திங்கள், 17 மே, 2010

குஷ்புவை டிஸ்மிஸ் செய்தது ஜெயா டிவி!


குஷ்புவை டிஸ்மிஸ் செய்தது ஜெயா டிவி…
sசென்னை: நிர்வாகத்துக்கு சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று திமுகவில் சேர்ந்து விட்டதால், குஷ்பு நடத்தி வந்த ஜாக்பாட் நிகழ்ச்சியிலிருந்து அவரை தூக்கி விட்டதாக, ஜெயா டிவி அறிவித்துள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு முதல் ஜாக்பாட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஹட்ஸன் நிறுவனத்தின் ஆதரவுடன் நடக்கும் இந்த நிகழ்ச்சியை குஷ்புதான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் திடீரென முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து நேற்றுமுன்தினம் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் குஷ்பு.

இதனால் ஜெயா டிவி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது குஷ்புவை அந்த நிகழ்ச்சியிலிருந்து டிஸ்மிஸ் செய்துவிட்டதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஜாக்பாட் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கூறுகையில், தொழில் வேறு, அரசியல் வேறு என்ற கண்ணோட்டத்தில் திமுகவில் இணைந்ததாக குஷ்பு தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் அப்படி பார்க்க முடியாது. ஜெயா டிவியும் அப்படி பார்க்காது.

திமுகவில் சேருவதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட ஜாக்பாக்ட் நிகழ்ச்சி சம்பந்தமாக மீட்டிங் நடந்தது. அப்போது கூட அவர் அரசியல் ஆசை பற்றி தெரிவிக்கவில்லை. கட்சியில் சேரும் போது தெரிவிக்கவில்லை. தொழில் வேறு அரசியல் வேறு என்று நினைப்பதால் அப்படி செய்திருக்கலாம்.

ஆனால் நாங்கள், இனி ஜாக்பாக்ட் நிகழ்ச்சியில் குஷ்பு பங்கேற்கக் கூடாது என்பதில் உறுதியான, தெளிவான முடிவை எடுத்துள்ளோம். அவரை இந்நிகழ்ச்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளோம்.

அவர் பங்கேற்ற 15 எபிசோடுகள் ஒளிபரப்பாகும் நிலையில் தயாராக உள்ளன. அதையும் ஒளிபரப்பப்போவதில்லை, என்று தெரிவித்துள்ளது.

குஷ்புவுக்கு அதிர்ச்சியாம்…

ஜெயா டிவியின் இந்த அறிவிப்பு தனக்கு அதிர்ச்சியை அளிப்பதாகக் கூறியுள்ளார் குஷ்பு.

ஜெயா டிவியிருந்து உங்களை டிஸ்மிஸ் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, யார் சொன்னது என்று ஆவேசமாக திருப்பிக் கேட்டார் குஷ்பு.

பின்னர் அவர் கூறுகையில், அரசியலையும் தொழிலையும் ஒன்றாகப் பார்க்கிறார்கள். நான் அப்படிப் பார்பதில்லை. தொழில்முறையில்தான் அணுகுகிறேன். அதனால்தான் இவர்களிடம் சொல்லிவிட்டு முடிவெடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை; திமுகவில் தன்னிச்சையாக இணைந்தேன்.

என்னை ஜாக்பாட் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர். நீக்கம் செய்யும் போது என்னிடம்தான் முதலில் தெரிவிக்க வேண்டும். ஆனால் இதுவரை எந்த தகவலும் இல்லை.

முதலில் என்னிடம் தகவல் தெரிவிக்கட்டும். அப்புறம் ஆலோசித்து என்ன செய்வதென்று கூறுகிறேன், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக