புதன், 5 ஜனவரி, 2011

சச்சின் ஏன் வித்தியாசமான பேட்ஸ்மேன்?



கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் மிக முக்கியமான சதம் எடுத்து இந்திய அணிக்கு பலம் சேர்த்துள்ள சச்சின் டெண்டுல்கர் இப்போது உள்ள அல்லது முந்தைய நட்சத்திர வீரர்களைக் காட்டிலும் ஏன் வித்தியாசமானவர் என்பது இப்போது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

பொதுவாக ஒரு பேட்ஸ்மென் 20 அல்லது 22 வயதில் தனது சர்வதேச கிரிக்கெட்டை துவக்குகிறார் என்றால் 8 அல்லது 10 ஆண்டுகள்தான் அவரது உச்சக்கட்ட காலமாக இருக்கும் அதன் பிறகு வீழ்ச்சி தொடங்கி விடும். ஆனால் சச்சினைப் பொறுத்தவரை வீழ்ச்சி என்பது 20 ஆண்டுகள் ஆகியும் இல்லாமல் இருக்கக் காரணம் அவர் சிந்தனாபூர்வமான கிரிக்கெட் வீரர் என்பதே.

நேற்று டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல் ஆகியோரின் ஆக்ரோஷமான பந்து வீச்சையும் அவர் எந்த வித அழுத்தமும் இல்லாமல் எதிர்கொண்ட விதம் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருந்தது.

ஒவ்வொரு முறை அவர் சரியாக ரன் எடுக்காத போதும் அவர் மீது எழுந்த விமர்சனங்களுக்கு அவர் தன் மட்டையின் மூலமே பதிலளித்து வந்துள்ளார்.

சச்சினின் பழைய அதிரடி போய்விட்டது என்று வருத்தப்பட்ட அவரது முந்தைய ரசிகர்களுக்கு பதில் கொடுத்த ஒரு நாள் போட்டி இரட்டை சதம் சச்சினின் இந்த பிந்தைய காலக்கட்டத்தில்தான் நடந்தேறியது என்பதும் அவர் இன்னமும் தனது ஆதிக்கவாத கிரிக்கெட் ஆட்டத்த்தை முற்றிலும் விட்டுவிடவில்லை என்பதற்கும் அத்தாட்சியாக விளங்கியுள்ளது.

துவக்கத்தில் சச்சின், டேல் ஸ்ட்யென் வீசிய 5 ஓவர்களையும் தானே எதிர்கொள்ள நேரிட்டது. மற்ற நாட்களை விட நேற்று அதிகம் பந்துகள் அவரது மட்டையைக் கடந்து சென்றன என்பதில் ஐயமில்லை. ஆனால் அவரது பொறுமை, பந்துக்கு பந்து மாறும் பேட்டிங் உத்தி அவர் விக்கெட்டை வீழ்த்துவது எளிதானதல்ல என்பதை நிரூபித்தது.

டெண்டுல்கரை ஒரு 20 பந்துகளாவது பீட்டன் செய்த ஸ்டெய்ன் கடைசியில் "சச்சின் விக்கெட்டை வீழ்த்துவதில் ஆற்றலைச் செலவழிப்பதில் பயனில்லை. ஏனெனில் அது அவருடைய தினமாக இருந்தால் அது அவருடைய தினம் மட்டுமே." என்று கூறியிருப்பதும் டெண்டுல்கரின் கிரிக்கெட் ஆட்டத்தின் மீதான சிந்தனாபூர்வமான அபிமானத்தை அறிவுறுத்துகிறது.

ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக ஆஸ்ட்ரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் அவர் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தை விரட்டி ஆட முயன்று ஆட்டமிழந்து வந்தார். இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றபோது ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்துகளை தொடுவதில்லை என்று சபதம் எடுத்து இரட்டைச் சதம் அடித்தார் சச்சின். இது அவருடைய மனோபலத்தைக் காண்பித்த பல தருணங்களில் ஒரு தருணம்.

சச்சினின் ஆரம்பக் காலங்களில் விளையாடிய புல், ஹுக் ஆகிய ஷாட்களை அவர் டென்னிஸ் எல்போ என்ற முழங்கை அறுவை சிகிச்சைக்குப் பிறகு விட்டு விட்டார். அதற்குப் பதிலாக அவர் பவுன்சரை பாயிண்ட், தேர்ட்மேன் திசையில் தூக்கி அடிக்கும் முறையில் வெற்றி கண்டார்.

நேற்று படு பயங்கரமான ஸ்விங் பந்து வீச்சு, ரன் எடுக்க வேண்டிய இடங்களிலெல்லாம் ஃபீல்டர்கள். மோர்னி மோர்கெல்லின் தென்னை மர உயரப் பந்து வீச்சு. ரன்களே எடுக்க முடியாத ஒரு சூழல்தான்.

ஆனாலும் பவுன்சர்களை விட்டு விட்டு, அவர்கள் பந்தை சற்றே ஓவர் பிட்ச் போன்று வீசும் போது அதுவரை பின்னங்காலில் சென்று ஆடிய சச்சின் சட்டென ஓவர் பிட்ச் பந்துகளுக்கு முன்னால் வந்து கவர் டிரைவ், ஸ்ட்ரெய்ட் டிரைவ் ஆடியது இன்னமும் அவரிடம் பொக்கிஷமாக இருப்பது 'ஃபுட் வொர்க்' என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

சுழற்பந்து வீச்சாளர்களை சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக பயன்படுத்துவது இப்போதெல்லாம் ஏறக்குறைய விரயம் என்பது சமீப காலங்களில் தெரிய வந்துள்ள உண்மை. ஆனால் எதிரணியினர் என்ன செய்ய முடியும், ஏதாவது கவனப்பிசகு ஏற்பட்டு டெண்டுல்கர் ஸ்பின்னர்களிடம் ஆட்டமிழந்து விட மாட்டாரா என்ற ஆதங்கம் இருப்பது நியாயமானதுதான். ஆனால் சுழற்பந்தில் அவரே ஆட்டமிழந்தால்தான் உண்டு.

முன்பெல்லாம் கூட அணியின் மீதான நெருக்கடி இவரது பேட்டிங்கிலும் ஓரளவுக்கு பிரதிபலித்து அழுத்தம் காரணமாக தடுமாறியதுண்டு. ஆனால் சமீப காலங்களில் குறிப்பாக நேற்று அணியின் நெருக்கடி என்பது உள்ளார்ந்து இருந்தாலும் அது தன் பேட்டிங்கை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் தெளிவாக இருந்ததை எடுத்துக் காட்டியது.

ஏற்கனவே லஷ்மண் ரன் அவுட் ஆனது இவர் மனதை பாதித்திருக்கலாம். அதனால் அவர் நேற்று கடைசி வரை நின்று லஷ்மண் ரன்களையும் சேர்த்து எடுக்க வேண்டிய கடமையைச் செய்தார்.

இரண்டாவது புதிய பந்து எடுத்தால் இந்தியாவை அவர்கள் சுருட்டி விடுவார்கள் என்று டெண்டுல்கர் கணித்து அதற்கு முன்பே ரன்களைக் குவிப்பதில் வேகம் காட்டினார்.

அப்படிப்பட்ட தருணத்தில்தான் பால் ஹேரிஸ் பந்தை அவர் மேலேறி வந்து அடித்தபோது அது அவர் கையில் பட்டு ரன்னர் முனையில் உள்ள ஸ்டம்பைத் தாக்க லஷ்மண் ஆட்டமிழந்தார்.

ஆனால் புதிய பந்து எடுத்த பிறகு மோர்கெலின் இரண்டு பந்துகள் பெரிய அளவில் ஆஃப் கட்டர் ஆகி டெண்டுல்கரின் தொங்கும் மட்டைக்கும் உடம்புக்கும் இடையில் புகுந்து சென்றது.

இனிமேல் தடுத்தாட முயன்றால் அது அவுட்டில்தான் போய் முடியும் என்று புரிந்து கொண்ட சச்சின் மோர்கெலின் அடுத்த ஷாட் பிட்ச் பந்தை ஆக்ரோஷமாக ஹுக் செய்து சிக்சர் அடித்து சதத்தை நிறைவு செய்தார்.

இந்த திடீர் தாக்குதல் மோர்கெலை சற்றே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் பிறகு அடுத்த பந்தே தேர்ட் மேன் திசையில் திருப்பி விட்டதும் டெண்டுல்கரின் ஆதிக்கத்திற்கு உதாரணங்கள். சதத்திற்குப் பிறகு சச்சின் ஏறக்குறைய ஆட்டமிழக்கச் செய்ய முடியாத வீரர் என்ற அளவுக்கு விளையாடத் துவங்கி விட்டார்.

ஹர்பஜன் சிங் துவக்கத்தில் இருபது ஓவர் கிரிக்கெட் போன்று சுழற்றினார். ஏனெனில் பொதுவாக பந்து வீச்சாளர்கள் களமிறங்கும் போது இதுபோன்ற ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சிற்கு முன் தாங்கள் காயம் அடைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பர். ஆனால் டெண்டுல்கர் ஹர்பஜனிடம் பேசி அவரை சகஜமான கிரிக்கெட் ஆட்டத்தை விளையாட வலியுறுத்தினார். அதில் வெற்றியும் கண்டார்.

இவ்வாறு தான் விளையாடும்போது எவ்வளவு ரன்களை எடுக்க முடியுமோ அது வரை போராட்ட குணத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதை எதிர்முனை வீரர்களுக்கும் அவர் அறிவுறுத்துவதில் தயங்கியதில்லை. அதில் பலமுறை வெற்றியும் கண்டுள்ளார். ஒரு முறை ஜாகீர் கான் 75 ரன்கள் எடுக்கக் காரணமாயிருந்ததும் சச்சின் டெண்டுல்கர்தான்.

ஸ்டீவ் வாஹும் ஏறத்தாழ 18 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தார். ஆனால் அவர் 1997க்குப் பிறகுதான் பெரிய பேட்ஸ்மென் ஆனார். ரிக்கி பாண்டிங்கும் தற்போது கிரிக்கெட் உலகிற்கு வந்து 14, 15 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் அவரது வீழ்ச்சியின் அறிகுறிகள் தெரியத் துவங்கிவிட்டது.

பிரையன் லாரா தென் ஆப்பிரிக்காவில் ஒரு தொடரில் தொடர்ந்து ஆலன் டொனால்டிடம் விக்கெட்டைப் பறிகொடுத்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 78 ரன்கள்தான் அவரது அதிகபட்ச ரன் எண்ணிக்கையாக அமைந்தது.

கேரி சோபர்ஸ் ஆலன் போர்டர், சுனில் கவாஸ்கர், விவியன் ரிச்சர்ட்ஸ், ஆல்வின் காளிச்சரண் என்று நமக்கு நினைவு தெரிந்த பேட்டிங் மேதைகள் இருந்தும் அவர்கள் விளையாடிய காலக்கட்டம், ஆட்டக்களம், பவுன்சர் விதிகள் என்ற வேறுபாடுகள் இருந்தாலும் சச்சின் அவர்களிலிருந்து வேறுபட்ட ஒரு மேதை என்பது நேற்றைய இன்னிங்ஸ் மூலம் தெரிந்தது.

இந்த மேதைமை இல்லாமல் 51 டெஸ்ட் சதங்கள் 46 ஒரு நாள் சதங்கள் ஒரு போதும் சாத்தியமாகாது. இனிமேலும் ஒருவர் இந்த கிரிக்கெட் சிந்தனையுடனும் உத்தியுடனும், இவ்வளவு நீண்ட காலம் கிரிக்கெட் ஆடும் திறமையுடன் வருவதும் கடினமே.

சச்சினின் இந்த இன்னிங்ஸ் இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தால் அவர் நிச்சயம் தனது சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் இதுதான் என்று இதனை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கடைசியாக தனது 2010ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் அணியில் சச்சினுக்கு சிறப்பான இடம் வழங்கிய இயன் சாப்பல் "சச்சின் தனது பழைய ஆதிக்கத்தை தற்போது மீண்டும் ஒரு கலையாகக் கண்டு பிடித்துக் கொண்டுள்ளார்." என்று கூறியுள்ளது சச்சினின் பெருமைக்குச் சான்று. ஏனெனில் இதே இயன் சாப்பல்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டு கண்ணாடியிடம் தான் தொடர்ந்து விளையாட வேண்டுமா அல்லது வேண்டாமா என்று கேட்கவேண்டும் என்று கடுமையாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக