. மேலும் விவரங்களுக்கு www.esicpondicherry.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.