புதன், 30 ஜூன், 2010

நெல்லை மாநகராட்சிக்கு புதிய வெப்சைட் துவக்கம்!


நெல்லை: நெல்லை மாநகராட்சியில் பொதுமக்கள் புகார்களை பதிவு செய்ய புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சியில் பொதுமக்கள் பல்வேறு விபரங்களை தெரிந்து கொள்ள வசதியாக புதிய இணையதளம் ஒன்று நேற்று துவக்கப்பட்டது. இதை மாநகராட்சி மேயர் ஏ.எல். சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். கமிஷ்னர் சுப்பையன், செயற்பொறியாளர் நாராயணநாயர், உதவி கமிஷ்னர்கள் சாந்தி, சுல்தானா, சாமூவேல், செல்வராஜ், கவுன்சிலர்கள் துரை, அப்துல்கலாம், கோபி, பேபிகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அந்த இணைய தளத்தின் முகவரி - http:\\tirunelvelicorp.tn.gov.in

இதில் மாநகராட்சி குறித்த அனைத்து விபரங்கள், திட்ட செயல்பாடுகள், செயல்படுத்தப்படும் பணிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் குறித்த விபரங்கள், தொலைபேசி எண்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.மாநகராட்சியின் சேவைகளை பெறுவதற்கான வழிமுறைகளை இணைய தளம் மூலம் அறி்ந்து கொள்ளலாம். குடிநீர் இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், வரி இனங்கள் தொடர்பான விண்ணப்பங்களை இலவசமாக டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். இந்த இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளையும், புகார்களையும் கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 29 ஜூன், 2010

ஜார்ஜ் கோட்டை: நூலகமான பழைய சட்டசபை கூடம்!


சென்னை: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த பழைய சட்டசபை கூடத்தில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் பேசிய முதல்வர் [^] கருணாநிதி [^], சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செயல்படும். முதல்வராக நான் பணியாற்றிய அலுவலகம் செம்மொழி நிறுவன தலைவரின் அலுவலகமாக செயல்படும் என்று அறிவித்தார்.

இதையடுத்து கோட்டையை செம்மொழி அலுவலகமாக மாற்றும் ஏற்பாடுகள் மிக வேகமாக நடக்க ஆரம்பித்துள்ளன.

முதல்கட்டமாக புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த பழைய சட்டசபை கூடத்தில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நூலகத்தில் சங்கத் தமிழ் இலக்கியங்கள், வரலாறு, அகராதி போன்ற தலைப்புகளில் ஆயிரக்கணக்கான நூல்கள் இடம் பெற்றுள்ளன.

தொடர்ந்து இருக்கைகள், மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோட்டையில் தான் அரசு அமையும், புதிய சட்டசபை கட்டடத்தில் ஆட்சி அமைக்க மாட்டேன் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா [^] அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் கோட்டையை செம்மொழி நூலகம் ஆக்கும் பணிகள் படு வேகத்தில் நடந்து முடிந்துள்ளன.

விமான தயாரிப்புத் துறையில் நுழையும் மஹிந்திரா!


பெங்களூர்: இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா விமானத் தயாரிப்புத் துறையில் நுழைகிறது.

இதற்காக முதல்கட்டமாக ரூ. 250 கோடியை அந்த நிறுவனம் ஒதுக்கியுள்ளது.

இந்த நிதியைக் கொண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிப்ஸ்லேண்ட் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் மற்றும் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் ஏரோஸ்டாஃப் நிறுவனம் ஆகியவற்றின் பங்குகளை மஹிந்திரா நிறுவனம் வாங்கியுள்ளது.
இது குறித்து பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய அந்த நிறுவத்தின் நிர்வாக இயக்குநர் [^] ஆனந்த் மஹிந்திரா கூறுகையில், முதல்கட்டமாக விமான உதிரி பாகங்கள் தயாரிப்புக்கு ரூ. 150 கோடியும் விமானத் தயாரிப்பு தொடர்பான பணிக்கு ரூ. 100 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் விமான துறையில் முழு கவனம் செலுத்துவோம். பயணிகள் விமானம் [^] மற்றும் போர் விமான தயாரிப்புகளில் இறங்க திட்டமிட்டுள்ளோம்.

இப்போது விமானத்துறை பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தத் துறையில் மேலும் வளர்ச்சிக்கான வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது என்றார்.

பெங்களூர் அருகே மாலூரில் மஹிந்திரா நிறுவனத்துக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு விமான உதிரிப் பாக தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

திங்கள், 28 ஜூன், 2010

பெண்ணைப் படியுங்கள்..!

நம்ம ஊர் சினிமாக் கவிஞர்கள் பலரும், பெண்ணை புத்தகமாக வர்ணித்து ஏகப்பட்ட கவிதைகளை ஏக்கர் கணக்கில் எழுதியுள்ளனர். இதற்கு விமர்சனங்களும் கூட எழுந்துள்ளன.

ஆனால் நிஜமாகவே பெண் ஒரு புத்தகம்தான். அவரது முகத்தைப் பார்த்து நிறைய படிக்கலாம் என்கிறது நியூ சயின்டிஸ்ட் இதழில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வு முடிவு.

பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுகளை பார்க்க முடியும். அவர் சோகமாக இருக்கிறாரா, சந்தோஷமாக இருக்கிறாரா, எதையாவது நினைத்துக் கொண்டிருக்கிறாரா, அவரை நம்பலாமா, கூடாதா, கடவுள் நம்பிக்கை கொண்டவரா .. இப்படி ஏகப்பட்ட மேட்டர்களை ஒரு பெண்ணின் முகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாமாம்.

ஆனால் ஆம்பளைஸ் முகத்தைப் பார்த்தால் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாதாம். காரணம் ஆண்களின் முகத்திற்கு இப்படி உணர்ச்சிகளை, உணர்வுகளை வெளிக்காட்டும் திறமை கிடையாதாம்.

இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக ஒரு ஆயிரம் ஆண், பெண்களை எடுத்துக் கொண்டனர். அவர்களின் புகைப்படங்களை இணையதளத்தில் இடம் பெற வைத்தனர்.

ஏற்கனவே அவர்கள் குறித்த தகவல்களை வாங்கி வைத்துக் கொண்டனர். இது தவிர புகைப்படங்களைப் பார்த்து கருத்து சொல்வோருக்காக கேள்விகளையும் தயார் செய்தனர்.

பின்னர் புகைப்படங்களை இணையதளத்தில் பிரசுரித்து, அந்தப் பெண்களின் முகங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேள்வி கேட்டிருந்தனர். இந்த இணையதளத்திற்கு கிட்டத்தட்ட 6500 பேர் வருகை தந்து அதில் இடம் பெற்றிருந்த பெண்களின் முகத்தைப் பார்த்து அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள், அவர்களைப் பார்த்தால் எப்படித் தோன்றுகிறது என்பதைத் தெரிவித்திருந்தனர்.

73 சதவீதம் பேர் பெண்களை அதிர்ஷ்டசாலிகள் என்று தெரிவித்தனர். 70 சதவீதம் பேர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என கூறியிருந்தனர்.

பெண்களை நம்பலாம் என கூறியிருந்தவர்கள் 54 சதவீதம் பேர்.

ஆனால் அந்தப் புகைப்படங்களுடன் இணைக்கப்பட்டிருந்த ஆண்கள் குறித்து யாருமே சரியாக கணிக்க முடியவில்லையாம்.

ஆண்களை விட பெண்களின் முகம் மிகவும் இன்ஃபர்மேட்டிவ் ஆனவை. இதனால்தான் எளிதில் அவர்களுடைய குணாதிசயங்கள் குறித்து கணிக்க முடிகிறது என்று முடிக்கிறது அந்த ஆய்வு.

எல்லாம் சரி, நாளைக்கு காலையில் நம்மை மனைவி முறைத்துப் பார்க்கும்போது 'லைட்'டாக அடிப்பாரா அல்லது துரத்தி துரத்தி அடிப்பாரா என்பதை கணி்க்க முடியுமான்னு புரிஞ்சுக்க டிரை பண்ணுவோம்..

ஆளே மாறிப் போய் சென்னை திரும்பினார் ரஞ்சிதா-அனுபவத்தை புத்தகமாக எழுதுகிறார்!


சென்னை: நித்தியானந்தா விவகாரத்தில் சிக்கி தலைமறைவான நடிகை ரஞ்சிதா தற்போது சென்னை திரும்பியுள்ளதாக தெரிகிறது. ரகசியமான இடத்தில் தங்கியிருக்கும் அவர் தலைமுடியை குட்டையாக்கி, மாடர்ன் உடையில் இருக்கிறாராம். தனது அனுபவங்களை புத்தகமாக எழுதி வருவதாகவும் அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

நித்தியானந்தாவைக் கைது செய்த கர்நாடக போலீஸார், ரஞ்சிதாவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக அவரைத் தேடி வந்தனர். இதுதொடர்பாக விசாரணைக்கு வருமாறும் கூறி உத்தரவிட்டனர். ஆனால் ரஞ்சிதா இதுவரை ஆஜராகவில்லை. அமெரிக்காவுக்கு அவர் ஓடி விட்டதாகவும் செய்திகள் வந்தன.

ஆனால் தற்போது ரஞ்சிதா சென்னை திரும்பி ரகசியமான இடத்தில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தலைமுடியை வெட்டி பாப் கட் செய்து, ஜீன்ஸ் டீசர்ட் சகிதம் அவர் காணப்படுகிறாராம். தனது அனுபவங்களை அவர் புத்தகமாக எழுதி வருகிறாராம்.

இதுகுறித்து அவர் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,

சாமியார் நித்யானந்தா சம்பந்தமாக கடந்த 6 மாதத்தில் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், அதனால் ஏற்பட்ட அவலங்கள், எனது மனதில் ஏற்படுத்திய காயங்கள் ஆகியவற்றை விவரித்து நான் ஒரு புத்தகம் எழுதுகிறேன்.

இந்த புத்தகம் தனிப்பட்ட பிரச்சினைகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவும் வகையில் இருக்கும். இந்த புத்தகங்களை வெளியிட சில பதிப்பகங்களுடன் நான் பேசி வருகிறேன்.

இதுதவிர நான் இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் ஒரு நாவலும் எழுதுகிறேன். இதில் எனது அனுபவம் பற்றி எழுதும் புத்தகம்தான் முதலில் வெளிவரும்.

எனது அறையில் ஒரு யோகியின் சுயசரிதை புத்தகம், மததலைவர் ஒருவருடைய ஆன்மீக புத்தகம் ஆகியவற்றை எப்போதும் வைத்துள்ளேன்.

நான் எப்போதுமே ஒரு புத்தக புழு. எந்த நாவல்களையும் விரும்பி படிப்பேன். இப்போது தத்துவ புத்தகங்களுக்கு மாறிவிட்டேன். குறிப்பாக இந்திய ஆன்மீக புத்தகங்களை விரும்பி படிப்பேன்.

நான் தலைமறைவான விஷயங்கள் குறித்தோ அல்லது கடந்த கால சம்பவங்கள் குறித்தோ பேச விரும்பவில்லை. கடந்த காலத்தை நினைத்து கொண்டிருக்க முடியாது. அதை விட்டு வெளியே வர விரும்புகிறேன்.

மன அழுத்தம், கஷ்டங்கள் என நான் மிகவும் காயப்பட்டு விட்டேன். அதை விட்டு புதிய வாழ்க்கையை நோக்கி செல்ல விரும்புகிறேன். எனக்கு எதிராக பல செய்திகள் பரப்பப்பட்டு விட்டன. நான் கொடுத்த பேட்டியையும் திரித்து வெளியிட்டு விட்டார்கள். இவை எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன்.

நடிகை என்றால் இது போன்ற கஷ்டங்களை தாங்கி கொள்வார்கள் என்று மக்கள் [^] நினைக்கிறார்கள். என் கணவர், சகோதரிகள், பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் எனக்கு பக்க பலமாக இருந்து என் கஷ்டங்களை தாங்க வைத்து விட்டனர்.

நான் நடித்த ராவணன் படத்தை இன்னும் பார்க்கவில்லை. மீண்டும் சினிமாவில் நடிப்பது பற்றியும் சிந்திக்கவில்லை. சினிமாவில் இருந்து சற்று ஓய்வு எடுக்க விரும்புகிறேன். நடிக்காத நேரங்களில் நான் மற்ற ராணுவ வீரர்கள் மனைவிகள் போல சமூக சேவையில் ஈடுபடுவேன்.

நான் சமீப காலங்களில் முக்கிய நபர்கள் யாரையும் சந்திக்கவில்லை. நான் சகஜ நிலைக்கு திரும்ப சிறிது காலம் ஆகும் என நினைக்கிறேன். என் காலடியை முன்னேற்ற பாதையை நோக்கி எடுத்து வைக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ரஞ்சிதா.

ரஞ்சிதா சென்னை திரும்பி விட்டதாக கூறப்பட்டாலும் கூட அது இன்னும் ஊர்ஜிதமாகவில்லை. அதேசமயம் அவரைப் பிடித்து விசாரிக்க கர்நாடக போலீஸாரும் தொடர்ந்து முயற்சித்து கொண்டிருக்கிறார்களாம்.

மிஸ் சின்னத்திரையாக ஸ்வேதா தேர்வு-தேவிப்பிரியாவுக்கு 3வது இடம்!


சென்னையில் நடந்த மிஸ் சின்னத்திரை 2010 அழகிப் போட்டியில் ஸ்வேதா முதலிடத்தைப் பிடித்தார். 3வது இடம் நடிகை [^] தேவிப்பிரியாவுக்குக் கிடைத்தது.

2010ம் ஆண்டிற்கான சின்னத்திரை அழகி போட்டி சென்னை [^]யில் நடிகர் [^] சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களான விலாசினி, மோனிகா, லாவண்யா, மோபின், ஸ்வேதா, காயத்ரி, தேவிப்பிரியா, மணிமேகலை, அன்னபூரணி, ரஜினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

3 சுற்றுக்களாக போட்டி நடந்தது. முதலில் சேலை அணிந்தபடியும், பின்னர் மேற்கத்திய உடைகளிலும் அழகிகள் நடைபோட்டனர். அவர்களிடம் நடுவர்களாக கலந்து கொண்ட நடிகை சமீதா, நடிகர் நட்ராஜ், டைரக்டர் ரவிமரியா, ஆடை அலங்கார நிபுணர் சுனில்மேனன், மிஸ் சென்னை திவ்யா, அழகுகலை நிபுணர் மது ஆகியோர் தனித் தனியாக கேள்விகள் கேட்டனர்.

இதன் அடிப்படையில் 2010ம் ஆண்டு சின்னத்திரை அழகியாக ஸ்வேதா தேர்வானார். இவருக்கு நடிகை கீர்த்தி சாவ்லா கிரீடம் சூட்டினார்.

2வது இடம் ரஜினிக்கும், 3வது இடம் நடிகை தேவிப்பிரியாவுக்கும் கிடைத்தது.

கூந்தல் அழகியாக மணிமேகலை, மெல்லிய தோல் அழகியாக லாவண்யா, அழகான உடல்வாகு உடையவராக விலாசினி, போட்டோ முக அழகியாக அன்னபூரணி, அழகான முக அழகியாக மோனிகா, திறமையாளராக மோபின், அழகான கண் அழகியாக காயத்ரி ஆகியோர் தேர்வானார்கள்.

நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்களின் கலை,நடன நிகழ்ச்சிகளும் களை கட்டின.

அமெரிக்க தீவிரவாதிகள் பட்டியலில் 6 வயது இந்திய சிறுமி!


வாஷிங்டன்: இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் 6 வயது மகளை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளது அமெரிக்கா. அந்தச் சிறுமி விமானங்களில் பறக்கவும் தடை

ஓகியோ மாகாணம் வெஸ்ட்லேக் பகுதியைச் சேர்ந்த
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் சந்தோஷ் தாமசின் மகள் அலிஷா (6). இவரது பெயரை தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்துள்ள அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை (US Department of Homeland Security), அவர் விமானத்தில் பயணிக்க தடை விதித்துள்ளது.

சமீபத்தில் க்ளீவ்லேண்டில் இருந்து மினியபோலிஸ் நகருக்கு விமானத்தில் செல்ல டிக்கெட் பு்க் செய்ய முயன்றபோது, ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏஜென்ட் இந்தத் தகவலை சந்தோஷிடம் தெரிவித்தார்.

இருப்பினும் விமானத்தில் பயணிக்க அனுமதி அளித்த விமான நிலைய அதிகாரிகள், இது குறித்து உள்நாட்டு பாதுகாப்புத்துறையிடம் பேசி, சிறுமியின் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து பாதுகாப்புத்துறைக்கு டாக்டர் சந்தோஷ் கடிதம் எழுதினார். ஆனால், அவர்களிடமிருந்து வந்த பதில் அதிர்ச்சியைத் தந்தது.

சிறுமியின் பெயருக்கு அனுப்பப்பட்ட அந்த பதிலில், உங்களது கோப்பில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த விவகாரத்தை பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி கையில் எடுத்தது. இது குறித்து விமானப் பாதுகாப்பு துறையிடம் அந்தத் தொலைக்காட்சி கேள்வி எழுப்பியபோது,

''அப்படிப்பட்ட பட்டியல் இருப்பதும், அவர்களை விமானத்தில் பயணிக்காமல் தடுப்பதும் உண்மை தான். ஆனால், அதில் யாருடைய பெயர்கள் உள்ளன என்பது ரகசியம். மேலும் அந்தப் பட்டியலில் உள்ள நபர்கள் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்பதால் அது குறித்து யாருக்கும் எந்த விளக்கமும் தரப்படாது'' என்று பதில் கிடைத்துள்ளது.

இத்தனைக்கும் அலிஷா பிறந்து 2 மாதத்தில் இருந்து பலமுறை விமானப் பயணம் செய்துள்ளார். கடந்த பிப்ரவரியில் மெக்சிகோவுக்கும் குடும்பத்துடன் சென்று வந்துள்ளது இந்தக் குழந்தை. அப்போதெல்லாம் எந்தப் பிரச்சனையும் வரவில்லை. திடீரென இப்போது தான் அவரது பெயரை தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்துள்ளனர் அதிகாரிகள்.
Read: In English
முன்பு வெளிநாட்டுப் பயணிகளி்ல் சந்தேகப்படும்படி உள்ளோரின் பெயர்களை இந்தப் பட்டியலில் சேர்த்து வந்தனர். இப்போது உள்நாட்டினரையும் அதில் சேர்க்க ஆரம்பித்துள்ளது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது இந்த விவகாரத்தை நேரடியாக அமெரிக்க உள்துறையிடம் கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் டாக்டர் சந்தோஷ் ஈடுபட்டுள்ளார்.

பள்ளி, கல்லூரிகள் முன்பு கொடிகெட்டிப் பறக்கும் கஞ்சா சாக்லெட் விற்பனை!

சென்னை: சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகள் முன்பு கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக சி.பி. சி.ஐ.டி. போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சென்னை, வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் பள்ளி, கல்லூரிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் முன் கஞ்சா சாக்லெட்டுகள் விற்பதாக தகவல் கிடைத்தது.

இத்தகவலின் பேரில் அக்கல்லூரிக்கு விரைந்து சென்ற போலீசார் ராணிப்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் (28) என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இவர் கஞ்சா சாக்லெட்டுகளை 1 ரூபாய் மினி சாக்லெட் மற்றும் 50 ரூபாய் பெரிய சாக்லெட் என 2 விதமாக தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார்.

விசாரணையில் ஆனந்தன் கொடுத்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்ட வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சுபாஷ் மற்றும் திருவொற்றியூரை சேர்ந்த பாண்டியன் ஆகியோரிடமிருந்து 7 கிலோ கஞ்சா சாக்லெட்கள் கைப்பற்றப்பட்டது.

வடபழனியில் கடந்த மார்ச் மாதம் கஞ்சா பொட்டலங்களை பதுக்கியது தொடர்பாக பஷல் பாண்டியனும், அவரது மனைவி சந்திராவும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கஞ்சா பொட்டலங்களை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஆயில் டேங்கரில் வைத்து கடத்தியுள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆனந்தன், சுபாஷ், பாண்டியன் ஆகிய 3 பேரும் சந்திராவிடம் இருந்துதான் கஞ்சா பொட்டலங்களை வாங்கியதாக போலீசாரிடம் கூறியுள்ளனர்.

கஞ்சா சாக்லெட்டுகள் தயாரிக்கும் முறை குறித்து இக்கும்பல் அளித்துள்ள வாக்குமூலம்:

கஞ்சா பொட்டலங்களை மொத்தமாக வாங்கிக் கொள்வோம். முதலில் அதை பொடியாக்கி பின்னர் சாக்லெட் பவுடர் மற்றும் சாக்லெட் எசன்ஸ் ஆகியவற்றுடன் கலந்து சிறுசிறு துண்டுகளாக்குவோம்.

கஞ்சா வாசனை வராமல் இருக்க ஏலக்காய், லவங்கம், பட்டை ஆகியவற்றை பொடி செய்து அதனுடன் சேர்த்து விடுவோம். இந்தக் கலவையுடன் தேவைக் கேற்ப சர்க்கரையை சேர்த்துவிட்டால் கஞ்சா சாக்லெட்கள் தயாராகிவிடும்.

இதனை பள்ளி, கல்லூரிகள் அருகில் இருக்கும் பெட்டிக் கடைகளில்தான் விற்பனையை தொடங்குவோம். முதலில் 1 ரூபாய் மினி சாக்லெட்டுகளைத்தான் பெட்டிக் கடைகளுக்கு சப்ளை செய்வோம். பெட்டிக் கடைகளில் இதனை மாணவர்கள் வாங்கி சாப்பிட்டுவிட்டு மீண்டும் மீண்டும் அதனை கேட்கும்போது மினி சாக்லெட் சப்ளையை நிறுத்திவிட்டு 50 ரூபாய் சாக்லெட்டுகளை மடடும் கொடுப்போம்.

இந்த வகை சாக்லெட்டுகளை விற்பனை செய்யும் பெட்டிக்கடைக்காரர்களை விலை கொடுத்து வாங்கி விடுவோம். அதனால் அவர்கள் கஞ்சா சாக்லெட்டுகளை மற்ற சாக்லெட்டுகளுடன் சேர்த்து விற்று விடுவார்கள் என்று தெரிவித்தனர்.

வ‌ணிக‌ம்!

டாலருக்கு நிகர் ரூபாய் மதிப்பு உயர்வு!
வங்கிகளுக்கு இடையிலான அன்னியச் செலாவணிச் சந்தை நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 18 காசுகள் உயர்ந்தது.

டாலர் ஒன்றுக்கு ரூபாய் 46.10 ஆகக் குறைந்தது. வெள்ளிக்கிழமை இறுதி நிலவரப்படி இது ரூ.46.28/29ஆக இருந்தது.

அயல்நாட்டிலிருந்து பங்குச் சந்தைக்கு முதலீடுவரத்து அதிகரிப்பால் ரூபாய் மதிப்பு உயர்ந்தது என்று அன்னியச் செலாவணிச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எஸ்.பி.ஐ உரிமை பங்கு வெளியிட திட்டம்!
பாரத ஸ்டேட் வங்கி உரிமை பங்குளை வெளியிட்டு இந்த நிதி ஆண்டிக்கள் ரூ.20 ஆயிரம் கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.

புது டெல்லியில் இன்று நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பில் பங்கேற்க வந்த ஸ்டேட் வங்கி சேர்மன் ஓ.பி.பட் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் உரிமை பங்குகளை வெளியிடுவதன் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி திரட்ட திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். இந்த நிதி ஆண்டின் கடைசி மாதங்களில் உரிமை பங்கு வெளியிடப்படும்.

வங்கியின் பணப்புழக்கத்தை பொருத்த வரை, ஜுன் மாதத்தில் குறைவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் 3 ஜி எனப்படும் மூன்றாம் தலைமுறை அகண்ட அலைவரிசையின் ஏலமும், வரவிருக்கும் வயர்லெஸ் அகண்ட அலைவரிசையின் ஏலமுமே காரணம். அதே நேரத்தில் அடுத்த மாதம் வங்கியின் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று ஓ.பி.பட் தெரிவித்தார்.

சனி, 26 ஜூன், 2010

சுவிஸ் வங்கி… 90 இலட்சம் கோடி… மலைக்க வைக்கும் கள்ளப் பணம்!


உலகின் கள்ளப் பணத்தைப் பதுக்கி வைக்கும் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் மட்டுமே ரூ 70 லட்சம் கோடி, அதாவது 1.40 ட்ரில்லியன் டாலர் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது நினைவிருக்கலாம். இதுகுறித்து டிஎன்ஏ நாளிதழ் ஒரு கட்டுரையைக் கூட வெளியிட்டிருந்தது. அது வெளியாகி சில மாதங்கள் உருண்டோடிவிட்டன. இன்றைக்கு அந்தப் பணத்தின் அளவு ரூ 90 லட்சம் கோடிக்கு மேல் என்கிறார்கள். விரைவில் செஞ்சுரி அடித்துவிடும்!

இந்தப் பணத்தைத்தான் இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் என்று முன்பு பிஜேபிக்காரர்களும், காங்கிரஸாரும் முழங்கினார்கள். கட்டாயம் கொண்டு வர முடியாது என்று ஒருவரையொருவர் பலமாக நம்பியதாலேயே இந்த முழக்கம்!

இவ்வளவு பணத்தை சும்மா வைத்துக் கொண்டு, மாதச் சம்பளக்காரர்களையும் நடுத்தர வருமானம் கொண்டவர்களுக்கும் வரிமான வரி வரம்பை ரூ 2 லட்சம் வரை ஏற்றுவதற்கே வருடக்கணக்கில் யோசித்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு… என்ன தேசமோ!

இருக்கட்டும்…

70 லட்சம் கோடின்னா… எவ்வளவு? அதை வைத்து என்னென்ன செய்ய முடியும் என்றெல்லாம் ஜஸ்ட் ஒரு கணக்குப் போட்டுப்பார்த்தால்… பிரமிப்பில் தலை கிர்ரடித்துவிடும்.

இதோ… அந்த விவரமும்…

1. உலகில் உள்ள 180 நாடுகளில் நமது நாட்டினரின் பணம்தான் சுவிஸ் வங்கியில் உள்ள மிக உச்ச அளவு தொகையாகும். கருப்புப் பணத்தின் பிறப்பிடமாக இந்தியா உள்ளது. சற்றே எண்ணிப் பாருங்கள்… சுவிஸ் வங்கியில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய் இந்தியர்களுக்கு சொந்தமானது என்றால் நமது இந்திய நாடு எவ்வளவு பெரிய பணக்கார நாடாகும்.

2. தங்கள் வங்கிகளில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய்க்கு சொந்தமானவர்களின் பெயர்களை வெளியிடக் கோரி இந்திய அரசாங்கம் கேட்டால் அப் பெயர்களை வெளியிட சித்தமாக இருப்பதாக சுவிஸ் அரசாங்கம் இந்திய அரசாங்கத்திற்கு அதிகாரபூர்வ கடிதம் எழுதியுள்ளது.

3. சுவிஸ் அரசு நமது இந்திய அரசுக்கு எழுதிய அதிகாரபூர்வ கடிதத்தின் அடிப்படையில் இச்செய்தி ஏற்கனவே கடந்த 22-5-2008-இல் டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட நாளிதழ்களில் வெளியாகி உள்ளது.


4. ஆனால் இதற்கு நமது இந்திய அரசு எந்த பதிலையும் அனுப்பவில்லை. அதாவது 1947 முதல் 2008 வரை சுவிஸ் வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள பணத்தின் விவரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கும்படி இந்திய அரசானது சுவிஸ் அரசுக்கு பதில் கடிதம் எழுதவே இல்லை. மேலும் இது குறித்து எதிர்க்கட்சியினரும் அப்போது எந்த ஆர்வமும் கட்டவில்லை.

காரணம், சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தில் ஒரு பெரிய சதவிதம் நமது இந்திய அரசியல்வாதிகளுக்கு சொந்தமானது. அப்பணம் நமது இந்தியர்கள் ஒவ்வொவருக்கும் சொந்தமானது என்றுதான் சொல்வதுதான் பொருத்தமானதாகும். தேர்தலின்போது மட்டும் கூப்பாடு போட்டார்கள்.

5. இந்தப் பணம் நமது நாட்டுக்குச் சொந்தமானது. இவ்வளவு பெரிய தொகையில் என்னென்ன செய்யலாம் தெரியுமா? இந்தியா தனது அயல்நாட்டுக் கடனை 13 தடவை திருப்பிச் செலுத்தலாம். இத்தொகையில் இருந்து வரும் வட்டியை கொண்டு நமது மைய அரசின் ஓராண்டு பட்ஜெட் செலவை பற்றாக்குறை இல்லாமலேயே சமாளிக்கலாம். மக்கள் எந்த வரியையும் அரசுக்கு செலுத்த வேண்டியிருக்காது. மேலும் 45 கோடி ஏழை குடும்பங்கள் ஒவொன்றுக்கும் தலா 1 இலட்சம் ரூபாய் வழங்கலாம்.

6. சுவிஸ் வங்கியில் மட்டும் 70 இலட்சம் கோடி ரூபாய் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று கணக்கெடுத்துக் கொண்டால், மற்ற வங்கிகளில் எவ்வளவு பணம் வைப்பீடு செய்யப்பட்டிருக்கும் ? சற்றே கற்பனை செய்து பாருங்கள். இந்தியர்கள் தங்கள் பணத்தை எவ்வளவு இழந்துள்ளார்கள்? நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது! இங்கு இன்னொரு இடர்பாடு உள்ளதும் கவனிக்கத்தக்கது. அதாவது சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் இறந்து விட்டால், அவரது கணக்கில் உள்ள பணத்திற்கு சுவிஸ் வங்கியே உரிமையாளராகிவிடும்.

7. சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்திய பண முதலைகள் ‘கர்ம வினை’ என்ற சித்தாந்தை சுத்தமாக மறந்து விட்டார்களா? ஊழல், சுரண்டுதல் ஆகிய முறையற்ற வழிகளில் கிடைத்த அப்பணத்தை அவர்கள் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள நினைத்தாலோ/பயன்படுத்த முனைந்தாலோ அப்பணம் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எத்தகு கேடுகளை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் சிந்திக்க மறந்து விட்டார்கள்.

8. இந்த உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் தங்கள் பங்குக்காக காத்திருக்கிறார்கள்.

அன்றாடங்காய்ச்சிகள் இதையெல்லாம் படித்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் அன்றைய நாள் கழிந்தால் போதும் என ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.

எனினும் இதுவும் ஒரு விடுதலை போராட்டமே”. ஒரு பெரும் பொரளாதார விடுதலைக்கான போராட்டம். யார் எப்படி முன்னெடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

9. சுவிஸ் வங்கியில் உள்ள மேற்படி பணம் இந்திய மக்களின் ரத்தத்திலும், வியர்வையிலும் விளைந்தது. அது மீண்டும் இந்திய நாட்டிற்க்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோஷத்துக்கு இன்னும் கூட வலு சேரவில்லை என்பதுதான் இதில் மகா சோகம்.

10. இந்திய ஆட்சியாளர்கள் சரியான முயற்சிகளை மேற்கொண்டு ஜி 20, ஐஎம்எப், எக்மண்ட் குழு போன்றவர்களிடம் இந்தப் பிரச்சினையை முன்வைத்து வலியுறுத்தல்களைத் தொடங்க வேண்டும். அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி இந்த வேலையை எப்போதோ ஆரம்பித்துவிட்டன.

இந்தியா ஆரம்பிக்குமா?

வியாழன், 24 ஜூன், 2010

தினசரி ஆர்கசம்-உடலுக்கு ஆரோக்கியம்: ஆய்வு


செக்ஸ் உணர்வின் உச்சத்தை எட்டும் பெண்கள் [^], அப்படி அனுபவப்படாத பெண் [^]களை விட உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமானவர்களாக இருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

இவர்களை நோய் அவ்வளவு சீக்கிரம் அண்டுவதில்லையாம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்கள் சுகாதாரத் திட்டத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் இதுதொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

செக்ஸ் வாழ்க்கையில் திருப்திகரமாக இருக்கும் பெண்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியமும், மன நலமும் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

20 முதல் 65 வயது வரையிலான 300 பெண்களிடம் இதுதொடர்பான ஆய்வு நடத்தப்பட்டுத. இதன் முடிவுகள் குறித்து இந்தக் குழுவின் தலைவரான டாக்டர் சோனியா [^] டேவிசன் கூறுகையில், செக்ஸ் ரீதியாக திருப்தி இல்லாத பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் குறைவாகவே உள்ளது. அவர்களது செயல் திறனும் கூட குறைந்தே காணப்படுகிறது.

உடல் நலம் குறித்த விவகாரத்தில் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி என்பதும், ஆர்கசத்தை அடைவதும் முக்கியமானதாக உள்ளதையே இது காட்டுகிறது.

பெண்கள் பொதுவாக ஆர்கசம் குறித்து தங்களது டாக்டர்களிடம் சரிவர விவாதிப்பதில்லை. அதற்கு அவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள் அல்லது வெட்கப்படுகிறார்கள்.

ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பெண்களில் 90 சதவீதத்தினர் தாங்கள் ஒருவருடன் உடல் ரீதியான உறவில் இருப்பதாகவும், செக்ஸ் உறவுகளில் பாதியை தங்களது பார்ட்னர்தான் தொடங்கி வைப்பதாகவும் கூறினர் என்றார்.

பாலியல் மருத்துவ நிபுணர் டாக்டர் இர்வின் கோல்ட்ஸ்டீன் கூறுகையில், பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நலனில் ஆர்கசம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது என்றார்.

'சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க!


முதுமையிலும், உரிய வளைவுகளுடன், அழகுடன், பொலிவுடன் திகழ வேண்டுமா? அப்படியானால், கல்யாணமே செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருங்கள் என்கிறது ஒரு ஆய்வு.

வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வுதான் இதைக் கூறுகிறது. திருமணமான ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான செக்ஸ் உறவால் அவர்களது உடல் பருமன் அதிகரிக்கிறது, இதனால் அழகையும், உடல் கட்டையும், பொலிவையும் அவர்கள் படிப்படியாக இழக்கிறார்கள்.

திருமணமான ஒரே வருடத்தில் ஆண், பெண்ணுக்கு உடல் எடை கூடி விடுகிறதாம்.

அதேசமயம், காதலிப்போர், இருவரும் இணைந்து வாழாமல் நட்பு ரீதியாக பழகுவோரின் உடல் எடையில் பெருமளவில் மாற்றம் வருவதில்லையாம். இவர்களை விட திருமணமானவர்களின் உடல் எடை கூடுதலாகிறதாம்.

இப்படி கல்யாணமானதும் உடல் எடை கூடுவதற்கு என்ன காரணம் என்று ஊட்டச்சத்து நிபுணர்களும் டாக்டர்களும் விளக்குகையில், கல்யாணம் செய்து கொண்ட பின்னர் பெண்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கிறார்கள். இது இருவரையும் (கணவன், மனைவி) சார்ந்துள்ளது. எனவேதான் இது உடல் பருமனில் கொண்டு போய் விடுகிறது.

இதுகுறித்து டாக்டர் கே. மதன் என்பவர் கூறுகையில், ஒரு பெண்ணுக்குத் திருமணமானதும் உணர்வுப் பூரமான, ஹார்மோன் ரீதியான மாற்றங்களைச் சந்திக்கிறார். மேலும் நாம் செட்டிலாகி விட்டோம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற திருப்திகரமான மன நிலை வந்து விடுகிறது. நமக்குப் பிடித்தவருடன் உறவு கொள்ளும் திருப்தியும் கூடுதலாக சேருகிறது. இதெல்லாம் சேர்ந்து உடல் பருமனைக் கூட்டி விடுகிறது என்றார்.

திருமணமாகாத பெண்கள், திருமணம் செய்யாமல் வாழும் பெண்களின் உடல் எடை அவ்வளவு சீக்கிரம் பெருப்பதில்லை என்பது இந்த ஆய்வின் முடிவாகும். எப்போதும் ஒரு உஷார் நிலையில் இவர்கள் இருப்பதால் உடல் எடையில் மாற்றம் ஏற்படுவதில்லை. உடல் நலனைப் பேணுவதிலும், சிக்கென இருக்க வேண்டும் என்பதிலும் இவர்கள் கவனமாக இருப்பதும் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாம்.

சிக்கென்று இருக்க சிங்கிளாய் இருப்பதே நல்லது என்ற புதுமொழியைக் கொடுத்துள்ளது இந்த ஆய்வு.

டாலர், பவுண்ட் போல இந்திய ரூபாய்க்கும் குறியீடு!


டெல்லி: டாலர், பவுண்ட், யூரோ என மதிப்புக்குரிய நாணயங்களுக்கு நிரந்தரமாக குறியீடு இருப்பதைப்போல, இந்திய ரூபாய்க்கும் புதிய அடையாளக்குறி உருவாக்கப்டுகிறது.

தற்போது அமெரிக்க டாலருக்கு $ என்ற குறியீடும், ஐரோப்பிய பொது நாணயமான யூரோவுக்கு € என்றும், பிரிட்டிஷ் பவுண்டுக்கு £ என்றும் குறியீடுகள் உள்ளன. சீனாவின் யுவான், ஜப்பானின் யென் போன்ற நாணயங்களுக்கும் கூட குறியீடு உள்ளது. ஆனால் இந்தியாவின் நாணயத்தைக் குறிப்பிட ₨ அல்லது Re அல்லது INR என்ற எழுத்துக்களைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இது பொதுவான குறியீடு அல்ல. பாஷைக்கேற்ப மாறுகிறது.

இன்னொன்று இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் [^], இந்தோனேஷியா போன்ற நாடுகளின் நாணயங்களுக்கும் ரூபா என்ற பெயர்தான் (லேசான உச்சரிப்பு வித்யாசத்துடன்). இவற்றையும் ஆங்கிலத்தில் Rs அல்லது Re என்றே அழைக்கிறார்கள்.

இன்றைக்கு சர்வதேச அளவில் இந்தியப் பொருளாதாரம் [^] விஸ்வரூபம் எடுத்து வருகிறது. எனவே சர்வதேச நாணயங்களுக்கு நிகரான செலுத்து சக்தி இந்திய ரூபாய்க்கும் கிடைத்துள்ளது. இந்த சூழலில் இந்திய ரூபாயை சர்வதேசமெங்கும் பொதுவாகக் குறிப்பிட ஒரு குறியீடு வேண்டும் என கடந்த ஆண்டிலிருந்தே மத்திய அரசு [^] யோசித்து வருகிறது.

இப்படி உருவாக்கப்படும் குறியீடு, இந்தியாவிந் கலாச்சார அடையாளத்தையும் பிரதிபலிக்க வேண்டும், தனித் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் பல்வேறு டிசைனர்கள் உருவாக்கிய வடிவங்களைப் பார்த்து, இறுதியாக 5 எளிய ஆனால் வசீகரமான டிசைன்களை தேர்வு செய்துள்ளது மத்திய நிதித்துறை. தேவநாகிரி எழுத்தான ர வின் குறுக்கே இரு கோடுகள் இருப்பதுபோல இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

இறுதி செய்யப்பட்ட இந்த 5 டிசைன்களில் ஒன்றினை மத்திய அரசு பிரதிநிதிகள், ரிசர்வ் வங்கி அதிகாரிகள், தேசிய வடிவமைப்பு மைய பிரதிநிதிகள், லலித் கலா அகாடமி குழுவினர், ஜே ஜே அப்ளைட் ஆர்ட் மற்றும் இந்திரா காந்தி தேசிய மைய பிரதிகள் அடஹ்கிய குழு முடிவு செய்யும்.

உலக மொழிகளுக்கெல்லாம் தமிழே தாய்மொழி! – முதல்வர் கருணாநிதி


கோவை: உலகில் தொன்மையான மொழி தமிழ்தான். உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழிகத் திகழ்கிறது தமிழ் என்றார் முதல்வர் கருணாநிதி.

தமிழறிஞர்கள், பல்துறை நிபுணர்கள், மொழியியல் அறிஞர்கள், பொதுமக்கள் என மக்கள் வெள்ளம் கோவையைச் சூழ இன்று காலை கோலாகலமாக தொடங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.

5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான தமிழறிஞர்கள், பல்துறை நிபுணர்கள் பங்கேற்கின்றனர். கொடீசியா வளாகத்தில் இதற்காக பிரமாண்ட பந்தலும், மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று காலையிலேயே பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விட்டனர்.

விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியது:

உலகச் செம்மொழி மாநாட்டினைத் தொடங்கி வைத்து ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி விருது’ வழங்கி விழாப் பேரூரையாற்ற வருகை தந்திருக்கும் மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங் பாட்டீல் அவர்களே, தடைக் கற்கள் பல போடப்பட்டாலும், அவற்றை யெல்லாம் அலட்சியப்படுத்தி விட்டு தமிழகத்தின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் கொண்டுள்ள அன்பின் காரணமாகவும்- பற்றின் காரணமாகவும் வருகை தந்துள்ள தங்களுக்கு உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்களின் சார்பாக நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்பு மலரை வெளியிட்டு, வாழ்த்துரை வழங்க, வருகை தந்திருக்கும், தமிழ்நாடு ஆளுனர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களே!

தமிழக அரசின் நிதி அமைச்சர் இனமானப் பேராசிரியர், தமிழகத்தின் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களே!

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இங்கே வருகை தந்திருக்கும் தமிழ்ப் பேராசிரியர்களே, ஆய்வறிஞர்களே, கவிஞர்களே, தமிழ் ஆர்வலர்களே, தமிழ் அன்பர்களே! என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே!

கோவையில் நடைபெறுகின்ற இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு, மடைதிறந்த வெள்ளமெனத் திரண்டு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது நன்றி கலந்த வணக்கத்தையும் உள்ளம் நிறைந்த வரவேற்பினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி தீரத்தின் நெற் களஞ்சியமாம், தஞ்சை தரணியிலே, கருக்கலிலே கண் விழிக்கும் திருக்குவளை என்னும் சிற்றூரில், கவிபுனையும் கற்பனைத் திறனும், தமிழிசை ஆற்றலும், வேளாண்மை நாட்டமும், மிகுந்த முத்துவேலருக்கும், அஞ்சுகத்தம்மையாருக்கும் மகனாய்ப் பிறந்து, 14 வயதினிலே, ‘வீரத் தமிழ் கொஞ்சும் நாட்டிலே’ எனும் அணிவகுப்புப் பாடல் இயற்றி தமிழ் வாழ்க, தமிழர் வெல்க என்று புலி, வில், கயல் பொறித்த கொடி பிடித்து, தமிழ் மாணவர் பட்டாளத்திற்கு தலைமை தாங்கி ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுடன் பேரணி நடத்தி,

அதே வயதில் ‘திராவிடர் விழித்துக் கொள்ளும் காலம் நெருங்கி விட்டது. பெரும் பாலான திராவிடர் வீறு கொண்டெழுந்து விட்டனர். நாட்டைக் காப்பாற்றவும் கலை நாகரீகத்தைக் காக்கவும் கச்சை கட்டி விட்டனர்’, என்ற முன்னுரையோடு ‘செல்வ சந்திரா’ என்ற நாடகத்தை எழுதி, 17 வயதில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற ஓர் அமைப்பினைத் தோற்றுவித்து, அதன்ஆண்டு விழாவுக்கென ‘கிளம்பிற்றுக் காண் தமிழச் சிங்கக் கூட்டம்! கிழித் தெறியத் தேடுகாண் பகைக்கூட்டத்தை’ என்ற பாடல் வரிகளைப் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களிடமிருந்து வாழ்த்தாகப் பெற்று,

‘திராவிட நாடு’ தொடக்க இதழ் ஒன்றில், ‘இளமைப் பலி’ என்ற கட்டுரை எழுதி, அறிஞர் அண்ணாவின் கவனத்தை கவர்ந்தது, 20 வயதில் ‘சேரன்’ என்ற புனைப் பெயரோடு, ‘முரசொலி’ இதழைத் தொடங்கி, ‘கிழவன் கனவு’ என்னும், சீர்திருத்த சிறுகதையினை வழங்கி,

பின்னர் தந்தை பெரியாரின் அரவணைப்பிலும், அறிஞர் அண்ணாவின் அன்பிலும் நனைந்து, வளர்ந்து, தமிழையே தோன்றாத் துணையாகவும், தோளேந்திய ஆயுதமாகவும் கொண்டு- கதை, கவிதை, கட்டுரை, நாடகம், திரைப்படம், அரசியல் என பல்வேறு துறைகளிலும் பணிபுரிந்து – ஆட்சியில் இருக்கும்போதும், இல்லாதபோதும், தமிழ் அன்னைக்கு இயன்ற வழியனைத்தும், முனைந்து இடையறாது பணியாற்றி, அணிமணிகள் பலவும் தேடிக்கொணர்ந்து சூட்டி வரும் எனக்கு,

கோலமிகு கோவை மாநகரிலே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கும், அதன் தொடக்க விழாவிலே தலைமையேற்பதற்கும், கிட்டிய வாய்ப்பினை பெருமையாக கருதுகிறேன்.

முதல் மாநாடு இது!

இதுவரை உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரில் எட்டு மாநாடுகள் நடைபெற் றிருக்கின்றன. முன்னர் நடந்த எட்டு மாநாடுகளுக்கும், இப்பொழுது நடைபெறுகிற இந்த மாநாட்டுக்கும் வேறுபாடு உண்டு. முன்னர் நடந்தவை உலகத் தமிழ் மாநாடுகள். இப்பொழுது நடைபெறுவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.

உலகத் தமிழ்ச் செம்மொழி என்பதில் உள்ள மூன்று சொற்களும், பொருள் பொதிந்தவை மட்டுமல்ல, பொருத்தமானவையும் ஆகும். தமிழ் உலக மொழி மட்டுமல்ல, உலக மொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், ‘ஞால முதல்மொழி தமிழே’ என்று நிறுவிக் காட்டியிருக்கிறார்.

மூலத் தாய்மொழிச் சொற்கள் உலக மொழிகளில், சொல் வடிவில், உருத்திரிந்து, பொருள் அளவில் உருத்திரி யாமல் இருக்கின்றன.

தமிழே உலக முதல் மொழி… மொழிகளின் தாய்!

எடுத்துக்காட்டாக உலக மொழிகளில் உள்ள அம்மா, அப்பா எனும் உறவு பெயர்கள், நான், நீ, அவன் எனும் மூவிடப் பெயர்கள், நீர், நெருப்பு, காற்று போன்ற இயற்கைப் பெயர்கள் போன்றவை தமிழோடு மிகவும் நெருக்கம் கொண்டவையாக உள்ளன. தமிழோடு தொடர்பில்லாத அடிப்படைச் சொற்கள் எவையும், உலக மொழிகளில் இல்லாததால் தமிழே உலக முதல் தாய்மொழி எனும் தகுதியைப் பெறுகிறது.

உலக மொழிகளில் மிகத் தொன்மைக் காலம் முதலே இயல், இசை, கூத்து எனும் முத்தமிழ், வளர்ச்சியை எய்தியதால், தமிழ் நிலை யான தன்மையை அடைந்தது. இலக்கியம் தழுவிய கலை வளர்ச்சி, தமிழுக்கு நிலைத்து நிற்கும் ஆற்றலைத் தந்திருப்பதால், தமிழை உலகத் தாய்மொழி என அறியலாம்.

கி.மு. 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசனாகிய சாலமனுக்கு தமிழகக் கப்பல்கள் மயில் தோகையையும், யானைத் தந்தத்தையும், வாசனைப் பொருள்களையும் கொண்டு சென்றன.

வடமொழியில் வேதங்களில் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் இருப்பதை ஆய்வறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்து அறிவித்தார்.

இதிலிருந்து வட மொழிக்கு முன்பே தமிழ் இருந்தது என்பதை அறியலாம், வால்மீகி ராமாயணத்தில் தென்னகத்தை ஆண்ட மூவேந்தர்களைப் பற்றிய குறிப்பும், பாண்டியரின் தலைநகரான கபாடபுரம் பற்றிய குறிப்பும் உள்ளன. இது லெமூரியா கண்டத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் இருந்த கபாடபுரம் பற்றியதாகும் எனக் கருதப்படுகிறது.

கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சந்திரகுப்த மௌரியரின் அமைச்சரான சாணக்கியர் தன் அர்த்தசாஸ்திரத்தில் கபாடபுரத்தில் முத்துக்குளித்தலைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

கி.மு. 350-ல் வாழ்ந்த வடமொழி இலக்கணப் பேரறிஞரான காத்தியாயனார் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். பாரதத் போர் பற்றி வரும் குறிப் பில், புறநானூற்றில் பாண்டவர் ஐந்து பேருடன், 100 துரியோதனாதியர்களும் போரிட்டபோது அந்த இரு பக்கப்படைகளுக்கும் பெருஞ்சோறு கொடுத்த காரணத்தால் உதியஞ்சேரலாதன்- சேரன் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் என்று அழைக்கப்பட்டார். பாரதப் போர் நடைபெற்ற காலம் கி.மு. 1500 எனப்படுகிறது. அப்படியானால் இந்தச் சேரனின் காலம் கி.மு. 1500 ஆக இருக்க வேண்டும். இவையனைத்தும் தமிழ் இனத்தின் தொன்மையையும், தமிழ் மொழியின் தொன்மையையும் புலப்படுத்தும்.

சிந்துவெளி நாகரீகத்தின் சொந்தக்காரர்கள்…

பேரறிஞர்களான ஜான் மார்ஷல், ஈராஸ் அடிகள், சர் மார்டிமர் வீலர், கமில் சுவலபில் போன்றோர், திராவிடர்களே சிந்துவெளி நாகரிகத் தோற்றத்தின் உரிமையாளர்கள் எனவும், அவர்களின் மொழி திராவிடமொழிதான் எனவும் உறுதிபடுத்தியிருக்கின்றனர்.

சிந்துவெளி நாகரீகம் ஒரு திராவிடப் பண்பாடு, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பழந்தமிழ்ப் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. சிந்து வெளிக் குறியீடுகளைப் பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ள தொன்மங்களோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம் என்று கடந்த 40 ஆண்டுகளாகச் சிந்துவெளிப் பண்பாட்டு வரிவடிங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் டாக்டர் ஐராவதம் மகாதேவன் கூறியிருக்கிறார்.

இன்று ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ பெறும் பின்லாந்து நாட்டுப் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா- சிந்துவெளிப்பண்பாடும், அதன் எழுத்தும் திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்னும் கருதுகோளை ஆய்வுச் சான்றுகளோடு முன்வைத்து, அத்துறையில் தொடர்ந்து அரும்பணியாற்றி வருகிறார். சிந்துவெளியினர் திராவிட மொழி பேசுபவர்களே என்பதற்கான தகுந்த ஆதாரங்களை அவர் விரிவாகக் கூறியுள்ளார்.

5000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்…

அகநானூறு, புறநானூறு போன்ற கடைச் சங்க இலக்கியங்கள் கிடைத்ததன் பயனாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்குக் கிடைத்தது. தொல்காப்பியம் கிடைத்ததால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்குக் கிடைத்தது. சிந்துவெளி எழுத்துச் சான்றுகளின் பயனாக, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் கண்டறியப்பட்டுள்ளது.

பண்டைத் தமிழர்கள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் பயணம் செய்து, உச்சயினி, கலிங்கப்பட்டினம், காசி, பாடலிபுரம் முதலான இடங்களிலும், கடல் கடந்த நாடுகளாகய காழகம் (பர்மா), தக்கோலம், கிடாரம், சாவகம் (கிழக்கிந்தியத் தீவுகள்) முதலான இடங்களுக்கும் சென்று வணிகம் செய்தார்கள்.

தமிழக வணிகர் அயல் நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்தது போலவே, அயல்நாட்டு வணிகரும் தமிழகத்திற்கு வந்து வணிகம் செய்தார்கள், அக்காலத்தில், வணிகத்திலே உலகப் புகழ் பெற்ற காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்திலே, அயல்நாடுகளிலிருந்து கப்பலோட்டி வந்த வேறு மொழிகளைப் பேசிய மக்கள் தங்கியிருந்ததைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

பயனற வறியா யவனர் இருக்ழையும்

கலந்தரு திருவிற் புலம் பெயர் மாக்கள்

கலந்திருந்துறையும் இலங்குநீர் வரைப்பும்

என்று சிலப்பதிகாரமும்

மொழி பல பெருகிய தீர் தே எத்துப்

புலம் பெயர் மாக்கள் கலந்தினி துறையும்

முட்டாச் சிறப்பிற் பட்டினம்

என்று பட்டிப்பாலையும் எடுத்துரைக்கின்றன.

தமிழ்நாட்டிற்கு வட மேற்கிலிருந்து வந்த அராபிய வாணிகரும், யவனர்களும், சேரநாட்டின் முசிறித் துறைமுகத்திற்கு வந்து வாணிகம் செய்தனர். இத்தகைய வாணிகத்தின் மூலமாகவும் பல்வேறு மொழிகளின் தொடர்புகளின் காரணமாகவும் தமிழ், உலக நாடுகளில் எல்லாம் அறியப்பட்ட மொழியாற்று. அதன் தொன்மையாலும், தனித் தன்மையாலும், முதன்மைச் சிறப்பினாலும், தமிழ் உலக முதல் தாய் மொழியாக – உலகத் தமிழாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

செம்மொழி – என்ன தகுதி?

ஒரு மொழி செம்மொழியாகக் கூறப்படுவதற்கு இன்னின்ன தகுதிகள் வேண்டுமென்று வரையறுக்கப்பட்டுள்ளது. தொன்மை பொதுமைப் பண்பு நடுவுநிலைமை தாய்மைத் தன்மை மொழிக் கோட்பாடு இலக்கிய வளம் உயர் சிந்தனை பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு ஆகிய பதினோரு தகுதிகளை ஒரு மொழி பெற்றிருந்தால்தான், அது செம்மொழியாகும்.

இந்த பதினோரு தகுதிகளை மட்டுமல்ல இந்தத் தகுதிகளுக் கெல்லாம் மேலான மேன்மையான தகுதிகளைப் பெற்ற மொழிதான், தமிழ் மொழி என்பதை தமிழகத்திலே உள்ள தமிழறிஞர்கள் மட்டுமல்ல, இந்தியாவிலே பிற மாநிலங்களிலே உள்ள தமிழறிஞர்கள் மட்டுமல்ல தமிழைக் கற்றுத் தேர்ந்த உலக அறிஞர்கள் எல்லாம் ஓரு மனதாக ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

தமிழ் செம்மொழியே என முதன் முதலில் குரல் கொடுத்தவர் தமிழறிஞர் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற் கலைஞர் ஆவார்கள்.

தமிழ் செம்மொழி என்று முதன் முதலில் சொன்ன வெளிநாட்டவர் அறிஞர் இராபர்ட் கார்டுவெல் அவர்கள் ஆவார்கள். அயர்லாந்து நாட்டில் ஷெப்பர்ட் காலனி என்ற இடத்தில் வாழ்ந்த இவர் அங்கிருந்து குடி பெயர்ந்து தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் இடையான்குடி என்ற ஊரில் தனது இறுதிக் காலம் வரையில் வாழ்ந்தவர். அந்த அளவிற்கு மண்ணின் பற்று, மொழியின் பற்று கொண்டவராக அவர் விளங்கினார்.

தமிழ் செம்மொழி என்னும் அங்கீகாரத்தைத் பெற வேண்டுமென்று, சென்னை சைவசித்தாந்த மகா சமாஜம், கரந்தைத் தமிழ் சங்கம், தலை நகர்ந்த தமிழ்ச் சங்கங்கள் போன்ற அமைப்புகளும், சென்னைப் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்திலே உள்ள பல்கலைக் கழகங்களும், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், முனைவர் ச. அகத்தியலிங்கம், முனைவர் வா.செ. குழந்தைசாமி, முனைவர் ஜான் சாமுவேல், மணவை முஸ்தபா, முனைவர் அவ்வை நடராஜன், முனைவர் பொற்கோ போன்ற தமிழறிஞர்களும், டாக்டர் சுனித்குமார், சட்டர்ஜி, டாக்டர் மில் சுவலபில், டாக்டர் ஜார்ஜ் எல். ஹார்ட் போன்ற வெளி மாநில வெளிநாட்டு அறிஞர்களும் தொடர்ந்து குரல் கொடுத்தனர்.

‘தியாகத் திருவிளக்கு சோனியா’

எனினும் ஒரு நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழகத்தில் ஓங்கி ஒலித்து வந்த அந்தக் குரல், காட்டில் காய்ந்த நிலவாய் கடலில் பெய்த மழையாய் கவனிப்பாரற்று போயிற்று.

ஆனால், அரசியல் வானில் துருவ நட்சத்திரம் போன்று மத்தியில் தியாகத் திருவிளக்காம் சோனியா காந்தி வழிகாட்டுதலிலும், டாக்டர் மனமோகன்சிங் தலைமையிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தது. அதற்குப் பின்னர்தான் தமிழைச் செம்மொழியெனப் பிரகடனப்படுத்த வேண்டுமென்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது. 12.10.2004 அன்று தமிழ், செம்மொழி என்ற பிரகடன அறிவிக்கை மத்திய அரசால் வெளியிடப்பட்டது.

அந்த நேரத்தில் சோனியா காந்தி எனக்கு எழுதிய கடிதத்தில்..

‘அதாவது தமிழைச் செம்மொழியாக ஆக்குவதற்குத் தேவைப்பட்ட முறையான சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து அது நிறைவேறிவிட்டது. இந்தச் சாதனைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் காரணம் என்றாலும் கூட, குறிப்பாகவும், சிறப்பாகவும், நீங்கள்தான் இதற்குக் காரணம். உங்கள் தலைமையிலே உள்ள திராவிட முன்னேற்ற கழகம்தான் இதற்குக் காரணம்” என்று சோனியா காந்தி எழுதியிருந்தார்கள்.

நான் உங்களுக்குச் சொல்கிறேன். இதனை நான் ஒரு கடிதமாக அல்ல.

காலாகாலத்திற்கும், இன்னும் நூற்றாண்டு காலம், இருநூறாண்டு காலத்திற்கும் பிறகு, என் கொள்ளுப் பேரன் எடுத்துப்படித்து, நம்முடைய தாத்தா கட்டிக் காத்த செப்பேடு இது என்று பாராட்டுகின்ற அளவிற்கு ஆக வேண்டுமென்ற ஆர்வமும் நம்பிக்கையும் உள்ளவன் நான்.

ஒரு நூற்றாண்டு காலமாக எழுப்பப்பட்டு வந்த குரல்- குன்றின் மேலிட்ட விளக்காக ஒளி வீசத்தொடங்கியதற்குப் பிறகு-தமிழ் செம்மொழி என்ற பிரகடன அறிவிக்கை மத்திய அரசால் வெளியிடப்பட்டதையொட்டி- நடைபெறுகிற முதல் மாநாடு இது என்பதால், தமிழின் பெயரால், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற திருப்பெயரில் இந்த மாநாடு கோவை மாநகரிலே நடைபெறுகிறது.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழகும், இளமையும் அணுவளவேனும் குறையாமல் இந்த அவனியிலே வாழ்ந்து வரும் தமிழ் மொழியை, இனி எதிர்காலத் திற்கான தேவைகளை மதிப்பிட்டு- கணினித் தமிழ், அறிவியல் தமிழ் ஆகியவற்றை வளர்த்தெடுப்பதற்கான வழி முறைகளை வகுத்திடவும், இலக்கியம், ஒப்பிலக்கியம், மொழியியல், மொழி பெயர்ப்பியல், வரலாறு, தத்துவம், மானிடவியல், நாட்டுப்புறவி யல் போன்ற பல துறைகளிலும் பண்பட்ட ஆய்வுகளை ஊக்கப்படுத்திடவும், சிந்து சமவெளி முதல் ஆதிச்சநல் லூர், கொடுங்கடல் கொண்ட குமரிக்கண்டம் வரை தொல்லியல் துறையில் இதுவரை மேற்கொண்ட ஆய்வு முடிவுகளின் அடிப் படையில் மேலும் மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை வகுத்திடவும், இந்த மாநாடு இப்போது கொங்கு பூமியிலே நடைபெறுகிறது.

வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்கு

குடக்குப் பொருப்பு வெளிக்குன்று-கிடக்கும்

களித்தண் டலைமேவு காவிரிசூழ் நாட்டு

குளித் தண்டலையளவும் கொங்கு-

என்று ஒருகாலத் தில் கொங்கு நாட்டு எல்லை கள் வரையறுக்கப்பட்டிருந்தன.

தமிழகத்தின் சரித்திரத்தில்- சங்க காலம் தொடங்கி இன்று வரை-தனி இடம் பெற்றிருப்பதும்-என்னை முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினராக அனுப்பி வைத்ததுமான குளித்தலை உள்ளிட்டதும்-கொங்கு நாடாகும். ஆம், குளித்தண்டலை யளவும் கொங்கு.

தமிழகத்தில் பாரி, ஓரி, காரி, பேகன், ஆய், அதியன், நள்ளி என்னும் எழுவரை மட்டும் வள்ளல்கள் என வரையறுத்துக் கூறினர், சங்க காலத்துச் சான்றோர்கள். இவ்வெழுவர்க்குப் பின்னர், அவ்வெழுவர் போல ஈதற்குயான் உளேன் என்ற வள்ளல் குமணனோடு, சங்ககால வள்ளல்கள் எண்மராவர். அவ்வெண்மரில், பேகன், அதியமான், ஓரி, குமணன் ஆகிய நால்வர் கொங்கு நாட்டினர்.

அது மட்டுமல்ல, கடிய நெடுவேட்டுவன், நன்னன், பூந்துறை, ஈந்தூர்க் கிழான், கொண் கானங் கிழான், விச்சிக்கோ, தாமான் தோன்றிக்கோன், மோகூர்ப்பழையன் ஆகிய சங்ககாலத் தலைவர்களும், பழையகோட்டைச் சர்க்கரை, மும்முடிப் பல்லவராயர், காடையூர்க் காங்கேயர், கொற்றை வேணாடுடையார், மசக்காளி மன்றாடியார், வணங்காமுடி வாணராயன், காளிங்கராயன், பாரியூரான், உலகுடையான், அகளங்கன், இம்முடிச் சோழியாண்டான், தீரன் சின்னமலை, கொல்லி மழவன் போன்ற பிற்கால சங்கத் தலைவர்களும் கோலோச்சிய பூமி கொங்கு பூமி.

அஞ்சி அத்தை மகள் நாகையார், அதியன் விண்ணத்தனார், அந்தி இளங்கீரனார், ஆலத்தூர்க்கிழார், ஆவியார், இரும்பிடர்த்தலையார், எருமை வெளியனார், கருவூர்க் கண்ணம்பாளனார், கருவூர்க்கிழார், கருவூர்க்கோ சனார், கருவூர்ச் சேரமான் சாத்தனார், குடவாயிற் கீரத்தனார், கொல்லிக் கண்ணனார், செங்குன்றூர்க் கிழார், பெருந்தலைச் சாத்தனார், பொன்முடியார் போன்ற சங்ககாலப் புலவர்கள் பாடிப் பைந்தமிழ் வளர்த்த பூமி இந்தக் கொங்கு பூமி.

இத்தகைய புலவர்களும், புரவலர்களும், தன்னேரிலாத் தலைவர்களும் உலாவிய புகழுக்கும், பெருமைக்கும் உரியது கொங்கு பூமி. அதன் கோலமிகு மாநகரம் கோவை. அந்த மாநகரில் அனைத்து வகையிலும் அழகும், பொருத்தமும் நிறைந்த இடத்தில்-உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடங்குகிறது.

மாநாட்டினைத் தொடங்கி வைத்திட, பெண்ணின் பெருமைக்கும், இந்திய மண்ணின் பெருமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிடும் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங் பாட்டீல் நமது அன்பான அழைப்பினையேற்று இங்கே வருகை தந்திருக்கிறார்கள்.

மாநாட்டுச் சிறப்பு மலரை வெளியிட்டு, வாழ்த்துரை வழங்கிட ஆளுநர் எனது நண்பர் சுர்ஜித் சிங் பர்னாலா இங்கே வந்திருக்கின்றார். உங்களோடு இணைந்து, அவர்களை வர வேற்று, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தொடக்க விழாத்தலைமையுரையினை இந்த அளவில் நிறைவு செய்கிறேன்.

நன்றி, வணக்கம்!

-என்றார் கருணாநிதி.

700 அரிய வரலாற்றுப் பொக்கிஷங்களுடன் செம்மொழி கண்காட்சி!


கோவை: ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்று பொக்கிஷங்களுடன் மாநாட்டு பந்தலில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கம் நாளை வியாழக்கிழமை (ஜூன் 24) பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படுகிறது.

இந்த கண்காட்சியில் 700 அரிய வகை கலைப் பொருட்களும் இடம் பெற்றுள்ளன.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு அரங்கில் பொது மக்கள் கண்டுகளிக்கும் வகையில் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர்களின் வரலாறு, தமிழர்களின் நாகரிகம், தொல்லியல், தமிழ் இலக்கியம் [^] ஆகிய சிறப்பு அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி அரங்கில் 700 அரியவகை கலைப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துவெளி நாகரிகத்தை குறிக்கும் வகையில் செங்கற்களால் வடிவமைக்கப்பட்ட குளியல் தொட்டி, கட்டிடங்கள் மற்றும் விளக்கப் படங்கள் இன்றைய இளம் தலைமுறையினரும் தெரிந்துகொள்ளும் வகையில் அரங்கில் வைத்துள்ளனர்.

1012-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பார்வதி சிலை, ரிஷபாந்திகர் சிலை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு, பழங்கால துர்க்கை சிலை, தமிழர்களின் பண்டைய கால இசை கருவிகள், ஓலைச் சுவடிகள், அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பொருட்கள், பழங்கால நாணயங்கள் என 26 பெரிய அரங்குகளில் இடம்பெற்றுள்ளன. தமிழர்கள் [^] அனைவரும் பார்த்து மகிழக்கூடிய வகையில் இந்த கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

கண்காட்சி அரங்க திறப்பு விழா நாளை (வியாழக்கிழமை) பகல் 12 மணிக்கு நடக்கிறது. மலேசிய மனித வளத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் இந்த கண்காட்சி அரங்கைத் திறந்துவைக்கிறார். மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரி மு.க.அழகிரி முன்னிலை வகிக்கிறார்.

பொதுமக்கள், மாணவர்களின் பயன்பாடு கருதி மாநாடு முடிவடைந்த பின்னரும் இந்த கண்காட்சி அரங்கை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

புத்தக கண்காட்சி

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி 500 ஆண்டுகளுக்கு முந்தயவை உள்பட பல்வேறு அரியவகை புத்தகங்களும் கண்காட்சி அரங்கில் வைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகக் கண்காட்சியினை மாலத்தீவு அரசின் பண்பாட்டுதுறை இணையமைச்சர் அகமது நசீர் திறந்து வைக்கிறார். இந்த விழாவுக்கு மத்திய கப்பல் போக்குவரத்து [^] துறை அமைச்சர் ஜி.கே.வாசன் முன்னிலை வகிக்கிறார்.

6 அடி உயர திருக்குறள் புத்தகம்

இந்த கண்காட்சியில் தமிழ் சார்ந்த ஏராளமான புத்தகங்கள் இடம் பெறுகின்றன. கண்காட்சியில் 6 அடி உயரத்தில் பிரமாண்ட அளவில் திருக்குறள் புத்தகம் தயாரித்து வைக்கப்பட்டு உள்ளது. வி.ஜி.பி. தமிழ்ச்சங்கம் சார்பில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த திருக்குறள் 6 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்டது.

தண்ணீர் பட்டாலும் நனையாத அளவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிரத்தியேக தாள்களில் அந்த புத்தகம் செய்யப்பட்டு உள்ளது. புத்தகத்தின் எடை 11/4 டன் ஆகும். அந்த புத்தகத்தில் 1,330 திருக்குறளும் பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்டுள்ளது.

உலக வங்கியிடம் கடன் வாங்கிய நாடுகளில் முதலிடத்தில் இந்தியா


டெல்லி: உலக வங்கியிடம் கடன் வாங்கிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக வங்கியிடம் நாம் இதுவரை வாங்கியுள்ள கடன் தொகை 900 கோடி டாலர் (அதாவது ரூ. 41,500 கோடி) ஆகும். இத்தொகை கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட தொகையைவிட நான்கு மடங்கு அதிகமாகும்.

உலக வங்கி கடந்த ஆண்டு 220 கோடி டாலர் கடனுதவி அளித்தது.

2010ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடையும் உலக வங்கியின் நிதியாண்டில், அதனிடம் அதிக அளவில் கடன் வாங்கிய ஒரே நாடு இந்தியாதான்.

கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவுக்கு உலக வங்கி வழங்கிய கடன் அளவு 2.2 பில்லியன் டாலர்கள் மட்டும்தான். ஆனால் அதன் பின்னர் இந்தியா இந்த அளவுக்கு கடனை வாங்கிக் குவித்து வைத்து விட்டது.

உலக வங்கியிடம் கடன் வாங்கியதில் இந்தியாவின் பங்கு 15 சதவீதமாகும். அடுத்த இடம் மெக்சிகோவுக்கு. அதன் அளவு 11 சதவீதமாகும். 3வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவின் கடன் அளவு 7 சதவீதமாகும்.

ஜூன் 20ம் தேதி வரை இந்தியாவுக்கு உலக வங்கி கொடுத்துள்ள கடன் தொகையின் அளவு 9.26 பில்லியன் டாலர். வருகிற நிதியாண்டில் மேலும் 0.04 பில்லியன் டாலர் கடனை இந்தியாவுக்குத் தரவுள்ளது உலக வங்கி.

கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டம், கோசி ஆறு சீரமைப்பு திட்டம் போன்ற பல திட்டங்களுக்கு உலக வங்கி கடன் வழங்குகிறது. மேலும், பிரத்தியேக சரக்கு போக்குவரத்து ரயில் பாதை திட்டத்துக்கும் கடனுதவி அளிக்க உள்ளது உலக வங்கி.

செவ்வாய், 22 ஜூன், 2010

நிறைய செக்ஸ்!!


மாரடைப்பை குறைக்க நிறைய செக்ஸ்!!
ஒரு முறை ஹார்ட் அட்டாக் வந்தவர்கள், செக்ஸ் உறவில் அதிக நாட்டம் செலுத்த ஆரம்பித்தால், அடுத்த அட்டாக் வருவதை கிட்டத்தட்ட தவிர்க்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பு வந்த பலரும், இனிமேல் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாது. அப்படி செய்தால் இதயத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என அஞ்சி செக்ஸ் வாழ்க்கைக்கு கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறு. உண்மையில், செக்ஸ் வாழ்க்கையை தொடர்ந்து வழக்கம்போல தொடர வேண்டும். அப்படி செய்து வந்தால், அடுத்த அட்டாக் வருவதை பெருமளவில் குறைக்க முடியும் என்பது நிபுணர்களின் வாதம்.

வாஷிங்டனில் அமெரிக்க இருதவியல் கழகத்தின் மாநாட்டில் இது தெரிவிக்கப்பட்டது. முதல் முறை மாரடைப்பு ஏற்பட்டவர்கள், அதிலிருந்து மீண்டு வந்த பின்னர் இயல்பான செக்ஸ் வாழ்க்கைக்கு வேகமாக திரும்ப வேண்டும். இது அவர்களது மன அழுத்தங்களைக் குறைக்க உதவும். மேலும் லேசான உடற்பயிற்சிகளையும் அவர்கள் செய்ய வேண்டும்.

முதல் முறை மாரடைப்பு ஏற்பட்டவர்கள் அதிக அளவில் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடுமாறு டாக்டர்களும் பரிந்துரைக்க வேண்டும் என்றும் அந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. மேலும் செக்ஸ் உறவு கொண்டால் மாரடைப்பு வரும் என்று நினைப்பதும் தவறு என்பதையும் டாக்டர்கள் விளக்க வேண்டும்.

இதுதொடர்பான ஆய்வில் 1600 நோயாளிகள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்ட ஆண், பெண்களுக்கு இயல்பான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட வேண்டும், அதை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதுகுறித்து டாக்டர்கள் அறிவுரை கூறினர்.

மாநாட்டில் கலந்து கொண்ட லிண்டா என்ற மருத்துவர் [^] கூறுகையில்,

மாரடைப்புக்குப் பின்னர் செக்ஸ் உறவு கொண்டால் இறந்து விடுவோம் என்று நினைப்பது தவறாகும். இது அவர்களை மட்டுமல்லாமல், அவர்களின் பார்ட்னர்களையும் பாதிக்கும்.

மாரடைப்பு ஏற்பட்டவர்கள் மாடிப்படிகளில் ஏற முடியும். லேசான உடற்பயிற்சியையும் செய்ய முடியும். அதேபோல செக்ஸ் வாழ்க்கையிலும் ஈடுபட முடியும்.

மேலும் உடலுறவின்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைவதற்கு, மிக குறைவான சாத்தியக்கூறுகளே உள்ளன.

ஒரு மனித வாழ்க்கையில் செக்ஸ் உறவு என்பது மிக முக்கியமான பகுதியாகும். உண்மையில் இருதயப் பிரச்சினை உள்ளவர்களில் பெரும்பாலானோர் செக்ஸில் அதிக நாட்டம் உடையவர்களாகவே உள்ளனர். ஆனால் அதில் ஈடுபடத்தான் தயங்குகிறார்கள்.

எனவே உங்களுக்கு இருதயப் பிரச்சினை இருந்தாலும் கூட நீங்கள் உங்களது செக்ஸ் வாழ்க்கையை இயல்பாக அனுபவிக்க முடியும், தொடர முடியும் என்றார்.

இந்தியாவில் மது விற்பனை 8 சதவீதம் அதிகரிப்பு!


டெல்லி தொட்டதற்கெல்லாம் பார்ட்டி வைக்கும் பாரதத்தில் மது விற்பனை நல்ல உயர்வைக் கண்டு வருகிறதாம். இந்த ஆண்டு கணக்குப்படி 8 சதவீத உயர்வை மது விற்பனை கண்டுள்ளதாம்.

குடிமக்களை விட குடிகார மக்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும் போல. அந்த அளவுக்கு குடிக்காத மக்களே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு மது விரும்பிகள் இந்தியா [^]வில் அதிகரித்து வருகின்றனர்.

பண வீக்கம் ஒரு பக்கம் 'விஸ்க் விஸ்க்' என்று உயர்ந்து வருவது போல மது அருந்துவோரின் எண்ணிக்கையும் 'விஸ்கி விஸ்கி' என உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்தியாவின் 'குடி' மக்களுக்கு விஸ்கிதான் ரொம்பப் பிரியமான மது பானமாக உள்ளது. அடுத்த ஐட்டம் ரம்.

எதற்கெடுத்தெலாம் சர்வே நடத்தும் மேற்கத்திய நிறுவனங்கள் இந்திய மக்களின் குடிப்பழக்கம், எந்த மது பானத்தை மக்கள்தேர்வு செய்கிறார்கள், எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள், இந்த எண்ணிக்கை இப்போது எப்படி உள்ளது, இது எதிர்காலத்தில் எப்படி உயரும் என்பது குறித்து லண்டனைச் சேர்ந்த சர்வதேச ஒயின் மற்றும் மது ஆவண நிறுவனம் ஒரு ஆய்வை மேற்கொண்டு முடிவை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வின் படி, இந்தியாவில் மது அருந்துவோரின் எண்ணிக்கையும், விற்பனையும் அதிகரித்துக் கொண்டே போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் 20 கோடி கேஸ் (அதாவது அட்டைப் பெட்டி- ஒரு பெட்டியில் 12 மது பாட்டில்கள்) மதுபானம் விற்பனை ஆகியுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக 18 லட்சம் கேஸ் மது விற்பனையாகுமாம். இது கடந்த ஆண்டை விட 8 சதவீதம் அதிகமாகும்.

இந்தியாவில் விற்பனையாகும் மது வகைகளில் விஸ்கிக்குத்தான் முதலிடம். அதாவது விற்பனையில் பாதியை விஸ்கியே குடித்து விடுகிறதாம். கடந்த ஆண்டு 119 மில்லியன் கேஸ் விஸ்கி விற்பனையானதாம். இது இந்த ஆண்டு 131 மில்லியன் கேஸ் ஆக எகிருமாம்.

ரம் விற்பனையப் பொருத்தமட்டில் கடந்த ஆண்டு 39 மில்லியன் கேஸ் ஆக இருந்தது. நடப்பாண்டில் 42.4 சதவீத உயர்வு இருக்குமாம்.

பீர் விற்பனையில் என்றுமே சுணக்கம் இருந்ததில்லை. அதுவும் இப்போது நாட்டின் பல பகுதிகளில் இன்னும் வெயில் காலமாக இருப்பதால் அது நல்ல நிலையிலேயே விற்று வருகிறதாம். கடந்த ஆண்டு 1 கோடியே 41 லட்சம் லிட்டர் பீரை குடிமக்கள் குடித்துள்ளனர். இது நடப்பாண்டில் 1 கோடியே 52 லட்சம் லிட்டர் பீராக உயருமாம்.

என்னதான் வெளிநாட்டு சரக்குகள் இந்திய மது பான சந்தையில் தள்ளாட்டம் போட்டாலும், லோக்கல் சரக்குகள்தான் துள்ளாட்டம் போட்டு நல்ல விற்பனையைக் கண்டு வருகிறதாம். அதிலும் விஜய் [^] மல்லையாவின் யுபி நிறுவனத் தயாரிப்புகளான மெக்டோவெல், பேக்பைப்பர் ஆகிய இரு வகைகளும் செமத்தியான விற்பனையை கொடுக்கிறதாம்.

சியர்ஸ்..!

ஐசிஐசிஐ வங்கியுடன் பாங்க் ஆஃப் ராஜஸ்தான் இணைந்தது.


ஐசிஐசிஐ வங்கியுடன் பாங்க் ஆஃப் ராஜஸ்தான் வங்கி இணைவதற்கான ஒப்புதலை ஐசிஐசிஐ வங்கியின் சிறப்பு பொதுக் குழு வழங்கியுள்ளது.

குஜராத் மாநிலம் பரோடா நகரில் நடந்த ஐசிஐசிஐ வங்கியின் சிறப்புப் பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பங்குதாரர்கள் அனைவரும் இந்த இணைப்புக்கு ஒப்புதல் வழங்கியதாக அந்த வங்கியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பாங்க் ஆஃப் ராஜஸ்தான் வங்கியின் 119 சம ஒப்பு பங்குகளுக்கு 25 ஐசிஐசிஐ சம ஒப்புப் பங்குகள் என்ற சமன்பாட்டில், பாங்க் ஆஃப் ராஜஸ்தான் வங்கியின் பங்குதாரர்களுக்கு பங்குகள் வழங்கப்படும் என்று ஐசிஐசிஐ தெரிவித்துள்ளது.

இந்த இணைப்பிற்கு பாங்க் ஆஃப் ராஜஸ்தானின் ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது மட்டுமின்றி, அவர்கள் தொடர்ந்து 3 நாட்கள் பணி நிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.

இந்த இணைப்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கிலும் ஐசிஐசிஐ வங்கிக்கு சாதகமான தீர்ப்பு வந்ததையடுத்த அதன் சிறப்பு பொதுக் குழுக் கூடி இணைப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவின் 60 நகரங்களில் 75 மையங்கள் அமைக்கும் ஐபிஎம்!


டெல்லி: ஐபிஎம் நிறுவனம், இந்தியாவின் 60 முக்கிய நகரங்களில் உள்ள 75 முன்னணி பொறியியல் கல்லூரிகளில் திறன் மையங்களை அமைக்கவுள்ளது.

தற்போது இத்தகைய மையங்கள் தமிழகத்தில் 11 உள்ளன. கர்நாடகத்தில் 12, கேரளாவில் ஒன்று உள்ளது. தமிழகத்தில் மேலும் 6 மையங்களை ஐபிஎம் அமைக்கவுள்ளது. இதுதவிர கர்நாடகத்தில் 5ம், கேரளாவிலும் 2ம் அமைக்கப்படவுள்ளன.

தமிழகத்தில் உள்ள ஐபிஎம் மையங்களில் முக்கியமானது வேலூர் [^] தொழில்நுட்பக் கழகமாகும்.

மாணவர்களிடையே சாப்ட்வேர் திறமையை வளர்ப்பதே இத்தகைய மையங்களின் முக்கிய நோக்கமாகும் என ஐபிஎம்தெரிவித்துள்ளது. மேலும், ஐபிஎம் சாப்ட்வேர்களின் அதி நவீன முன்னேற்றம், தொழில்நுட்பத்தை மாணவர்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் இந்த மையங்கள் உதவும்.

2009ம் ஆண்டு இதேபோன்ற 75 மையங்களை நாடு முழுவதும் தொடங்கியது ஐபிஎம். தற்போதைய மையங்களையும் சேர்த்து 20 மாநிலங்களில் தற்போது ஐபிஎம் மையங்கள் அமைந்துள்ளன.

மையங்கள் அமைப்பதற்கான கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்காக நாடு முழுவதும் 300 கல்லூரிகளைப் பட்டியலிட்டு அதிலிருந்து தேர்வு செய்யவுள்ளது ஐபிஎம்.

இந்த மையங்கள் மூலம் இதுவரை 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஐபிஎம் நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 60 ஆயிரமாக உயரும் எனவும் ஐபிஎம் தெரிவித்துள்ளது.

IAS வெற்றியாளர்கள்.

ஐ.ஏ.எஸ். , ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசின் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் நடத்துகிறது. 2009-ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் சென்றமாதம் வெளியானது. இதில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டது. இந்திய சிவில் பணிகள் தேர்வுக்கு மொத்தம் 4,09,110 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1,93,091 பேர் முதல் கட்டத் தேர்வு எழுதினர். அதில் 12,026 பேர் மெயின் எழுத்து தேர்வுக்குத் தகுதி பெற்றனர். 2432 பேர் கடந்த மார்ச்-ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்ட ஆளுமைத் தேர்வுக்குத் தேர்வு செய்யப் பட்டனர். இவர்களில் 875 பேர் (680 ஆண் கள், 195 பெண்கள்) ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் இதர மத்திய பணிகளுக்கு நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

2009 சிவில் பணிகள் தேர்வில் டாக்டர் ஷாபேசல் முதலிடம் பெற்றுள்ளார். இவர் ஸ்ரீநகரில் மருத்துவப் பட்டம் பெற்றவர். முதல் முயற்சியிலேயே இவர் வெற்றி பெற்றுள்ளார். தில்லியைச் சேர்ந்த பொறியாளர் திரு. பிரகாஷ் ராஜ் புரோஹித் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இது இவரது இரண்டாவது முயற்சியாகும்.

பெண்களில் தில்லியைச் சேர்ந்த செல்வி இவா சகாய் முதலிடம் பெற்றுள்ளார். எம்.ஏ. பட்டதாரியான இவருக்கு இது முதல் முயற்சியாகும். முதலிடம் பெற்ற 25 பேரில் 10 பேர் பெண்களாவர். முதல் 25 இடம் பெற்றவர்களில் 15 பேர் தில்லியைச் சேர்ந்த வர்கள். சென்னை, மும்பை மற்றும் திருவனந் தபுரத்தில் இருந்து தலா இரண்டு பேரும், அலகாபாத், சண்டிகர், கட்டாக் மற்றும் ஐதராபாத்தில் இருந்து தலா ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் பணிகளுக்கான நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 875 பேரில் 30 பேர் மாற்றுத்திறன் படைத்த வர்கள். இவர்களில் ஐந்து பேர் பார்வை யற்றவர்களாவர்.

தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் 127 பேர் இத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இத்தேர்வுக்கு சிலர் தனியாகவும், பலர் பயிற்சி மையங்களிலும் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளனர். அதுவும் பெரும்பான்மை யான மாணவர்கள் பல பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று வெற்றிப் பெற்றுள்ள னர். அதனால்தான் அனைத்து பயிற்சி மையங்களும் வெற்றியாளர்களை உரிமை கொண்டாடி வருகின்றன. இவற்றில் மிகச் சிறந்த பயிற்சி மையமாக அனைத்து வெற்றி யாளர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டது தமிழக அரசின் அண்ணா மேனேஜ்மெண்ட் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம்.. இதில் தரப்படும் சிறந்த பயிற்சி, தமிழகத்தில் உள்ள பிரபல மான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே நேரில் வந்து பயிற்சி தருவது, இலவச தங்கும் இடம், டெல்லி செல்ல இலவச பயணம் என பல ஆண்டுகாலமாக "சிவில் சர்வீசஸ்' வெற்றி யாளர்களை உருவாக்கி வருகிறது. சில கட்டண பயிற்சி மையங்கள் இருப்பினும் அவற்றை நன்கு விசாரித்து சேர்ந்து பயிற்சி பெறுவது முக்கியம். அதே போல இத் தேர்வுக்கு தயார் செய்யும்போது எதை படிக்க வேண்டும், எதை படிக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். முந்தைய வினாத்தாள்கள் அடிப்படையில் பாடங் களை தெரிவு செய்து படிப்பது, தொடர்ந்து மாதிரி தேர்வுகளை எழுதிப் பார்ப்பது, குழுவாக படிப்பது, விவாதிப்பது போன்றவை இத்தேர்வில் வெற்றிபெற எளிய வழியாகும். சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு சிலபஸ் அதிகம். படிக்கவேண்டிய நூல்கள் அதிகம். அவ்வளவு தான். ஆனால் அவற்றை சரியாக திட்டமிட்டு படித்தால் சுலபமாக வெல்லலாம்.

-------------------------------------------------------------

ராணி காஞ்சனா

இவ்வாண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்திய அளவில் 434-வது ரேங்க் பெற்று தேர்ச்சி அடைந்திருக்கும் ஆர். ராணி காஞ்சனா அவர்கள் பொது அறிவு உலகம் இதழுக்காக பேட்டியளித்தார்.

வணக்கம். தாங்கள் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப் பெற்றதற்கு பொது அறிவு உலகம் இதழ் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி சார்.

இந்த வெற்றியை எப்படி உணருகிறீர்கள்?

எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கஷ்டப்பட்டது வீண் போகலை. என்னைப் படிக்க வைத்த எனது பெற்றோர்களுக்கும், திருமணமான பின்பு நீ ஐ.ஏ.எஸ். ஆக வேண்டுமென என்னை ஊக்குவித்து, படிக்க வைத்த எனது கணவர் ஜெயக்குமாருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சுருக்கமாக சொல்லப்போனால் எனது கணவரின் ஆசையை நிறைவேற்றியுள்ளேன்.

உங்கள் குடும்பம், படிப்பு பற்றி கூறுங்கள்...

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை எனது ஊர். கணவர் விவசாயி. எங்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. நான் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் எம்.எஸ்.சி. மைக்ரோபயாலஜி படித்தேன். பிறகு சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதினேன்.

இரண்டுமுறை பிரீலிமனரி தேர்வில்கூட தேர்ச்சி பெறமுடியவில்லை. பிறகு மூன்றாவது முறை முயற்சி செய்து இன்டர்வியூ வரை சென்றேன். பிறகு நான்காவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளேன்.

என்னென்ன விருப்பப்பாடங்களை தேர்ந்தெடுத்தீர்கள்?

நான் பிரீலிமனரியில் புவியியல் விருப்பப் பாடத்தையும், மெயின் தேர்வில் புவியியல் மற்றும் தமிழ் இலக்கியத்தையும் தேர்ந்தெடுத்தேன்.

தேர்வுக்கு எப்படி தயார் செய்தீர்கள்?

பொது அறிவு, புவியியல் பாடத்திற்கு என்.சி.ஆர்.டி. புத்தகங்களை படித்தேன். அதையே மெயின் தேர்வுக்கும் படித்தேன். தினமும் பயிற்சி வகுப்புகள் உட்பட 10 மணிநேரம் படிப்பேன். மேலும் நண்பர் களுடன் குழுவிவாதம் செய்தது மிகவும் உதவியாக இருந்தது. மாறி மாறி கேள்விகள் கேட்பது, படிக்க கேட்பது என குழு விவாதம் சிறப்பாக இருந்தது. இதனால் நான் தயார் செய்வதும் மிகவும் எளிமையாக இருந்தது. எவ்வளவு நேரம் படிப்பது என்பதைவிட எவ்வளவு ஆழமாகவும் உன்னிப்பாகவும் படிப்பது என்பதே இங்கு முக்கியம். அனைத்துப் பாடங்களையும் நோட்ஸ் எடுத்து படித்தேன். அடிக்கடி குழந்தையை பார்க்க ஊருக்கு செல்ல வேண்டியதாக வரும். அதன் இடையேயும் தொடர்ந்து படித்தேன்.

விருப்பப்பாடங்களுக்கு என்னென்ன புத்தகங் களை படித்தீர்கள்?

எனது புவியியல் விருப்பப்பாடத்திற்குக்கூட என்.சி.ஆர்.டிதான் மெயின் வரை படித்தேன். அதுவே 40 சதவிகிதம் இத்தேர்வுக்கு உதவியாக இருந்தது. அதை அடுத்து Physical geographydÏ Savindra singh, Human geography மற்றும் Indian geographyக்கு மஜித் உசேன் போன்ற நூல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.

ஏதேனும் பயிற்சி எடுத்துக் கொண்டீர்களா?

ஆமாம். முதலில் தனியாக படித்தேன். சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி, மனிதநேயம், பின்பு ஸ்டேடர்ஜி அகாடமியில் படித்தேன். தேவி இராஜேந்திரன் ஐயா தமிழ் இலக்கியத்தை அருமையாக சொல்லிக் கொடுத்தார். நான் தமிழ் இலக்கியத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்கு அவர்தான் காரணம்.

ஏன் இத்தனை பயிற்சி மையங்களில் படித்தீர்கள்?

தமிழகத்தில் அனைத்து முக்கிய விருப்பப் பாடங்களுக்கும் சிறந்த பயிற்சி வழங்கும் பயிற்சி மையம் இல்லை. ஒவ்வொரு மையமும் ஏதேனும் ஒரு பாடத்தைத்தான் சிறப்பாக கற்றுத் தருகிறது. அண்ணா மேனேஜ் மெண்ட் அரசின் இலவச பயிற்சி மையம் சிறப் பாக கற்றுத் தருகிறது. அங்கு படிக்கும் சூழலும் மிக அருமையாக உள்ளது. அவர்களே உணவு, இருப்பிடம் கொடுத்து அனைத்துவித உதவியும் செய்கின்றனர்.

சிவில் சர்வீசஸ் தேர்வு தயார் செய்வோருக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

ஒஆந, ஒடந தேர்வு மிக மிக கடினம் என்பது பொய். என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் நடத்தும் அனைத்து தேர்வுகளைவிட மிகவும் எளிமையானது இந்த சிவில் சர்வீசஸ் தேர்வுதான். பாடங்களில் எதை படிக்க வேண்டும், எதை படிக்கக்கூடாது என்பதை புரிந்து கொண்டு, நன்கு தயார் செய்தால் வெற்றி பெறலாம். மக்களுக்கு நிறைய நல்லது செய்யலாம்.

நேர்முகத் தேர்வு எப்படி இருந்தது?

நாம் மெயின் தேர்வுக்கு அனுப்பும் விண்ணப்பத்தினை எடுத்து வைத்துக் கொண்டு அதன் அடிப்படையிலேயே கேள்விகளைக் கேட்கின்றனர். என்னிடம் பொள்ளாச்சி, கோவை மாவட்டத்தை பற்றியும், நான் படித்த மைக்ரோ பயாலஜி பாடத்திலிருந்தும், விவசாய குடும்பம் என்பதால் அதனை பற்றியும் கேட்டனர். மிகவும் இயல்பாகவும் நுட்ப மாகவும் கேட்டதனால் எளிதாக பதில் தந்தேன்.

"பொது அறிவு உலகம்' இதழ் பற்றி?

நல்ல மாத இதழ். டி.என்.பி.எஸ்.சிக்கு மிகவும் சிறந்த நூல். ஒஆந தேர்வு பாடங்களையும் கொஞ்சம் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

-----------------------------------------------------------------

டாக்டர் பிருந்தா

டாக்டர் பிருந்தா முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதி வெற்றிப் பெற்றுள்ளார். பொது அறிவு உலகம் இதழுக்காக அவர் அளித்துள்ள பேட்டி.

உங்கள் குடும்பத்தைப் பற்றி கூறுங்கள்...

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை எனது சொந்த ஊர். அப்பா தேவராஜ் காலமாகிவிட்டார். அம்மா தெய்வானை. அண்ணன் சங்கர். சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் டைரக்டர்.

படித்தது?

நான் ஊத்தங்கரை வித்யாமந்திர் பள்ளியில் 10-வது வரை படித்தேன். பிறகு 12-வது வரை ராசிபுரம் எஸ்.ஆர்.வி.யில் படித்தேன். பின்பு திருச்சியில் உள்ள கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தேன். படித்த பின்பு மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி மருத்துவக்கல்லூரியில் டாக்டராக பணிபுரிந்தேன்.

டாக்டராக இருந்த உங்களுக்கு ஒஆந தேர்வு எழுத வேண்டுமென எப்படி தோன்றியது?

நான் எனது அண்ணாரின் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் வந்து உட்கார்ந்திருப்பேன். அப்போது அங்கு படிக்கும் மாணவர்களை பார்க்கும்போது நாமும் சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதினால் என்ன என தோன்றியது. அதனால் முதல் முறையாக முயற்சி செய்தேன். முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றேன்.

என்னென்ன விருப்பப்பாடங்களை தேர்ந்தெடுத்தீர்கள்?

பிரீலிமனரிக்கு புவியியல் பாடத்தையும், மெயின் தேர்வுக்கு புவியியல் மற்றும் விலங்கியல் பாடத்தையும் தேர்ந்தெடுத்தேன்.

இரண்டு விருப்பப்பாடங்களும் அதிக பாடப் பிரிவுகளை கொண்டது. அப்படி இருக்கையில் எப்படி படித்தீர்கள்?

உண்மைதான். புவியியலுக்கு சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் வகுப்பெடுத்த ஆசிரியர் கள் நன்றாக பாடம் எடுத்தார்கள். விலங் கியலுக்கு மட்டும் எனது அண்ணன் முயற்சி செய்து ஸ்டடி மெட்டீரியல் தயார் செய்து கொடுத்தார். இவை இரண்டும் ஆழமாக படித்தேன்.

நேர்முகத்தேர்வு எப்படி இருந்தது?

நான் டாக்டர் என்பதால் மருத்துவம் பற்றியே அதிக கேள்விகள் கேட்டனர். நாட்டில் தனியார் மருத்துவமனைகளும் உள்ளன. அரசு மருத்துவமனைகளும் உள்ளன. எங்கு எப்படி மருத்துவம் செய்கிறார்கள், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுகாதாரம், மருத்துவ வசதி எப்படியுள்ளது என கேட்டனர். முக்கியமாக சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் ஆரோக்கியத்துடன் இருப்பதன் அவசியம் ஆகியவற்றை பற்றி கேட்டனர்.

எப்படி இந்த தேர்வுக்கு பயிற்சி செய்தீர்கள்?

சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில்தான் முழுமை யாக படித்தேன். இங்கு எந்த பாடங்களில் எவற்றை முக்கியமாக படிக்க வேண்டும். எவற்றை படிக்க வேண்டாம் என்பதை தெளிவாக கூறி அதற்கு தகுந்தாற் போல் பயிற்சி கொடுத்தனர். நிறைய மாதிரித் தேர்வுகள், மாதிரி இன்டர்வியூ நடத்தியது வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தது. நல்ல வழிகாட்டுதல் இருந்தால்தான் எளிதில் வெற்றி பெற முடியும். அந்தவகையில் சிறந்த பயிற்சியை பெற்றேன். இதற்கு எனது அண்ணார் சங்கர் மற்றும் எனக்கு பயிற்சி அளித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இந்த தேர்வை பற்றி பயப்படத் தேவையில்லை. முதல் முயற்சியிலே வெல்ல லாம். இல்லையெனில் அடுத்தடுத்த முயற்சி களிலும் வெல்ல முடியும். முதலில் நம்பிக்கை இழக்காமல் படிக்க வேண்டும். நல்ல வழிகாட்டுதலுடன் படித்தால், இத்தேர்வை எதிர்கொள்ள எளிதாக இருக்கும்.
----------------------------------------------------------------

நிவாஸ்

சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் 45-வது ரேங்க் பெற்று தேர்வில் வெற்றிப் பெற்றவர் நிவாஸ். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர். டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வை 2007-ல் எழுதி தற்சமயம் வண்டலூரில் டி.எஸ்.பி. டிரெயினிங்கில் உள்ளவர் பொது அறிவு உலகத்திற்கு பேட்டியளித்தார்.

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப் பெற்றதற்கு பொது அறிவு உலகம் இதழ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ரொம்ப நன்றிங்க. பொது அறிவு உலகம். இதழை நானும் வாங்கி படித்துள்ளேன். ரொம்பவும் அருமையான மாத இதழ். டி.என்.பி.எஸ். சி. குரூப் 1 தேர்வை எழுதுவதற்கு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

உங்களின் குடும்பம், படிப்பு பற்றி சொல்லுங்கள்...

எனது பெற்றோர்கள் அரசாங்க வேலையில் உள்ளார்கள். மனைவி பபிதா எல் & டியில் பணிபுரிகிறார். இவர்கள் எல்லாம் என்னை தொடர்ந்து உற்சாகப்படுத்தியதால் மூன்று முறை முயற்சி செய்து இன்டர்வியூ வரை சென்றேன். ஆனால் இந்தமுறை படித்து வெற்றி பெற்றேன். மேற்படி பள்ளி படிப்பு காஞ்சி புரத்தில் படித்தேன். பிறகு வேலூர் இன்ஸ் டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். தனியார் கம்பெனியில் பணி புரிந்தேன். பிறகு ஏற்கெனவே மூன்றுமுறை முயற்சி செய்து விட்டதால் நான்காவது முறை நன்றாக படிக்க வேண்டுமென வேலையை ராஜினாமா செய்து விட்டு படித்தேன். டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிப் பெற்றேன். இப்போது சிவில் சர்வீசஸ் தேர்விலும் வெற்றிப் பெற்றுள்ளேன்.

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு எப்போது தயார் செய்ய ஆரம்பித்தீர்கள்?

இந்த தேர்வை முதல்முறை எழுதி பிரீலிமனரி தேர்விலேயே தோல்வியடைந்தேன். அதன்பின் இரண்டுமுறை எழுதி இன்டர்வியூ வரை சென்றேன். பணிவாய்ப்பு கிடைக்க வில்லை. இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல் நான்காவது முறையாக எழுதி இந்தமுறை வெற்றி பெற்றேன்.

தேர்வுக்கு எப்படி தயார் செய்தீர்கள்?

நான் விருப்பப்பாடமாக புவியியலையும் தமிழ் இலக்கியத்தையும் எடுத்துப் படித்தேன். பள்ளியில் 11, 12-வது வகுப்பில் சமஸ்கிருதத்தை தான் படித்தேன். தமிழை படிக்கவில்லை. ஆனால் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தமிழ் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தமிழ் மொழிபோல் சிறப்பான மொழி எதுவுமில்லை. படிக்கவும், புரிந்துகொள்ளவும் மிக சிறந்த மொழி நம் தமிழ்தான்.

பயிற்சி வகுப்புக்கு சென்றீர்களா?

அண்ணா மேனேஜ்மெண்டில் தமிழ் பாடத்தை இளங்கோ ஐயா சிறந்த முறையில் கற்றுத் தந்தார். அதனால் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தது. புவியியல் பாடத்தை சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் படித்தேன். மனிதநேயமும் சென்றேன். அங்கு இன்டர்வியூ வகுப்பில் மட்டும் கலந்து கொண்டேன். முதன்முதலில் டெல்லியில் உள்ள வஜ்ரம்ரவி பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். தேர்ச்சி பெறவில்லை. பிறகு தனியாக படித்தேன். சில இடங்களில் பயிற்சியும் எடுத்துக் கொண்டேன்.

என்னதான் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தாலும் பெரும்பாலும் பயிற்சி மையங்கள் அதிகப்படியான பாடங்களை கொடுத்து மிரள வைத்துவிடுகின்றன. என்னை பொறுத்த வரையிலும் அவ்வளவு தேவையில்லை. தினமும் செய்தித்தாள்களை நன்றாக படித்து, விருப்பப் பாடங்களுக்கும், பொது அறிவுக்கு அடிப் படையான நூல்களை படித்து நோட்ஸ் எடுத்து மீண்டும் மீண்டும் படித்தாலே போது மானது. யு.பி.எஸ்.சி.யானது அன்றாட செய்திகள், தகவல்கள் அடிப்படையிலேயே கேள்விகளை கேட்பதால் அன்றைய செய்தி களை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

சிவில் சர்வீசஸ் தேர்வு - ஓர் அறிமுகம்!

இந்தியாவில் மிக உயர்ந்த அரசு பணிகளில் ஒன்று ஐ.ஏ.எஸ். என்றழைக்கப் படும் இந்திய ஆட்சிப்பணி (Indian Administrative Service) ஆகும். இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி களே மாவட்ட ஆட்சியர், மாநில முதன்மை செயலர், தலைமைத் தேர்தல் ஆணையர் என அனைத்துத் துறை முக்கிய பதவிகளை வகிக்கின்றனர்.

அரசாங்கத்தின் திட்டங்களை உருவாக்கி அமல்படுத்துபவர்கள் இப்பணியினரே. இதனால்தான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான முக்கியத்துவம் என்றும் குறையாமல் இருக்கிறது. இத்தேர்வு சம்பந்தமான விவரங் களைப் பார்ப்போம்.

சிவில் சர்வீசஸ் பணித் துறைகள்

சிவில் சர்வீசஸ் தேர்வானது 26-க்கும் மேற்பட்ட பணிகளுக்கான தேர்வாகும். இத்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு இருபத்தியாறு பணித்துறைகளில் ஏதேனும் ஒன்றில் வாய்ப்புக் கிடைக்கிறது. அவை:

1. இந்திய ஆட்சிப் பணி (Indian Administrative Service)

2. இந்திய அயல்நாட்டுப்பணி (Indian Foreign Service)

3. இந்திய காவல் பணி (Indian Police Service)

4. இந்திய அஞ்சலகத் தந்திக் கணக்குகள் மற்றும் நிதி பணி, பிரிவு "அ' (Indian P & T Accounts & Finance Service, Group 'A')

5. இந்திய கணக்குத் தணிக்கை மற்றும் கணக்கியல் பணி பிரிவு "அ' (Indian Audit & Accounts Service, Group 'A')

6. இந்திய சுங்கம் மற்றும் கலால் வரி பணி, பிரிவு "அ' (Indian Customs & Central Excise Service, Group 'A')

7. இந்திய பாதுகாப்புத்துறை கணக்குப் பணிபிரிவு "அ' (Indian Defence Accounts Service, Group 'A')

8. இந்திய வருவாய் பணி, பிரிவு "அ' (Indian Revenue Service, Group 'A')

9. இந்தியத் துப்பாக்கித் தொழிற்சாலைகள் பணிபிரிவு "அ' (உதவி மேலாளர், தொழில் நுட்பம் சாராதது) (Indian Ordinance Factories Service, Group 'A' Assistant Works Manager, Non-Technical)

10. இந்திய அஞ்சல் பணி, பிரிவு "அ' (Indian Postal Service, Group 'A')

11. இந்தியக் குடிமைக் கணக்குப்பணி, பிரிவு "அ' (Indian Civil Accounts Service, Group 'A')

12. இந்திய இரயில்வே போக்குவரத்து, பணிபிரிவு "அ' (Indian Railway Traffic Service, Group 'A')

13. இந்திய இரயில்வே கணக்குப்பணி, பிரிவு "அ' (Indian Railway Accounts Service, Group 'A')

14. இந்திய இரயில்வே பணியாளர்கள் பணி, பிரிவு "அ' (Indian Railway Personnel Service, Group 'A')15. இரயில்வே பாதுகாப்புப் படையில், உதவிப் பாதுகாவல் அலுவலர் பிரிவு "அ' பதவிகள் (Posts of Assistant Security Officer, Group 'A' in Railway Protection Force)

16. இந்தியப் பாதுகாப்பு நிலைகள் பணி, பிரிவு "அ' (Indian Defence Estates Service, Group 'A')

17. இந்திய தகவல் தொடர்புப் பணி, (இளநிலை) பிரிவு "அ' (Indian Information Service, (Junior Grade) Group 'A')

18. மையத்தொழிலகப் பாதுகாப்புப் படையில் உதவி ஆணையாளர், பிரிவு "அ' பதவிகள் (Posts of Assistant Commandant Group 'A' in Central Industrial Security Force)

19. மைய அரசு செயலகப்பணி, பிரிவு "B (பிரிவு அலுவலர் நிலை)

20. புகைவண்டி வாரியச் செயலகப் பணி, பிரிவு "B' (பிரிவு அலுவலர் நிலை)

21. ஆயுதப்படை தலைமையகக் குடிமைப் பணி பிரிவு "B' (குடிமக்கள் பணியாள் உதவி அலுவலர் நிலை)

22. சுங்கத்துறை மதிப்பீட்டாளர் பணி, பிரிவு "B'

23. தில்லி, அந்தமான்-நிகோபார் தீவுகள், லட்சத்தீவு, டையூ- டாமன், டாட்ரா மற்றும் நாகர்ஹவளி குடிமை பணி, பிரிவு "B'

24. தில்லி, அந்தமான்- நிகோபார் தீவுகள், இலட்சத்தீவு, டையூ- டாமன், டாட்ரா மற்றும் நாகர்ஹவளி காவல் பணி பிரிவு "B'

25. புதுச்சேரி குடிமைப்பணி, பிரிவு "B

26. புதுச்சேரி காவல் பணி, பிரிவு "B'

இப்பணிகளுக்கான காலியிடங்கள் எவ்வளவு என்பதை இத்தேர்வு அறிவிப்பின் போது, எம்பிளாய்மெண்ட் நியூஸ் இதழில் கொடுக்கப்பட்டிருக்கும். அக்காலியிடங்களுக் குத் தக்கவாறு இத்தேர்வு நடத்தப்படும்.

தேர்வுத் திட்டம்

சிவில் சர்வீசஸ் தேர்வானது மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது.

1. முதனிலைத் தேர்வு (Preliminary Exam)

2. பிரதானத்தேர்வு (Main Exam)

3. நேர்முகத்தேர்வு (Interview - Personality Test)

ஆகியவை ஆகும். முதனிலைத்தேர்வு எழுதி தகுதிபெற்றவர்கள் பிரதானத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது முதனி லைத் தேர்வு எழுதி வெற்றிப் பெற்றவுடன் யு.பி.எஸ்.சி. பிரதானத் தேர்வு எழுத விண்ணப் பத்தை அனுப்பிவைக்கும். அதில் பிரதானத் தேர்வு விபரங்கள் அனைத்தும் அடங்கியிருக் கும். பிரதானத் தேர்வை எழுதி முடித்து அதில் வெற்றிப் பெற்றால் உங்களுடைய பிரதானத் தேர்வு மதிப்பெண்கள் கொண்ட தர வரிசையின் படி நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப் படுவீர்கள். நேர்முகத்தேர்வு முடிந்தவுடன் இறுதி முடிவு வெளியிடப்படும்.

பிரதானத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் அகில இந்திய அளவில் ரேங்க் பட்டியல் வெளியிடப் படும். அதில் நீங்கள் விருப்பம் தெரிவித்த பணியை உங்களின் தரவரிசை மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி வழங்கப்படும்.

தேர்வு எழுத தகுதிகள்

சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுத விரும்புபவர் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். கலை, அறிவியல், வணிகம், மருத்துவம், பொறியியல் என ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு போதுமானது. அதே சமயம் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்து எழுதலாம். தொழில்நுட்பக் கல்வி படித்தவர்கள் தங்களது படிப்பு பட்டப்படிப்புக்கு இணையானது எனில் அவர்களும் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் இளங்கலை பட்டங்கள் பெற்றவர்கள், முதுகலைப்பட்டம், ஆராய்ச்சிப்படிப்பு என அனைவரும் விண்ணப்பிப்பர்.

வயது வரம்பு:

சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் பங்கு பெறுவதற்கு குறைந்தபட்சம் 21 வயது நிரம்பப் பெற்ற இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பாக 30 வயதுவரை இத்தேர்வினை எழுதலாம். குறைந்தப் பட்ச வயது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியிலிருந்து கணக் கிடப்படுகிறது. இந்த 21-30 வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும்.

அட்டவணை வகுப்பினர் (S.C.), அட்ட வணை பழங்குடியினர் (S.T.) 35 வயதுவரை இத்தேர்வை எழுதலாம்.

இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) அதாவது தமிழகத்திலுள்ள பிற்படுத்தப்பட் டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட் டோர் (MBC) பிரிவுகளைச் சேர்ந்த அனைவரும் மத்திய அரசு அளவில் இதர பிற்படுத்தப்பட் டோர் OBC ஆவர். இப்பிரிவினர் 33 வயது வரை இத்தேர்வை எழுதலாம். அதே போல உடல் ஊனமுற்ற பாதுகாப்புப் படைவீரர்களுக்கும், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கும் வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி எதிரி நாட்டோடு போர்புரிந்து உடலுறுப்பு பாதிக்கப்பட்டு செயல்பட முடியாத ராணுவத் தினருக்கு மூன்று ஆண்டுகளும் (33 வயது வரை), குறைந்தது ஐந்து ஆண்டுகள் சேவை பணி முடித்த முன்னாள் இராணுவத்தினருக்கு ஐந்து ஆண்டுகளும் (35 வயது வரை) தளர்த்தப் பட்டுள்ளது.

எத்தனை முறை தேர்வு எழுதலாம்?

நாம் கல்லூரியில் படிப்புக்குரிய பாடங் களில் தேர்ச்சி பெறவில்லையெனில், மீண்டும் மீண்டும் தேர்வு எழுதலாம், எழுதிக் கொண்டே இருக்கலாம். ஆனால் சிவில் சர்வீசஸ் தேர்வு அப்படியல்ல. இத்தேர்வு எழுதுவதற்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது ஒருசில தடவை (Number of Attempts) மட்டுமே இத் தேர்வை எழுத முடியும். ஆனாலும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி பொதுப்பிரிவினர் நான்கு முறை மட்டுமே இத்தேர்வை எழுத அனுமதிக்கப் படுவர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) தங்களின் வயது வரம்பிற்கு உட்பட்டு ஏழு முறை தேர்வை எழுதலாம்.

பட்டியல் வகுப்பினர் (SC/ST) தங்கள் வயது வரம்பிற்கு உட்பட்டு எத்தனை முறை வேண்டு மானாலும் தேர்வை எழுதலாம். தேர்வு நடை பெறும்போது ஒருமுறை தேர்வை எழுதி னாலும் எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளப் படும். அதனால் விதிக்கப்பட்டுள்ள கால வரம்புக்குள் நம் அறிவை கொண்டு தேர்வில் வெற்றிப் பெற்றிட வேண்டும்.

விண்ணப்பித்தல்

ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வு களுக்கான அறிவிப்பானது Employment News வார இதழில் டிசம்பர் மாத கடைசி வாரத்தில் தேர்வு குறித்து Special Supplementary தனியாக வெளிவரும். அதில் தேர்வு குறித்த முழு விபரம் தரப்பட்டிருக்கும். அதையடுத்து முக்கியமாக, விண்ணப்பம் வாங்க வேண்டும். UPSC விண்ணப்பம் அனைத்து மாவட்டத் தலைமை அஞ்சலகங்களிலும் கிடைக்கும்.

முதனிலைத் தேர்வு (Preliminary Examination)

முதனிலைத் தேர்வில், ஒரு பொது அறிவுத்தாள் மற்றும் ஒரு விருப்பப் பாடத்திற் கான தேர்வு நடைபெறும். இந்தியாவில் பல மையங்களில் இத்தேர்வு நடைபெறும். தமிழகத்தில் ஒரே நாளில் சென்னை, மதுரை ஆகிய மையங்களில் மட்டும் நடைபெறும். விருப்பப்பாடம் காலை நேரத்திலும், மாலை நேரத்தில் பொதுஅறிவுத் தேர்வும் நடத்தப் படுகிறது. விருப்பப்பாடத்தில் 120 கேள்விகள் கேட்கப்படுகிறது. இதற்கு 300 மதிப்பெண்கள். பொதுஅறிவுத்தாளில் 150 கேள்விகள் கேட்கப் படும். இதற்கான மதிப்பெண்கள் 150. ஆக இரண்டு தாள்களுக்கும் சேர்த்து 450 மதிப் பெண்களுக்கு முதனிலைத்தேர்வு நடத்தப் படுகிறது. வங்கித்தேர்வை போன்று நெகடிவ் மதிப்பெண்கள் இத்தேர்விலும் உண்டு. இத்தேர்வில் வெற்றிபெற வாய்ப்பு என்கிற போது சுமாராக சொன்னால், விருப்பப் பாடத்தில் 300 மதிப்பெண்களுக்கு குறைந்தது 250 மதிப்பெண்கள்-அதாவது 120 கேள்வி களுக்கு 100 கேள்விகள் சரியாக பதில் அளித்தால் போதுமானது.

பொது அறிவுத் தேர்வில் குறைந்தது 100 மதிப்பெண்கள் பெற்றால் போதும் முதனிலைத் தேர்வில் நீங்கள் வெற்றிபெற்று விடலாம். இந்த தேர்வு முதன்மைத் தேர்வு (Main Exam) எழுதுவதற்கான தகுதித் தேர்வு மட்டும்தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

முதனிலைத் தேர்வு விருப்பப்பாடம்

சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வில் ஒரு விருப்பப்பாடத்தை தேர்வு செய்ய வேண்டும். இப்போது என்னென்ன விருப்பப் பாடங்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.

1. வேளாண்மை (Agriculture)

2. கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவம் (Animal Husbandry & Veterinary Science)

3. தாவரவியல் (Botany)

4. வேதியியல் (Chemistry)

5. கட்டுமானப் பொறியியல் ((Civil Engineering)

6. வணிகவியல் (Commerce)

7. பொருளாதாரம் (Economics)

8. மின் பொறியியல்(Electrical Engineering)

9. புவியியல் (Geography)

10. புவியமைப்பியல் (Geology)

11. இந்திய வரலாறு (Indian History)

12. சட்டம் (Law)

13. கணிதம் (Mathematics))

14. எந்திரப் பொறியியல் (Mechanical Engineering)

15. மருத்துவ அறிவியல் (Medical Science)

16. தத்துவம் (Philosophy)

17. இயற்பியல் (Physics)

18. அரசியல் அறிவியல்(Political Science)

19. உளவியல் (Psychology)

20. பொது நிர்வாகம் (Public administration)

21. சமூகவியல் (Sociology)

22. புள்ளியியல் (Statistics)

23. விலங்கியல் (Zoology)

போன்ற 23 விருப்பப்பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நீங்கள் விரும்பும் விருப்பப் பாடத்தை தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தில் குறித்திட வேண்டும்.

பிரதானத்தேர்வு (Main Exam)

சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வில் வெற்றி பெற்றதாக தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டவரே பிரதானத்தேர்வை எழுதத் தகுதிப் பெற்றவர் ஆவார். பிரதானத் தேர்வு என்பது எழுத்துத்தேர்வு மற்றும் நேர் முகத்தேர்வு ஆகிய இரண்டையும் உள்ளடக் கியது. இதுவே இந்திய அரசின் பல்வேறு உயர்நிலை பணிகளுக்குத் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கப் பயன்படுகிறது. முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியானதும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதானத் தேர்வுக்கான விண்ணப்பம் அனுப்பப்படும். அதனைப் பெற்று மீண்டும் இத்தேர்வுக்காக விண்ணப் பிக்க வேண்டும். எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளனவோ அதைவிட 12 அல்லது 13 மடங்கு விண்ணப்பதாரர்கள் பிரதானத் தேர்வுக்கு அனுப்ப தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த பிரதானத்தேர்வுதான் உங்களின் வெற்றி மற்றும் பணியிடங்களை தீர்மானிக் கிறது. இத்தேர்வானது விண்ணப்பதாரரின் புத்திக்கூர்மையையும் புரிந்துகொள்ளும் தன்மையையும் மதிப்பீடு செய்வதாகும். இத்தேர்வு முழுக்க முழுக்க விரிவாக விடை யெழுதும் கட்டுரை வடிவிலான எழுத்துத் தேர்வு. இதில் உங்களின் பதில் அளிக்கும் திறனே முக்கியமானதாகும்.

பிரதானத்தேர்வு ஒன்பது தாள்களைக் கொண்டது

* தாள் I ஏதேனும் ஒரு இந்திய மொழி

(அரசியலமைப்பு அட்டவணையில் உள்ளடங்கிய இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பித்தவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்)

இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் II ஆங்கிலம் (அனைவருக்கும் கட்டாயமானது) இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் III கட்டுரை (அனைவருக்கும் கட்டாயமானது) இதற்கு 200 மதிப்பெண்கள்

* தாள் IV (அ) பொது அறிவு - 1 இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் V (ஆ) பொது அறிவு - 2 இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் யஒ விருப்பப்பாடம் 1 (அ) இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் VI விருப்பப்பாடம் 1 (ஆ) இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் VII விருப்பப்பாடம் 2 (அ) இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் VIII விருப்பப்பாடம் 2 (ஆ) இதற்கு 300 மதிப்பெண்கள்



விருப்பப் பாடங்களைப் பொறுத்தவரை இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பாடத்திலிருந்து இரண்டு தாள்கள் 1 (அ) 1 (ஆ) & 2 (அ) 2 (ஆ) ) ஆக மொத்தம் நான்கு தாள்கள் (2x2=VI, VII, VIII, IX) எழுத வேண்டும். இது தவிர இரண்டு மொழித் தாள்கள் (I, II), இரண்டு பொது அறிவுத் தாள்கள் (IV, V), ஒரு கட்டுரை (III)ஆக மொத்தம் 9 தாள்கள் எழுத வேண்டும். இரண்டு மொழித் தாள்களுக்கான மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இவைகளுக்கு மொத்தம் 2000 மதிப்பெண்கள் ஆகும்.

பிரதானத்தேர்வு விருப்பப் பாடத்திற்குத் தேர்வாணையத்தில் அனுமதிக்கப்பட்ட பட்டியலிலிருந்து ஏதேனும் இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.



பிரதானத்தேர்வுக்கான விருப்பப் பாடங்கள் :

1. வேளாண்மை (Agriculture)

2. கால்நடைப் பராமரிப்பு மற்றும் மருத்துவம் (Animal Husbandry & Veterinary)

3. மானிடவியல் (Anthropology)

4. தாவரவியல் (Botany)

5. வேதியியல் (Chemistry)

6. கட்டடப் பொறியியல் (Civil Engineering)

7. வணிகவியலும் கணக்கியலும் (Commerce & Accountancy)

8. பொருளாதாரம் (Economics)

9. மின் பொறியியல் (Electrical Engineering)

10. புவியியல் (Geography)

11. புவியமைப்பியல் (Geology)

12. வரலாறு (History)

13. சட்டம் (Law)

14. மேலாண்மை (Management)

15. கணிதம் (Mathematics)

16. எந்திரப் பொறியியல் (Mechanical Engineering)

17. மருத்துவ அறிவியல் (Medical Science)

18. தத்துவம் (Philosophy)

19. இயற்பியல்(Physics)

20. அரசியல் மற்றும் பன்னாட்டுத் தொடர்புகள் (Political and International Relations)

21. உளவியல் (Psychology)

22. பொது நிர்வாகம்(Public Administration)

23. சமூகவியல் (Sociology)

24. புள்ளியியல் (Statistics)

25. விலங்கியல் (Zoology)

26. இலக்கியம் (Literature)

(இது பின்வரும் ஏதேனும் ஒரு மொழி இலக்கியத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கலாம்.)

1. தமிழ் 2. ஆங்கிலம்

3. மலையாளம் 4. தெலுங்கு

5. கன்னடம் 6. இந்தி

7. மராத்தி 8. உருது

9. ஒரியா 10. சமஸ்கிருதம்

11. குஜராத்தி 12. வங்காளம்

13. பஞ்சாபி 14. நேப்பாளி

15. சிந்தி 16. மணிப்பூரி

17. காஷ்மீரி 18. கொங்கணி

19. பாலி 20. பெர்சியன்

21. அஸ்ஸாமி 22. அரபு

23. சீனம் 24. பிரெஞ்ச்

25. ஜெர்மனி 26. ரஷ்யன்

பிரதானத்தேர்வில் இரண்டு விருப்பப் பாடங்கள் என்றாலும் சில விருப்பப் பாடங்களைச் சேர்த்து எழுத முடியாது.

நேர்முகத்தேர்வு
(Personality Test)

பிரதானத் தேர்வில் தேர்வாணையத்தால் தீர்மானிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண் களை பெற்றவர்கள்- அவர்களின் ஆளுமையை சோதிப்பதற்காக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த நேர்முகத்தேர்வு 300 மதிப்பெண்களைக் கொண்டது. (தகுதிக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் கிடை யாது) இதில் புத்திக்கூர்மை, நடப்பு நிகழ்வு களில் உள்ள அக்கறை, சமூக சேவை மனப் பான்மை, பாடத்தில் புரிந்துகொண்ட திறன், ஒழுக்கம், உடல்மொழி (இர்க்ஹ் கஹய்ஞ்ன்ஹஞ்ங்), சமயோகித புத்தி, தலைமை தாங்கும் திறன் போன்றவற்றைச் சோதித்து அறிவார்கள். சுருக்கமாகக் கூறினால் சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கு நீங்கள் எவ்விதத்தில் பொருத்த மானவர் என்பது நேர்முகத் தேர்வில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இறுதியில் மெயின் தேர்வு மொத்த மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மதிப்பெண்கள் இரண்டையும் கூட்டி இந்திய அளவில் ரேங்க் பட்டியல் தயாரிப்பர். அதன் அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற 26 பணிகளில் ஏதேனும் ஒன்றில் நியமிப்பர்.

தமிழ் இணைய மாநாடு கண்காட்சி அரங்கம்(படம்)


உலகத்தமிழ்செம்மொழி மாநாடு நாளை தொடங்குகிறது. இதை முன்னியிட்டு ஜனாதிபதி பிரதீபா இன்று கோவை வருகிறார். ஜனாதிபதி நாளை மாநாட்டை துவங்கிவைக்கிறார்.

இம்மாநாட்டையொட்டி தமிழ் இணைய மாநாடு கண்காட்சி அரங்கம் அமைந்துள்ளது.

அமைக்கப்பட்டுள்ள அக்கண்காட்சி அரங்கத்தை மாநாட்டிற்கு வந்திருப்போர் வியந்து ரசிக்கின்றனர்.

செம்மொழி: இன்று கவிஞர் வைரமுத்து பேசுகிறார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நாளை கோவையில் தொடங்குகிறது. இதையொட்டி இன்று கவிஞர் வைரமுத்து தொலைக்காட்சியில் சிறப்புரையாற்றுகிறார்.

இது குறித்து சென்னை தொலைக்காட்சி நிலையம் செய்திப் பிரிவு இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

’’தூர்தர்ஷன் சென்னை மண்டல செய்திப்பிரிவு வழங்கும் கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு சிறப்பு நிகழ்ச்சியில் இன்று இரவு 8.15 மணிக்கு கவிஞர் வைரமுத்து பேசுகிறார்.


முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கியப்பணி, திரைப்பட பாடல்களில் சங்க இலக்கியங்களின் தாக்கம், இலக்கிய - இலக்கண வரம்புகள் இல்லாமல் எழுதப்படும் கவிதைகள், தமிழ்மொழியின் மீது தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது குறித்து அவர் பேசுகிறார்’’என்று கூறப்பட்டுள்ளது.

தமிழில் படித்து விஞ்ஞானிகளான 30 பேர் பங்கேற்பு

தமிழ் வழியில் படித்து விஞ்ஞானிகளான 30 பேர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்கின்றனர் என்று சந்திரயாண் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

இதுகுறித்து கோவையில் அவர் மேலும் கூறியதாவது,

உலகமே கண்டு வியக்கும் வகையில் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பண்டைய கால பொருட்கள், இலக்கிய காட்சிகள் இடம் பெறுகின்றன. அத்துடன் விண்வெளி ஆய்வு தொடர்பான அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது.

படித்த இளைஞர்கள் இலக்கியத்தில் மட்டுமன்றி தொழில்நுட்பத்திலும் சாதிக்க முடியும் என்பதற்கு சான்றாக விண்வெளி ஆய்வு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

தாய்மொழியில் படித்தால்தான் அறிவியலில் சிறப்பாக சிந்திக்க முடியும். தாய்மொழியில் படித்தால்தான் சுயசிந்தனை அதிகரிக்கும் என்றார்.

கோவை மாநாட்டில் படுகர் இன மக்களின் நடனம்

கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் படுகர் இன மக்களின் கலாச்சார நடனம் இடம் பெறுகிறது என்று மத்திய தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புதுறை அமைச்சர் ஆ.இராசா கூறினார்.

கோவையில் வருகிற 23ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. 23 ஆம் தேதி கோவையில் பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகளும், நடனமும் நடைபெறு கின்றன. இந்த நிகழ்ச்சியில் நீலகிரி படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் இடம் பெறுகிறது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஆ. இராசா செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நீலகிரி படுகர் இன மக்களின் படுகர் கலாச்சார நடனம் கோவையில் நடக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இடம் பெறுகிறது. இதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு, ஒத்திகையும் முடிக்கப்பட்டு நடன குழுவினர் தயாராக இருக்கின்றனர் என்றார்.

இன்டர்நெட் பாமரனையும் அடைய வேண்டும்: கனிமொழி

செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெறும் இணையதள மாநாட்டின் வாயிலாக, கம்ப்யூட்டர் தொழில்நுட்பம், இன்டர்நெட்டின் பயன்களை பாமர மக்களும் அறியும்படி செய்ய வேண்டும், என்று கனிமொழி எம்.பி., கூறினார்.


கோவையில் வரும் 23 முதல் 27ம் தேதி வரை நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இணையதள மாநாடும் நடத்தப்படவுள்ளது. இணையதள மாநாட்டில் பங்கேற்கவும், அதையொட்டி நடைபெறும் கண்காட்சியை பார்வையிடவும் வருபவர்களைக் கையாள்வது குறித்து கனிமொழி எம்.பி., தகவல் தொழில் நுட்பத்துறை செயலர் டேவிதார், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை ஆகியோர் மாணவ ஆர்வலர்களிடம் விளக்கினர்.


அப்போது கனிமொழி எம்.பி., பேசியதாவது, இதுவரை எட்டு இணையதள மாநாடுகள் நடைபெற்றுள்ளன. கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி ஒன்பதாவது இணையதள மாநாடு நடைபெறுவது சிறப்பானது.


இன்று தகவல் தொழில் நுட்பத்துறையில் நாம் முன்னேறியவர்களாக உள்ளோம். இத்துறையின் பயன்கள் அனைவரையும் சென்றடைய, மாணவர்கள் உதவ வேண்டும். மாநாட்டில் பங்கேற்க வரும் பொதுமக்களுக்கு, கம்ப்யூட்டர் அல்லது இன்டர்நெட் பற்றி எதுவும் தெரியாமல் இருக்கலாம்.


அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எரிச்சல் அடையாமல், பொறுமையுடன் மாணவர்கள் பதிலளிக்க வேண்டும். இம்மாநாட்டின் வாயிலாக இன்டர்நெட், தகவல் தொழில் நுட்பத்தின் பயன்கள் பாமர மக்களை சென்றடையச் செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் தெரியாத எவரையும் கிண்டல் செய்து விடக்கூடாது என்றார்.

ஞாயிறு, 20 ஜூன், 2010

ராவணன் – திரை விமர்சனம்

ராவணன் – பட விமர்சனம்

நடிகர்கள்: விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிருத்வி ராஜ். கார்த்திக், பிரபு, ப்ரியாமணி, ரஞ்சிதா

ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்

இசை: ஏ ஆர் ரஹ்மான்

பிஆர்ஓ: நிகில் முருகன்

இயக்கம்: மணிரத்னம்

தயாரிப்பு: மணிரத்னம் – ஷாரதா திரிலோக்
நல்லவன் வாழணும் கெட்டவன் அழியணும் என்பது பொது நியதி. ஆனால் கெட்டவன் வாழ்வதும் நல்லவன் அழிவதும், ராவணன் படத்தில் சொல்லப்பட்டுள்ள மணிரத்ன நியதி.

வழக்கம்போல நடப்பு செய்திகள் மற்றும் காப்பிய சம்பவங்களிலிருந்து ஒரு கதையைத் தயார் செய்துள்ளனர் மெட்ராஸ் டாக்கீஸ் கதை இலாகாவினர்!

மகாபாரதம், சத்யவான் சாவித்ரி, மும்பை வெடிகுண்டு சம்பவம், உல்பா விவகாரம், திருபாய் அம்பானி கதை… இந்த வரிசையில் இப்போது ராமாயணத்தையும் சந்தனக் காட்டு ராஜா வீரப்பன் கதையையும் கலந்தடித்து ராவணனாக்கியிருக்கிறார் மணிரத்னம்.

மக்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்களை வைத்து படங்களை உருவாக்குவது கூட ஒரு தனி பாணிதான்… ஆனால் ராவணன் விஷயத்தில், அடுத்தடுத்த காட்சிகளை பார்வையாளர்கள் போகிற போக்கில் கணித்துவிடக் கூடிய அளவுக்கு சுவாரஸ்யமற்ற திரைக்கதை கவிழ்த்துவிடுகிறது. இன்னொன்று, ஒரே திரைப்படத்தை மூன்றென்ன, முப்பது மொழிகளில் கூடத் தரலாம்… ஆனால் அந்தந்த மொழிக்குரிய நியாயத்தை செய்தே தீர வேண்டும். மணிரத்னம் படங்கள் பெரும்பாலானவற்றில் இது மிஸ்ஸிங்!



அம்பாசமுத்திரம் அருகே ஒரு மலைக்கிராம பழங்குடி மக்களுக்கு எல்லாமுமாக இருப்பவர் விக்ரம் (உருவகப்படி ராவணன் – வீரப்பன்). அண்ணன் பிரபு (அதாவது கும்பகர்ணன்- மாதையன்), தம்பி முன்னா (விபீஷணன் – வீரப்பன் தம்பி அர்ஜூனன்), தங்கை ப்ரியாமணி (சூர்ப்பனகை) என உறவுகளுடன் நானே ராஜா நானே மந்திரி ஸ்டைலில் வலம் வருகிறார்.

ஊருக்காக எல்லாம் செய்கிறான்… அவனுக்காக ஊர் எல்லாவற்றையும் இழக்கத் தயாராகிறது. ஆனால் சட்டம் அவனை வேட்டையாடத் துடிக்கிறது.

வீராவைச் சுட்டுக் கொல்ல சிறப்பு அதிரடிப்படை வருகிறது, பிருத்வி ராஜ் (அதாவது ராமன்) என்ற அதிகாரி தலைமையில். தேவின் காதல் மனைவி ஐஸ்வர்யா ராய் (சீதா). இந்த ராம சேனையில் அனுமாராக, அதே சேட்டைகளுடன் கார்த்திக் வருகிறார்.

அப்போது விக்ரமின் தங்கை திருமணம் நடக்கும்போது அதிரடிப்படை நுழைகிறது. விக்ரமுக்கு பிருத்வி குறி வைக்க, காயத்துடன் அவர் தப்பிக்கிறார்.

உடனே ப்ரியாமணியைத் தூக்கிப் போகும் அதிரடிப்படை, அவளை சிறைக்காவலில் வைத்தே கூட்டாகக் கற்பழிக்கிறது. வீடு திரும்பும் அவள் அண்ணனிடம் அனைத்தையும் சொல்லிவிட்டு தன்னை மாய்த்துக் கொள்கிறாள்.

கடும் கோபத்துடன் கிளம்பும் விக்ரம், பிருத்வியைப் பழவாங்க, அவன் மனைவி ராகினியை கடத்தி, காட்டுக்குள் பதுக்குகிறார். அங்கே ஆரம்பிக்கிறது சேஸிங். மனைவியைத் தேடி பெரும் படையுடன் காட்டுக்குப் போகிறார் பிருத்வி.

இங்கோ… தான் கடத்தி வந்த ஐஸ்வர்யா ராயின் அழகில் தன்னை இழக்கும் விக்ரம், அடுத்தவன் மனைவி என்று தெரிந்தும் அவர் மீதுள்ள மோகத்தைச் சொல்கிறார்.

ப்ரியாமணிக்கு நேர்ந்த சோகம், அதற்கு தன் கணவனும் ஒரு காரணம் என்பதை அறிந்த பின் விக்ரம் மீது அனுதாபம் பிறக்கிறது ஐஸுக்கு.

ஒரு கட்டத்தில் விக்ரமின் தம்பியையும் பிருத்வி கொல்கிறார். இதைத் தொடர்ந்து வரும் சண்டையில் விக்ரமும் ப்ருத்வியும் கடுமையாக மோதுகிறார்கள். கடைசியில், ஐஸுக்காக பிருத்வியைக் கொல்லாமல் விடுகிறார் விக்ரம். ஐஸை விடுவித்து கணவனுடன் அனுப்பிவிடுகிறார்.

கணவனோடு ரயிலில் ஊர்திரும்பிக் கொண்டிருக்கும் ஐஸின் கற்பைச் சந்தேகப்படுகிறார் பிருத்வி. இதனால் மீண்டும் விக்ரமிடமே திரும்புகிறார்… அதன் பிறகு.. யோசனைக்கு வேலை வைக்காத சாதாரண க்ளைமாக்ஸ்தான்!

படத்தில் நிறைய ஏன்? எதற்கு? எப்படி? கேள்விகள்… என்னதான் மணிரத்னம் படம் என்றாலும் இந்தக் கேள்விகள் புறந்தள்ள முடியாதவையும் கூட!

நேட்டிவிட்டி என்ற ஒரு விஷயத்தை எப்போதும்போல இந்தப்படத்திலும் கோட்டைவிட்டுள்ளார் மணிரத்னம்… இதை அவர் தெரியாமல் செய்கிறாரா அல்லது காட்சியை அழகாகக் காட்டினால் போதும் என்ற நினைப்பில் கண்டுகொள்ளாமல் விடுகிறாரா? இல்லையெனில் அம்பையில் நடக்கும் கல்யாணத்தின் பின்னணியில் வடநாட்டு ஸ்டைல் மாளிகைகள், கோபுரங்கள்… நெல்லைச் சீமையின் சற்றே வளர்ந்த கிராமமான அம்பையில் ஏது இதெல்லாம்..!

காட்டருவி… கட்டற்று ஓடும் வெள்ளம்… நடுவே ஒரு மெகா சிலை, இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டு அவை தனியாக நிற்கும் நிலையில். பார்த்தவுடன் பளிச்சென்று தெரிகிறது இது செட்டப் சமாச்சாரமென்பது.

அந்த அடர் காட்டில் விக்ரமின் இருப்பிடமோ நீரில் மிதக்கும் கோட்டை கொத்தளம் மாதிரி. நாயகனோ போலீசால் தேடப்படும் ஒரு குற்றவாளி… சமீர் சந்தாவின் கலை இயக்கம் படத்தை ரொம்பவே அந்நியமாக்கிவிடுகிறது. கிட்டத்தட்ட படத்தின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கும் விஷயம் இது.


திருநெல்வேலித் தமிழ் இத்தனை கொடூரமானதா என் சந்தேகத்தையே எழுப்பி விட்டது சுஹாஸினி படத்தில் வைத்திருக்கும் ஸ்லாங்கைப் பார்த்து!

மேட்டுக்குடி, வீர்ர்ரைய்ய்ய்யாயா, எஸ்ஸ்ப்ப்பீபீபீ, ஆஆஆஆ, ப்பக் ப்பக் ப்பக், டன்டன்டன்டன்…. சுஹாஸினியின் அறிவுஜீவித்தனமான இந்த டயலாக்குகள் படத்தில் எத்தனை முறை வருகின்றனவென்று அவர்தான் எண்ணிச் சொல்ல வேண்டும்!

தங்கையைக் கொன்றவனைப் பழிவாங்க, அவன் மனைவியைக் கடத்தி வந்த வீரய்யா, அடுத்த இரண்டு நாட்களில் மாற்றான் மனைவியைப் பெண்டாளத் துடிப்பது, அந்த பாத்திரத்தின் மீதான மரியாதையையே சிதைக்கிறதே… அல்லது வீரய்யா போன்ற பழங்குடிகளுக்கு பாசம், சோகமெல்லாம் கிடையாது… சாவு வீட்டிலும் அழகான பெண்ணைப் பார்த்தால் ரொமான்ஸுக்கு அலைவார்கள் என நிரூபிக்க முயல்கிறார்களா…

அட, கூடப் பிறந்த தம்பியை அதே போலீஸ்காரன் போட்டுத் தள்ளியும் கூட, அவன் மனைவி மீது கொண்ட ஆசையால், அவனைத் தப்பிக்க வைக்கிறான் ஹீரோ என்பதாக வரும் காட்சியை ஏற்க முடியவில்லை.

ரஹ்மான் இசையில், எல்லோரும் ஓஹோவென்று கொண்டாடும் உசுரே போகுதே… பாடல் படத்தில் எந்த பாதிப்பையும் தரவில்லை. அடுத்தவன் மனைவியைக் கடத்தி வந்த சில நிமிடங்களுக்குள், அவள் மீது மோகம் முற்றிப் போய் உசுரே போகுதே என்று பாடுவது எந்த ஊர் நியாயம்? பெருத்த ஏமாற்றம்தான் மிச்சம். பின்னணி இசையும் எதிர்ப்பார்த்தபடி இல்லை. கெடாக்கறி பாட்டு ஓகே. அதென்ன… நாயகனிலிருந்து சொல்லி வைத்த மாதிரி இந்த ரகப் பாடல்களில் எல்லோரும் சகதி பூசிக் கொண்டு ஆடுகிறார்கள்!

எந்தக் காட்சியிலும், இது தமிழகத்தில் நடக்கிற ஒரு சம்பவம் என்ற உணர்வே வரவில்லை. அதுதான் மிகப் பெரிய மைனஸ்.

எத்தனை சிறுபிள்ளைத்தனமான க்ளைமாக்ஸ் பாருங்கள்… பெரும் இக்கட்டிலிருந்து மனைவியைக் கூட்டிக் கொண்டு ரயிலில் ஊருக்குப் போகிறான் கணவன். வழியில் மனைவியின் கற்பைச் சந்தேகிக்கிறான். 14 நாட்கள் அவனுடன் இருந்தாயே… உன்னைத் தொடாமல் விட்டுவைத்திருப்பானா? என்று கேட்க, அங்கேயே சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி இறங்குகிறாள். அங்கிருந்து நேராக விக்ரமிடம் போகிறாள்.. ‘என் கணவன் என்னைச் சந்தேகப்படுகிறான்… என்ன சொன்னாய் அவனிடம்…?’ என்று கேட்க.

இது சாத்தியமா… காட்டில் எங்கோ மறைந்து வாழும் ஒருவன் வீரா… இவளுக்கோ அந்த இடத்தின் வழிகூடத் தெரியாது.. அட போங்கய்யா நீங்களும் உங்க லாஜிக்கும்!

படத்தில் சில நிறைகளும் உண்டு…

அதில் முதலில் நிற்பது சந்தோஷ் சிவனின் அசாதாரண ஒளிப்பதிவு. தமிழில் வேறு எந்தப் படத்திலும் இத்தனை அழகான இயற்கைக் காட்சிகளைப் பார்த்திருக்க முடியாது எனும் அளவுக்கு அருமை. மலைகள், அருவிகள், காட்டு வழிகள், அந்த எரியும் பாலம், ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ராய் அருவியில் விழும் காட்சி என அனைத்தையுமே கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். பார்க்கும் நமக்கே மனசு ஜில்லிடும் அளவு அசத்தலான ஒளிப்பதிவு.

அடுத்து விக்ரமின் நடிப்பு. விக்ரமுக்கு பெரிய ஸ்கோப் இல்லாத பாத்திரம் இது. ஆனால் அதற்காக அவர் உழைத்துள்ள உழைப்பு சாதாரணமானதல்ல. விக்ரம் போன்ற நல்ல கலைஞர்களுக்கு இப்படி நேர்வதும் இயற்கைதான். உண்மையில் விக்ரம் இதைவிடச் சிறப்பான பல ரோல்களில் கலக்கியவர். அவற்றுக்கு முன் வீரா ஒன்றுமேயில்லை.

ஐஸ்வர்யாராயின் தோளில்தான் பெரும்பகுதி சுமையை இயக்குநர் இறக்கி வைத்துள்ளார். க்ளைமாக்ஸ் காட்சி தவிர, மற்ற இடங்களில் ஐஸின் அழகு, அந்த அதிரப்பள்ளி அருவியை விட ஜில்!

பிருத்விராஜ் எதற்காக கத்திக் கொண்டே திரிகிறார்… அவருடன் கார்த்திக் ஏன் குரங்கு சேட்டை பண்ணிக்கொண்டே அலைகிறார் என்பதெல்லாம் இயக்குநருக்கே வெளிச்சம்!

பிருத்விராஜுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், ஜூவாலஜி எதுவுமே ஒர்க் அவுட் ஆகவில்லை. ப்ரியாமணிக்கு தந்திருப்பது சூரப்பனகை வேடம்தான் என்பதைச் சுட்டிக்காட்ட மூக்கைப் பிடித்து ‘அறுத்துவிடட்டுமா’ என்பதெல்லாம்… மணிரத்னம் படமா இது என கேட்க வைக்கிறது.

கம்பீர எண்ட்ரிக்கு காத்திருந்த கார்த்திக்கை காமெடி பீஸாக்கிவிட்டிருக்கிறார் மணி ரத்னம். பிரபுவை மகா குண்டாகக் காட்டியுள்ளார். ஆனாலும் மனிதர் நடிப்பு இயல்பாகவே உள்ளது.

பெரிய பில்டப் தரப்பட்ட ரஞ்சிதாவை ஸ்கிரீனில் தேட வேண்டியிருக்கிறது. ஒரு மசாஜ், ஒரு குளியல் காட்சியுடன் அவர் கதையை முடித்துவிட்டார்கள் போலிருக்கிறது.

இந்தப் படத்தில் மணிரத்னத்தின் பங்களிப்பு என்று எதுவும் இல்லை. தளபதி, நாயகன், பம்பாய் என அவரது முந்தைய படைப்புகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தப் படம் ஒன்றுமே இல்லைதான். ஆனால் படமாக்கப்பட்ட விதம், ஐஸ்வர்யா ராய், விக்ரம் என சில நியாயமான காரணங்களுக்காக ஒருமுறை பார்க்கலாம்!

சாதாரண படம், சில அசாதாரண காட்சியமைப்புகளுடன்!
-கண்ணாடி புத்தகம்.