செவ்வாய், 26 ஏப்ரல், 2011

கோ - விமர்சனம்!


ஜீவா, கார்த்திகா, பியா, அஜ்மல்


இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன்

இயக்கம்: கேவி ஆனந்த்

தயாரிப்பு: குமார், ஜெயராமன்

வெளியீடு: உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட்

மக்கள் தொடர்பு: நிகில்

சினிமாவில் பத்திரிகைக்காரர்கள் என்றால் ஒரு ஜோல்னா பையை மாட்டிக் கொண்டு வருவார்கள். தத்துப் பித்தென்று கேள்வி கேட்பார்கள் அல்லது சமூக மாற்றம் பற்றி பக்கம் பக்கமாக லெக்சரடிப்பார்கள். இன்னும் சிலர் பத்திரிகைகள் மீதான விமர்சனம் என்ற பெயரில் கண்மூடித்தனமாக காட்சிகள் வைப்பார்கள்.

நிஜமான பத்திரிகையுலகம் பற்றி இதுவரை யாரும் சொன்னதில்லை (ஒருபோதும் அதைச் சொல்லும் தைரியம் யாருக்கும் வராது என்பது வேறு விஷயம்!!). ஆனால் முதல் முறையாக பத்திரிகைத் துறை பற்றி ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கு வந்திருக்கிற படம் என்றால் அது 'கோ'தான். ஆனால் இதிலும் நிறைய இயல்பு மீறல்கள், தவறுகள் இருந்தாலும், அவை மன்னிக்கக் கூடிய அல்லது மறந்துவிடக்கூடிய அளவுக்குத்தான் உள்ளன என்பது ஒரு ஆறுதல்.

இயக்குநர் கே வி ஆனந்த்தும் வசனம் எழுதிய சுபாவும் முன்னாள் பத்திரிகையாளர்கள் என்பதால் இது ஒருவேளை சாத்தியமாகியிருக்கலாம்.

ஜீவா முன்னணி தமிழ் பத்திரிகையான தின அஞ்சலில் பணியாற்றும் ஒரு துடிப்பான பத்திரிகைப் புகைப்படக்காரர். அவருடன் பணியாற்றும் நிருபர்கள் கார்த்திகா, பியா இருவருக்குமே ஜீவா மீது எந்நேரத்திலும் காதலாக மாறிவிடக் கூடிய அளவுக்கு சாஃப்ட் நட்பு.

ஒருமுறை, ஜோசியத்தை நம்பி 13 வயது பெண்ணை எதிர்க்கட்சி தலைவர் (கோட்டா சீனிவசாராவ்) பால்ய விவாகம் செய்வது குறித்து செய்தி வெளியிடுகிறார் கார்த்திகா. ஆனால் அலுவலகத்துக்கே வந்து அதிரடியாக மறுத்து, கோட்டா சீனிவாசராவ் கலாட்ட செய்ய, செய்திக்கு ஆதாரமில்லாமல் போய்விட்டதால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது பத்திரிகை. இதில் கார்த்திகாவும் வேலையை இழக்கிறார். ஆனால் கோட்டா சீனிவாசராவ், ரகசியமாய் பால்ய விவாகரம் செய்வதை புகைப்படத்தோடு நிரூபித்து முதல்பக்க செய்தியாக்குகிறார் ஜீவா. இதில் பத்திரிகை மானமும் காக்கப்பட, கார்த்திகா தப்புகிறார். இந்த சம்பவம் இருவர் உறவையும் மேலும் இறுக்கமாக்குகிறது.

மாநிலத்தில் தேர்தல் வருகிறது. இருக்கும் ஊழலாட்சியை அகற்றி, மாற்றத்தைக் கொண்டுவர சிறகுகள் என்ற இளைஞர் பட்டாளம் அஜ்மல் தலைமையில் முயல்கிறது. ஆனால் ஆளும் கட்சி அடக்குமுறையைக் கையாள்கிறது அவர்களுக்கெதிராக. இதனால் இளைஞர்களுக்கு ஆதரவு பெருகுகிறது. ஒருகட்டத்தில் அஜ்மலின் தேர்தல் பிரச்சார கூட்டத்தை குண்டு வைத்து தகர்க்கிறார்கள். இதனால் மக்கள் அனுதாபம் அமோகமாகக் கிடைக்க, ஆட்சியைப் பிடிக்கிறார்கள் இளைஞர்கள்.

அஜ்மல் முதல்வராகிறார். இந்த ஆட்சிமாற்றத்துக்கு வெளியில் தெரியாத முக்கிய காரணமாக ஜீவாவும் தின அஞ்சல் பத்திரிகையும் செயல்படுகின்றன.

இந்த நேரத்தில்தான் அஜ்மல் பற்றிய அதிரடி உண்மை தெரியவருகிறது. அந்த உண்மையை எப்படி எதிர்கொள்கிறார் ஜீவா, தங்களால் வந்த ஆட்சி மாற்றத்தை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பது ஒரு விறு விறு க்ளைமாக்ஸுக்கு வழி வகுக்கிறது.

ஒரு பத்திரிகை போட்டோகிராபர் வேடத்துக்கு ஜீவா பக்காவாகப் பொருந்தினாலும், ஆரம்ப காட்சிகளில் அவர் புகைப்படமெடுக்கும் விதம் ஆனாலும் ஓவர்!

மற்றபடி, அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்றாலும் பஞ்ச் வசனம் இல்லாமல், ஸ்டன்ட் என்ற பெயரில் சர்க்கஸ் வேலை காட்டாமல் இருந்ததற்காக (இயக்குநர் பேச்சைக் கேட்டு நடித்த) ஜீவாவுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!

ஹீரோயின் கார்த்திகாவை விட, சினிமா நிருபராக வரும் பியா ஓகே. அவரது உடை, பார்ட்டியில் போடும் ஆட்டம், பேசும் ஏ கிரேடு வசனங்களெல்லாம் இன்றைய பெண் நிருபர்கள் சிலர் செய்வதில் பாதிதான் என்பதால் ஆனந்தைப் பாராட்டத்தான் வேண்டும்!

நடிகையாக கார்த்திகா ஜஸ்ட் பாஸ் மார்க் பெறுகிறார் இந்தப் படத்தில். முகத்தில கொஞ்சம் கூட உணர்ச்சியே காட்டாமல் வந்துபோகிறார். வெண்பனியே பாடல் காட்சியில் மேக்கப் ரொம்பவே உறுத்தல்.

ஒரே காட்சி என்றாலும் கோட்டா சீனிவாசராவ் அதகளம் பண்ணுகிறார். அதிலும், 'தமிழ் பேப்பர் ஆபீஸ்தானே இது... அப்புறமென்ன இங்கிலீசு, தமிழ்ல பேசு' என அவர் எகிறும் இடம் டாப்.

பிரகாஷ்ராஜ் முதல்வராக வருகிறார். ஒரு யானையை கட்டி இழுத்து வந்து சரியாக தீனிபோடாமல் விட்டமாதிரி தெரிகிறது.

அஜ்மலுக்கு இது மறு பிரவேசம். சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். நக்சலைட்டாக வரும் போஸ் நன்றாக செய்துள்ளார்.

குறைகள் என்று பார்த்தால், அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒரே கல்லூரியில் படிக்கும் நண்பர்கள் இணைந்து சிறகுகள் என்ற அமைப்பை ஆரம்பிப்பதாக காட்சி. வெவ்வேறு கோர்ஸ் படிப்பவர்கள் இணைந்து தொடங்குவதாகக் காட்டியிருந்தால் கூட பரவாயில்லை. ஒரே கல்லூரியில் டாக்டருக்குப் படிப்பவர், வக்கீல், எஞ்ஜினீயர் எல்லாம் சேர்ந்து ஆரம்பிப்பதாகக் காட்டுவது உறுத்தல். எந்தக் கல்லூரியில் எம்பிபிஎஸ், பிஈ, பிஎல், பிஏ, பிஎஸ்ஸி எல்லாம் இருக்கிறது?

அதென்ன, எல்லா அதிரடிக் கட்டுரைகளையும் ஒரே நிருபர்தான் எழுதுகிறார்... எந்த அலுவலகத்தில் இந்த சுதந்திரம் இருக்கிறது. இந்த உண்மை ஆனந்துக்கு தெரியாதா என்ன!

அதேபோல முணுக்கென்றால் வந்து நிற்கும் பாடல்களுக்கு கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

ஆனாலும் இரண்டரை மணி நேரப் படத்தில் சொல்ல வந்ததை முழுமையாக சொல்லும் நோக்கில் மீறப்பட்ட லாஜிக்குகள் இவை என்பது புரிகிறது.

பத்திரிகையுலகம் என்பது எந்த அளவுக்கு மாறியிருக்கிறது என்பதை, அந்த அலுவலகச் சூழலை வைத்தே காட்ட முயற்சித்திருக்கிறார் ஆனந்த். உண்மைதான். ஆங்கிலப் பத்திரிகை அலுவலகம்தான் அல்ட்ரா மாடர்னாக இருக்க வேண்டுமா என்ன?

படத்தின் இரண்டு சிறப்பம்சங்கள் ஹாரிஸ் ஜெயராஜின் இசை மற்றும் ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு. நார்வே மற்றும் சீனாவில் எடுக்கப்பட்ட காட்சிகள் மனதை அள்ளுகின்றன. இந்த மாதிரி லொகேஷன்களை தமிழ் சினிமாவில் இதற்கு முன் பார்த்ததே இல்லை!

அதிகபட்ச கமர்ஷியல், கொஞ்சம் மக்களுக்கு பரிச்சயமான யதார்த்தம், கூடவே கொஞ்சம் சமூக செய்தி என்பது ஷங்கரின் சக்ஸஸ் பார்முலா. அது கே வி ஆனந்துக்கும் நன்றாகவே கைவந்திருக்கிறது!!

வியாழன், 21 ஏப்ரல், 2011

எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ?



காதல் என்பது பூ மலர்வது போல. எந்த நொடியிலும் நிகழலாம். அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதில்தான் வெற்றி கிடைக்கிறது. சொல்ல நினைத்தும் வார்த்தைகள் வராமல் தடுமாறுவது இயற்கை. ஆனால் சொல்லாத காதல் சோகக்காதல் ஆகிவிடும். காதலை சொல்லும் வழிமுறைகள் குறித்து சில யோசனைகள் :


மனமறிந்து சொல்லுங்கள்

நீங்கள் விரும்பும் நபர் எப்படிப்பட்டவர் என்பதை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். காதலை வெளிப்படுத்தும் தருணம் எத்தகையது என்பதையும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். முதல் முதலாக கூறும் முன்பு ஒத்திகை அவசியம். இல்லை என்றால் முதல் கோணல் முற்றும் கோணலாகிவிடும்.

ஆர்வமுடன் வெளிப்படுத்துங்கள்


எந்த தருணத்தில் காதலை வெளிப்படுத்துகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதும் மிகவும் முக்கியமானது. காதலைச் சொல்ல தனிமைதான் சரியான சூழல். நீங்கள் விரும்பும் நபர் உங்களுடன் பேச ஆர்வமாக இருக்கும் நேரத்தில் உங்கள் காதலை இயல்பாக வெளிப்படுத்துங்கள் .

புகழுக்கு மயங்காதவர்கள் என்று யாரும் கிடையாது. மனம் திறந்து பாராட்டுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் புகழுரையை கேட்கவே நீங்கள் விரும்பும் நபர் உங்களிடம் பேசவருவார்கள்

நேசத்தை வெளிப்படுத்துங்கள்


காதலிப்பதை நேரடியாக தெரிவிப்பதை விட ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு செய்கையிலும் முதலில் புரிய வைக்கலாம். காதலிக்கும் நபருக்கு பிடித்த உடைகளை அணிவது, அவருக்கு பிடித்த விசயங்களை செய்வது போன்றவை அன்பை வெளிப்படுத்தும் ஆயுதம்.

வார்த்தைகளை 'வளவள’வென்று பேசக்கூடாது. சொல்ல வரும் விஷயங்களை தெளிவாகச் சொல்ல வேண்டும். பாதியைச் சொல்லி பாதியை முழுங்கக் கூடாது. உங்கள் பேச்சை வைத்தே உங்களின் அன்பு எவ்வளவு உண்மையானது என்பதை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது.

பூக்களை நேசிப்பவர்கள்

ஆணோ, பெண்ணோ அனைவருமே பூக்களை நேசிப்பவர்கள்தான். நிறைய பூக்களைக் கொண்ட மலர்ச்செண்டு கொடுத்து அன்பை வெளிப்படுத்துங்கள். ரோஜா பூக்கள் காதலை வெளிப்படுத்த ஏற்றதாக கருதப்படுகிறது. எதிராளிக்கு உங்கள் மீது நேசமிருந்தால் அப்போதே அன்புக்கான சிக்னல் கிடைக்கலாம்.

பேசும்போது செய்யும் உடல் அசைவுகள் காதலுக்கு வலு சேர்ப்பவையாகும். உங்கள் கண்- முகம் மற்றும் கை அசைவுகள் நேசத்தை அப்படியே வெளிப்படுத்தவல்லவை. காதல் சொல்லும்போது விரைப்பாக நிற்காதீர்கள். சாதாரணமாக தளர்வாக நில்லுங்கள். தாயானவள் குழந்தையை வாரி அணைக்க கையை நீட்டுவதுபோல கைகளை நீட்டி, 'அன்பே உன்னை நேசிக்கிறேன்’ என்று சொல்லுங்கள்.

ஆண்கள் இப்படிச் செய்வதை ரசிக்கும் பெண்கள்தான் காதல் வலையில் விழுகிறார்கள். நீங்களும் இப்படிக் காதலைச் சொல்லிப் பாருங்கள். மறுப்பதற்கு வாய்ப்பே இல்லை!

வசூலில் 'அவதாரை' மிஞ்சிய '3 டி' செக்ஸ் படம்!!


உலகம் என்னதான் வேகமாக முன்னேறினாலும், எல்லா நாடுகளிலும் மனிதர்களின் அடிப்படை பலவீனம் பணம்-செக்ஸ்தான். அதிலும் இந்த இரண்டாவது சமாச்சாரம் எங்கும் எவர்கிரீன் மேட்டர். சினிமா, எழுத்து என எதிலும் செக்ஸ்தான் பிரதானமாக விற்பனையாகிறது.


இப்போது, ஹாங்காங்கில் தயாராகி வெளிவந்துள்ள உலகின் முதல் 3 டி செக்ஸ் படம் வசூலில் சக்கைப் போடு போடுகிறது.

'3 டி செக்ஸ் அண்ட் ஜென்: எக்ஸ்ட்ரீம் எக்ஸ்டஸி' (3-D Sex and Zen: Extreme Ecstasy) என்ற பெயரில் தயாராகியுள்ள இந்த சீன மொழிப் படம், முழுக்க முழுக்க உடலுறவு மற்றும் செக்ஸ் காமெடிக் காட்சிகள் நிறைந்தது.

ஜப்பானை சேர்ந்த 'பலான' பட நடிகர் ஹிரோ ஹயானா, நடிகை சோரிஹரா, ஹாங்காங் நடிகை வோனிலியூ ஆகியோர் நடித்துள்ளனர். 1991-ம் ஆண் வெளியான செக்ஸ் அண்ட் ஜென் என்ற படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். சீனாவின் மிங் வமிசத்தைச் சேர்ந்த மன்னரது அந்தப்புர கூத்துகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது.

இந்தப் படத்தை சீனாவில் திரையிட ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுவிட்டது. ஆனால் சீனாவின் ஒரு பகுதியான ஹாங்காங்கில் வெளியிட தடையில்லாததால், கடந்த செவ்வாயன்று செக்ஸ் அண்ட் ஜென் 3 டி படம் வெளியானது.

வெளியிட்ட முதல் காட்சியிலிருந்து படத்துக்கு கூட்டம் அலைமோதுகிறது. ஏராளமானோர் படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் திரும்பிச் செல்கின்றனர்.

ஹாங்காங்கில் முதல் நாளிலேயே ரூ.1 கோடியே 58 லட்சம் வசூலித்தது இந்தப் படம்.

அவதார் படம் ஒரே நாளில் ரூ.1 கோடியே 30 லட்சம் வசூலித்ததுதான் இதுவரை ஹாங்காங் பாக்ஸ் ஆபீஸ் சாதனையாக இருந்தது.

படம் வெளியான 5 நாட்களில் ரூ.80 கோடி வசூலை கொடுத்துள்ளது. தைவான் நாட்டிலும் படத்தை வெளியிட்டு உள்ளனர். ஒரு வாரத்தில் ரூ.2.5 கோடி வசூல் குவிந்துவிட்டது. படம் வெளியான தியேட்டர்களில் தொடர்ந்து கூட்டம் அலைமோதுகிறது.

சீனாவில் தடை விதிக்கப்பட்டிருப்பதால், ஏராளமானோர் அங்கிருந்து ஹாங்காங்குக்கு வந்து படம் பார்த்துச் செல்கின்றனர்.

இந்தப் படத்தின் அடுத்த பாகம் விரைவில் தயாராகவிருக்கிறதாம்.

மருத்துவத் தவறுகளால் இறப்புகள் அதிகரிப்பு - உலகச் சுகாதார மையம்!


மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் 10 பேரில் ஒருவர் தவறான மருத்துவச் சிகிச்சைகளால் உயிரிழக்கின்றனர் என்று உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதன் விளைவுகள் குறித்த தரவுகள் இப்போதைக்கு இல்லை என்றாலும், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் அலட்சியம், தவறான சிகிச்சை, தவறான நோய் கணிப்பு உள்ளிட்ட மருத்துவத் தவறுகளால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

ஒரு நோயாளியைக் கொல்லும் 10 காரணங்களில் மருத்துவ ரீதியான தவறுகள் இடம்பெற்றுள்ளது.

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்டொன்றுக்கு 15% நோயாளிகளுக்கு தவறான நோய்க் கணிப்பு முறை கையாளப்படுவது தெரியவந்துள்ளது.

அமெரிக்க மருத்துவ சங்கம் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், சுமார் 2000 பேர் ஆண்டொன்றுக்கு தேவையில்லாத அறுவை சிகிச்சை மூலமும், சுமார் 7000 பேர் தவறான மருந்துகளாலும் உயிரிழப்பதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் 20,000 பேர் ஆண்டொன்றுக்கு மருத்துவனமைகளில் செய்யும் பல தவறுகளினால் உயிரிழப்பதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இது தவிர மருத்துவமனைகளில் நோயாளிகளை இருக்கவைக்கும் காலம் நீட்டிக்கப்படுவதால் ஏற்படும் கிருமிகளால் 80,000 மரணங்களும், மருத்துவத் தவறுகளால் சுமார் 1 லட்சம் பேரும் அமெரிக்காவில் உயிரிழந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் சுமார் 2,25,000 பேர் தெரியாமல் செய்த மருத்துவத் தவறுகளுக்கு ஆண்டு தோறும் அமெரிக்காவில் உயிரிழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலும் ஆங்காங்கே மருத்துவத் தவறுகளால் ஏற்படும் உயிரிழப்பு, உடல் உறுப்புகள் இழப்புகள் பற்றி நாம் பத்திரிக்கை செய்திகள் வாயிலாகத் தெரிந்து கொள்கிறோம். ஆனால் எந்த ஒரு ஆய்வும் இதுவரை இந்தப் பகுதியில் ஆய்வு ரீதியான தவல்களை வெளியிடவில்லை. தகவல்கள் இல்லாததனால் இந்தியாவில் இது போன்ற மரணங்கள் குறைவு என்ற எண்ணத்திற்கு நாம் வரவேண்டியத் தேவையில்லை.

எய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நோயாளி பாதுகாப்பு பற்றிய தேசிய திட்டம் ஒன்று அமல் செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் இதன் மூலம் எவ்வளவு மருத்துவ ரீதியான சாவுகள் தடுக்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் இது வரை இல்லை.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

வாழ்க்கைத் துணையை கவரும் எளிய வழிகள்!


அமைதியாக போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் திடீரென புயலோ, சூறவளியோ வீசினால் பலர் அதனை எதிர்கொள்ள முடியாமல் நொருங்கிப் போய் விடுகின்றனர். ஒருசிலர்தான் எதிர்த்து நின்று பிரச்சினைக்குரிய காரணங்களை ஆராய்ந்து அதை தீர்க்க முயலுகின்றனர்.


இல்லற வாழ்க்கையில் இருவரும் இணைந்து ஒருமித்த கருத்தோடு வாழ்வது மட்டுமே ஒற்றுமையோடு வாழ வழி வகுக்கும். இல்லையெனில் மணமுறிவு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்பட்டு விடும். இனிமையான இல்லறத்திற்கு கடை பிடிக்க வேண்டிய சில வழி முறைகள்.

துணையின் கருத்துக்கு மதிப்பு

எந்த ஒரு செயல் என்றாலும் ஒருவரின் கருத்துக்களை காது கொடுத்து கேட்டாலே பாதி வெற்றி கிடைத்து விடும். அதுவும் மண வாழ்க்கையில் ஒருவருக் கொருவர் கருத்துக்களை பகிர்ந்துகொண்டு அதற்கு தகுந்த முடிவெடுக்க வேண்டும்.

வீட்டிற்கும் வாங்கும் பொருளோ, உடுத்தும் உடையோ எதுவென்றாலும், துணையை தேர்வு செய்ய விடுங்கள். அவரது தேர்வு தவறாக இருக்கும் பட்சத்தில் சாமர்த்தியமாக பேசி அதை வாங்காமல் தவிர்க்கலாம். மாறாக, அவரை விமர்சனம் செய்யக் கூடாது. இதுதான் விரிசலின் முதல் விதை.

அழகில் கவனம் தேவை

ஆண்களோ, பெண்களோ ஒரு குறிப்பிட்ட வயதிற்கு அப்பால் தங்களைப் பற்றி கவனம் கொள்ள தவறி விடுகின்றனர். இன்றைய கார்ப்பரேட் உலகில் ஆணும், பெண்ணும் அனைத்து துறைகளிலும் இணைந்து பணியாற்றுவதால் பிறருடன், தன்னுடைய வாழ்க்கைத் துணையை ஒப்பிட்டு பார்த்து ஏங்குவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே அவரவர், உடைகளிலும், உணவிலும் கவனம் கொள்ளுங்கள். உடலை கச்சிதமாக வைத்துக்கொண்டால் பிறர் மீது கவனம் திரும்ப வாய்ப்பில்லை.

வெளியில் செல்லுங்கள்

அலுவலகம் விட்டால் வீடு, வீட்டை விட்டால் அலுவலகம் என்பது இயந்திரமான வாழ்க்கை. இதனை தவிர்க்க வாரத்திற்கு ஒருமுறை துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று பேசி மகிழுங்கள். இது புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது.

ஒருவரை ஒருவர் பாராட்டுங்கள்

இல்லறத்தில் பாராட்டு பெறுவது என்பது வசிஷ்டர் வாயல் பிரம்மரிஷி பட்டம் பெறுவதற்கு சமம். கணவரிடம் இருந்து ஒரு சின்ன பாராட்டு கிடைத்து விட்டால் போதும் மனைவி க்கு கோடி ரூபாய்க்கு பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்ததற்கு சமம். எனவே வாய்விட்டு பாராட்டுங்கள்.

அதுபோல் கணவரின் பிரத்யேகமான செயல்களை மனைவி பாராட்டுவதில் தவறில்லை. இது போன்ற சின்ன சின்ன சம்பவங்கள் தான் இல்லற பயணத்தை இனிமையானதாக மாற்றும்.

சரும நோயை உருவாக்கும் ஏ.சி.!


கடந்த ஓரிரு ஆண்டு காலமாகவே,மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக தமிழகம் உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கோடை காலத்தில் வெப்ப நிலை மிக அதிகமாகவே காணப்படுகிறது.

இந்த வெப்பத்திலிருந்து தப்பிக்க அலுவலகத்தில் மட்டுமல்லாது வீட்டிற்குள் வந்தாலும், மக்கள் ஏ.சி. அறைக்குள் பதுங்கிக் கொள்ளும் போக்கு மிக அதிகமாகவே அதிகரித்து வருகிறது.

இதனால் நாள் முழுவதும் ஏ.சி. அறைக்குள்ளேயே இருப்பதும், நடமாடுவதுமாக இயற்கையான சீதோஷ்ண நிலையில் இல்லாமலேயே மக்களது, குறிப்பாக நகர்ப்புறங்களில் அலுவலகம் செல்வோரது, நாட்கள் கழிகின்றன.

இவ்வாறு முழு நாளையும் ஏ.சி. அறையிலேயே கழிப்பதால், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கூட வீட்டில் இவர்களால் ஏ.சி. இல்லாமல் இருக்க முடிவதில்லை.

கடும் வெயிலில் சுற்றி திரிந்துவிட்டு அலுவலகத்திற்குள்ளோ அல்லது வீட்டிற்குள்ளோ ஏ.சி. அறைக்குள் நுழைவது சற்று ரிலாக்ஸ் ஆன ஒன்றுதான் என்றாலும் கூட, நீண்ட நேரம் ஏ.சி. அறையில் முடங்கிக் கிடப்பதால் உடலுக்கு நன்மையை விட தீமையே அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.

குறிப்பாக ஏ.சி.யினால் உடலின் தோல் மற்றும் முடிக்கு எத்தகைய தீங்கு நேருகிறது என்பது குறித்து நம்மில் பலருக்கு தெரிவதே இல்லை.

ஒரு அறையில் ஏ.சி. ஓடும்போது அந்த அறையின் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு வறண்டு போய்விடுகிறது. இதனால் அந்த அறையில் இருப்பவர்களது உடலின் தோலின் ஈரப்பதமும் உறிஞ்சப்பட்டு தோல் வறட்சியாகவும், வெடிப்பு விழுந்தும் இருப்பதை நம்மில் பலரிடம் பார்த்திருக்க முடியும்.

அவ்வளவு ஏன்... பனிக்காலங்களில் நமது உடலின் தோல் வறண்டு, குறிப்பாக உதடுகளில் வெடிப்பும், அதிலிருந்து ரத்தக்கசிவும் ஏற்பட்டு இருப்பதை நாமே உணர்ந்திருப்போம்.

அவ்வாறு பனிக்காலத்தில் ஏற்படுவதுதான், நாள் முழுவதும் ஏ.சி. அறைக்குள் இருப்பவர்களுக்கும் ஏற்படுகிறது.

இவ்வாறு உங்களது உடலின் தோல் உரிய பாதுகாக்கப்படாமல், தொடர்ந்து வறண்டே காணப்பட்டால், தோலின் அடிப்பாகம் பாதிக்கப்படும்.தோல் அளவுக்கு அதிகமாக வறண்டு போகும்போவதால் அரிப்பு உணர்வும் ஏற்படும்.

அவ்வாறு ஏற்படும் அரிப்பை போக்க கை நகங்களால் சொறியும்போது,வறண்ட தோலிலிருந்து செதில் செதிலாக உதிர்ந்து விழுந்து அந்த இடம் வெண்மையாக மாறி, பார்ப்பதற்கே அசிங்கமாக இருக்கும். இதைத்தான் 'வங்கு' என்றும் கூறுவர்.

எனவே தொடர்ச்சியாக ஏ.சி. அறையில் இருப்பது கடுமையான தோல் நோயை உருவாக்க வழி வகுத்துவிடும் என எச்சரிக்கின்றனர் தோல் நோய் மருத்துவ நிபுணர்கள்.

எனவே பொதுவான இடம் என்பதால் அலுவலகத்தில்தான் ஏ.சி. அறையை தவிர்க்க முடியாது என்றாலும், குறைந்தபட்சம் வீட்டிற்கு வந்த பிறகாவது சாதாரண காற்றோட்டமான அறையில் அமரும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கடுமையான கோடை காலங்களில் வேண்டுமானால் வீட்டிற்குள் ஏ.சி. அறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

திங்கள், 11 ஏப்ரல், 2011

காதல் செய்யும் ரசாயன மாற்றங்கள்-ஆதலினால் காதல் செய்வீர்!


“காதல், காதல், காதல்
காதல் போயின் சாதல் சாதல் சாதல்”


பாரதியையே பாடாய் படுத்தியுள்ளது இந்த மூன்றெழுத்து வார்த்தை.

கவிஞர்கள் எல்லோருக்கும் பாடுபொருளாய் உள்ள இந்த காதல் அப்படி என்ன மந்திரத்தை தன்னுள் கொண்டிருக்கிறது?

`காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல்பான உணர்வு! உடல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்கின்றனர் அறிஞர்கள்.

அன்பு, நட்பு, நம்பிக்கை, பொறுப்பு ஆகிய நான்கு தூண்களின் மீது கட்டப்படும் அழகிய மாளிகை. இயல்பான காதல் என்பது முதலில் நம்பிக்கையில் தொடங்கும். பொறுப்புணர்வு முழுமையாக இருக்கும். அதன் பின்னரே காமம் வரும். நம்பிக்கை, பொறுப்புணர்வு, காமம் இவை முன்றும் சரியான விகிதத்தில் கலந்திருப்பதே உண்மையான காதலாகும்..

காதல் என்பது பாலியல் ரீதியானதாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. பெற்றோர்கள், குழந்தைகள், உறவினர்களுடன் நீங்கள் மன ரீதியாக சாதகமான தொடர்புகளைக் கொண்டிருக்கும் போது, மதிப்புக்கு உரியவராக உணர்வீர்கள். இத்தகைய மதிப்பு வாய்ந்த காதலால் கிடைக்கும் நன்மைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

மனவிரக்தி:

காதல் சூழலில் வாழ்பவர்களுக்கு மனவிரக்தி மற்றும் உளரீதியான துன்பங்கள் வருவது குறைவு என்கின்றன ஆய்வுகள். மாறாக தனியே வாழும் பலரும் விரக்தியுறுவதும், மது, போதை போன்றவற்றை நாடுவதும், அவற்றிற்கு அடிமையாவதும் அதிகம். அதே போல தனிமைப்பட்டவர்கள் மனவிரக்திக்கு ஆளாவது அதிகம் என்பதை பல ஆய்வுகள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றன.

மனப்பதற்றம்:

புதிதாக காதல் வயப்பட்டவர்களைவிட நீண்ட காலமாக நேசமான உறவில் இருப்பவர்களுக்கு மனப்பதற்றம் ஏற்படுவது குறைவு என கண்டறியப்பட்டுள்ளது. MRI பரிசோதனைகள் மூலம் மூளையின் பகுதிகளை பரிசோதித்ததில் இது தெரிய வந்துள்ளது.

வலிகளைத் தாங்கும் தன்மை:

மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளுக்கு உடல்வலி, தலைவலி ஆகியன ஏற்படுவது குறைவாம். MRI பரிசோதனைகள் மூலம் வலிகளைத் தாங்கும் மூளையின் பகுதி அதிகமாகச் செயற்பட்டு வலி தோன்றுவதைக் குறைக்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ரத்த அழுத்தம்:

மணமுடித்து மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளின் இரத்த அழுத்தம் மற்றவர்களைவிடக் குறைவாக இருக்கிறது. தனியாக இருப்பவர்களுக்க சற்று அதிகமாகவும் உள்ளது. மணமுடிப்பதால் மட்டும் இரத்த அழுத்தம் குறைந்து விடுவதில்லை. மகிழ்ச்சியாக வாழ்வதே முக்கியம் என்பதை இந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

காய்ச்சல் அதிகம் வராது:

காதல் வயப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் காய்ச்சல், போன்ற தொல்லைகள் அடிக்கடி ஏற்படாது. சிறிய காயங்கள் தாமாகவே விரைவில் குணமாகிவிடும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நீண்ட ஆயுள்:

தனித்து இருப்பவர்களை விட திருமணம் முடித்தவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள். திருமண உறவால் , பரஸ்பர ஆதரவும், பிள்ளைகளின் உதவியும், நிதி தட்டுப்பாடின்மையும் காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்கு மேலாக தாம் காதலிக்கப்படுகிறோம், ஆதரவுள்ளவர்கள் என்ற உணர்வு அவர்களுக்கு உடல்நலத்தையும் நீடித்த வாழ்வையும் கொடுக்கிறது.

காதலின் மிகப் பெரிய கொடை:

குடும்ப வருமானத்தையும் வாழ்க்கை வசதிகளையும் விட பரஸ்பர அன்பும், நெருக்கமான உறவும், மனமொத்த காதலும் முக்கியமானது. அது ஆரோக்கியத்துடனும் தொடர்புடையது.

இவை வெற்று வார்த்தைகள் அல்ல விஞ்ஞானபூர்வமாகவும் நிறுவப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஆதலினால் காதல் செய்வீர் - இதுவும் பாரதி சொன்னதுதான்!

திங்கள், 4 ஏப்ரல், 2011

ஆணுடனான உறவில் ஏமாற்றமடைதல்!


பெண் ஒரு வெற்றியாளனை, ஆண்மைக்குரியவனை தனக்குத் துணையாக தேர்வு செய்ய விரும்பினாலும் நாளடைவில் ஆணின் அடிப்படை இயல்புகள் தன்னுடன் அவனை ஒன்றவிடாமல் தடுத்துவிடும் என்பதை அறியாமல், அரவணைப்பும், நெருக்கமும் தனக்குக் கிடைப்பதில்லை என நினைத்து ஏமாறும் நிலையேற்படும்.

பெண்ணின் மென்மையான உணர்வுகளை உணராமல் இதை கேலி செய்வதோ, இந்த குணங்கள் தனக்கு வந்தால் தன்னை ஆண்மைத் தனத்திலிருந்து அப்புறப்படுத்திவிடும் என்ற அச்சத்தில், செக்ஸைத் தவிர வேறு விதத்தில் தனது உணர்வை வெளிப்படுத்த ஆண் தயங்குகிறான்.

ஆனால் பாலுறவைவிட காதலை தன்னிடம் ஆண் நிறைய பகிர்ந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்த்து ஏமாறும் பெண் தடுமாற்றத்திற்கு ஆளாகிறாள்.

பல அண்கள் வெளியில் செல்வாக்குடன் உள்ளனரே தவிர, வீட்டில் மனைவியுடன் மனம்விட்டுப் பேசவேண்டும், பழகவேண்டும், காதலைச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை.

98 விழுக்காடு பெண்கள், தங்கள் மீதுள்ள காதலை கணவன் அடிக்கடி வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறார்கள். தங்களைப் பற்றி, தங்கள் உணர்வுகளைப் பற்றி தங்களுடைய திட்டங்களைப் பற்றி அதிகமாக பேசவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

இவ்வாறெல்லாம் நடக்காதபோது 40 விழுக்காடு பெண்கள் விவாகரத்து பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். 42 விழுக்காடு பேர் வேறொரு உறவை நாடுகிறார்கள். அந்த உறவு இன்னொரு ஆணுடனாக இருக்கலாம், தனது குழந்தையின் மீது கவனம் செலுத்துவதாக அல்லது வேலையின் மீது கவனத்தைத் திருப்புவதாக இருக்கலாம்.

வெளியுலகத்தை சாராமல் வீட்டுச் சூழலில் அதிகம் இருக்கும் பெண் தனது உணர்வுகளை கணவன் தூண்ட வேண்டும் என எதிர்பார்க்கிறாள். அதற்குப் போதிய அவகாசம் அளிக்கிறாள்.

இதைப் புரிந்துகொண்டு மனைவியுடன் மனம்விட்டுப் பேசுவதை கணவன் வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இருவருக்கும் இடையே நெருக்கமிராது, மனைவியின் மனம் அன்பிற்காக ஏங்கத் தொடங்கும். அந்த ஏக்கம் தேவையற்ற விளைவுகளைத் தரக்கூடும்.

வசியத்தில் இருந்து தப்பிக்க குங்குமம் வைங்க!

இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் குங்குமப்பொட்டு வைத்துக்கொள்வது மங்களமானதாக கருதப்படுகிறது. அது அழகுத் தொடர்பானதும் கூட. மஞ்சளால் உருவாக்கப்பட்ட தூய்மையான குங்குமத்தை தான் வைத்துக்கொள்ள வேண்டும். குங்குமத்தை கழுத்தில் உள்ள கண்டம், புருவத்தின் இடைப்பகுதி, நெற்றியின் உச்சி போன்ற இடங்களில் வைத்துக்கொள்வார்கள். அப்படி பொட்டு வைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.


வசியத்தில் இருந்து தப்பலாம்

வசியம் என்பது ஒரு கலை. இந்நாளில் மெஸ்மரிசம், ஹிப்னாடிசம், போன்றவை வழக்கத்தில் உள்ளன. மற்றவர்களை வசியப்படுத்தும் போது தம் பார்வை ஆற்றலை செலுத்த கண்டம், புருவத்தின் இடைப்பகுதி, வகிட்டு நுனி, கழுத்தின் பின்பகுதி ஆகிய இடங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

கழுத்தின் பின்பகுதி சடையால் மறைக்கப்படுகிறது. ஏனைய பகுதிகளில் பொட்டு வைத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளது. இதில் புருவ இடைப்பகுதி மிக முக்கியமாகும். இந்த இடத்தில் பொட்டு வைத்துக்கொண்டவர்களை அவர்கள் சம்மதம் இன்றி, எவராலும் ஆழ்நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது; வசியப்படுத்த முடியாது.

யோகசாஸ்திரம் கூறும் உண்மை

மூலாதாரம் என்று சொல்லப்படும் பகுதியில் இருந்து பிறக்கும் உள் ஒளி கண்டத்தில் தங்குகிறது. அவ்வொளி கபாலம் மூலம் புருவ மத்திக்கு வருகிறது. அகவொளி நிலைக்கும் இடங்களைப் பொட்டு வைத்து புலப்படுத்துவதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்கள் அனைவரும் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். திருமணமானவர்கள் என்பதை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக வகிட்டில் வைத்துக்கொள்வது மரபு. ஒட்டுப் பொட்டுக்களை இட்டுக் கொள்ளுதல் சாஸ்திரத்திற்கு முரனானது ஆகும்.