செவ்வாய், 29 நவம்பர், 2011

மோதிர விரல் நீளமா இருக்கா? அதிர்ஷ்டசாலிதான் நீங்கள் – ஆய்வில் தகவல்!


சிலரைப்பார்த்தால் முகத்தை வைத்து குணாதிசயங்களை கண்டுபிடித்து விடலாம். ஒரு சிலரின் நடை உடை பாவனைகளை வைத்து அவர்களின் குணத்தை கூறிவிடலாம். ஒருசிலர் மச்சத்தை வைத்து சாமுத்திரிகா லட்சணத்தை கூறிவிடுவார்கள். தற்போது கை விரல்களை வைத்து புதிதாக ஆராய்ச்சி செய்து அவர்களின் குணாதிசயங்களை கூறுகின்றனர்.

நோய்களை அறிந்து கொள்ளலாம்

ஆள்காட்டி விரல் மோதிர விரல்களின் அமைப்பினை வைத்து இதயநோய், புற்றுநோய் சளித்தொல்லை போன்ற நோய்களின் பாதிப்பையும் அறிந்து கொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருந்தால் ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் எனப்படும் மூட்டு பாதிப்புகள் வரும் சாத்தியக்கூறு அதிகம்.இதன் மூலம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது தொடர்பான ஆய்வு தீவிரமாக நடந்து வருகிறது.

விரலும் ஆய்வு முடிவும்

ஜெனிவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஆட்காட்டி விரலுக்கும் மோதிர விரலுக்கும் உள்ள விகிதம் பாலின ஹார்மோனுடன் தொடர்பு இருப்பதாக கண்டறிந்துள்ளனர். உடலில் ஆண்மையின் அடையாளங்களை நிர்ணயிக்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவு மிகுந்தால் மோதிர விரல் நீளமாக இருக்கும். ஆள்காட்டி விரல் நீளமாக இருந்தால் ஈஸ்ட்ரோஜென் அதிகம் இருக்குமாம்.

கவர்ச்சிகரமான ஆண்கள்

ஆட்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக உள்ள ஆண்கள் கவர்ச்சி கரமானவர்களாம். இது போன்ற ஆண்களைத்தான் அநேக பெண்கள் விரும்புகின்றனராம். மோதிர விரல் நீளமான ஆண்கள்தான் தங்களின் வாழ்க்கைத் துணையாக வரவேண்டும் என்று எண்ணற்ற பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனராம்.

ஹார்மோன் தூண்டப்படும்

ஆட்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக கொண்ட ஆண்களைப் பார்க்கும் போது பெண்களின் செக்ஸ் ஹார்மோன் அதிகமாக தூண்டப்படுகிறதாம். இதனால் மோதிர விரல் நீளமாக உடைய ஆண்கள் பெண்களுக்கு அதிக கவர்ச்சியானவராக தெரிகின்றனர். இடது கையை விட வலது கையில் மோதிர விரல் நீளமாக இருக்கும் பட்சத்தில் அது வெகுவாக கவர்கிறது என்று ஆய்வுத்தலைவர் காமிலோ பெர்டன்சி தெரிவித்துள்ளார்.

ஆண்மை அதிகரிக்கும்

ஆண்களுக்கு வலது கைதான் முக்கியமானது. இதில் இரண்டாவதாக உள்ள ஆட்காட்டி விரலை விட நான்காவதாக உள்ள மோதிர விரல் நீளமாக இருந்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாம். விரல்களின் நீளத்திற்கும் ஆண்மைக்கும் தொடர்ப்பு இருப்பதாக தென்கொரிய நாட்டு ஆய்வாளர்கள் ஆண்டுகணக்கில் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.

உறவில் உற்சாகம்

150 ஆண்களிடம் மேற்கொண்ட ஆய்வில் ஆட்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருந்த ஆண்களுக்கு ஆண்மைத் தன்மை அதிகமாக இருந்தது தெரியவந்தது. இவர்கள் உறவின் போது தனது துணையை அதிக அளவில் உற்சாகப்படுத்துவார்களாம். அதிக நேரம் உறவில் ஈடுபட்டு துணையை திருப்திபடுத்துவதில் கில்லாடிகளாம் இவர்கள்.

என்ன உங்க கை விரலை இப்பவே சோதனை செய்ய ஆரம்பிச்சிட்டீங்களா?

தங்கம் வாங்க புதியத் திட்டம்!


மும்பை: தங்கம் வாங்க இனிமேல், நகைக்கடைகளுக்குச் சென்று கூட்டத்தில் நெரிபடத் தேவையில்லை. ஏ.டி.எம்-மில் ஒரு பட்டனைத் தட்டினால் போதும் , இரண்டே நிமிடங்களில் இனி தங்கத்தை வாங்கி விடலாம். மும்பையில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு ஷாப்பிங் மகாலில், இந்தத் தங்கம் வழங்கும் ஏ.டி.எம் நிறுவப்பட்டுள்ளது.

10 கிராம் தங்கத்திற்கு 31 ஆயிரம் ரூபாயும், 20 கிராம் வெள்ளிக்கு, ஆயிரத்து 400 ரூபாயும் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவை தவிர, வைரமும் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்போவதாகக் கூறுகிறது அந்தக் கடைத்தொகுதி நிறுவனம்.

தொடுதிரை தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த ஏ.டி.எம் கருவியில், நமக்குத் தேவையான அளவு தங்கத்தைத் தேர்வு செய்து பணம் செலுத்தினால், உடனடியாக தங்கக் கட்டிகளைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் நாடு முழுவதும் 300 தங்க ஏ.டி.எம் கருவிகளை நிறுவப் போவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

2 மாதங்களாக மனித தொண்டை பகுதியில் உயிர் வாழ்ந்த அட்டைப் பூச்சி!


சீனா: சுமார் 4 அங்குலம் நீளமுள்ள அட்டை பூச்சி, 16 வயது நிறம்பிய சிறுவனின் சுவாசக்குழலில் சுமார் 2 மாத காலமாக உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது.

அதனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினர். அங்கிருந்து அகற்றப்பட்ட பிறகும், அது உயிராக இருந்தது.

டோ ஜியாவான் என்ற 16 வயது நிரம்பிய சிறுவன் இரண்டு மாதங்களாக தொண்டை புண்ணால் அவதியுற்றான். அச்சிறுவனின் பெற்றோர் அவனை

மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில், 4 அங்குல நீளமுள்ள அட்டை பூச்சி அவன் தொண்டையில் உயிரோடு

இருப்பதாக கண்டறிந்தனர்.

பின்பு, அறுவை சிகிச்சையின் காரணமாக அச்சிறுவனுக்கு அளித்த மயக்க மருந்தின் மூலம் கூட அது இறக்கவில்லை என்பது மிக ஆச்சரியமான ஒன்று என

மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரோடு அந்த பூச்சி அகற்றப்பட்டது.

விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை!

உணவில் அளவுக்கதிகமாக பயன்படுத்தும் சர்க்கரை மெல்லக்கொல்லும் விஷம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தேநீர், காபி, பழரசங்களில் அளவுக்கதிகமாக சர்க்கரையை சேர்த்துக்கொள்ளவது ஆபத்தானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். சர்க்கரையானது உடலில் ஜீரண சக்தியை பாதிக்கிறது. எண்ணற்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

நாம் அதிக அளவில் உண்ணும் சத்து இல்லாத உணவுகளில் சர்க்கரையும் ஒன்று. சர்க்கரை உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு, உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி மற்றும் சக்தியில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.

ஆபத்தான சர்க்கரை:-

சிகரெட், மது முதலியவற்றைப் போல் சர்க்கரையும் ஆபத்தானது என்றே சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், ரத்த அழுத்தம், சருமநோய்கள், முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக் கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், நீரிழிவு நோய் இப்படி எல்லாநோய்களுக்கும் சர்க்கரையும் ஏதாவது ஒருவிதத்தில் காரணமாகிறது.

சர்க்கரை தேவையில்லை:-

சர்க்கரையை உபயோகிப்பதன் மூலம் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை குறைகிறதாம். புரதச்சத்து அளிக்கப்படுகிறது. வைட்டமின் சி சத்து உறிஞ்சப்படுகிறது. தாது உப்புக்கள் அழிக்கப்படுவதால் உடலானது எளிதாக நோய் தாக்குதலுக்கு ஆளாகும் என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். எனவே நம்முடைய உடலுக்கு சர்க்கரை அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்

நோயாளிகளாக மாறும் குழந்தைகள்:-

குளிர்பானங்கள், செயற்கை உணவு முதலியவைகளில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது. உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள உணவுகளை உண்பதன் மூலம் உடல் குண்டாகிறது. இந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நோயாளியாக உருவாவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இனிப்பும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரித்து விடுவதால், இதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் ரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டு விடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.

புற்றுநோய் கட்டிகள்:-

உடலில் அதிகஅளவு சர்க்கரை இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோனுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கட்டிகளை உருவாக்குவதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

எனவே தினமும் காபி அல்லது தேநீர் பருகும் போது குறைந்த அளவு சர்க்கரையை பயன்படுத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. நம்முடைய உடம்பின் ஆரோக்கியத்தை மெல்லக் கொல்லும் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சனி, 26 நவம்பர், 2011

52 ரூபாய்க்கு ஒரு ஜோடி அடிடாஸ் ஷூ-விரைவில் இந்தியாவில் அறிமுகம்!


பெர்லின்: ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல விளையாட்டு அணிகலன், ஷூக்கள், உபகரண தயாரிப்பாளரான அடிடாஸ் நிறுவனம் ரூ. 52 மட்டுமே விலை கொண்ட மலிவு விலை ஷூவை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.

இதுகுறித்து நிறுவனத்தின் சிஇஓ ஹெர்பர்ட் ஹெய்னர் கூறுகையில், இதை வங்கதேசத்தில் தொடங்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அந்த முயற்சி கை கூடவில்லை. விரைவில் இந்த ஷூவை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருகிறோம்.

இந்தியாவில் உள்ள அத்தனை கிராமங்களிலும் இந்த மலிவு விலை ஷூவை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம். தொடக்க நிகழ்ச்சி நடைபெறும் இடம், எப்போது என்பது இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் இது நடைபெறும் என்றார்.

ஒரு டாலர் விலையிலான இந்த ஷூவானது கடந்த 2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. வளரும் நாடுகளில், குறிப்பாக கிராமப்புற மார்க்கெட்டை குறி வைத்து இந்த ஷூவை களம் இறக்கியுள்ளது அடிடாஸ். சோதனை ரீதியான விற்பனையின்போது 5000, ரூ. 52 ஷூக்களை அடிடாஸ் நிறுவனம் விற்றுள்ளதாம்.

இந்த ஷூவின் விலை 52 ரூபாயாக இருந்தாலும், அதைத் தயாரிக்க தற்போதுஆகும் செலவு மிக அதிகமாகும். எனவே இந்த ஷூவை இந்தியாவிலேயே தயாரித்து விற்க அடிடாஸ் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்புச்செலவைக் குறைக்க அது திட்டமிட்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்து கோல்டுதான் சூப்பர்!


டெல்லி: சர்வதேச அளவில் தங்கத்தை வாங்குவதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. கடந்த15 ஆண்டுகளில் இந்தியாவில் தங்கத்தின் அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளது.

இன்றைய விலை நிலையில் இந்தியாவின் மொத்த தங்க மதிப்பு 24 லட்சம் கோடி. அதாவது இந்திய பட்ஜெட்டை விட இருமடங்கு அதிகம்.

உலகம் முழுவதும் பல நாடுகளிடமிருந்து இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்தாலும், அதிக அளவு வாங்குவது சுவிட்ஸர்லாந்திடமிருந்துதான்.

கடந்த ஆண்டு மட்டும் இந்த நாட்டிலிருந்து ரூ 6 லட்சம் கோடி அளவுக்கு சுவிஸ்ஸிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது இந்தியா. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. உலகின் அனைத்து நாட்டு தங்கமும் ஒரே தரம்தான் என்றாலும், சுவிடஸர்லாந்து தங்கத்தின் ஜொலிப்பு மட்டும் கூடுதலாக இருக்குமாம். இந்த தங்கத்தில் செய்யும் நகைகளின் ஃபினிஷிங் வெகு அழகாக அமையுமாம்.

எனவே வர்த்தகர்கள் அதிகமாக சுவிட்ஸர்லாந்து தங்கத்தையே நாடுகிறார்கள்.

சுவிட்ஸர்லாந்துக்கு அடுத்து அதிக அளவு இந்தியா தங்கம் வாங்கும் நாடு தென் ஆப்ரிக்கா. அதற்கு அடுத்த இடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு.

சர்வதேச அளவில் தங்க இருப்பு வைப்பதில், அமெரிக்காதான் வழக்கம்போல முதலிடத்தில் உள்ளது. ஆனால் தங்க மார்க்கெட்டைக் கட்டுப்படுத்துவதில் படிப்படியாக வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்.

1970-ல் மொத்த தங்க மார்க்கெட்டில் 47 சதவீதம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வசமிருந்தது. ஆனால் 2010-ல் இது 27 சதவீதமாக சுருங்கிப் போனது.

ஆனால் 1970-ல் 35 சதவீத மார்க்கெட் ஆதிக்கம் கொண்டிருந்த இந்தியாவும் கிழக்கு ஆசியாவும், இப்போது 58 சதவீதத்தை கைவசம் வைத்துள்ளன. இது உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள தகவல்.

அமெரிக்காவில் 15-ல் ஒருவர் ஏழை! - கணக்கெடுப்பில் தகவல்!


வாஷிங்டன்: அமெரிக்காவில் ஏழை எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி அமெரிக்காவில் 15 பேருக்கு ஒருவர் ஏழைகளாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றிற்கு நான்கு பேர் உள்ள குடும்பத்தினரின் ஆண்டு வருமானம் 11 ஆயிரத்து 157 டாலராகவும் , தனிநபரின் ஆண்டு வருமானம் ஐந்தாயிரத்து 570 டாலருக்‌கு கீழே உள்ளவர்கள் வறுமைக்‌கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1990-ம் ஆண்டிற்கு பின்னர் தான் அமெரிக்காவில் வேலைவாய்‌ப்பின்மை என்பது அதிகரித்து வந்துள்ளது என்றும், தொழிற்துறை நகரங்களான டெட்ராய்ட், கிராண்ட் ரேபிட், ஓ‌ஹியோ, ஆகிய இடங்களில் வறுமை நிலை தொடர்ந்து நீடித்து வருவதாகவும், லாஸ்வேகாஸ், கேப்கோரல், கலிபோர்னியா பகுதிகளில் ‌வேலைவாயப்பு வசதி இல்லாததால் வீடுகளின் மதிப்பு மற்றும் கட்டுமான பணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த 2000 மாவது ஆண்டிற்கு பின்னர்தான அங்கு ஏழைகளின் எண்ணிக்கை 41 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 40 க்கும் மேற்பட்ட மாவட்டங்களை கொண்டதாக திகழும் கொலம்பியா மாகாணத்தில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இங்கு 10.7 சதவீதத்தினர் வறுமையில் வாடுவதாகவும், மற்ற மாகாணங்களான மிஸிஸிப்பி, நியூமெக்‌சி‌கோ, நெவாடா ஆகியவற்றில் 4.6 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.

இந்த கணக்கெடுப்பின்படி சுமார் 20.5 மில்லியன் அமெரிக்க மக்கள் அதாவது நாட்டின் மக்கள் தொகையில் 6.7 சதவீதத்தினர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதாகவும், 50 சதவீதம் பேர் வறுமைக்கோட்டில் வசிப்பதாகவும் தெரிவிக்‌கப்பட்டுள்ளது. இந்த புதிய கணக்கெடுப்பு விவரங்கள் அமெரிக்காவை கவலை கொள்ள வைத்துள்ளது.

இதை படித்த பின்பாவது வீண் ஜம்பத்திற்காக அமெரிக்கா செல்லவேண்டும் என்ற எண்ணத்தை நம் இந்திய இளைஞர்கள் கைவிடுவார்களா?

வெள்ளி, 25 நவம்பர், 2011

தேவை ஒரு தேசிய அடையாள அட்டை ஆர்வத்தை கிளப்பியுள்ள ஆதார் அட்டை!


நாடு முழுவதும் அனைவருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. ஏற்கனவே குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வருமானவரி கணக்கு அட்டை என நாடு முழுவதும் ஒரே மாதிரியான அடையாள அட்டைகள் இருந்தாலும் அவை ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணமாக இல்லை. அதிலும் குடும்ப அட்டை போன்றவற்றை பலர் சொந்த ஊரில் ஒன்று, பிழைக்கும் ஊரில் ஒன்று என்று வைத்திருக்கிறார்கள்.

அதிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிமுகமான பிறகு வெளியூரில் உள்ள சொந்தக்காரர்களுக்கு எல்லாம் குடும்ப அட்டை வாங்கி வைத்திருக்கிறார்கள் அரசியல் பிரமுகர்கள். இது போன்ற காரணங்களால் அரசின் திட்டங்களை சிலர் மட்டுமே பலமுறை அனுபவிக்கும் நிலைமை நீடிக்கிறது. அதுமட்டுமின்றி ஊரின், நாட்டின் உண்மையான மக்கள் தொகை கணக்கு தெரியாத நிலை. இதற்கெல்லாம் மாற்றாகதான் தேசிய அடையாள அட்டை இருக்கும்.

காரணம் தேசிய அடையாள அட்டையில் வெறும், பெயர், முகவரி, புகைப்படும் மட்டுமின்றி அடையாள அட்டைக்கு உரியவரின் கை விரல்களின் ரேகை, கருவிழி ஆகியவை பதியப்படும். இதன் மூலம் ஒரே ஆள் பல அட்டைகள் பெறுவது முற்றிலுமாக தடுக்கப்படும். இந்த அட்டையை வழங்க ஒரேமாதிரியான அடையாளத்திற்கான இந்திய தேசிய ஆணையம் (யுஐடிஏஐ) என்ற நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஃபோசிஸ் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த நந்தன் நீல்கனி இந்த ஆணையத்தின் தலைவராக இருக்கிறார்.

நீண்ட நாள் விவாதத்தில் இருந்த இந்த விவகாரம், சரியாக 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய அடையாள அட்டையை வழங்கும் பணியை தொடங்கியது. இப்பணி இப்போது நாடு முழுவதும் விரிவடைந்துள்ளது. மாநில அரசுகளுடன் இணைந்து இப்பணி நடைபெறுகிறது. அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கவோ, அடையாள அட்டை பெறவோ கட்டணம் ஏதும் கிடையாது. குடிமகனுக்கு ஆதாரமாக பயன்படுவதால் இதனை ஆதார் அட்டை என்றும், அட்டை ஆணையத்தின் ஆங்கில சுருக்கமாக யுடாய் என்றும் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர்.

அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்துடன், இருப்பிடம், அடையாள சான்றுகளை அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர் நேரில் செல்ல வேண்டும். அவரது இடது கையில் நான்கு விரல்களின் ரேகையும், இரண்டு கைகளின் பெருவிரல் ரேகையும் நகலெடுக்கப்படும். மேலும் கண்ணின் கருவிழியும் பதிவு செய்யப்படும். இவை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. புகைப்படம் எடுக்கப்படும்.

விண்ணப்பங்கள், அடையாள அட்டை வழங்கும் துறைக்கு அனுப்பப்பட்டு அவர்கள் அவற்றை சரிப்பார்த்த பின்னர் அஞ்சலகங்கள் மூலம் வினியோகம் செய்யப்படும். விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்களுக்கு 14 இலக்க வரிசை எண் கொண்ட ஒப்புகை சீட்டு வழங்கப்படும். இந்த எண்ணை கொண்டு விண்ணப்ப பரிசீலனை நிலவரத்தை தெரிந்துக் கொள்ள முடியும். அதற்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 1800-180-1947 என்ற இலவச தொடர்பு எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில்.... அஞ்சல் துறை மூலம் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் பணி அக்டோபர் 25ம் தேதி சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் நவம்பர் 1ம் தேதி முதல் ராஜாஜி சாலை பொது அஞ்சலகம், மயிலாப்பூர், பூங்காநகர், தி.நகர் தலைமை அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டது. மேலும் 21ம் தேதி முதல் மாவட்டத்திற்கு ஒரு தலைமை அஞ்சலகங்களில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கும். பின்னர் படிப்படியாக தமிழகம் முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் இப்பணிகள் விரிவுபடுத்தப்படும். விண்ணப்பித்த 45 முதல் 60 நாட்களுக்குள் அஞ்சல் துறை மூலமாக விண்ணப்பதாரருக்கு அடையாள அட்டை அனுப்பி வைக்க முடியும்.

ஆனால், அதற்கு முன்பே சென்னையில் இந்திய வங்கி கிளைகள் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது. அதையடுத்துதான் அஞ்சல் துறை மூலம் தொடங்கியுள்ளனர். அங்கும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 60 பேர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விரல் ரேகை பதிவு, கருவிழிப்பதிவு, புகைப்படம் எடுத்தல் ஆவணங்களை சரிபார்த்தல் போன்ற பணிகளாலும், அஞ்சலக ஊழியர்களே கூடுதலாக இப்பணியை கவனிக்க வேண்டி உள்ளதால் இந்த நிலைமை.

இப்படி குறைந்த எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் பெற வேண்டிய நிலை, ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் பகுதியில் முழுமையாக அடையாள அட்டையை வழங்க நீண்ட கால அவகாசம் தேவைப்படும். அதிலும் பல இடங்களில் அஞ்சலகங்களை மூடிவிட்டனர். இந்நிலையில், மார்ச் 2012க்கும் தமிழகத்தில் 2 லட்சம் விண்ணப்பங்களை பெற அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.
இதை சரி செய்ய தனியார் நிறுவனங்களையும்,

வேலையில்லா பட்டதாரிகளையும் இப்பணியில் ஈடுபடுத்த ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக சென்னையின் பல்வேறு இடங்களில் இப்பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியுள்ளது. இப்பயிற்சியில் முதல் கட்டமாக 250 பேர் பயிற்சி பெற்று வருகினறனர். அப்பணிகள் முடிந்ததும் முழு அளவில் அடையாள அட்டை வழங்கும் பணி வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதன்மை அட்டை
நாடு முழுவதும் இந்த அடையாள அட்டை வழங்கப்பட்ட பிறகு அரசின் உதவிகள், சலுகைகள் பெற விண்ணப்பிக்க இதுவே முதன்மையான அடையாள அட்டையாக இருக்கும். சமையல் எரியவாயு இணைப்பு பெற, வங்கி கணக்கு தொடங்க, தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை பெற, பள்ளி கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க, வாக்காளர் அடையாள அட்டை பெற, குடும்ப அட்டை பெற அனைத்துக்கும் இதவே முதன்மையான தேவையாக இருக்கும்.

அதுமட்டுமின்றி அடிக்கடி வீடு மாறும்போது குடும்ப அட்டை, எரிவாயு இணைப்புகளை எளிதில் மாற்றிக் கொள்ள உதவியாக இருக்கும் என்கிறார்கள். ரயில்வே டிக்கெட்டுக்கும் தேவைப்படும்! ஆன்லைனில், தட்கலில் ரயில்வே முன்பதிவு செய்ய ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, அரசு வழங்கும் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வருமானவரி நிரந்தர கணக்கு எண், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் புகைப்படத்துடன் கூடிய கணக்குப்புத்தகம் என ஏதாவது ஒரு ஆவணத்தை ரயில்வே கேட்கிறது. தேசிய அடையாள அட்டை வந்தபிறகு ஓரே ஒரு ஆவணமாக பயன்படுத்தப்போவதாக ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால் நாடு முழுவதும் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்திய பிறகு இந்த முடிவு அமலுக்கு வரும்.

அடையாள அட்டையில் என்ன இருக்கும்
தேசிய அடையாள அட்டையின் மேல் புறத்தில் உள்ள புகைப்படம், பெயர், 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் மட்டுமின்றி உள்ளே சிப் ஒன்று இருக்கும். அது 2 பகுதிகளை கொண்டதாக இருக்கும். ஒன்றில் கைரேகைப்பதிவுகள், கருவிழிப்பதிவு, பிறந்த தேதி போன்ற நிரந்தர தகவல்கள் இருக்கும். மாற்ற முடியாது. இன்னொரு பகுதியில் முகவரி, பணி, கல்வித்தகுதி வங்கி கணக்கு எண் போன்றவை இடம் பெற்றிருக்கும். அதனை வேண்டும்போது மாற்றிக் கொள்ளலாம். வங்கி கடன், கையிருப்பு அட்டை போன்று கையளவு அட்டையாக இருக்கும்.

தேவையான ஆவணங்கள்

தேசிய அடையாள அட்டை வாங்க 3 விதமான ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஒன்று அடையாளச் சான்றாகவும், இன்னொன்று முகவரிச் சான்றாகவும், மற்றொன்று வயதுச் சான்றாகவும் இருக்க வேண்டும். சில ஆவணங்கள் மூன்று தேவைக்கும் பொருந்தும். உதாரணமாக பாஸ்போர்ட், குடும்ப அட்டை போன்றவை.

வாக்காளர் அடையாள அட்டை அடையாளம் மற்றும் முகவரி சான்று ஆவணமாக பயன்படும். இவை தவிர அடையாள சான்று ஆவணமாக, வருமானவரி நிரந்தர கணக்கு அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை, வங்கி கணக்குப்புத்தகம், புகைப்படத்துடன் கூடிய வங்கி கடன் அல்லது கையிருப்பு அட்டை, அஞ்சலக அடையாள அட்டை, சான்றளிக்கும் தகுதி உடைய முதல் அல்லது இரண்டாம் நிலை அரசு அதிகாரி வழங்கும் அடையாள அட்டை விவசாய அடையாள அட்டை, தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்ட அடையாள அட்டை,

அரசு நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை, தொலைபேசி மாதாந்திர கட்டண ரசீது, அஞ்சலக கணக்குப்புத்தகம், ஓய்வூதிய அடையாள அட்டை, துப்பாக்கி உரிமம், சுதந்திர போராட்ட வீரர்களுக்கான அடையாள அட்டை, மொழிப்போர் தியாகிகளுக்கான அடையாள அட்டை, மின்வாரிய ரசீது, கடன் அட்டையின் 3 மாத விவர அறிக்கை, சாதி , இருப்பிடச் சான்றிதழ். சொத்து விற்பனை பத்திரம், வருமான வரிமதிப்பீடு என அடையாள சான்றுக்கு 17 ஆவணங்களில் ஒன்றும், முகவரி சான்றுக்கு 28 ஆவணங்களில் ஒன்றும் தரலாம்.

இப்படி குடும்பத்தலைவர், அல்லது பெரியவர் தவிர குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இவற்றில் ஏதாவது ஒரு சான்றை ஆவணமாக பயன்படுத்தாலம். அப்படி இல்லை என்றால் குடும்பத்தலைவர் உட்பட யாராவது ஒருவர் தேசிய அடையாள அட்டையை பெற்றிருந்தால் அதனை ஆவணமாக பயன்படுத்தலாம். - ச.இரகுநாதன்

அதிகாரமிக்க மனிதராக லட்சுமி மிட்டல் தேர்வு


லண்டன்: இங்கிலாந்தில் வசிக்கும் ஆசிய பிராந்தியத்தை சேர்ந்த அதிகாரமிக்க மனிதர்கள் பட்டியலில் லட்சுமி மிட்டல் முதலிடம் பிடித்தார். இங்கிலாந்தில் ஆண்டுதோறும் தொழில், ஆளுகை, திறமை, சொத்து மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு துறைகளின் அதிகாரமிக்க ஆசியர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான (2011) அதிகாரமிக்க தொழிலதிபராக இங்கிலாந்து வாழ் இந்தியரான லட்சுமி மிட்டல் ரூ.1.25 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடம் பிடித்தார். 4வது இடத்தை எஸ்.பி. இந்துஜா மற்றும் ஜி.பி.இந்துஜாவும், 17வது இடத்தை லார்டு சிவராஜ்பாலும் பிடித்தனர். அரசியலில் அதிகாரமிக்கவர்கள் பட்டியலில் லேபர் சட்சியின் எம்.பி. கெய்த்வா 13வது இடத்தை பிடித்தார்.

புதிய முறைப்படி 30 நாட்களுக்குள் பாஸ்போர்ட் பெற வேண்டுமா...


அலைந்து திரிந்து, 6 மாதங்களுக்கு பின்பு பாஸ்போர்ட் வாங்கிய காலமெல்லாம் மலையேறி விட்டது. தற்போது எந்த அலைச்சலுமின்றி, உட்கார்ந்த இடத்திலிருந்தே 30 நாட்களுக்குள் பாஸ்போர்ட் நம் கையில் வந்து சேர்ந்தால் மகிழ்ச்சி தானே!

முன்பெல்லாம் ஒரு பாஸ்போர்ட்டை விண்ணப்பித்து விட்டு, பல மாதங்கள் காத்திருக்க வேண்டியதாய் இருக்கும். ஆனால் புதியதாக நிறுவப்பட்ட 'பாஸ்போர்ட் சேவக்கேந்திரா' என்ற நிறுவனத்தின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து 30 நாட்களுக்குள்ளேயே பெற்று விடலாம்.

இதுகுறித்து, ரீஜினல் பாஸ்போர்ட் அதிகாரி கே. ஸ்ரீகர் ரெட்டி கூறுகையில், 'வழக்கமாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது, வண்ணப்பதாரரின் ஆவணங்கள் அனைத்தும், காவல்துறை அதிகாரிகளின் சரிபார்த்தலுக்காக அஞ்சல் முறையில் அனுப்பப் படும். அதனால், அதிக நாட்கள் ஆகும். ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய முறையின்படி, அனைத்தும் ஆன்லைன் முறை என்பதால் பாஸ்போர்ட்டினை கையில் பெற அதிகப்பட்சமாகவே 30 நாட்கள் தான் ஆகும்' என்று கூறினார்.

மேலும் இதுகுறித்த எந்த கேள்வியையும், www.passportindia.gov.in என்ற இடிணயதளம் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

விக்கிபீடியாவுக்கு கூகுள் நிறுவனர் ரூ. 2.5 கோடி நிதியுதவி!


வாஷிங்டன்: விக்கிபீடியா ஆன்லைன் கலைக்களஞ்சிய இணையத்தளத்துக்கு ரூ. 2.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார் கூகுள் இணையத்தளத்தின் இணை நிறுவனரான செர்கே பிரின்.

செர்கேயும் அவரது மனைவி ஆன் வோசிகியும் இணைந்து உருவாக்கியுள்ள பிரின்-வோசிகி அறக்கட்டளை மூலமாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்ட விக்கிபீடியா, இந்த வாரம் தான் தனது வருடாந்திர நிதி திரட்டும் பணியைத் துவக்கியது.

விக்கிபீடியா மற்றும் அதன் இணைத்தளங்கள் தான் இன்டர்நெட்டில் மிக அதிகமாகப் பார்க்கப்படும் 5வது இணையங்களாகும்.

தமிழ் உள்பட 280க்கும் அதிகமான மொழிகளில் விக்கிபீடியா இயங்குகிறது. உலகெங்கும் சுமார் 1 லட்சம் ஆர்வலர்கள் தான் இந்தத் தளத்தில் பதிவுகளை ஏற்றுகின்றனர். விக்கிபீடியா நிறுவனத்தில் நேரடியாக பணியில் உள்ளவர்கள் வெறும் 95 ஊழியர்கள் மட்டுமே.

இந்த இணையத்தளத்தில் விளம்பரங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் நன்கொடைகளை நம்பியே இந்த நிறுவனம் இயங்க வேண்டியுள்ளது.