செவ்வாய், 4 மே, 2010

7800 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்… சான்றிதழ் சரிபார்ப்பு ஆரம்பம்!


7800 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்… சான்றிதழ் சரிபார்ப்பு ஆரம்பம்!

சென்னை: அரசு நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு புதியதாக 6000 ஆசிரியர்கள், 900 முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் 900 சிறப்பாசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதற்கென வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையிலான 32 ஆயிரம் பேர் கொண்ட பெயர் பட்டியல் பெறப்பட்டுள்ளது.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மே 2-வது வாரத்தில் தொடங்க உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் உள்ள 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய சுமார் 6,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என தமிழக அரசு, கடந்த 2009-ல் அறிவித்தது. 1:5 விகிதாசாரத்தில் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பதிவு மூப்பு அடிப்படையில் 32 ஆயிரம் பேர் கொண்ட பெயர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் பெற்றுள்ளது.

இந்த 32 ஆயிரம் பேருக்கு மே முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்வதற்கான தகவல் அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து மே 2-வது வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 32 மாவட்டங்களில் தொடங்கி நடைபெற உள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிந்த பிறகு தேர்வு செய்யப்படும் பட்டதாரி ஆசிரியர்கள், வரும் ஜூன் மாதத்தில் பள்ளிகளில் பணிக்குச் சேருவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

6,000 பணியிடங்களுக்காகப் பெறப்பட்டுள்ள 32 ஆயிரம் பேரின் மூப்பு அடிப்படையிலான பெயர் பட்டியல் ​‌w‌w‌w.‌t‌rb.‌t‌n.‌n‌ic.‌i‌n​ என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

அதேபோல முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 900 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதுதவிர உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் போன்றவற்றுக்கான சிறப்பு ஆசிரியர்கள் சுமார் 900 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இவர்களுக்கும் மே முதல் வாரத்தில் தகவல் அனுப்பி வைக்கப்பட்டு, மே 2-வது வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெறும்.

2010-2011 ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் தொடக்க கல்வி இயக்ககத்தில் சுமார் 8,900 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக