செவ்வாய், 22 ஜூன், 2010

இந்தியாவின் 60 நகரங்களில் 75 மையங்கள் அமைக்கும் ஐபிஎம்!


டெல்லி: ஐபிஎம் நிறுவனம், இந்தியாவின் 60 முக்கிய நகரங்களில் உள்ள 75 முன்னணி பொறியியல் கல்லூரிகளில் திறன் மையங்களை அமைக்கவுள்ளது.

தற்போது இத்தகைய மையங்கள் தமிழகத்தில் 11 உள்ளன. கர்நாடகத்தில் 12, கேரளாவில் ஒன்று உள்ளது. தமிழகத்தில் மேலும் 6 மையங்களை ஐபிஎம் அமைக்கவுள்ளது. இதுதவிர கர்நாடகத்தில் 5ம், கேரளாவிலும் 2ம் அமைக்கப்படவுள்ளன.

தமிழகத்தில் உள்ள ஐபிஎம் மையங்களில் முக்கியமானது வேலூர் [^] தொழில்நுட்பக் கழகமாகும்.

மாணவர்களிடையே சாப்ட்வேர் திறமையை வளர்ப்பதே இத்தகைய மையங்களின் முக்கிய நோக்கமாகும் என ஐபிஎம்தெரிவித்துள்ளது. மேலும், ஐபிஎம் சாப்ட்வேர்களின் அதி நவீன முன்னேற்றம், தொழில்நுட்பத்தை மாணவர்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் இந்த மையங்கள் உதவும்.

2009ம் ஆண்டு இதேபோன்ற 75 மையங்களை நாடு முழுவதும் தொடங்கியது ஐபிஎம். தற்போதைய மையங்களையும் சேர்த்து 20 மாநிலங்களில் தற்போது ஐபிஎம் மையங்கள் அமைந்துள்ளன.

மையங்கள் அமைப்பதற்கான கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்காக நாடு முழுவதும் 300 கல்லூரிகளைப் பட்டியலிட்டு அதிலிருந்து தேர்வு செய்யவுள்ளது ஐபிஎம்.

இந்த மையங்கள் மூலம் இதுவரை 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஐபிஎம் நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 60 ஆயிரமாக உயரும் எனவும் ஐபிஎம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக