சனி, 31 டிசம்பர், 2011

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2012

வாசகர்கள் அனைவருக்கும் கண்ணாடி புத்தகத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2012

செவ்வாய், 29 நவம்பர், 2011

மோதிர விரல் நீளமா இருக்கா? அதிர்ஷ்டசாலிதான் நீங்கள் – ஆய்வில் தகவல்!


சிலரைப்பார்த்தால் முகத்தை வைத்து குணாதிசயங்களை கண்டுபிடித்து விடலாம். ஒரு சிலரின் நடை உடை பாவனைகளை வைத்து அவர்களின் குணத்தை கூறிவிடலாம். ஒருசிலர் மச்சத்தை வைத்து சாமுத்திரிகா லட்சணத்தை கூறிவிடுவார்கள். தற்போது கை விரல்களை வைத்து புதிதாக ஆராய்ச்சி செய்து அவர்களின் குணாதிசயங்களை கூறுகின்றனர்.

நோய்களை அறிந்து கொள்ளலாம்

ஆள்காட்டி விரல் மோதிர விரல்களின் அமைப்பினை வைத்து இதயநோய், புற்றுநோய் சளித்தொல்லை போன்ற நோய்களின் பாதிப்பையும் அறிந்து கொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருந்தால் ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் எனப்படும் மூட்டு பாதிப்புகள் வரும் சாத்தியக்கூறு அதிகம்.இதன் மூலம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது தொடர்பான ஆய்வு தீவிரமாக நடந்து வருகிறது.

விரலும் ஆய்வு முடிவும்

ஜெனிவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஆட்காட்டி விரலுக்கும் மோதிர விரலுக்கும் உள்ள விகிதம் பாலின ஹார்மோனுடன் தொடர்பு இருப்பதாக கண்டறிந்துள்ளனர். உடலில் ஆண்மையின் அடையாளங்களை நிர்ணயிக்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவு மிகுந்தால் மோதிர விரல் நீளமாக இருக்கும். ஆள்காட்டி விரல் நீளமாக இருந்தால் ஈஸ்ட்ரோஜென் அதிகம் இருக்குமாம்.

கவர்ச்சிகரமான ஆண்கள்

ஆட்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக உள்ள ஆண்கள் கவர்ச்சி கரமானவர்களாம். இது போன்ற ஆண்களைத்தான் அநேக பெண்கள் விரும்புகின்றனராம். மோதிர விரல் நீளமான ஆண்கள்தான் தங்களின் வாழ்க்கைத் துணையாக வரவேண்டும் என்று எண்ணற்ற பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனராம்.

ஹார்மோன் தூண்டப்படும்

ஆட்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக கொண்ட ஆண்களைப் பார்க்கும் போது பெண்களின் செக்ஸ் ஹார்மோன் அதிகமாக தூண்டப்படுகிறதாம். இதனால் மோதிர விரல் நீளமாக உடைய ஆண்கள் பெண்களுக்கு அதிக கவர்ச்சியானவராக தெரிகின்றனர். இடது கையை விட வலது கையில் மோதிர விரல் நீளமாக இருக்கும் பட்சத்தில் அது வெகுவாக கவர்கிறது என்று ஆய்வுத்தலைவர் காமிலோ பெர்டன்சி தெரிவித்துள்ளார்.

ஆண்மை அதிகரிக்கும்

ஆண்களுக்கு வலது கைதான் முக்கியமானது. இதில் இரண்டாவதாக உள்ள ஆட்காட்டி விரலை விட நான்காவதாக உள்ள மோதிர விரல் நீளமாக இருந்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாம். விரல்களின் நீளத்திற்கும் ஆண்மைக்கும் தொடர்ப்பு இருப்பதாக தென்கொரிய நாட்டு ஆய்வாளர்கள் ஆண்டுகணக்கில் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.

உறவில் உற்சாகம்

150 ஆண்களிடம் மேற்கொண்ட ஆய்வில் ஆட்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருந்த ஆண்களுக்கு ஆண்மைத் தன்மை அதிகமாக இருந்தது தெரியவந்தது. இவர்கள் உறவின் போது தனது துணையை அதிக அளவில் உற்சாகப்படுத்துவார்களாம். அதிக நேரம் உறவில் ஈடுபட்டு துணையை திருப்திபடுத்துவதில் கில்லாடிகளாம் இவர்கள்.

என்ன உங்க கை விரலை இப்பவே சோதனை செய்ய ஆரம்பிச்சிட்டீங்களா?

தங்கம் வாங்க புதியத் திட்டம்!


மும்பை: தங்கம் வாங்க இனிமேல், நகைக்கடைகளுக்குச் சென்று கூட்டத்தில் நெரிபடத் தேவையில்லை. ஏ.டி.எம்-மில் ஒரு பட்டனைத் தட்டினால் போதும் , இரண்டே நிமிடங்களில் இனி தங்கத்தை வாங்கி விடலாம். மும்பையில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு ஷாப்பிங் மகாலில், இந்தத் தங்கம் வழங்கும் ஏ.டி.எம் நிறுவப்பட்டுள்ளது.

10 கிராம் தங்கத்திற்கு 31 ஆயிரம் ரூபாயும், 20 கிராம் வெள்ளிக்கு, ஆயிரத்து 400 ரூபாயும் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவை தவிர, வைரமும் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்போவதாகக் கூறுகிறது அந்தக் கடைத்தொகுதி நிறுவனம்.

தொடுதிரை தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த ஏ.டி.எம் கருவியில், நமக்குத் தேவையான அளவு தங்கத்தைத் தேர்வு செய்து பணம் செலுத்தினால், உடனடியாக தங்கக் கட்டிகளைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் நாடு முழுவதும் 300 தங்க ஏ.டி.எம் கருவிகளை நிறுவப் போவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

2 மாதங்களாக மனித தொண்டை பகுதியில் உயிர் வாழ்ந்த அட்டைப் பூச்சி!


சீனா: சுமார் 4 அங்குலம் நீளமுள்ள அட்டை பூச்சி, 16 வயது நிறம்பிய சிறுவனின் சுவாசக்குழலில் சுமார் 2 மாத காலமாக உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது.

அதனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினர். அங்கிருந்து அகற்றப்பட்ட பிறகும், அது உயிராக இருந்தது.

டோ ஜியாவான் என்ற 16 வயது நிரம்பிய சிறுவன் இரண்டு மாதங்களாக தொண்டை புண்ணால் அவதியுற்றான். அச்சிறுவனின் பெற்றோர் அவனை

மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில், 4 அங்குல நீளமுள்ள அட்டை பூச்சி அவன் தொண்டையில் உயிரோடு

இருப்பதாக கண்டறிந்தனர்.

பின்பு, அறுவை சிகிச்சையின் காரணமாக அச்சிறுவனுக்கு அளித்த மயக்க மருந்தின் மூலம் கூட அது இறக்கவில்லை என்பது மிக ஆச்சரியமான ஒன்று என

மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரோடு அந்த பூச்சி அகற்றப்பட்டது.

விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை!

உணவில் அளவுக்கதிகமாக பயன்படுத்தும் சர்க்கரை மெல்லக்கொல்லும் விஷம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தேநீர், காபி, பழரசங்களில் அளவுக்கதிகமாக சர்க்கரையை சேர்த்துக்கொள்ளவது ஆபத்தானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். சர்க்கரையானது உடலில் ஜீரண சக்தியை பாதிக்கிறது. எண்ணற்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

நாம் அதிக அளவில் உண்ணும் சத்து இல்லாத உணவுகளில் சர்க்கரையும் ஒன்று. சர்க்கரை உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு, உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி மற்றும் சக்தியில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.

ஆபத்தான சர்க்கரை:-

சிகரெட், மது முதலியவற்றைப் போல் சர்க்கரையும் ஆபத்தானது என்றே சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், ரத்த அழுத்தம், சருமநோய்கள், முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக் கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், நீரிழிவு நோய் இப்படி எல்லாநோய்களுக்கும் சர்க்கரையும் ஏதாவது ஒருவிதத்தில் காரணமாகிறது.

சர்க்கரை தேவையில்லை:-

சர்க்கரையை உபயோகிப்பதன் மூலம் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை குறைகிறதாம். புரதச்சத்து அளிக்கப்படுகிறது. வைட்டமின் சி சத்து உறிஞ்சப்படுகிறது. தாது உப்புக்கள் அழிக்கப்படுவதால் உடலானது எளிதாக நோய் தாக்குதலுக்கு ஆளாகும் என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். எனவே நம்முடைய உடலுக்கு சர்க்கரை அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்

நோயாளிகளாக மாறும் குழந்தைகள்:-

குளிர்பானங்கள், செயற்கை உணவு முதலியவைகளில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது. உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள உணவுகளை உண்பதன் மூலம் உடல் குண்டாகிறது. இந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நோயாளியாக உருவாவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இனிப்பும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரித்து விடுவதால், இதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் ரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டு விடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.

புற்றுநோய் கட்டிகள்:-

உடலில் அதிகஅளவு சர்க்கரை இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோனுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கட்டிகளை உருவாக்குவதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

எனவே தினமும் காபி அல்லது தேநீர் பருகும் போது குறைந்த அளவு சர்க்கரையை பயன்படுத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. நம்முடைய உடம்பின் ஆரோக்கியத்தை மெல்லக் கொல்லும் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சனி, 26 நவம்பர், 2011

52 ரூபாய்க்கு ஒரு ஜோடி அடிடாஸ் ஷூ-விரைவில் இந்தியாவில் அறிமுகம்!


பெர்லின்: ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல விளையாட்டு அணிகலன், ஷூக்கள், உபகரண தயாரிப்பாளரான அடிடாஸ் நிறுவனம் ரூ. 52 மட்டுமே விலை கொண்ட மலிவு விலை ஷூவை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.

இதுகுறித்து நிறுவனத்தின் சிஇஓ ஹெர்பர்ட் ஹெய்னர் கூறுகையில், இதை வங்கதேசத்தில் தொடங்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அந்த முயற்சி கை கூடவில்லை. விரைவில் இந்த ஷூவை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருகிறோம்.

இந்தியாவில் உள்ள அத்தனை கிராமங்களிலும் இந்த மலிவு விலை ஷூவை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம். தொடக்க நிகழ்ச்சி நடைபெறும் இடம், எப்போது என்பது இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் இது நடைபெறும் என்றார்.

ஒரு டாலர் விலையிலான இந்த ஷூவானது கடந்த 2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. வளரும் நாடுகளில், குறிப்பாக கிராமப்புற மார்க்கெட்டை குறி வைத்து இந்த ஷூவை களம் இறக்கியுள்ளது அடிடாஸ். சோதனை ரீதியான விற்பனையின்போது 5000, ரூ. 52 ஷூக்களை அடிடாஸ் நிறுவனம் விற்றுள்ளதாம்.

இந்த ஷூவின் விலை 52 ரூபாயாக இருந்தாலும், அதைத் தயாரிக்க தற்போதுஆகும் செலவு மிக அதிகமாகும். எனவே இந்த ஷூவை இந்தியாவிலேயே தயாரித்து விற்க அடிடாஸ் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்புச்செலவைக் குறைக்க அது திட்டமிட்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்து கோல்டுதான் சூப்பர்!


டெல்லி: சர்வதேச அளவில் தங்கத்தை வாங்குவதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. கடந்த15 ஆண்டுகளில் இந்தியாவில் தங்கத்தின் அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளது.

இன்றைய விலை நிலையில் இந்தியாவின் மொத்த தங்க மதிப்பு 24 லட்சம் கோடி. அதாவது இந்திய பட்ஜெட்டை விட இருமடங்கு அதிகம்.

உலகம் முழுவதும் பல நாடுகளிடமிருந்து இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்தாலும், அதிக அளவு வாங்குவது சுவிட்ஸர்லாந்திடமிருந்துதான்.

கடந்த ஆண்டு மட்டும் இந்த நாட்டிலிருந்து ரூ 6 லட்சம் கோடி அளவுக்கு சுவிஸ்ஸிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது இந்தியா. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. உலகின் அனைத்து நாட்டு தங்கமும் ஒரே தரம்தான் என்றாலும், சுவிடஸர்லாந்து தங்கத்தின் ஜொலிப்பு மட்டும் கூடுதலாக இருக்குமாம். இந்த தங்கத்தில் செய்யும் நகைகளின் ஃபினிஷிங் வெகு அழகாக அமையுமாம்.

எனவே வர்த்தகர்கள் அதிகமாக சுவிட்ஸர்லாந்து தங்கத்தையே நாடுகிறார்கள்.

சுவிட்ஸர்லாந்துக்கு அடுத்து அதிக அளவு இந்தியா தங்கம் வாங்கும் நாடு தென் ஆப்ரிக்கா. அதற்கு அடுத்த இடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு.

சர்வதேச அளவில் தங்க இருப்பு வைப்பதில், அமெரிக்காதான் வழக்கம்போல முதலிடத்தில் உள்ளது. ஆனால் தங்க மார்க்கெட்டைக் கட்டுப்படுத்துவதில் படிப்படியாக வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்.

1970-ல் மொத்த தங்க மார்க்கெட்டில் 47 சதவீதம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வசமிருந்தது. ஆனால் 2010-ல் இது 27 சதவீதமாக சுருங்கிப் போனது.

ஆனால் 1970-ல் 35 சதவீத மார்க்கெட் ஆதிக்கம் கொண்டிருந்த இந்தியாவும் கிழக்கு ஆசியாவும், இப்போது 58 சதவீதத்தை கைவசம் வைத்துள்ளன. இது உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள தகவல்.

அமெரிக்காவில் 15-ல் ஒருவர் ஏழை! - கணக்கெடுப்பில் தகவல்!


வாஷிங்டன்: அமெரிக்காவில் ஏழை எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி அமெரிக்காவில் 15 பேருக்கு ஒருவர் ஏழைகளாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றிற்கு நான்கு பேர் உள்ள குடும்பத்தினரின் ஆண்டு வருமானம் 11 ஆயிரத்து 157 டாலராகவும் , தனிநபரின் ஆண்டு வருமானம் ஐந்தாயிரத்து 570 டாலருக்‌கு கீழே உள்ளவர்கள் வறுமைக்‌கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1990-ம் ஆண்டிற்கு பின்னர் தான் அமெரிக்காவில் வேலைவாய்‌ப்பின்மை என்பது அதிகரித்து வந்துள்ளது என்றும், தொழிற்துறை நகரங்களான டெட்ராய்ட், கிராண்ட் ரேபிட், ஓ‌ஹியோ, ஆகிய இடங்களில் வறுமை நிலை தொடர்ந்து நீடித்து வருவதாகவும், லாஸ்வேகாஸ், கேப்கோரல், கலிபோர்னியா பகுதிகளில் ‌வேலைவாயப்பு வசதி இல்லாததால் வீடுகளின் மதிப்பு மற்றும் கட்டுமான பணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த 2000 மாவது ஆண்டிற்கு பின்னர்தான அங்கு ஏழைகளின் எண்ணிக்கை 41 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 40 க்கும் மேற்பட்ட மாவட்டங்களை கொண்டதாக திகழும் கொலம்பியா மாகாணத்தில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இங்கு 10.7 சதவீதத்தினர் வறுமையில் வாடுவதாகவும், மற்ற மாகாணங்களான மிஸிஸிப்பி, நியூமெக்‌சி‌கோ, நெவாடா ஆகியவற்றில் 4.6 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.

இந்த கணக்கெடுப்பின்படி சுமார் 20.5 மில்லியன் அமெரிக்க மக்கள் அதாவது நாட்டின் மக்கள் தொகையில் 6.7 சதவீதத்தினர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதாகவும், 50 சதவீதம் பேர் வறுமைக்கோட்டில் வசிப்பதாகவும் தெரிவிக்‌கப்பட்டுள்ளது. இந்த புதிய கணக்கெடுப்பு விவரங்கள் அமெரிக்காவை கவலை கொள்ள வைத்துள்ளது.

இதை படித்த பின்பாவது வீண் ஜம்பத்திற்காக அமெரிக்கா செல்லவேண்டும் என்ற எண்ணத்தை நம் இந்திய இளைஞர்கள் கைவிடுவார்களா?

வெள்ளி, 25 நவம்பர், 2011

தேவை ஒரு தேசிய அடையாள அட்டை ஆர்வத்தை கிளப்பியுள்ள ஆதார் அட்டை!


நாடு முழுவதும் அனைவருக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. ஏற்கனவே குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வருமானவரி கணக்கு அட்டை என நாடு முழுவதும் ஒரே மாதிரியான அடையாள அட்டைகள் இருந்தாலும் அவை ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணமாக இல்லை. அதிலும் குடும்ப அட்டை போன்றவற்றை பலர் சொந்த ஊரில் ஒன்று, பிழைக்கும் ஊரில் ஒன்று என்று வைத்திருக்கிறார்கள்.

அதிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிமுகமான பிறகு வெளியூரில் உள்ள சொந்தக்காரர்களுக்கு எல்லாம் குடும்ப அட்டை வாங்கி வைத்திருக்கிறார்கள் அரசியல் பிரமுகர்கள். இது போன்ற காரணங்களால் அரசின் திட்டங்களை சிலர் மட்டுமே பலமுறை அனுபவிக்கும் நிலைமை நீடிக்கிறது. அதுமட்டுமின்றி ஊரின், நாட்டின் உண்மையான மக்கள் தொகை கணக்கு தெரியாத நிலை. இதற்கெல்லாம் மாற்றாகதான் தேசிய அடையாள அட்டை இருக்கும்.

காரணம் தேசிய அடையாள அட்டையில் வெறும், பெயர், முகவரி, புகைப்படும் மட்டுமின்றி அடையாள அட்டைக்கு உரியவரின் கை விரல்களின் ரேகை, கருவிழி ஆகியவை பதியப்படும். இதன் மூலம் ஒரே ஆள் பல அட்டைகள் பெறுவது முற்றிலுமாக தடுக்கப்படும். இந்த அட்டையை வழங்க ஒரேமாதிரியான அடையாளத்திற்கான இந்திய தேசிய ஆணையம் (யுஐடிஏஐ) என்ற நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஃபோசிஸ் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த நந்தன் நீல்கனி இந்த ஆணையத்தின் தலைவராக இருக்கிறார்.

நீண்ட நாள் விவாதத்தில் இருந்த இந்த விவகாரம், சரியாக 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய அடையாள அட்டையை வழங்கும் பணியை தொடங்கியது. இப்பணி இப்போது நாடு முழுவதும் விரிவடைந்துள்ளது. மாநில அரசுகளுடன் இணைந்து இப்பணி நடைபெறுகிறது. அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கவோ, அடையாள அட்டை பெறவோ கட்டணம் ஏதும் கிடையாது. குடிமகனுக்கு ஆதாரமாக பயன்படுவதால் இதனை ஆதார் அட்டை என்றும், அட்டை ஆணையத்தின் ஆங்கில சுருக்கமாக யுடாய் என்றும் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர்.

அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்துடன், இருப்பிடம், அடையாள சான்றுகளை அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர் நேரில் செல்ல வேண்டும். அவரது இடது கையில் நான்கு விரல்களின் ரேகையும், இரண்டு கைகளின் பெருவிரல் ரேகையும் நகலெடுக்கப்படும். மேலும் கண்ணின் கருவிழியும் பதிவு செய்யப்படும். இவை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. புகைப்படம் எடுக்கப்படும்.

விண்ணப்பங்கள், அடையாள அட்டை வழங்கும் துறைக்கு அனுப்பப்பட்டு அவர்கள் அவற்றை சரிப்பார்த்த பின்னர் அஞ்சலகங்கள் மூலம் வினியோகம் செய்யப்படும். விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்களுக்கு 14 இலக்க வரிசை எண் கொண்ட ஒப்புகை சீட்டு வழங்கப்படும். இந்த எண்ணை கொண்டு விண்ணப்ப பரிசீலனை நிலவரத்தை தெரிந்துக் கொள்ள முடியும். அதற்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 1800-180-1947 என்ற இலவச தொடர்பு எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில்.... அஞ்சல் துறை மூலம் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் பணி அக்டோபர் 25ம் தேதி சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் நவம்பர் 1ம் தேதி முதல் ராஜாஜி சாலை பொது அஞ்சலகம், மயிலாப்பூர், பூங்காநகர், தி.நகர் தலைமை அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டது. மேலும் 21ம் தேதி முதல் மாவட்டத்திற்கு ஒரு தலைமை அஞ்சலகங்களில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கும். பின்னர் படிப்படியாக தமிழகம் முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் இப்பணிகள் விரிவுபடுத்தப்படும். விண்ணப்பித்த 45 முதல் 60 நாட்களுக்குள் அஞ்சல் துறை மூலமாக விண்ணப்பதாரருக்கு அடையாள அட்டை அனுப்பி வைக்க முடியும்.

ஆனால், அதற்கு முன்பே சென்னையில் இந்திய வங்கி கிளைகள் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது. அதையடுத்துதான் அஞ்சல் துறை மூலம் தொடங்கியுள்ளனர். அங்கும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 60 பேர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விரல் ரேகை பதிவு, கருவிழிப்பதிவு, புகைப்படம் எடுத்தல் ஆவணங்களை சரிபார்த்தல் போன்ற பணிகளாலும், அஞ்சலக ஊழியர்களே கூடுதலாக இப்பணியை கவனிக்க வேண்டி உள்ளதால் இந்த நிலைமை.

இப்படி குறைந்த எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் பெற வேண்டிய நிலை, ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் பகுதியில் முழுமையாக அடையாள அட்டையை வழங்க நீண்ட கால அவகாசம் தேவைப்படும். அதிலும் பல இடங்களில் அஞ்சலகங்களை மூடிவிட்டனர். இந்நிலையில், மார்ச் 2012க்கும் தமிழகத்தில் 2 லட்சம் விண்ணப்பங்களை பெற அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.
இதை சரி செய்ய தனியார் நிறுவனங்களையும்,

வேலையில்லா பட்டதாரிகளையும் இப்பணியில் ஈடுபடுத்த ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக சென்னையின் பல்வேறு இடங்களில் இப்பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியுள்ளது. இப்பயிற்சியில் முதல் கட்டமாக 250 பேர் பயிற்சி பெற்று வருகினறனர். அப்பணிகள் முடிந்ததும் முழு அளவில் அடையாள அட்டை வழங்கும் பணி வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதன்மை அட்டை
நாடு முழுவதும் இந்த அடையாள அட்டை வழங்கப்பட்ட பிறகு அரசின் உதவிகள், சலுகைகள் பெற விண்ணப்பிக்க இதுவே முதன்மையான அடையாள அட்டையாக இருக்கும். சமையல் எரியவாயு இணைப்பு பெற, வங்கி கணக்கு தொடங்க, தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை பெற, பள்ளி கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க, வாக்காளர் அடையாள அட்டை பெற, குடும்ப அட்டை பெற அனைத்துக்கும் இதவே முதன்மையான தேவையாக இருக்கும்.

அதுமட்டுமின்றி அடிக்கடி வீடு மாறும்போது குடும்ப அட்டை, எரிவாயு இணைப்புகளை எளிதில் மாற்றிக் கொள்ள உதவியாக இருக்கும் என்கிறார்கள். ரயில்வே டிக்கெட்டுக்கும் தேவைப்படும்! ஆன்லைனில், தட்கலில் ரயில்வே முன்பதிவு செய்ய ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, அரசு வழங்கும் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வருமானவரி நிரந்தர கணக்கு எண், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் புகைப்படத்துடன் கூடிய கணக்குப்புத்தகம் என ஏதாவது ஒரு ஆவணத்தை ரயில்வே கேட்கிறது. தேசிய அடையாள அட்டை வந்தபிறகு ஓரே ஒரு ஆவணமாக பயன்படுத்தப்போவதாக ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால் நாடு முழுவதும் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்திய பிறகு இந்த முடிவு அமலுக்கு வரும்.

அடையாள அட்டையில் என்ன இருக்கும்
தேசிய அடையாள அட்டையின் மேல் புறத்தில் உள்ள புகைப்படம், பெயர், 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் மட்டுமின்றி உள்ளே சிப் ஒன்று இருக்கும். அது 2 பகுதிகளை கொண்டதாக இருக்கும். ஒன்றில் கைரேகைப்பதிவுகள், கருவிழிப்பதிவு, பிறந்த தேதி போன்ற நிரந்தர தகவல்கள் இருக்கும். மாற்ற முடியாது. இன்னொரு பகுதியில் முகவரி, பணி, கல்வித்தகுதி வங்கி கணக்கு எண் போன்றவை இடம் பெற்றிருக்கும். அதனை வேண்டும்போது மாற்றிக் கொள்ளலாம். வங்கி கடன், கையிருப்பு அட்டை போன்று கையளவு அட்டையாக இருக்கும்.

தேவையான ஆவணங்கள்

தேசிய அடையாள அட்டை வாங்க 3 விதமான ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஒன்று அடையாளச் சான்றாகவும், இன்னொன்று முகவரிச் சான்றாகவும், மற்றொன்று வயதுச் சான்றாகவும் இருக்க வேண்டும். சில ஆவணங்கள் மூன்று தேவைக்கும் பொருந்தும். உதாரணமாக பாஸ்போர்ட், குடும்ப அட்டை போன்றவை.

வாக்காளர் அடையாள அட்டை அடையாளம் மற்றும் முகவரி சான்று ஆவணமாக பயன்படும். இவை தவிர அடையாள சான்று ஆவணமாக, வருமானவரி நிரந்தர கணக்கு அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை, வங்கி கணக்குப்புத்தகம், புகைப்படத்துடன் கூடிய வங்கி கடன் அல்லது கையிருப்பு அட்டை, அஞ்சலக அடையாள அட்டை, சான்றளிக்கும் தகுதி உடைய முதல் அல்லது இரண்டாம் நிலை அரசு அதிகாரி வழங்கும் அடையாள அட்டை விவசாய அடையாள அட்டை, தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்ட அடையாள அட்டை,

அரசு நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை, தொலைபேசி மாதாந்திர கட்டண ரசீது, அஞ்சலக கணக்குப்புத்தகம், ஓய்வூதிய அடையாள அட்டை, துப்பாக்கி உரிமம், சுதந்திர போராட்ட வீரர்களுக்கான அடையாள அட்டை, மொழிப்போர் தியாகிகளுக்கான அடையாள அட்டை, மின்வாரிய ரசீது, கடன் அட்டையின் 3 மாத விவர அறிக்கை, சாதி , இருப்பிடச் சான்றிதழ். சொத்து விற்பனை பத்திரம், வருமான வரிமதிப்பீடு என அடையாள சான்றுக்கு 17 ஆவணங்களில் ஒன்றும், முகவரி சான்றுக்கு 28 ஆவணங்களில் ஒன்றும் தரலாம்.

இப்படி குடும்பத்தலைவர், அல்லது பெரியவர் தவிர குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இவற்றில் ஏதாவது ஒரு சான்றை ஆவணமாக பயன்படுத்தாலம். அப்படி இல்லை என்றால் குடும்பத்தலைவர் உட்பட யாராவது ஒருவர் தேசிய அடையாள அட்டையை பெற்றிருந்தால் அதனை ஆவணமாக பயன்படுத்தலாம். - ச.இரகுநாதன்

அதிகாரமிக்க மனிதராக லட்சுமி மிட்டல் தேர்வு


லண்டன்: இங்கிலாந்தில் வசிக்கும் ஆசிய பிராந்தியத்தை சேர்ந்த அதிகாரமிக்க மனிதர்கள் பட்டியலில் லட்சுமி மிட்டல் முதலிடம் பிடித்தார். இங்கிலாந்தில் ஆண்டுதோறும் தொழில், ஆளுகை, திறமை, சொத்து மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு துறைகளின் அதிகாரமிக்க ஆசியர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான (2011) அதிகாரமிக்க தொழிலதிபராக இங்கிலாந்து வாழ் இந்தியரான லட்சுமி மிட்டல் ரூ.1.25 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடம் பிடித்தார். 4வது இடத்தை எஸ்.பி. இந்துஜா மற்றும் ஜி.பி.இந்துஜாவும், 17வது இடத்தை லார்டு சிவராஜ்பாலும் பிடித்தனர். அரசியலில் அதிகாரமிக்கவர்கள் பட்டியலில் லேபர் சட்சியின் எம்.பி. கெய்த்வா 13வது இடத்தை பிடித்தார்.

புதிய முறைப்படி 30 நாட்களுக்குள் பாஸ்போர்ட் பெற வேண்டுமா...


அலைந்து திரிந்து, 6 மாதங்களுக்கு பின்பு பாஸ்போர்ட் வாங்கிய காலமெல்லாம் மலையேறி விட்டது. தற்போது எந்த அலைச்சலுமின்றி, உட்கார்ந்த இடத்திலிருந்தே 30 நாட்களுக்குள் பாஸ்போர்ட் நம் கையில் வந்து சேர்ந்தால் மகிழ்ச்சி தானே!

முன்பெல்லாம் ஒரு பாஸ்போர்ட்டை விண்ணப்பித்து விட்டு, பல மாதங்கள் காத்திருக்க வேண்டியதாய் இருக்கும். ஆனால் புதியதாக நிறுவப்பட்ட 'பாஸ்போர்ட் சேவக்கேந்திரா' என்ற நிறுவனத்தின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து 30 நாட்களுக்குள்ளேயே பெற்று விடலாம்.

இதுகுறித்து, ரீஜினல் பாஸ்போர்ட் அதிகாரி கே. ஸ்ரீகர் ரெட்டி கூறுகையில், 'வழக்கமாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது, வண்ணப்பதாரரின் ஆவணங்கள் அனைத்தும், காவல்துறை அதிகாரிகளின் சரிபார்த்தலுக்காக அஞ்சல் முறையில் அனுப்பப் படும். அதனால், அதிக நாட்கள் ஆகும். ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய முறையின்படி, அனைத்தும் ஆன்லைன் முறை என்பதால் பாஸ்போர்ட்டினை கையில் பெற அதிகப்பட்சமாகவே 30 நாட்கள் தான் ஆகும்' என்று கூறினார்.

மேலும் இதுகுறித்த எந்த கேள்வியையும், www.passportindia.gov.in என்ற இடிணயதளம் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

விக்கிபீடியாவுக்கு கூகுள் நிறுவனர் ரூ. 2.5 கோடி நிதியுதவி!


வாஷிங்டன்: விக்கிபீடியா ஆன்லைன் கலைக்களஞ்சிய இணையத்தளத்துக்கு ரூ. 2.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார் கூகுள் இணையத்தளத்தின் இணை நிறுவனரான செர்கே பிரின்.

செர்கேயும் அவரது மனைவி ஆன் வோசிகியும் இணைந்து உருவாக்கியுள்ள பிரின்-வோசிகி அறக்கட்டளை மூலமாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்ட விக்கிபீடியா, இந்த வாரம் தான் தனது வருடாந்திர நிதி திரட்டும் பணியைத் துவக்கியது.

விக்கிபீடியா மற்றும் அதன் இணைத்தளங்கள் தான் இன்டர்நெட்டில் மிக அதிகமாகப் பார்க்கப்படும் 5வது இணையங்களாகும்.

தமிழ் உள்பட 280க்கும் அதிகமான மொழிகளில் விக்கிபீடியா இயங்குகிறது. உலகெங்கும் சுமார் 1 லட்சம் ஆர்வலர்கள் தான் இந்தத் தளத்தில் பதிவுகளை ஏற்றுகின்றனர். விக்கிபீடியா நிறுவனத்தில் நேரடியாக பணியில் உள்ளவர்கள் வெறும் 95 ஊழியர்கள் மட்டுமே.

இந்த இணையத்தளத்தில் விளம்பரங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் நன்கொடைகளை நம்பியே இந்த நிறுவனம் இயங்க வேண்டியுள்ளது.

வியாழன், 26 மே, 2011

கருவிலேயே கருகும் பெண் சிசுக்கள்-30 வருடத்தில் 1.2 கோடி சிசுக்கள் அழிப்பு!


பெண்களை தெய்வமாக வணக்கும் இந்தியாவில்தான் பெண் குழந்தைகைளை பெற்றுக்கொள்ள அநேகம் பேர் தயக்கம் காட்டுகின்றனர். ஆண் குழந்தைகளை மட்டுமே பலரும் விரும்புவதால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 12 மில்லியன் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சித்தகவல் தெரியவந்துள்ளது. பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த, அதிகம் படித்த பெண்களே இந்த பாதகச் செயலை செய்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆண், பெண் விகிதாச்சாரத்தில் அதிக வேறுபாடு எழுந்துள்ளது.

ஆண் குழந்தைக்கு முக்கியத்துவம்

இந்தியாவில் ஆண் குழந்தைகளுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பதன் காரணமாகவே முதலில் உருவாகும் பெண் குழந்தைகளை அபார்சன் செய்து விடுகின்றனர்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதி வந்தபின்னர் படித்த பெண்கள் பலரும் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தெரிந்து கொண்டு பெண் என்றால் தயங்காமல் கருக்கலைப்பு செய்து விடுகின்றனர். இப்படி கருவிலேயே கொல்லப்பட்ட பெண்குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த முப்பதாண்டுகளில் மட்டும் 12 மில்லியனை எட்டியுள்ளதாக கனடா நாட்டின் டொராண்டாவில் உள்ள உலக சுகாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

கருவில் முதலில் உருவாகும் குழந்தை ஆணாக இருக்கும் பட்சத்தில் அந்த குழந்தையை எதுவும் செய்யாமல் பெற்றுக்கொள்ளும் தாய்மார்கள் அதுவே பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்வதற்கு தயங்குவதில்லை.

இந்தியார்களின் சமூக வாழ்க்கையில் ஆண் குழந்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதே பெண் குழந்தைகளை கருவிலேயே கொல்ல காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்த மனப்பான்மை படித்த மற்றும் பணக்காரர்களை மட்டுமல்லாது பாமரர்களையும் தொற்றிக்கொண்டுள்ளது.

ஒரு குழந்தை பாலிசி

அண்டை நாடான சீனாவில் ஒரு குழந்தை கொள்கை கடைபிடிக்கப்படுவதால் முதலில் உருவாகும் பெண் குழந்தையை அபார்சன் செய்து விடுகின்றனர். ஆனால் இந்தியாவில் இந்த கட்டுப்பாடு கிடையாது. இருப்பினும் நகரத்தில் வசிக்கும் பெண்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதால் அவர்கள் ஆண் குழந்தை மட்டுமே பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்கேன் செய்து பார்த்து பெண்குழந்தையை அபார்சன் செய்து விடுகின்றனர். இதனால் கடந்த 30 ஆண்டுகளில் ஆண், பெண் பாலினத்திற்கு இடையேயான விகிதாச்சாரம் அதிகரித்துள்ளது.

1990 முதல் 2005 வரை எடுத்த கணக்கெடுப்பின்படி பார்க்கும் போது 1990 ஆம் ஆண்டில் 1000 ஆண்குழந்தைகளுக்கு 906 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில் குழந்தைகள் பிறப்பு இருந்தது. அதுவே 2005 ஆம் ஆண்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 836 பெண் குழந்தைகளே பிறந்துள்ளன என்ற அதிர்ச்சி கலந்த உண்மை தெரியவந்துள்ளது.

1980 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டுவரையிலான கடைசி 30 ஆண்டுகளில் மட்டும் 4 முதல் 1.2 கோடி பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டிருப்பதே இந்த விகிதாச்சார மாறுபாட்டிற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதே நிலை நீடித்தால் 2 : 1 என்ற விகிதத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு குறைந்து விடும். பெண் குழந்தைகளை திருமணம் செய்வதற்காக ஆண்கள் அதிகம் போராட வேண்டியிருக்கும்.

கேள்விக்குறியான ஸ்கேன் தடைச்சட்டம்

கருவில் இருக்கும் குழந்தை ஆணா , பெண்ணா என்பதை ஸ்கேன் பரிசோதனை செய்து பெண்குழந்தைகளை கருக்கலைப்பு செய்வதை தடை செய்வதற்காக இந்தியாவில் 1996 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இருப்பினும் பெண் குழந்தைகளை அபார்சன் செய்வதை எதன் மூலமும் தடுக்க முடியவில்லை. இதே நிலை நீடித்தால் வருங்கால தலைமுறை ஆண்கள் திருமணத்திற்கு பெண் தேடி வேற்றுகிரகத்திற்குத்தான் செல்ல வேண்டியிருக்கும்

ஞாயிறு, 15 மே, 2011

மூளை சுறுசுறுப்பாக செயல்பட...

இயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று மூளை. இது கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. எவ்வளவு தெளிவாக சிந்திக்க மூளை துணைபுரிகிறதோ, அவ்வளவு வியப்பூட்டும் வகையில் விஞ்ஞானிகளையே குழப்பத்துக்கு உள்ளாக்கிவிடுகிறது மூளை. அதன் செயல்பாடுகள் மிக நுண்ணியதாகவும் தெளிவாகவும் இருக்கின்றன.

மிகச் சாதாரண மனிதர்கள் மூளையை 2 சதவீதமே பயன்படுத்துகிறார்களாம். நாம், புத்திசாலி என்று பாராட்டுபவர்கள்கூட 5 சதவீத மூளையையே பயன்படுத்துகிறார்கள். ஆய்வாளர்கள் 7 சதவீத மூளையையும், விண்வெளி விஞ்ஞானிகள் 11 சதவீத மூளையையும் பயன்படுத்துவதாக ஆய்வு கூறுகிறது. அப்படியானால் முழு அளவு மூளையின் செயல்பாடுகளை வியக்காமல் இருக்க முடியுமா?

மற்ற விலங்கினங்களில் இருந்து நம்மை வித்தியாசப்படுத்தி, அர்த்தமுள்ள இனமாக நிலைநிறுத்தி வருவதே இந்த மூளைதான். ஒரு நொடிக்குள் பல தூண்டல்களை எதிர்கொண்டு செயல்களை செய்ய துரிதமாக இயங்குவது மூளை. மனிதர்களில் கூட நாம் பிறரில் இருந்து வேறுபட்டு இருந்தால் அது நமது மூளையை பயன்படுத்தும் ஆற்றலில்தான்.

எனவே நாம் துரிதமாகச் செயல்பட்டு வெற்றி பெற வேண்டுமானால் மூளையை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதற்கு மூளை எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். அதன் சுறுசுறுப்பை அதிகரிக்க இங்கே சில டிப்ஸ்...

* மூளை சுறுசுறுப்பாக செயல்பட முதலில் அதிகாலையில் எழ வேண்டும். பின்பு நல்ல காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து சுமார் 15 நிமிடம் காற்றை உள்ளிழுத்து வெளியிட வேண்டும். மூச்சுப்பயிற்சி பெற்றவர்களிடம் பயிற்சி பெற்று செய்வது சிறந்த பலன் தரும்.

மேலும் "ட்ரெட்மில்"லில் ஓடுவது, ஜாக்கிங் செய்வது, ஓட்டம் போன்ற பயிற்சிகளை செய்தாலும் மூளையின் செயல்பாடுகள் விரைவுபடுத்தப்படும்.

* இரண்டாவதாக, சத்துள்ள சரிவிகித உணவுகளை உண்ண வேண்டும். குறிப்பாக முளைகட்டிய தானியங்கள், பச்சைக்காய்கறிகள், பழவகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* அதே வேளையில் உணவுக் கட்டுப்பாடும் அவசியம். கண்ட கண்ட வேளைகளில் சாப்பிடுவதும், அளவை மீறிச் சாப்பிடுவதும் மூளையின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒழுங்கற்ற உணவுமுறை மந்தத் தன்மையையும், சில வியாதிகளையும் ஏற்படுத்தும்.

* உடல் பராமரிப்பில் அக்கறை செலுத்த வேண்டும். நோய்கள் தாக்காத வகையில் தேவையான விழிப்புணர்வுடன் சுத்தமாக இருக்க வேண்டும். டைப் 2 நீரிழிவு, அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் மூளையின் செயல்களை பாதிக்கக் கூடியவை. இவை அறிவுத்திறனை பாதித்து, கவலைகளை அதிகரிக்கும். எனவே இவற்றைத் தவிர்க்க சிகரெட் மற்றும் புகைப் பழக்கங்களை கைவிட வேண்டும். மேலும் கொழுப்பு குறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்.

* அடுத்ததாக மூளை புத்துணர்ச்சியுடன் செயல்படத் தேவையானது ஓய்வு. மூளைக்கு ஓய்வு என்பது தூக்கத்தில்தான் கிடைக்கிறது. எனவே வேலை, வயதுக்கு தக்கபடி போதிய அளவு தூங்கி ஓய்வெடுங்கள். சரியான ஓய்வு இல்லாவிட்டால் மந்தத்தன்மை, சோர்வு ஏற்படுவதோடு சில வியாதிகள் தொற்றவும் வாய்ப்பிருக்கிறது.

* ஒரு நாளைக்கு 2 முறை காபி அல்லது டீ குடியுங்கள். இதில் உள்ள "காபீன்" என்னும் ரசாயனப்பொருள் புத்துணர்ச்சியை தூண்டும் திறன் உடையது. குறிப்பாக மாலைநேர காபி மூளையின் செயல்பாட்டை அதிக அளவில் தூண்டுவதாக ஆய்வில் கண்டறிந்து உள்ளனர். தினசரி 4 முறைக்கு மேல் டீ பருகுவதையும் தவிர்க்க வேண்டும்.

* அதேபோல் மூளைக்கு புத்துணர்ச்சி ஊட்டும் உணவு மீன். அதில் உள்ள "ஃபேட்டி ஆசிட்", ஒமேகா 3 ஆகியவை மூளை செயல்படும் விதத்தை துரிதப்படுத்துகிறது. எனவே உணவில் மீனையும் கூடுதலாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

* மூளை சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமானால் கவலைகள் இருக்கக் கூடாது. மன அழுத்தம் தரும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். உடனடியாக மாற்று செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கவலையைத் திசை திருப்பி மீண்டும் புத்துணர்ச்சியாக செயல்பட முடியும். யோகா, உடற்பயிற்சி போன்றவற்றிலும் ஈடுபடலாம்.

* அறிவுத்திறனை வளர்க்கும் போட்டிகளில் பங்கேற்றுப் பழகுங்கள்.

* நினைவுத்திறனை அதிகப்படுத்துவதற்காக மருந்து மாத்திரைகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

மேற்கண்ட வழிகளை பின்பற்றினால் மூளையில் சுறுசுறுப்பு தொற்றிக் கொள்ளும். வெற்றி கைகளை நீட்டி தழுவிக் கொள்ளும்.

முதுகு வலி எப்படி - ஏன் வருகிறது?


நவீன வாழ்க்கையில் உள்ள அழுத்தம் (Stress) தான் முதுகுவலியின் முதற்பெரும் காரணமாகக் கூறலாம். எப்போதுமே நாம் தலைதெறிக்க ஓடும் அவசரத்திலும் பல்வகைச் சூழ்நிலை அழுத்தங்களுக்கு ஆளாகி இருக்கிறோம்.

எதிர்பாராமல் அதிகப் பளுவை ஒருவர் தூக்க முயலும்போது முதுகெலும்பை நிலை நிறுத்தியுள்ள தசைகள் போதிய இணக்கத்தைத் தரத் தவறிவிடுகின்றன. அது முதுகைப் பாதித்து வலியில் முடிகிறது.

முதுகைக் குனியவைத்த நிலையில் பொருள்களைத் தரையில் இருந்து தூக்க முயற்சிப்பது, அதிக உயரத்தில் இருந்து குதித்து சடாலென்று தரையில் இறங்குவது,இவை இரண்டுமே அபாயகரமானவை.

திடீரென்று திரும்புவது, அதுவும் ஒரு கனமான பொருளை வைத்த நிலையில் திரும்புவது முதுகுவலிக்கு வழி வகுக்கும்.

சிலரது பணிகள் (வேலை நிலை) முதுகுவலி வரக் காரணமாகி விடுகின்றன. அதுவும் முதுகிற்கு அதிகத் தொல்லை தரும் பணி செய்பவர்களுக்கே இந்த வலி வந்துவிடும்.

உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள், டைப்பிஸ்டுகள், கீ-போர்டு ஆபரேட்டர்கள், போர்ட்டர்கள் முதலியோரைக் கூறலாம்.

தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது முதுகெலும்பைத் தாங்கும் தசைகள் பலவீனமுற வாய்ப்பளிக்கின்றன.

பொருத்தமற்ற நாற்காலியில் அமர்வதில் இருந்து இசகு பிசகான முறையில் உட்கார்ந்தே நின்ற படியோ (உதாரணங்கள் : பீடி சுற்றுவோர், கண்டக்டர்கள்) வேலை செய்வது வரை முதுகு வலி வரக் காரணங்களாகிவிடும்.

எப்படி வெளிப்படுகிறது?

முதலித் தசைத்துடிப்பு லேசான வலி தென்படும். இது தாங்க முடியாத நிலை வருவதற்கு முந்திய கட்டம்.

வழக்கத்துக்கு மாறான ஒரு கடினமான வேலையில் ஈடுபட்டிருக்கும்போது பளிச்சென்று ஒரு வலி முதுகில் தோன்றக் கூடும். அல்லது அந்த வேலை முடித்து இரவு உறங்கிய பின் மறுநாள் காலையில் அது தோன்றக்கூடும்.

முதுகுவலியின் தாக்குதல் முழு வேகத்தில் இருக்கும்போது வலி மிகவும் கடுமையாக இருக்கும்.

நிற்கிற இடத்திலேயே உறைந்துவிட்டது போல் நகரவே முடியாத நிலை ஏற்படும்.

உடலே வித்தியாசமான முறையில் வளைந்து முறுக்கிக் கொண்டது போல் தோற்றமளிக்கும். இந்த நிலை இரண்டு அல்லது மூன்று வாரங்கள் நீடிக்கலாம்.

முதுகின் கீழ்ப்பகுதியில் தான் முதலில் இது தோன்றும்.

முதுகின் மேற்பகுதி மரத்துப்போதல், பளிச் பளிச்சென்று விட்டுவிட்டு வலித்தல் காணப்படும்.

வெள்ளி, 6 மே, 2011

பெண்ணின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?


அன்பும், அரவணைப்பும் நிறைந்த வாழ்க்கைதான் நிறைவானது என்று பெரும்பாலான பெண்கள் கருதுகின்றனர். தன் வாழ்க்கைத் துணைவரிடம் இருந்து வெறும் உடல்ரீதியான தொடர்பை மட்டுமே அவர்கள் விரும்புவதில்லை. நேசம் மிகுந்த வார்த்தைகளைத்தான் பெண்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

இந்த விசயம் ஆண்களுக்குத் தெரியாமல் போகும்போதுதான் கருத்து மோதல்கள் ஏற்பட்டு விரிசல்கள் தோன்றுகின்றன. பெண்களின் மனதை புரிந்து கொண்டு உரிமையோடு நேசத்தை வெளிப்படுத்தினால் உறவுகள் வலுப்படும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

ஆறுதலாய் பேசுங்கள்

பேச்சுதான் பெண்களின் விருப்பத்திற்குரிய செயல். திருமணத்திற்கு முன்பு வரை உறவுகளோடும், நண்பர்களோடும் சந்தோசமாய் பேசிக்கழித்த பொழுதுகள் அடிக்கடி பெண்களின் நினைவுகளில் நிழலாடும். இது போன்ற சமயங்களில் ஆறுதலாய் பேசினால் அது பெண்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும். உங்களின் காதலையும், அன்பையும் முதலில் பேச்சின் மூலம் வெளிப்படுத்துங்கள்.

நடந்து கொண்டே படிப்பது எத்தனை சுகமானதோ, அதுபோல இல்லறத் துணையுடன் நடந்து கொண்டே பேசுவது இனிமையானது. நீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த நடை பேச்சு உதவும்.

இதய சிம்மாசனம்

திருமணம் செய்தவர்களின் வாழ்க்கையில் உடலுறவு என்பது பிரிக்க முடியாதது. எந்த வித வருத்தமும், வலியும் இன்றி அதனை அனுபவிக்க வேண்டும். இந்த விசயத்தில் பெண்களை ஜெயித்த ஆண்கள் நிரந்தரமாக பெண்களின் இதய சிம்மாசனத்தில் அமரலாம்.

தனது வாழ்க்கைத் துணைவர் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து பெண்களுக்குமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். பல விசயங்களை அவர்கள் மனதுக்குள் கற்பனை செய்து பார்த்திருப்பார்கள். எனவே எனவே உறவுக்கு முன்பும் சரி, உறவின்போதும் சரி ஆண்கள் பெண்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

விளையாட்டாக விளையாடுங்கள்

பெண்களைப் பொறுத்தவரை மன ரீதியான திருப்தியையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஆண்களோ, காரியம் முடிந்தவுடன் மறந்து விடுவார்கள் சற்று முன் நடந்ததை. ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அந்த இனிய உணர்வின் நினைவுகளில் சில மணி நேரங்களாவது மூழ்கிக் கிடப்பார்கள்.

மடியில் தலைசாய்ப்பது, விரலால் தலைகோதுவது, அன்பான, ஆறுதலான முத்தம், என சின்னச் சின்ன ரொமான்ஸ்கள் பெண்களுக்குப் பிடித்தமானவை. இவற்றை நிறைய பேர் நிறைய செய்வதில்லை. இதில்தான் சிக்கலே ஆரம்பிக்கிறது.

நேரடியாக விசயத்தை தொடங்குவதை விதம் விதமான முன் விளையாட்டுகளை விளையாடுங்கள். இந்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தாலே உறவுகளில் விரிசல் விழ வாய்ப்பில்லை.

தலை முதல் கால் வரை!


தலை முதல் கால் வரை அழகாகத் தோன்ற கீழே உள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவும்.

கூந்தல்: எண்ணெய் மசாஜ் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்க உதவும்.

வாரம் ஒரு முறை: எண்ணெயை லேசாக சூடாக்கி கூந்தலின் வேர்களில் ஆரம்பித்து நுனிவரை தடவவும். விரல் நுனியால் வேர்களை நன்றாக தேய்த்து விடவும்.

மாதம் ஒரு முறை: மேலே உள்ளது போல் எண்ணெயை தடவவும். பிறகு வெந்நீரில் ஒரு துணியை நனைத்து, அதை நன்றாக பிழிந்து விடவும். சூடான துணியை தலையில் கட்டவும். 15 நிமிடம் கழித்து கூந்தலை சீயக்காய் அல்லது ஷாம்பூவால் கழுவவும். வேர்களுக்குள் எண்ணெய் ஊடுறுவ இது உதவும்.

முகம்: வாழைப்பழத்தை நன்றாக மசித்து முகத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து கழுவி விடவும். இது முகத்திற்கு பட்டுப்போன்ற மென்மையும், பளபளப்பும் தரும். இனி அளவுக்கு அதிகமாக பழுத்த வாழைப்பழங்களை எறிய வேண்டிய அவசியமும் இல்லை!

அழுக்கும், எண்ணெய் பசையும் ஒன்று சேர்ந்தால் விளைவு, பருக்கள்தான்! இதை தடுக்க ஒரே வழி முகத்தை சுத்தமாக வைப்பது. இதற்காக முகத்தை அடிக்கடி கழுவவும்.

கண்கள்: கண்களைச் சுற்றி கருவளயங்கள் இருந்தால், சோர்ந்த தோற்றத்தை உங்களுக்கு தரும். இதை தவிர்க்க சரியான தூக்கம் தேவை. கருவளயங்களை போக்க உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரித் துண்டை கண்கள் மீது 15 முத‌ல் 20 நிமிடம் வைத்திருப்பது நல்லது.

உதடுகள்: மென்மையான உதடுகளின் ரகசியம் ஈரப்பதம். நெய், வாசலீன் ஆகியவற்றை தடவுவதால் உதடுகளில் வெடிப்பு வருவதை தவிர்க்கலாம்.

உதடுகள் இளஞ்சிவப்பு நிறத்தைப் பெற தூங்குவதற்கு முன் பீட்ரூட் சாறு தடவவும்.

பற்கள்: மஞ்சள் கறைபடிந்த பற்கள் அழகான புன்னகையின் எதிரிகள்! டீ, காபி, புகையிலை போன்றவை பற்களில் கறைபடிய வைக்கும். இவற்றை முழுமையாக தவிர்க்க முடியவில்லை என்றால் அதன்பிறகு பற்களை தேய்ப்பது நல்லது. அதுவும் முடியவில்லை என்றால் தண்ணீரால் வாயை சுத்தம் செய்ய வேண்டும்.

சருமம்: உடலின் சருமத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு உயிரிழந்த சருமத்தை அகற்றுவது மிகவும் அவசியம். 2 தேக்கரண்டி சர்க்கரையை, 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயுடன் அல்லது மோருடன் சேர்க்கவும். இந்த கலவையால் உடலை தேய்த்து கழுவவும். இது சருமத்திற்கு புது பொலிவு தரும்.

கைகள்: கைகளை மிருதுவாக வைக்க கை கழுவியவுடன் க்ரீம் தடவவும். வீட்டு வேலை அல்லது தோட்ட வேலை செய்யும் போது மறக்காமல் கையுறை அணியவும்.

கால்கள்: கால்களில் வெடிப்பு வருவதை தவிர்க்க, கால்களை தேய்த்து கழுவ வேண்டும். இது சொரசொரப்பான தோலை நீக்கும். அதன் பிறகு காலில் க்ரீம் தடவினால் மெண்மையான கால்களைப் பெறலாம்.

தனி வருவாய் வரி செலுத்துவோர் பெரும் பண பரிமாற்றத்தைக் காட்ட வேண்டாம்: வருமான வரித் துறை!


தனி நபர் வருமான வரிச் செலுத்துவோர், வங்கிகளிலும், பரஸ்பர நிதிகளிலும், கடன் அட்டை வாயிலாகவும் மேற்கொள்ளும் பெரிய அளவிற்கான பண பரிமாற்றங்களை வருமான வரி விவர படிவத்தில் தெரிவிக்கத் தேவையில்லை என்று மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுவரை வருமான வரித் தாக்கல் செய்ய பயன்படுத்தப்பட்ட படிவங்களில் இருந்த ஆண்டு வருவாய்த் தகவல் (Annual Information Return) என்ற விவரக்கேட்பு பகுதி 2011-12ஆம் ஆண்டிற்கான சஹாஜ், சுகம், ஐடிஆர் 2, ஐடிஆர் 3 ஆகிய படிவங்களில் இருக்காது என்றும் வருமான வரித் துறை கூறியுள்ளது.

இதுவரை பரஸ்பர நிதிகளில் 2 இலட்சத்திற்கு மேல் முதலீடு செய்திருந்தாலோ அல்லது நிறுவன பத்திரங்களில் 5 இலட்சத்திற்கும் அதிகமாக முதலீடு செய்திருந்தாலோ அல்லது நிறுவனங்களின் பங்குகளில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக முதலீடு செய்திருந்தாலோ அதனை ஆண்டு வரு்வாய் விவரத்தில் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை இப்போது தனி நபர் வருமான வரி செலுத்துவோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வங்கிகளில் 10 இலட்சத்திற்கும் மேல் செலுத்தியிருந்தாலோ அல்லது கடன் அட்டைகளுக்கு 2 இலட்சத்திற்கு மேல் செலுத்தியிருந்தாலோ அல்லது அசையா சொத்துகளை வாங்க ரூ.30 இலட்சம் வரை செலவழித்திருந்தாலோ அதனை தனி நபர் வருமான வரி செலுத்துவோர் காட்ட வேண்டும் என்றிருந்தது. அதுவும் இப்போது நீக்கப்பட்டுவிட்டது.

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

கோ - விமர்சனம்!


ஜீவா, கார்த்திகா, பியா, அஜ்மல்


இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன்

இயக்கம்: கேவி ஆனந்த்

தயாரிப்பு: குமார், ஜெயராமன்

வெளியீடு: உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட்

மக்கள் தொடர்பு: நிகில்

சினிமாவில் பத்திரிகைக்காரர்கள் என்றால் ஒரு ஜோல்னா பையை மாட்டிக் கொண்டு வருவார்கள். தத்துப் பித்தென்று கேள்வி கேட்பார்கள் அல்லது சமூக மாற்றம் பற்றி பக்கம் பக்கமாக லெக்சரடிப்பார்கள். இன்னும் சிலர் பத்திரிகைகள் மீதான விமர்சனம் என்ற பெயரில் கண்மூடித்தனமாக காட்சிகள் வைப்பார்கள்.

நிஜமான பத்திரிகையுலகம் பற்றி இதுவரை யாரும் சொன்னதில்லை (ஒருபோதும் அதைச் சொல்லும் தைரியம் யாருக்கும் வராது என்பது வேறு விஷயம்!!). ஆனால் முதல் முறையாக பத்திரிகைத் துறை பற்றி ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கு வந்திருக்கிற படம் என்றால் அது 'கோ'தான். ஆனால் இதிலும் நிறைய இயல்பு மீறல்கள், தவறுகள் இருந்தாலும், அவை மன்னிக்கக் கூடிய அல்லது மறந்துவிடக்கூடிய அளவுக்குத்தான் உள்ளன என்பது ஒரு ஆறுதல்.

இயக்குநர் கே வி ஆனந்த்தும் வசனம் எழுதிய சுபாவும் முன்னாள் பத்திரிகையாளர்கள் என்பதால் இது ஒருவேளை சாத்தியமாகியிருக்கலாம்.

ஜீவா முன்னணி தமிழ் பத்திரிகையான தின அஞ்சலில் பணியாற்றும் ஒரு துடிப்பான பத்திரிகைப் புகைப்படக்காரர். அவருடன் பணியாற்றும் நிருபர்கள் கார்த்திகா, பியா இருவருக்குமே ஜீவா மீது எந்நேரத்திலும் காதலாக மாறிவிடக் கூடிய அளவுக்கு சாஃப்ட் நட்பு.

ஒருமுறை, ஜோசியத்தை நம்பி 13 வயது பெண்ணை எதிர்க்கட்சி தலைவர் (கோட்டா சீனிவசாராவ்) பால்ய விவாகம் செய்வது குறித்து செய்தி வெளியிடுகிறார் கார்த்திகா. ஆனால் அலுவலகத்துக்கே வந்து அதிரடியாக மறுத்து, கோட்டா சீனிவாசராவ் கலாட்ட செய்ய, செய்திக்கு ஆதாரமில்லாமல் போய்விட்டதால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது பத்திரிகை. இதில் கார்த்திகாவும் வேலையை இழக்கிறார். ஆனால் கோட்டா சீனிவாசராவ், ரகசியமாய் பால்ய விவாகரம் செய்வதை புகைப்படத்தோடு நிரூபித்து முதல்பக்க செய்தியாக்குகிறார் ஜீவா. இதில் பத்திரிகை மானமும் காக்கப்பட, கார்த்திகா தப்புகிறார். இந்த சம்பவம் இருவர் உறவையும் மேலும் இறுக்கமாக்குகிறது.

மாநிலத்தில் தேர்தல் வருகிறது. இருக்கும் ஊழலாட்சியை அகற்றி, மாற்றத்தைக் கொண்டுவர சிறகுகள் என்ற இளைஞர் பட்டாளம் அஜ்மல் தலைமையில் முயல்கிறது. ஆனால் ஆளும் கட்சி அடக்குமுறையைக் கையாள்கிறது அவர்களுக்கெதிராக. இதனால் இளைஞர்களுக்கு ஆதரவு பெருகுகிறது. ஒருகட்டத்தில் அஜ்மலின் தேர்தல் பிரச்சார கூட்டத்தை குண்டு வைத்து தகர்க்கிறார்கள். இதனால் மக்கள் அனுதாபம் அமோகமாகக் கிடைக்க, ஆட்சியைப் பிடிக்கிறார்கள் இளைஞர்கள்.

அஜ்மல் முதல்வராகிறார். இந்த ஆட்சிமாற்றத்துக்கு வெளியில் தெரியாத முக்கிய காரணமாக ஜீவாவும் தின அஞ்சல் பத்திரிகையும் செயல்படுகின்றன.

இந்த நேரத்தில்தான் அஜ்மல் பற்றிய அதிரடி உண்மை தெரியவருகிறது. அந்த உண்மையை எப்படி எதிர்கொள்கிறார் ஜீவா, தங்களால் வந்த ஆட்சி மாற்றத்தை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பது ஒரு விறு விறு க்ளைமாக்ஸுக்கு வழி வகுக்கிறது.

ஒரு பத்திரிகை போட்டோகிராபர் வேடத்துக்கு ஜீவா பக்காவாகப் பொருந்தினாலும், ஆரம்ப காட்சிகளில் அவர் புகைப்படமெடுக்கும் விதம் ஆனாலும் ஓவர்!

மற்றபடி, அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்றாலும் பஞ்ச் வசனம் இல்லாமல், ஸ்டன்ட் என்ற பெயரில் சர்க்கஸ் வேலை காட்டாமல் இருந்ததற்காக (இயக்குநர் பேச்சைக் கேட்டு நடித்த) ஜீவாவுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!

ஹீரோயின் கார்த்திகாவை விட, சினிமா நிருபராக வரும் பியா ஓகே. அவரது உடை, பார்ட்டியில் போடும் ஆட்டம், பேசும் ஏ கிரேடு வசனங்களெல்லாம் இன்றைய பெண் நிருபர்கள் சிலர் செய்வதில் பாதிதான் என்பதால் ஆனந்தைப் பாராட்டத்தான் வேண்டும்!

நடிகையாக கார்த்திகா ஜஸ்ட் பாஸ் மார்க் பெறுகிறார் இந்தப் படத்தில். முகத்தில கொஞ்சம் கூட உணர்ச்சியே காட்டாமல் வந்துபோகிறார். வெண்பனியே பாடல் காட்சியில் மேக்கப் ரொம்பவே உறுத்தல்.

ஒரே காட்சி என்றாலும் கோட்டா சீனிவாசராவ் அதகளம் பண்ணுகிறார். அதிலும், 'தமிழ் பேப்பர் ஆபீஸ்தானே இது... அப்புறமென்ன இங்கிலீசு, தமிழ்ல பேசு' என அவர் எகிறும் இடம் டாப்.

பிரகாஷ்ராஜ் முதல்வராக வருகிறார். ஒரு யானையை கட்டி இழுத்து வந்து சரியாக தீனிபோடாமல் விட்டமாதிரி தெரிகிறது.

அஜ்மலுக்கு இது மறு பிரவேசம். சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். நக்சலைட்டாக வரும் போஸ் நன்றாக செய்துள்ளார்.

குறைகள் என்று பார்த்தால், அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒரே கல்லூரியில் படிக்கும் நண்பர்கள் இணைந்து சிறகுகள் என்ற அமைப்பை ஆரம்பிப்பதாக காட்சி. வெவ்வேறு கோர்ஸ் படிப்பவர்கள் இணைந்து தொடங்குவதாகக் காட்டியிருந்தால் கூட பரவாயில்லை. ஒரே கல்லூரியில் டாக்டருக்குப் படிப்பவர், வக்கீல், எஞ்ஜினீயர் எல்லாம் சேர்ந்து ஆரம்பிப்பதாகக் காட்டுவது உறுத்தல். எந்தக் கல்லூரியில் எம்பிபிஎஸ், பிஈ, பிஎல், பிஏ, பிஎஸ்ஸி எல்லாம் இருக்கிறது?

அதென்ன, எல்லா அதிரடிக் கட்டுரைகளையும் ஒரே நிருபர்தான் எழுதுகிறார்... எந்த அலுவலகத்தில் இந்த சுதந்திரம் இருக்கிறது. இந்த உண்மை ஆனந்துக்கு தெரியாதா என்ன!

அதேபோல முணுக்கென்றால் வந்து நிற்கும் பாடல்களுக்கு கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

ஆனாலும் இரண்டரை மணி நேரப் படத்தில் சொல்ல வந்ததை முழுமையாக சொல்லும் நோக்கில் மீறப்பட்ட லாஜிக்குகள் இவை என்பது புரிகிறது.

பத்திரிகையுலகம் என்பது எந்த அளவுக்கு மாறியிருக்கிறது என்பதை, அந்த அலுவலகச் சூழலை வைத்தே காட்ட முயற்சித்திருக்கிறார் ஆனந்த். உண்மைதான். ஆங்கிலப் பத்திரிகை அலுவலகம்தான் அல்ட்ரா மாடர்னாக இருக்க வேண்டுமா என்ன?

படத்தின் இரண்டு சிறப்பம்சங்கள் ஹாரிஸ் ஜெயராஜின் இசை மற்றும் ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு. நார்வே மற்றும் சீனாவில் எடுக்கப்பட்ட காட்சிகள் மனதை அள்ளுகின்றன. இந்த மாதிரி லொகேஷன்களை தமிழ் சினிமாவில் இதற்கு முன் பார்த்ததே இல்லை!

அதிகபட்ச கமர்ஷியல், கொஞ்சம் மக்களுக்கு பரிச்சயமான யதார்த்தம், கூடவே கொஞ்சம் சமூக செய்தி என்பது ஷங்கரின் சக்ஸஸ் பார்முலா. அது கே வி ஆனந்துக்கும் நன்றாகவே கைவந்திருக்கிறது!!

வியாழன், 21 ஏப்ரல், 2011

எப்படி சொன்னால் காதலில் ஜெயிக்கலாம் ?



காதல் என்பது பூ மலர்வது போல. எந்த நொடியிலும் நிகழலாம். அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதில்தான் வெற்றி கிடைக்கிறது. சொல்ல நினைத்தும் வார்த்தைகள் வராமல் தடுமாறுவது இயற்கை. ஆனால் சொல்லாத காதல் சோகக்காதல் ஆகிவிடும். காதலை சொல்லும் வழிமுறைகள் குறித்து சில யோசனைகள் :


மனமறிந்து சொல்லுங்கள்

நீங்கள் விரும்பும் நபர் எப்படிப்பட்டவர் என்பதை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். காதலை வெளிப்படுத்தும் தருணம் எத்தகையது என்பதையும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். முதல் முதலாக கூறும் முன்பு ஒத்திகை அவசியம். இல்லை என்றால் முதல் கோணல் முற்றும் கோணலாகிவிடும்.

ஆர்வமுடன் வெளிப்படுத்துங்கள்


எந்த தருணத்தில் காதலை வெளிப்படுத்துகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதும் மிகவும் முக்கியமானது. காதலைச் சொல்ல தனிமைதான் சரியான சூழல். நீங்கள் விரும்பும் நபர் உங்களுடன் பேச ஆர்வமாக இருக்கும் நேரத்தில் உங்கள் காதலை இயல்பாக வெளிப்படுத்துங்கள் .

புகழுக்கு மயங்காதவர்கள் என்று யாரும் கிடையாது. மனம் திறந்து பாராட்டுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் புகழுரையை கேட்கவே நீங்கள் விரும்பும் நபர் உங்களிடம் பேசவருவார்கள்

நேசத்தை வெளிப்படுத்துங்கள்


காதலிப்பதை நேரடியாக தெரிவிப்பதை விட ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு செய்கையிலும் முதலில் புரிய வைக்கலாம். காதலிக்கும் நபருக்கு பிடித்த உடைகளை அணிவது, அவருக்கு பிடித்த விசயங்களை செய்வது போன்றவை அன்பை வெளிப்படுத்தும் ஆயுதம்.

வார்த்தைகளை 'வளவள’வென்று பேசக்கூடாது. சொல்ல வரும் விஷயங்களை தெளிவாகச் சொல்ல வேண்டும். பாதியைச் சொல்லி பாதியை முழுங்கக் கூடாது. உங்கள் பேச்சை வைத்தே உங்களின் அன்பு எவ்வளவு உண்மையானது என்பதை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது.

பூக்களை நேசிப்பவர்கள்

ஆணோ, பெண்ணோ அனைவருமே பூக்களை நேசிப்பவர்கள்தான். நிறைய பூக்களைக் கொண்ட மலர்ச்செண்டு கொடுத்து அன்பை வெளிப்படுத்துங்கள். ரோஜா பூக்கள் காதலை வெளிப்படுத்த ஏற்றதாக கருதப்படுகிறது. எதிராளிக்கு உங்கள் மீது நேசமிருந்தால் அப்போதே அன்புக்கான சிக்னல் கிடைக்கலாம்.

பேசும்போது செய்யும் உடல் அசைவுகள் காதலுக்கு வலு சேர்ப்பவையாகும். உங்கள் கண்- முகம் மற்றும் கை அசைவுகள் நேசத்தை அப்படியே வெளிப்படுத்தவல்லவை. காதல் சொல்லும்போது விரைப்பாக நிற்காதீர்கள். சாதாரணமாக தளர்வாக நில்லுங்கள். தாயானவள் குழந்தையை வாரி அணைக்க கையை நீட்டுவதுபோல கைகளை நீட்டி, 'அன்பே உன்னை நேசிக்கிறேன்’ என்று சொல்லுங்கள்.

ஆண்கள் இப்படிச் செய்வதை ரசிக்கும் பெண்கள்தான் காதல் வலையில் விழுகிறார்கள். நீங்களும் இப்படிக் காதலைச் சொல்லிப் பாருங்கள். மறுப்பதற்கு வாய்ப்பே இல்லை!

வசூலில் 'அவதாரை' மிஞ்சிய '3 டி' செக்ஸ் படம்!!


உலகம் என்னதான் வேகமாக முன்னேறினாலும், எல்லா நாடுகளிலும் மனிதர்களின் அடிப்படை பலவீனம் பணம்-செக்ஸ்தான். அதிலும் இந்த இரண்டாவது சமாச்சாரம் எங்கும் எவர்கிரீன் மேட்டர். சினிமா, எழுத்து என எதிலும் செக்ஸ்தான் பிரதானமாக விற்பனையாகிறது.


இப்போது, ஹாங்காங்கில் தயாராகி வெளிவந்துள்ள உலகின் முதல் 3 டி செக்ஸ் படம் வசூலில் சக்கைப் போடு போடுகிறது.

'3 டி செக்ஸ் அண்ட் ஜென்: எக்ஸ்ட்ரீம் எக்ஸ்டஸி' (3-D Sex and Zen: Extreme Ecstasy) என்ற பெயரில் தயாராகியுள்ள இந்த சீன மொழிப் படம், முழுக்க முழுக்க உடலுறவு மற்றும் செக்ஸ் காமெடிக் காட்சிகள் நிறைந்தது.

ஜப்பானை சேர்ந்த 'பலான' பட நடிகர் ஹிரோ ஹயானா, நடிகை சோரிஹரா, ஹாங்காங் நடிகை வோனிலியூ ஆகியோர் நடித்துள்ளனர். 1991-ம் ஆண் வெளியான செக்ஸ் அண்ட் ஜென் என்ற படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். சீனாவின் மிங் வமிசத்தைச் சேர்ந்த மன்னரது அந்தப்புர கூத்துகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது.

இந்தப் படத்தை சீனாவில் திரையிட ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுவிட்டது. ஆனால் சீனாவின் ஒரு பகுதியான ஹாங்காங்கில் வெளியிட தடையில்லாததால், கடந்த செவ்வாயன்று செக்ஸ் அண்ட் ஜென் 3 டி படம் வெளியானது.

வெளியிட்ட முதல் காட்சியிலிருந்து படத்துக்கு கூட்டம் அலைமோதுகிறது. ஏராளமானோர் படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் திரும்பிச் செல்கின்றனர்.

ஹாங்காங்கில் முதல் நாளிலேயே ரூ.1 கோடியே 58 லட்சம் வசூலித்தது இந்தப் படம்.

அவதார் படம் ஒரே நாளில் ரூ.1 கோடியே 30 லட்சம் வசூலித்ததுதான் இதுவரை ஹாங்காங் பாக்ஸ் ஆபீஸ் சாதனையாக இருந்தது.

படம் வெளியான 5 நாட்களில் ரூ.80 கோடி வசூலை கொடுத்துள்ளது. தைவான் நாட்டிலும் படத்தை வெளியிட்டு உள்ளனர். ஒரு வாரத்தில் ரூ.2.5 கோடி வசூல் குவிந்துவிட்டது. படம் வெளியான தியேட்டர்களில் தொடர்ந்து கூட்டம் அலைமோதுகிறது.

சீனாவில் தடை விதிக்கப்பட்டிருப்பதால், ஏராளமானோர் அங்கிருந்து ஹாங்காங்குக்கு வந்து படம் பார்த்துச் செல்கின்றனர்.

இந்தப் படத்தின் அடுத்த பாகம் விரைவில் தயாராகவிருக்கிறதாம்.

மருத்துவத் தவறுகளால் இறப்புகள் அதிகரிப்பு - உலகச் சுகாதார மையம்!


மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் 10 பேரில் ஒருவர் தவறான மருத்துவச் சிகிச்சைகளால் உயிரிழக்கின்றனர் என்று உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதன் விளைவுகள் குறித்த தரவுகள் இப்போதைக்கு இல்லை என்றாலும், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் அலட்சியம், தவறான சிகிச்சை, தவறான நோய் கணிப்பு உள்ளிட்ட மருத்துவத் தவறுகளால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

ஒரு நோயாளியைக் கொல்லும் 10 காரணங்களில் மருத்துவ ரீதியான தவறுகள் இடம்பெற்றுள்ளது.

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்டொன்றுக்கு 15% நோயாளிகளுக்கு தவறான நோய்க் கணிப்பு முறை கையாளப்படுவது தெரியவந்துள்ளது.

அமெரிக்க மருத்துவ சங்கம் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், சுமார் 2000 பேர் ஆண்டொன்றுக்கு தேவையில்லாத அறுவை சிகிச்சை மூலமும், சுமார் 7000 பேர் தவறான மருந்துகளாலும் உயிரிழப்பதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் 20,000 பேர் ஆண்டொன்றுக்கு மருத்துவனமைகளில் செய்யும் பல தவறுகளினால் உயிரிழப்பதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இது தவிர மருத்துவமனைகளில் நோயாளிகளை இருக்கவைக்கும் காலம் நீட்டிக்கப்படுவதால் ஏற்படும் கிருமிகளால் 80,000 மரணங்களும், மருத்துவத் தவறுகளால் சுமார் 1 லட்சம் பேரும் அமெரிக்காவில் உயிரிழந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் சுமார் 2,25,000 பேர் தெரியாமல் செய்த மருத்துவத் தவறுகளுக்கு ஆண்டு தோறும் அமெரிக்காவில் உயிரிழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலும் ஆங்காங்கே மருத்துவத் தவறுகளால் ஏற்படும் உயிரிழப்பு, உடல் உறுப்புகள் இழப்புகள் பற்றி நாம் பத்திரிக்கை செய்திகள் வாயிலாகத் தெரிந்து கொள்கிறோம். ஆனால் எந்த ஒரு ஆய்வும் இதுவரை இந்தப் பகுதியில் ஆய்வு ரீதியான தவல்களை வெளியிடவில்லை. தகவல்கள் இல்லாததனால் இந்தியாவில் இது போன்ற மரணங்கள் குறைவு என்ற எண்ணத்திற்கு நாம் வரவேண்டியத் தேவையில்லை.

எய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நோயாளி பாதுகாப்பு பற்றிய தேசிய திட்டம் ஒன்று அமல் செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் இதன் மூலம் எவ்வளவு மருத்துவ ரீதியான சாவுகள் தடுக்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் இது வரை இல்லை.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

வாழ்க்கைத் துணையை கவரும் எளிய வழிகள்!


அமைதியாக போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் திடீரென புயலோ, சூறவளியோ வீசினால் பலர் அதனை எதிர்கொள்ள முடியாமல் நொருங்கிப் போய் விடுகின்றனர். ஒருசிலர்தான் எதிர்த்து நின்று பிரச்சினைக்குரிய காரணங்களை ஆராய்ந்து அதை தீர்க்க முயலுகின்றனர்.


இல்லற வாழ்க்கையில் இருவரும் இணைந்து ஒருமித்த கருத்தோடு வாழ்வது மட்டுமே ஒற்றுமையோடு வாழ வழி வகுக்கும். இல்லையெனில் மணமுறிவு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்பட்டு விடும். இனிமையான இல்லறத்திற்கு கடை பிடிக்க வேண்டிய சில வழி முறைகள்.

துணையின் கருத்துக்கு மதிப்பு

எந்த ஒரு செயல் என்றாலும் ஒருவரின் கருத்துக்களை காது கொடுத்து கேட்டாலே பாதி வெற்றி கிடைத்து விடும். அதுவும் மண வாழ்க்கையில் ஒருவருக் கொருவர் கருத்துக்களை பகிர்ந்துகொண்டு அதற்கு தகுந்த முடிவெடுக்க வேண்டும்.

வீட்டிற்கும் வாங்கும் பொருளோ, உடுத்தும் உடையோ எதுவென்றாலும், துணையை தேர்வு செய்ய விடுங்கள். அவரது தேர்வு தவறாக இருக்கும் பட்சத்தில் சாமர்த்தியமாக பேசி அதை வாங்காமல் தவிர்க்கலாம். மாறாக, அவரை விமர்சனம் செய்யக் கூடாது. இதுதான் விரிசலின் முதல் விதை.

அழகில் கவனம் தேவை

ஆண்களோ, பெண்களோ ஒரு குறிப்பிட்ட வயதிற்கு அப்பால் தங்களைப் பற்றி கவனம் கொள்ள தவறி விடுகின்றனர். இன்றைய கார்ப்பரேட் உலகில் ஆணும், பெண்ணும் அனைத்து துறைகளிலும் இணைந்து பணியாற்றுவதால் பிறருடன், தன்னுடைய வாழ்க்கைத் துணையை ஒப்பிட்டு பார்த்து ஏங்குவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே அவரவர், உடைகளிலும், உணவிலும் கவனம் கொள்ளுங்கள். உடலை கச்சிதமாக வைத்துக்கொண்டால் பிறர் மீது கவனம் திரும்ப வாய்ப்பில்லை.

வெளியில் செல்லுங்கள்

அலுவலகம் விட்டால் வீடு, வீட்டை விட்டால் அலுவலகம் என்பது இயந்திரமான வாழ்க்கை. இதனை தவிர்க்க வாரத்திற்கு ஒருமுறை துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று பேசி மகிழுங்கள். இது புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது.

ஒருவரை ஒருவர் பாராட்டுங்கள்

இல்லறத்தில் பாராட்டு பெறுவது என்பது வசிஷ்டர் வாயல் பிரம்மரிஷி பட்டம் பெறுவதற்கு சமம். கணவரிடம் இருந்து ஒரு சின்ன பாராட்டு கிடைத்து விட்டால் போதும் மனைவி க்கு கோடி ரூபாய்க்கு பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்ததற்கு சமம். எனவே வாய்விட்டு பாராட்டுங்கள்.

அதுபோல் கணவரின் பிரத்யேகமான செயல்களை மனைவி பாராட்டுவதில் தவறில்லை. இது போன்ற சின்ன சின்ன சம்பவங்கள் தான் இல்லற பயணத்தை இனிமையானதாக மாற்றும்.

சரும நோயை உருவாக்கும் ஏ.சி.!


கடந்த ஓரிரு ஆண்டு காலமாகவே,மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக தமிழகம் உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கோடை காலத்தில் வெப்ப நிலை மிக அதிகமாகவே காணப்படுகிறது.

இந்த வெப்பத்திலிருந்து தப்பிக்க அலுவலகத்தில் மட்டுமல்லாது வீட்டிற்குள் வந்தாலும், மக்கள் ஏ.சி. அறைக்குள் பதுங்கிக் கொள்ளும் போக்கு மிக அதிகமாகவே அதிகரித்து வருகிறது.

இதனால் நாள் முழுவதும் ஏ.சி. அறைக்குள்ளேயே இருப்பதும், நடமாடுவதுமாக இயற்கையான சீதோஷ்ண நிலையில் இல்லாமலேயே மக்களது, குறிப்பாக நகர்ப்புறங்களில் அலுவலகம் செல்வோரது, நாட்கள் கழிகின்றன.

இவ்வாறு முழு நாளையும் ஏ.சி. அறையிலேயே கழிப்பதால், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கூட வீட்டில் இவர்களால் ஏ.சி. இல்லாமல் இருக்க முடிவதில்லை.

கடும் வெயிலில் சுற்றி திரிந்துவிட்டு அலுவலகத்திற்குள்ளோ அல்லது வீட்டிற்குள்ளோ ஏ.சி. அறைக்குள் நுழைவது சற்று ரிலாக்ஸ் ஆன ஒன்றுதான் என்றாலும் கூட, நீண்ட நேரம் ஏ.சி. அறையில் முடங்கிக் கிடப்பதால் உடலுக்கு நன்மையை விட தீமையே அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.

குறிப்பாக ஏ.சி.யினால் உடலின் தோல் மற்றும் முடிக்கு எத்தகைய தீங்கு நேருகிறது என்பது குறித்து நம்மில் பலருக்கு தெரிவதே இல்லை.

ஒரு அறையில் ஏ.சி. ஓடும்போது அந்த அறையின் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு வறண்டு போய்விடுகிறது. இதனால் அந்த அறையில் இருப்பவர்களது உடலின் தோலின் ஈரப்பதமும் உறிஞ்சப்பட்டு தோல் வறட்சியாகவும், வெடிப்பு விழுந்தும் இருப்பதை நம்மில் பலரிடம் பார்த்திருக்க முடியும்.

அவ்வளவு ஏன்... பனிக்காலங்களில் நமது உடலின் தோல் வறண்டு, குறிப்பாக உதடுகளில் வெடிப்பும், அதிலிருந்து ரத்தக்கசிவும் ஏற்பட்டு இருப்பதை நாமே உணர்ந்திருப்போம்.

அவ்வாறு பனிக்காலத்தில் ஏற்படுவதுதான், நாள் முழுவதும் ஏ.சி. அறைக்குள் இருப்பவர்களுக்கும் ஏற்படுகிறது.

இவ்வாறு உங்களது உடலின் தோல் உரிய பாதுகாக்கப்படாமல், தொடர்ந்து வறண்டே காணப்பட்டால், தோலின் அடிப்பாகம் பாதிக்கப்படும்.தோல் அளவுக்கு அதிகமாக வறண்டு போகும்போவதால் அரிப்பு உணர்வும் ஏற்படும்.

அவ்வாறு ஏற்படும் அரிப்பை போக்க கை நகங்களால் சொறியும்போது,வறண்ட தோலிலிருந்து செதில் செதிலாக உதிர்ந்து விழுந்து அந்த இடம் வெண்மையாக மாறி, பார்ப்பதற்கே அசிங்கமாக இருக்கும். இதைத்தான் 'வங்கு' என்றும் கூறுவர்.

எனவே தொடர்ச்சியாக ஏ.சி. அறையில் இருப்பது கடுமையான தோல் நோயை உருவாக்க வழி வகுத்துவிடும் என எச்சரிக்கின்றனர் தோல் நோய் மருத்துவ நிபுணர்கள்.

எனவே பொதுவான இடம் என்பதால் அலுவலகத்தில்தான் ஏ.சி. அறையை தவிர்க்க முடியாது என்றாலும், குறைந்தபட்சம் வீட்டிற்கு வந்த பிறகாவது சாதாரண காற்றோட்டமான அறையில் அமரும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கடுமையான கோடை காலங்களில் வேண்டுமானால் வீட்டிற்குள் ஏ.சி. அறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

திங்கள், 11 ஏப்ரல், 2011

காதல் செய்யும் ரசாயன மாற்றங்கள்-ஆதலினால் காதல் செய்வீர்!


“காதல், காதல், காதல்
காதல் போயின் சாதல் சாதல் சாதல்”


பாரதியையே பாடாய் படுத்தியுள்ளது இந்த மூன்றெழுத்து வார்த்தை.

கவிஞர்கள் எல்லோருக்கும் பாடுபொருளாய் உள்ள இந்த காதல் அப்படி என்ன மந்திரத்தை தன்னுள் கொண்டிருக்கிறது?

`காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல்பான உணர்வு! உடல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்கின்றனர் அறிஞர்கள்.

அன்பு, நட்பு, நம்பிக்கை, பொறுப்பு ஆகிய நான்கு தூண்களின் மீது கட்டப்படும் அழகிய மாளிகை. இயல்பான காதல் என்பது முதலில் நம்பிக்கையில் தொடங்கும். பொறுப்புணர்வு முழுமையாக இருக்கும். அதன் பின்னரே காமம் வரும். நம்பிக்கை, பொறுப்புணர்வு, காமம் இவை முன்றும் சரியான விகிதத்தில் கலந்திருப்பதே உண்மையான காதலாகும்..

காதல் என்பது பாலியல் ரீதியானதாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. பெற்றோர்கள், குழந்தைகள், உறவினர்களுடன் நீங்கள் மன ரீதியாக சாதகமான தொடர்புகளைக் கொண்டிருக்கும் போது, மதிப்புக்கு உரியவராக உணர்வீர்கள். இத்தகைய மதிப்பு வாய்ந்த காதலால் கிடைக்கும் நன்மைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

மனவிரக்தி:

காதல் சூழலில் வாழ்பவர்களுக்கு மனவிரக்தி மற்றும் உளரீதியான துன்பங்கள் வருவது குறைவு என்கின்றன ஆய்வுகள். மாறாக தனியே வாழும் பலரும் விரக்தியுறுவதும், மது, போதை போன்றவற்றை நாடுவதும், அவற்றிற்கு அடிமையாவதும் அதிகம். அதே போல தனிமைப்பட்டவர்கள் மனவிரக்திக்கு ஆளாவது அதிகம் என்பதை பல ஆய்வுகள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றன.

மனப்பதற்றம்:

புதிதாக காதல் வயப்பட்டவர்களைவிட நீண்ட காலமாக நேசமான உறவில் இருப்பவர்களுக்கு மனப்பதற்றம் ஏற்படுவது குறைவு என கண்டறியப்பட்டுள்ளது. MRI பரிசோதனைகள் மூலம் மூளையின் பகுதிகளை பரிசோதித்ததில் இது தெரிய வந்துள்ளது.

வலிகளைத் தாங்கும் தன்மை:

மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளுக்கு உடல்வலி, தலைவலி ஆகியன ஏற்படுவது குறைவாம். MRI பரிசோதனைகள் மூலம் வலிகளைத் தாங்கும் மூளையின் பகுதி அதிகமாகச் செயற்பட்டு வலி தோன்றுவதைக் குறைக்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ரத்த அழுத்தம்:

மணமுடித்து மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளின் இரத்த அழுத்தம் மற்றவர்களைவிடக் குறைவாக இருக்கிறது. தனியாக இருப்பவர்களுக்க சற்று அதிகமாகவும் உள்ளது. மணமுடிப்பதால் மட்டும் இரத்த அழுத்தம் குறைந்து விடுவதில்லை. மகிழ்ச்சியாக வாழ்வதே முக்கியம் என்பதை இந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

காய்ச்சல் அதிகம் வராது:

காதல் வயப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் காய்ச்சல், போன்ற தொல்லைகள் அடிக்கடி ஏற்படாது. சிறிய காயங்கள் தாமாகவே விரைவில் குணமாகிவிடும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நீண்ட ஆயுள்:

தனித்து இருப்பவர்களை விட திருமணம் முடித்தவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள். திருமண உறவால் , பரஸ்பர ஆதரவும், பிள்ளைகளின் உதவியும், நிதி தட்டுப்பாடின்மையும் காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்கு மேலாக தாம் காதலிக்கப்படுகிறோம், ஆதரவுள்ளவர்கள் என்ற உணர்வு அவர்களுக்கு உடல்நலத்தையும் நீடித்த வாழ்வையும் கொடுக்கிறது.

காதலின் மிகப் பெரிய கொடை:

குடும்ப வருமானத்தையும் வாழ்க்கை வசதிகளையும் விட பரஸ்பர அன்பும், நெருக்கமான உறவும், மனமொத்த காதலும் முக்கியமானது. அது ஆரோக்கியத்துடனும் தொடர்புடையது.

இவை வெற்று வார்த்தைகள் அல்ல விஞ்ஞானபூர்வமாகவும் நிறுவப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஆதலினால் காதல் செய்வீர் - இதுவும் பாரதி சொன்னதுதான்!

திங்கள், 4 ஏப்ரல், 2011

ஆணுடனான உறவில் ஏமாற்றமடைதல்!


பெண் ஒரு வெற்றியாளனை, ஆண்மைக்குரியவனை தனக்குத் துணையாக தேர்வு செய்ய விரும்பினாலும் நாளடைவில் ஆணின் அடிப்படை இயல்புகள் தன்னுடன் அவனை ஒன்றவிடாமல் தடுத்துவிடும் என்பதை அறியாமல், அரவணைப்பும், நெருக்கமும் தனக்குக் கிடைப்பதில்லை என நினைத்து ஏமாறும் நிலையேற்படும்.

பெண்ணின் மென்மையான உணர்வுகளை உணராமல் இதை கேலி செய்வதோ, இந்த குணங்கள் தனக்கு வந்தால் தன்னை ஆண்மைத் தனத்திலிருந்து அப்புறப்படுத்திவிடும் என்ற அச்சத்தில், செக்ஸைத் தவிர வேறு விதத்தில் தனது உணர்வை வெளிப்படுத்த ஆண் தயங்குகிறான்.

ஆனால் பாலுறவைவிட காதலை தன்னிடம் ஆண் நிறைய பகிர்ந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்த்து ஏமாறும் பெண் தடுமாற்றத்திற்கு ஆளாகிறாள்.

பல அண்கள் வெளியில் செல்வாக்குடன் உள்ளனரே தவிர, வீட்டில் மனைவியுடன் மனம்விட்டுப் பேசவேண்டும், பழகவேண்டும், காதலைச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை.

98 விழுக்காடு பெண்கள், தங்கள் மீதுள்ள காதலை கணவன் அடிக்கடி வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறார்கள். தங்களைப் பற்றி, தங்கள் உணர்வுகளைப் பற்றி தங்களுடைய திட்டங்களைப் பற்றி அதிகமாக பேசவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

இவ்வாறெல்லாம் நடக்காதபோது 40 விழுக்காடு பெண்கள் விவாகரத்து பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். 42 விழுக்காடு பேர் வேறொரு உறவை நாடுகிறார்கள். அந்த உறவு இன்னொரு ஆணுடனாக இருக்கலாம், தனது குழந்தையின் மீது கவனம் செலுத்துவதாக அல்லது வேலையின் மீது கவனத்தைத் திருப்புவதாக இருக்கலாம்.

வெளியுலகத்தை சாராமல் வீட்டுச் சூழலில் அதிகம் இருக்கும் பெண் தனது உணர்வுகளை கணவன் தூண்ட வேண்டும் என எதிர்பார்க்கிறாள். அதற்குப் போதிய அவகாசம் அளிக்கிறாள்.

இதைப் புரிந்துகொண்டு மனைவியுடன் மனம்விட்டுப் பேசுவதை கணவன் வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இருவருக்கும் இடையே நெருக்கமிராது, மனைவியின் மனம் அன்பிற்காக ஏங்கத் தொடங்கும். அந்த ஏக்கம் தேவையற்ற விளைவுகளைத் தரக்கூடும்.

வசியத்தில் இருந்து தப்பிக்க குங்குமம் வைங்க!

இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் குங்குமப்பொட்டு வைத்துக்கொள்வது மங்களமானதாக கருதப்படுகிறது. அது அழகுத் தொடர்பானதும் கூட. மஞ்சளால் உருவாக்கப்பட்ட தூய்மையான குங்குமத்தை தான் வைத்துக்கொள்ள வேண்டும். குங்குமத்தை கழுத்தில் உள்ள கண்டம், புருவத்தின் இடைப்பகுதி, நெற்றியின் உச்சி போன்ற இடங்களில் வைத்துக்கொள்வார்கள். அப்படி பொட்டு வைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.


வசியத்தில் இருந்து தப்பலாம்

வசியம் என்பது ஒரு கலை. இந்நாளில் மெஸ்மரிசம், ஹிப்னாடிசம், போன்றவை வழக்கத்தில் உள்ளன. மற்றவர்களை வசியப்படுத்தும் போது தம் பார்வை ஆற்றலை செலுத்த கண்டம், புருவத்தின் இடைப்பகுதி, வகிட்டு நுனி, கழுத்தின் பின்பகுதி ஆகிய இடங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

கழுத்தின் பின்பகுதி சடையால் மறைக்கப்படுகிறது. ஏனைய பகுதிகளில் பொட்டு வைத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளது. இதில் புருவ இடைப்பகுதி மிக முக்கியமாகும். இந்த இடத்தில் பொட்டு வைத்துக்கொண்டவர்களை அவர்கள் சம்மதம் இன்றி, எவராலும் ஆழ்நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது; வசியப்படுத்த முடியாது.

யோகசாஸ்திரம் கூறும் உண்மை

மூலாதாரம் என்று சொல்லப்படும் பகுதியில் இருந்து பிறக்கும் உள் ஒளி கண்டத்தில் தங்குகிறது. அவ்வொளி கபாலம் மூலம் புருவ மத்திக்கு வருகிறது. அகவொளி நிலைக்கும் இடங்களைப் பொட்டு வைத்து புலப்படுத்துவதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்கள் அனைவரும் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும். திருமணமானவர்கள் என்பதை வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக வகிட்டில் வைத்துக்கொள்வது மரபு. ஒட்டுப் பொட்டுக்களை இட்டுக் கொள்ளுதல் சாஸ்திரத்திற்கு முரனானது ஆகும்.

செவ்வாய், 1 மார்ச், 2011

அழுது 'காரியம்' சாதிப்பதில் ஜெகஜால கில்லாடிகள்-ஆண்களே!


அழுது அழுதே காரியம் சாதிப்பவர்கள் பெண்கள் என்பது காலம் காலமாக உள்ள ஒன்று. ஆனால் இது தவறு என்கிறது அறிவியல் ஆய்வு. உண்மையில் பெண்களை விட ஆண்கள்தான் அழுது காரியம் சாதிப்பதில் ஜெகஜால கில்லாடிகளாக இருக்க முடியும் என்கிறது அந்த ஆய்வு.

இதை ஒரு சோதனை மூலம் கண்டறிந்துள்ளனர் ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.

அதன்படி அவர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வில் ஆண் எலிகளையும், பெண் எலிகளையும் ஈடுபடுத்தினர். ஆண் எலிகளின் கண்ணில் அடிக்கடி கண்ணீர் வருவது வழக்கம். இது ஏன் என்பதுதான் அந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம். ஆண் எலிகள் ஏன் அடிக்கடி அழுகின்றன என்பதைக் கண்டறிய நடந்த அந்த ஆய்வில் சில சுவாரஸ்யமான உண்மைகள் கிடைத்தன.

ஆண் எலிகளின் கண்ணீரை எடுத்து ஆய்வு செய்தபோது அதில், செக்ஸ் உணர்வுகளைத் தூண்டக் கூடிய எஸ்பிபி1 என்கிற பெரோமோன் (pheromone)இருப்பதை கண்டறிந்தனர். இந்த செக்ஸ் பெரோமோன் அடங்கிய கண்ணீத் திவலைகள் எலிகளைச் சுற்றிலும் விழும்போது அதிலிருந்து நறுமணம் கிளம்புகிறது.

இந்த வாசத்தை மோப்பம் பிடிக்கும் பெண் எலிகள், அந்த இடத்தை நோக்கி வருகின்றன. வந்த எலிகள், ஆண் எலிகளைச் சுற்றிலும் விழுந்து கிடக்கும் கண்ணீர்த் துளியில் கலந்துள்ள அந்த பெரோமோனை (இது ஆவியாகக் கூடிய தன்மை இல்லாதது என்பது குறிப்பிடத்தக்கது) நுகர்ந்து சுவைக்கவும் செய்கின்றன.

அப்படி செய்யும்போது அந்த பெண் எலிகளின் மூளையில் உள்ள செக்ஸ் உணர்வுக்கான பகுதி தூண்டப்பட்டு அந்த பெண் எலி செக்ஸ் மூடுக்கு வந்து விடுகிறது. அப்படி வரும்போது அந்த எலியின் காதுகளும், வாலும் விரைப்பாக தூக்கிக் கொண்டு நிற்கின்றன.

இதைப் பார்க்கும் ஆண் எலிகள், வலையில் விழுந்த பெண் எலிகளுடன் உல்லாசத்தில் ஈடுபடத் தொடங்கி விடுகின்றன.

ஆண் எலிகளின் கண்ணீருக்குப் பின்னால் இப்படி ஒரு ரொமான்ஸ் கதை அடங்கியுள்ளதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போயுள்ளனர் விஞ்ஞானிகள். இந்த ஆய்வை அடுத்து மனிதர்களிடமும் நடத்திப் பார்க்கவுள்ளனராம்.

ஆண்களின் கண்ணீரிலும் இதேபோல செக்ஸ் உணர்வுகளைத் தூண்டக் கூடிய செக்ஸ் பெரோமோன் இருப்பது உறுதியானால், இங்கே பெண்களின் கண்ணீரை ஒரு கையால் துடைத்து விட்டு, அப்பெண்களின் கையால் தங்களது கண்ணீரைத் துடைக்க வைக்கும் ஆண்கள் பெருகும் சாத்தியம் உள்ளது.

திங்கள், 28 பிப்ரவரி, 2011

பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது இன்பத்துக்காக மட்டுமல்ல...


பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது ரொமான்ஸ் மற்றும் சுகத்துக்காக மட்டுமல்ல... அதையும் தாண்டிய மருத்துவ காரணங்களுக்காகவும்தான் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று.

செக்ஸ் நிபுணர்கள் சின்டி மெஸ்டன் மற்றும் டேவிட் பஸ் இருவரும் இதுகுறித்து ஆய்வு செய்து, 200 காரணங்களைக் கண்டுபிடித்துள்ளனர், பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது ஏன் என்று.

அவற்றில் சில...

ரொம்ப போர் அடிப்பதாக பெண்களுக்கு நினைப்பு வரும்போது கூடவே வருவது செக்ஸ் உணர்வுதானாம்.

ஒற்றைத் தலைவலியை போக்கிக் கொள்ள செக்ஸ் ஒரு நல்ல வழி.

84 சதவீத பெண்களுக்கு, வீட்டு பணிச் சுமை, மனதை அழுத்தும் கவலைகளிலிருந்து விடுபட செக்ஸ் தேவைப்படுகிறதாம்.

வெறும் கவர்ச்சி அல்லது உடல் அழகுக்காக செக்ஸ் வைத்துக் கொள்ளும் பெண்கள் மிக சிறுபான்மையாகவே உள்ளார்கள் என்கிறது இந்த ஆய்வு.

ஆண்கள் மீதான இரக்கம் கூட பெண்களை செக்ஸ் வைத்துக் கொள்ளத் தூண்டுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

தனக்காக ஒரு ஆண் அதிக சிரத்தை எடுத்தால், தனக்காக ஒருவன் அதிக செலவு செய்தால், தனக்காக ஒரு ஆண் அதிக தியாகங்களைச் செய்தால்... அதற்கு பதிலாக ஒரு பெண் தர விரும்பும் முதல் பரிசு... செக்ஸ்தான் என்கிறது இந்த ஆய்வு.

அதே நேரம் ஒரு ஆண் இதையெல்லாம் செய்ய பிரதான காரணமும் செக்ஸ்தான் என்கிறது இதே ஆய்வு!

கர்ப்ப கால குமட்டலை சமாளிப்பது எப்படி?


அறிகுறிகளின் தீவிரம், மசக்கைத் தோன்றும் விதம் போன்றவை ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். சிலருக்குக் குமட்டல் ஏற்பட்டு சமாளித்துக் கொள்வார்கள். மற்றவர்கள் எந்த ஒன்றையும் ஜீரணிக்க முடியாமல் அவற்றைத் தூக்கி எறிவார்கள்.

அறிகுறிகள் காலையிலும், வேறு சிலருக்கு பிற வேளைகளிலும், சிலருக்கு நாள் முழுதும் நீடிக்கும். இந்த அறிகுறிக்கு கர்ப்பக் காலத்தின் தொடக்கத்தில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதிலிருந்து நிவரணம் பெற, பின்வரும் குறிப்புகளைப் பின்பற்ற முயற்சிக்கலாம்.

தினமும் மூன்று வேளை சாப்பிடுவதற்குப் பதில், குறுகிய இடைவெளிகளில் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுங்கள். இத்தகைய சின்னச் சின்ன மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் மசக்கையை சமாளிக்கலாம்.

காலையில் எழுந்ததும் குமட்டல் மிகவும் அதிகமாக இருந்தால், வறுத்த, உலர்ந்த உணவு அல்லது பிஸ்கட் போன்றவற்றை எழுந்திருக்கும் போதே சாப்பிடுங்கள்.

குமட்டலைத் தூண்டும் உணவுகளையும், வாசனைகளையும் தவிருங்கள். உங்களுக்கும், பிறருக்கும் ஏற்ற உணவாகத் தேர்ந்தெடுத்து தயாரித்துக் கொடுங்கள். பிரச்சனை தராத, அதேசமயம் உடல் நலனுக்கு ஏற்ற உணவுப் பொருட்களைச் சாப்பிடுங்கள்.

கர்ப்பக் காலத்தில் வாசனைக்கான உணர்ச்சி மிக அதிகமாக இருக்கும். சூடான உணவுகளைவிட குளிர்ச்சியான உணவுகள் குறைந்த வாசனை கொண்டவையாக இருப்பதால் அவற்றை நாடுங்கள்.

தளர்த்தியான உடைகளை அணியுங்கள். இடுப்பைச் சுற்றி இறுக்குவது போன்ற உடை அணிவது அசெளகரியத்தை உண்டாக்கும்.

குமட்டலைப் பற்றி நினைத்துக்கொண்டே இருந்தால்தான் அது அதிகமாகும். எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு கவனத்தை வேறு பக்கம் திருப்புங்கள், குமட்டல் குறையும்.

அதிகமாக வாந்தி வருவது அரிதுதான். அது நீடிக்குமானால் நீரிழப்பு மற்றும் எலக்ட்ரோலைட் சமச்சீரின்மை உண்டாகலாம். உடனே மருத்துவரைத் தொடர்புகொள்ளுங்கள்.

கர்ப்பக் காலத்தின் முடிவு வரை குமட்டல் தொடர்ந்தால் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்ள மருத்துவரிடம் செல்லுங்கள்.

- டா‌க்ட‌ர் ஜெயரா‌ணி காமரா‌ஜ்

வியாழன், 24 பிப்ரவரி, 2011

முதல் நாளிலேயே...அவசியமா?


முதல் இரவு என்றாலே அன்று நிச்சயம் உடல் உறவு வைத்தாக வேண்டும் என்ற 'ஐதீகம்' நம்மிடம் உண்டு. முதலிரவு என்றாலே அது முதல் உறவுக்கான நாள் என்று பொதுவான எண்ணம் நிலவுவதே இதற்குக் காரணம். அன்று நாம் நிச்சயம் உறவு வைத்துக் கொண்டாக வேண்டும். இல்லாவிட்டால் மனைவியோ அல்லது கணவரோ தப்பாக நினைத்துக் கொள்வார்களோ என்ற பயமும் இதற்கு இன்னொரு காரணம்.

அதேசமயம் முதல் நாளிலேயே உறவு வைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. மன ரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி முதலிரவு நாளன்று உறவு வைத்துக் கொள்வதில் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதால் அன்றைய தினம் தவிர்ப்பது என்பதும் நல்ல விஷயம்தான் என்கிறார்கள் டாக்டர்கள்.

குறிப்பாக, பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணம் என்று வரும்போது, அந்த மணமகனும் சரி, மணமகளும் சரி அதற்கு முன்பு வரை பார்த்திருக்க மாட்டார்கள், பேசியிருக்க மாட்டார்கள், இருவருக்குள்ளும் நெருக்கமான நட்பு இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படிப்பட்ட நிலையில் ஒருவிதமான இறுக்கமான மன நிலையுடன்தான் இருவரும் தனியறையில் சந்திக்கிறார்கள். எனவே முதலில் இருவருக்குள்ளும் இருக்கும் இடைவெளியை இட்டு நிரப்பி, அன்னியோன்யத்தை ஏற்படுத்திக் கொள்ள இந்த முதலிரவைப் பயன்படுத்தலாம் என்பது டாக்டர்கள் மட்டுமல்லாமல், மன நல மருத்துவர்களின் அறிவுரையும் கூட.

மேலும், திருமண நாளன்று மணமகனும், மணமகளும் படு பிசியாக இருப்பார்கள். போட்டோவுக்குப் போஸ் கொடுப்பது, உறவினர்கள், நண்பர்களின் பாராட்டுக்கள், வாழ்த்துகளை ஏற்பது என்று பிசியாக இருக்கும் அவர்களிடம் நிறைய அசதிதான் மேலோங்கியிருக்கும். எனவே முதல் நாள் இரவை ஓய்வாக கழிப்பதும் நல்ல விஷயம்தான்.

இன்னொரு முக்கிய விஷயம், முதல் நாளன்றே உறவு கொள்ள ஆர்வப்பட்டு, அதில் ஏதாவது குழப்பமாகி, கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ, தனது பார்ட்னர் மீதான திறமை குறித்த அவ நம்பிக்கை வந்து விடும் வாய்ப்புகளும் நிறையவே உள்ளதால், முதல் உறவை, பதறாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

அது முதல் இரவோ அல்லது மூன்றாவது இரவோ, எதுவாக இருந்தாலும் உறவு என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. இருவரும் இணைந்து தொடங்கப் போகும் இல்லற வாழ்க்கையில், செக்ஸ் மட்டும்ல்லாமல் அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன. எனவே அனைத்தையும் சிறப்பாக தொடங்க அருமையான, அழகான அடித்தளம் தேவை. அதை ஆற, அமர திட்டமிடுவதில் தவறு இருக்க முடியாது.

அதற்காக முதலிரவு நாளன்று, படுக்கை அறையில் உட் கார் ந்து கொண்டு, அங்க பிளாட் வாங்கலமா, இங்க வீடு கட்டலாமா, எந்தக் கார் வாங்கலாம் என்ற ரீதியிலான ஆலோசனைகளில் மட்டும் தயவு செய்து குதித்து விடக் கூடாது.

செக்ஸ் உறவு என்பது இருவருக்கும் இடையிலான அன்னியோன்யத்தைப் பொறுத்தது என்பதால், இருவரது மனங்களும் ஒன்றாக இணைந்து, இன்பத்துடன் தொடங்குவது என்பது முக்கியமானது.

அதேசமயம், ஏற்கனவே அறிமுகமாகி, திருமணத்திற்கு முன்பே உடல் ரீதியாகவும் இணைந்து பின்னர் திருமணத்தில் ஐக்கியமாவோருக்கு இந்த காத்திருப்பு தேவைப்படாது.

அடிவயிற்றுக்குள் பட்டாம் பூச்சி படபடக்க முதலிரவு அறைக்குள் நுழையும்போது மனம் பூராவும் மகிழ்ச்சி சிறகடிக்கும். அந்த மகிழ்ச்சி இருவருக்குள்ளும் நீடித்து நிலைக்கும் வகையில், திருமண உறவு செழிப்பாக இருக்கும் வகையில், உங்களது முதல் உறவை அமைத்துக் கொண்டால்
சரிதான்.

கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறு தோண்டும் பிரிட்டிஷ் நிறுவனம்!!

தூத்துக்குடி: கச்சத்தீவு அருகே பிரிட்டிஷ் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.

இதனால் தமிழக மீனவர்களுக்கு ஆபத்து மேலும் அதிகரித்துள்ளதோடு, மன்னார் வளைகுடாவில் உள்ள அரிய கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மீனவ அமைப்புகள், கடல் சூழல் ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்துக்கு நேர் கிழக்கே உள்ள மன்னார் வளைகுடாப் பகுதி யுனெஸ்கோ அமைப்பால் கடல்சார் தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டு, உயிர்க்கோள் காப்பகமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அரிய வகை பவளப் பாறைகள், கடல் தாவரங்கள், கடல் பசு, டால்பின், கடல் அட்டை, கடல் ஆமை போன்ற அரிய கடல்வாழ் உயிரினங்களின் உறைவிடமாக இப்பகுதி திகழ்கிறது. எனவே, இங்குள்ள 21 குட்டித் தீவு பகுதிகளில் மீன் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மன்னார் வளைகுடாவை ஒட்டிய கச்சத்தீவு பகுதியில், பிரிட்டனைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமான கெய்ர்ன் லங்கா என்ற நிறுவனம் எண்ணெய் வளம் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

இலங்கையின் வடமேற்குப் பகுதியில் கச்சத்தீவு அருகே சுமார் 3 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் இந்த ஆய்வை மேற்கொள்ள கெய்ர்ன் லங்கா நிறுவனத்துக்கு இலங்கை அரசு 2008-ல் அனுமதி அளித்தது.

இதற்காக, அந்நிறுவனம் பூகம்பம் தொடர்பான முப்பரிமாண ஆய்வுகளை நடத்தி முடித்துள்ளதாகவும், இப் பகுதியில் 3 எண்ணெய்க் கிணறுகளை இந்த ஆண்டு மத்தியில் அமைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், இப் பகுதியில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டால் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மேலும் கேள்விக்குறியாகும் என அச்சம் தெரிவித்தார் கடலோர மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.புஷ்பராயன்.

"மீனவர்களை கடல் பகுதியிலிருந்து விரட்டிவிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு கடல் பகுதிகளைத் தாரை வார்க்கும் முயற்சிதான் இது. மன்னார் வளைகுடா பகுதியில் எண்ணெய் எடுக்கும் முயற்சியில் இந்தியா, இலங்கை நாடுகள் கூட்டாக ஈடுபட வேண்டும் என 1974 இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி இலங்கை செயல்படுகிறது. அதனை இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது" என்றார் அவர்.

கெய்ர்ன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற அந்த பிரிட்டிஷ் நிறுவனம் இந்தியாவில் கெய்ர்ன் இந்தியா என்ற பெயரிலும், இலங்கையில் கெய்ர்ன் லங்கா என்ற பெயரிலும் துணை நிறுவனங்களை நடத்தி வருகிறது.

கச்சத்தீவு பகுதியில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டால் அந்த திசைக்கே தமிழக மீனவர்கள் மட்டுமல்ல, இலங்கை மீனவர்கள் கூட செல்ல முடியாது. புயல், காற்று நேரத்தில் கூட அப் பகுதியில் ஒதுங்க முடியாத நிலை உருவாகும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த எண்ணெய்க் கிணறுகளால் மீனவர்களுக்கு மட்டும் ஆபத்து அல்ல, மன்னார் வளைகுடாவில் உள்ள அரிய வகை கடல்வாழ் உயிரினங்களுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார் கடல் சூழல் ஆராய்ச்சியாளரான முனைவர் மன்னர்மன்னன்.

"பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா தேசியப் பூங்காவுக்கு மிக அருகில் இந்த எண்ணெய்க் கிணறுகள் அமையவிருப்பதால், அரிய வகை உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும். கச்சா எண்ணெய் உறிஞ்சி எடுக்கப்படும்போது, கசிவு ஏற்பட்டு கடலில் பரவ வாய்ப்புள்ளது. இளம் கடல்வாழ் உயிரினங்கள், நுண்ணியிரிகளை உண்டுதான் வாழ்கின்றன. எனவே நுண்ணியிரிகள் அழியும். அதன்மூலம் இளம் கடல்வாழ் உயிரினங்களும் அழிய நேரிடும்", என்றார் அவர்.

'லேட்'டானாலும் 'கிரேட்'டா...!

தாமதங்களால் லாபம் இல்லை என்பது ஒரு பொதுவான கருத்து. அதேசமயம், தாமதங்கள் பல நேரத்தில் நல்லவற்றுக்கு அடி கோலுவதை நாம் 'பிராக்டிகல்' வாழ்க்கையில் பார்க்கலாம்.

இது செக்ஸுக்கும் பொருந்தும். குறிப்பாக திருமண வாழ்க்கையில் செக்ஸ் உறவு என்பது பலவற்றுக்கும் அடிப்படையாக உள்ளது. சிறந்த செக்ஸ் அடித்தளத்தை அமைத்துக் கொண்டால், திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைக்க முடியும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

புதிதாக திருமணமானவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் மிக அதிகமாக இருக்கும், அதீதமாகவும் இருக்கும். ஆனால் ஒரேயடியாக அதில் மூழ்கிப் போய் விடாமல், சற்று நிதானத்துடன் நடந்து கொண்டு, செக்ஸ் உறவை முறைப்படுத்தி செயல்பட்டால் அது மிக மிக ஆரோக்கியமான, நீடித்த திருமண பந்தத்திற்கு வழி கோலும் என்பது அவர்களின் கருத்து.

எடுத்த எடுப்பிலேயே 'டாப்' கியருக்குப் போனால் அது 'ஆக்சிடன்ட்'டில்தான் போய் முடியும். அதேசமயம், படிப்படியாக கியரை மாற்றி 'டாப்'புக்குப் போனால் 'எக்சலன்ட்' ஆக இருக்கும். திருமணமான இளம் தம்பதியர், செக்ஸ் வாழ்க்கையில் தீவிரமாவதற்கு முன்பு, முதலில் இருவரும் ஒருவரை ஒருவர் சரிவர புரிந்து கொள்ளுதல் அவசியம். அதற்கான வாய்ப்புகளை இருவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சரியான புரிதல், சிறந்த தகவல் தொடர்பு என சகலவற்றிலும் இருவரும், நல்ல புரிதலுக்கு வர வேண்டும். அதன் பிறகு செக்ஸ் வாழ்க்கையில் தீவிரமானால் அதில் வழக்கத்தை விட அதிகமான பிடிப்பும், அன்பும் இருக்கும் என்கிறார்கள் அவர்கள்.

இப்படி அவர்கள் சொல்வதற்கு முக்கிய காரணம் - எடுத்த எடுப்பிலேயே இருவரும் செக்ஸில் மட்டும் அதிக நாட்டம் செலுத்தினால், யாராவது ஒருவருக்கு திருப்தி ஏற்படாமல் போய் விட்டால், அது 'பார்ட்னர்' மீதான வெறுப்புணர்வை உள்ளூர வளர்த்து விடும். அது உடனடியாக வெளியே தெரியாது. ஆனால் விரைவிலேயே இருவருக்கும் செக்ஸ் வாழ்க்கையும் சரி, குடும்ப வாழ்க்கையும் சரி கசக்க ஆரம்பித்து விடும்.

எனவே இருவருக்குள்ளும் முதலில் நல்ல புரிதல் உணர்வு வர வேண்டியது அவசியம். அதன் பிறகே அன்பில் ஆழமாக வேண்டும் என்கிறார்கள் இவர்கள்.

அமெரிக்காவில் இதுதொடர்பாக ஒரு சர்வே நடத்தினர். அதில், செக்ஸ் உறவை தாமதப்படுத்தி, பின்னர் ஈடுபட்டவர்கள் திருமண வாழ்க்கை (அல்லது சேர்ந்து வாழுதல்) அதிக பாசப்பிணைப்புடன் இருப்பது தெரிய வந்தது. அதேசமயம், அவசர கதியில் செக்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வருபவர்களிடையே ஒரு விதமான அதிருப்தி நிலவுவதும் தெரிய வந்ததாம்.

வலுவான திருமண பந்தம் என்பது இருவரது மணங்களும் ஒன்றாக இணைவதில்தான் உள்ளது. வெறுமனே உடல் சேர்க்கையில் இது சாத்தியப்படாது. உணர்வுப் பூர்வமாக, உள்ளப் பூர்வமாக இருவரும் முதலில் இணைய வேண்டும். நீ என்பதில் நானும் அடங்கும், நான் என்பதில் நீயும் அடங்கும் என்ற வைரமுத்துவின் வரிகளைப் போல இருவரும் ஒருவருக்குள் ஒருவர் புக வேண்டும். அதன் பிறகு உடல்களின் கூடலுக்கு முக்கியத்துவம் தரலாம். அப்போதுதான் அது உண்மையான பந்தமாக இருக்க முடியுமே தவிர, செக்ஸ் மட்டுமே முக்கியம் என்ற எண்ணம் எழுந்தால் அது நிச்சயம், கூடலுக்குப் பிந்தைய ஊடலுக்கு வித்திடும் என்பதில் சந்தேகம் இல்லை.

சும்மாவா சொல்லி வைத்தார்கள் அந்தக் காலத்தில் - மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என்று. அது நிச்சயம் உண்மைதான். ஆனால் இந்த பழமொழியை பொய்யாக்க வேண்டுமானால் திட்டமிடுதலுடன் கூடிய உறவைக் கடைப்பிடிப்பது அவசியம்.

தூக்கமின்மை ஒரு 'டைம்பாம்'!

பின் தூங்கி முன் எழுவதை சிலர் பெருமையாகவே கூறிக்கொள்வது உண்டு. ஆனால் இது 6 மணி நேரத்திற்கும் குறைவாக போனால் மாரடைப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று அபாய சங்கை ஊதுகிறது ஆய்வு ஒன்று!

"நீங்கள் என்ன உண்கிறீர்கள் அல்லது அருந்துகிறீர்கள் என்பது மட்டுமே உங்களது உடல் நலத்தை தீர்மானிக்கப்போவதில்லை; தூக்கமும்தான்!" என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்!

மாரடைப்பு உள்ளிட்ட இருதய சம்பந்தமான நோய்கள் குறித்து சமீப காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தூக்கமின்மையும் அதற்கு ஒரு முக்கிய காரணமாக உருவெடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

லண்டனில் அண்மையில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், இரவில் ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு, இருதய நோயால் அல்லது மாரடைப்பால் உயிரிழப்பதற்கு மற்றவர்களை காட்டிலும் 48 விழுக்காடு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சி சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் இயந்திர வாழ்க்கையில் உழலும் பின் தூங்கி முன் எழுபவர்களுக்கும் பொருந்தும் என்கிறார்கள் சென்னை மற்றும் மும்பையை சேர்ந்த முன்னணி இருதய நோய் மருத்துவ நிபுணர்கள்!

இது தொடர்பாக மும்பையை சேர்ந்த பிரபல இருதய சிகிச்சை நிபுணரான பின்டோ, பின் தூங்கி முன் எழும் பழக்கமுடைய தமது நண்பரின் 43 வயது மகன் ஒருவர் அதிகாலை 5 மணி அளவில் ஜாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென மார்பை பிடித்து சுருண்டு விழுந்தபடியே உயிரை விட்டதை நினைவு கூறுகிறார்.

"இரவில் பின் தூங்குவதும், அதே சமயம் உடற்பயிற்சி கட்டாயம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாலை எழும்-அதாவது 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும்-பழக்கம் நமது இளைய தலைமுறையினரிடையே தற்போது மிக அதிகமாக காணப்படுகிறது.உடற்பயிற்சிக்காக தூக்க நேரத்தை குறைக்கும் இவர்களுக்கு அதில் உள்ள ஆபத்து புரிவதில்லை.ஏழு மணி நேரம் மிக நல்லது.முடியாவிட்டால் 6 மணி நேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும்.அது இல்லாமல் போனால் ஆபத்தை அதுவே உணர்த்திவிடும்" என்கிறார் பின்டோ.

அதேப்போன்று மற்றொரு இருதய சிகிச்சை நிபுணரான மேத்தா,"முதல்முதலாக மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட 60 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர்,குறைவான நேரம் தூங்குபவர்களாகவும்,அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்களாகவுமே இருப்பது தெரியவந்துள்ளது" என்கிறார்.

இதுமட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 8 நாடுகளில், சுமார் 4.7 லட்சம் பேரிடம் வார்விக் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்விலும் இது உண்மைதான் என்பது நிரூபணமாகியுள்ளது.

"ஒருவர் இரவில் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினாலோ அல்லது தூக்கம் பாதிக்கப்பட்டாலோ அவருக்கு மற்றவர்களை காட்டிலும் இருதய நோயால் இறப்பதற்கான வாய்ப்பு 48 விழுக்காடு அதிகமாக உள்ளது.மேலும் 'ஸ்ட்ரோக்'கால் இறப்பதற்கான வாய்ப்பும் மற்றவர்களை காட்டிலும் 15 விழுக்காடு அதிகமாக உள்ளது" என்று தெரியவந்துள்ளதாக கூறும் அந்த ஆய்வறிக்கை,"பின் தூங்கி முன் எழுவது உடலிலேயே கட்டிக்கொண்டிருக்கும் 'டைம்பாம்' க்கு சமமம் என்று எச்சரிக்கிறது.

இது ஒருபுறம் இருக்க"ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் சர்க்கரை நோயும், உடல் பருமனும் இணைந்த டயப்ஸிட்டி - diabesity (diabetes and obesity) - என்ற நோய் வர அதிக வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

அதே சமயம் கும்பகர்ணன் கணக்காக 10 மணி நேரத்திற்கும் அதிகமாக ஒருவர் தூங்கினால் அதுவும் கேடுதான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

திங்கள், 21 பிப்ரவரி, 2011

வேலைவாய்ப்புகளுக்கு பஞ்சமில்லாத நானோ டெக்னாலஜி!

அடுத்த 10 ஆண்டுகளில் அஞ்சத்தக்க வளர்ச்சி பெறும் துறையாக நானோ டெக்னாலஜி (Nano technology) கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கடந்த 1985ஆ‌‌‌ம் ஆ‌ண்டு உருவான இந்தத் தொழில்நுட்பம், இன்று வரை அதன் துவக்க கால வளர்ச்சியை மட்டுமே அடைந்துள்ளது.

உலகம் முழுவதும் நானோ டெக்னாலஜி தொடர்பான ஆய்வுகளும், படிப்புகளும் புதிது புதிதாக உருவெடுத்து வருகின்றன. இந்தியாவும் பிற நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் நானோ டெக்னாலஜி தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் படிப்புகள், ஆய்வகங்களை உருவாக்கி வருகிறது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூட நானோ டெக்னாலஜி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பற்றி விரிவாக விவரித்துள்ளார். மருத்துவம், அறிவியல், இயற்பியல் துறைகளில் நேனோ டெக்னாலஜி மாபெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளதாகவும், மனிதன் நோயின்றி வாழ்வதற்கும் இந்த தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என்றும் கலாம் தெரிவித்துள்ளார்.

பொதுவாக 100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புகளைக் கொண்டும், அந்த சிறு அளவுகளால் சிறப்பாகப் பெறப்படும் பண்புகளைக் கொண்டும் உருவாக்கப்படும் கருவிகளையும், பொருட்பண்புகளையும் நானோ தொழில்நுட்பம் என்று அழைக்கிறோம்.

ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் 1,000,000,000ல் (ஒரு பில்லியனில்) ஒரு பங்கு. ஒரு நானோ மீட்டர் நீளத்தில் 8-10 வரையான அணுக்களின் அமர முடியும். சாதாரணமாக மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நானோ மீட்டர் தடிப்புடையது.

நானோ டெக்னாலஜி என்பது உண்மையிலேயே பல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, ஏற்படுத்திவரும் ஒரு தொழில்நுட்பம். இது ஒரு தனிப்பட்ட துறையில் மட்டும் செல்வாக்கு செலுத்தவில்லை. மாறாக உயிரியல், வேதியியல், இயற்பியல், மின்னணுவியல், மருத்துவம், பொறியியல் என்று பல துறைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது.

பார்க்கின்சன்ஸ் (Parkinson's) எனப்படும் மூளை செயல்பாடுகளை மட்டுப்படுத்தும் அபாயகரமான நோயின் பாதிப்பைக் குறைக்கும் சிகிச்சை முறையில் கூட நானோ டெக்னாலஜி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் சளித் தொந்தரவு போன்ற அன்றாட நோய்களுக்கும் நானோ டெக்னாலஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீரியமான மருந்துகளை தயாரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். பொதுவாக தற்போதைய மருத்துவ முறையில் சிகிச்சை அளித்தாலும் சளித் தொந்தரவு 3 முதல் 4 நாட்களுக்கு நீடிக்கும்.

ஆனால் நானோ டெக்னாலஜி மூலம் தயாரிக்கப்பட்ட மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் ஒரே நாளில் நிவாரணம் பெற முடியும் என இத்துறை வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற ஆயிரம் ஆச்சரியங்களை தனக்குள் அடக்கியுள்ள நானோ டெக்னாலஜி தொடர்பான படிப்புகளை எங்கு படிக்கலாம்? அதன் மூலம் என்னென்ன வேலைவாய்ப்புகளைப் பெறலாம் என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு சில கல்லூரிகளே இளநிலை, முதுநிலையில் நானோ டெக்னாலஜி படிப்பை வழங்குகின்றன.

இளநிலை படிப்புகள்: அமிதி இன்ஸ்டிடியூட் ஆஃப் நானோ டெக்னாலஜி, கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தஞ்சாவூரிலுள்ள சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆகியவை இளநிலை அளவில் நானோ டெக்னாலஜி கல்வியை வழங்குகின்றன. இதில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், நானோ டெக்னாலஜி B.Sc Physics படிப்பு உள்ளது.

முதுநிலை படிப்புகள்: நொய்டாவில் (டெல்லி அருகேயுள்ளது) உள்ள அமிதி (Amity) இன்ஸ்டிடியூட், கொச்சியில் உள்ள அமிர்தா சென்டர் ஃபார் நானோ சயின்ஸ், கோவை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பயோசிஸ் பயோடெக்ஸ்& ரிசர்ச் சென்டர், சண்டிகரில் உள்ள சென்ட்ரல் சயின்டிஃபிக் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் ஆர்கனைஷேசன், மும்பை, கான்பூர், சென்னை, டெல்லி, குவஹாட்டியில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள், பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், புதுடெல்லியில் உள்ள ஜமியா மில்லியா இஸ்லாமியா கல்லூரி, போபால் மவுலானா ஆசாத் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, புனேவின் நேஷனல் கெமிக்கல் லெபாரட்ரி, குருஷேத்திரா, ரூர்கேலாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, புதுடெல்லி நேஷனல் ஃபிசிக்கல் லெபாரட்ரி, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், வேலூரி‌ல் உள்ள வி.ஐ.டி. ஆகிய இடங்களில் முதுநிலை நானோ டெக்னாலஜி படிப்புகள் வழங்கப்படுகின்றன.

வேலைவாய்ப்புகள்: இந்தியாவில் வளர்ந்து வரும் நானோ டெக்னாலஜி படிப்பை வழங்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கும் என்பதால், பேராசிரியர், ஆய்வாளர்கள் பணிக்கு ஏராளமானோர் தேவைப்படுவர்.

இதேபோல் நானோ டெக்னாலஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனங்களும் புதிதாக உருவாக்கப்படும் நிலையில், அதற்கும் ஏராளமான பணியாளர்கள் தேவைப்படுவர். இதுமட்டுமின்றி நேனோ டெக்னாலஜி தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளுக்கும் சர்வதேச அளவில் விஞ்ஞானிகளின் தேவை அதிகரித்து வருகிறது.

புதன், 16 பிப்ரவரி, 2011

125 ஆண்டுகளுக்கு பிறகு கோகோ-கோலாவின் பார்முலா ரகசியத்தை அமெரிக்க ரேடியோ வெளியீடு!


நியூயார்க்: 125 ஆண்டுகளுக்குப் பிறகு ரகசியமாக வைக்கப்பட்ட கோகோ-கோலாவின் பார்முலா வெளியாகியுள்ளது.

கடந்த 1886-ம் ஆண்டு தான் கோகோ-கோலா முதன்முதலாக தயாரிக்கப்பட்டது. முதலில் அட்லாண்டாவில் மட்டுமே விற்பனையான இந்த குளிர்பானம் பிறகு உலகம் முழுவதும் விற்பனையாகி வருகிறது.

கோகோ-கோலா விற்பனையாகத் துவங்கியது முதல் பலரும் அதற்கு பிரத்யேக சுவை அளிக்கும் பார்முலாவை தெரிந்து கொள்ள முயன்றனர். அதில் பலர் தாங்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூட கூறினர். ஆனால் யார் கையிலும் சிக்காமல் பார்முலா பரம ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டு வந்தது. அப்படிப்பட்ட பார்முலாவை கண்டுபிடித்தவர் ஜான் பெம்பர்டன்.

இந்த பார்முலா ரகசியத்தை அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு ரேடியோ தெரிவித்துள்ளது. அதன் நிகழ்ச்சி ஒரு இணையதளத்திலும் வெளியாகி உள்ளது.

கோகோ-கோலாவின் அதிகாரப்பூர்வமான எழுத்துப் பிரதி அட்லாண்டாவில் உள்ள சன்டிரஸ்ட் வங்கியின் பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் 2 ஊழியர்களுக்கு மட்டும் தான் அந்த பார்முலா தெரியும் என்று கூறப்படுகின்றது. அவர்கள் இருவரும் ஒன்றாகப் பயனிப்பதில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் அவ்விருவர் மூலம் தான் ரகசியம் வெளியாகி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.