வியாழன், 21 ஏப்ரல், 2011

மருத்துவத் தவறுகளால் இறப்புகள் அதிகரிப்பு - உலகச் சுகாதார மையம்!


மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் 10 பேரில் ஒருவர் தவறான மருத்துவச் சிகிச்சைகளால் உயிரிழக்கின்றனர் என்று உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதன் விளைவுகள் குறித்த தரவுகள் இப்போதைக்கு இல்லை என்றாலும், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் அலட்சியம், தவறான சிகிச்சை, தவறான நோய் கணிப்பு உள்ளிட்ட மருத்துவத் தவறுகளால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

ஒரு நோயாளியைக் கொல்லும் 10 காரணங்களில் மருத்துவ ரீதியான தவறுகள் இடம்பெற்றுள்ளது.

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்டொன்றுக்கு 15% நோயாளிகளுக்கு தவறான நோய்க் கணிப்பு முறை கையாளப்படுவது தெரியவந்துள்ளது.

அமெரிக்க மருத்துவ சங்கம் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், சுமார் 2000 பேர் ஆண்டொன்றுக்கு தேவையில்லாத அறுவை சிகிச்சை மூலமும், சுமார் 7000 பேர் தவறான மருந்துகளாலும் உயிரிழப்பதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் 20,000 பேர் ஆண்டொன்றுக்கு மருத்துவனமைகளில் செய்யும் பல தவறுகளினால் உயிரிழப்பதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இது தவிர மருத்துவமனைகளில் நோயாளிகளை இருக்கவைக்கும் காலம் நீட்டிக்கப்படுவதால் ஏற்படும் கிருமிகளால் 80,000 மரணங்களும், மருத்துவத் தவறுகளால் சுமார் 1 லட்சம் பேரும் அமெரிக்காவில் உயிரிழந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் சுமார் 2,25,000 பேர் தெரியாமல் செய்த மருத்துவத் தவறுகளுக்கு ஆண்டு தோறும் அமெரிக்காவில் உயிரிழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலும் ஆங்காங்கே மருத்துவத் தவறுகளால் ஏற்படும் உயிரிழப்பு, உடல் உறுப்புகள் இழப்புகள் பற்றி நாம் பத்திரிக்கை செய்திகள் வாயிலாகத் தெரிந்து கொள்கிறோம். ஆனால் எந்த ஒரு ஆய்வும் இதுவரை இந்தப் பகுதியில் ஆய்வு ரீதியான தவல்களை வெளியிடவில்லை. தகவல்கள் இல்லாததனால் இந்தியாவில் இது போன்ற மரணங்கள் குறைவு என்ற எண்ணத்திற்கு நாம் வரவேண்டியத் தேவையில்லை.

எய்ம்ஸ் மருத்துவக் கழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நோயாளி பாதுகாப்பு பற்றிய தேசிய திட்டம் ஒன்று அமல் செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் இதன் மூலம் எவ்வளவு மருத்துவ ரீதியான சாவுகள் தடுக்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் இது வரை இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக