திங்கள், 26 ஏப்ரல், 2010

ஜிஎம்ஆர் இன்டஸ்ட்ரீஸை வாங்குகிறது ஈஐடி பாரி!


சென்னை: ஜிஎம்ஆர் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை வாங்குகிறது சென்னை யைச் சேர்ந்த முருகப்பா குழுமத்தின் இஐடி பாரி இந்தியா நிறுவனம்.

இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக பாரி நி்றுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்த இரு பகுதிகளாக நிறைவேற்றப்பட உள்ளது. ஜிஎம்ஆர் குழுமத்தின் 51 சதவீத பங்குகளுக்காக ரூ.110 கோடி செலுத்தப்படும். இந் நிறுவனத்தின் கடன்கள் ரூ.450 கோடியை பாரி நிறுவனம் ஏற்கும். இந்த வகையில் ரூ.560 கோடிக்கு ஜிஎம்ஆர் நிறுவனத்தை வாங்குகிறது ஈஐடி பாரி நிறுவனம்.

ஜிஎம்ஆரை வாங்குவதன் மூலம் பாரி நிறுவனம் 60 முதல் 65 சதவீதம் வரை விரிவாக்கம் பெறும் என்று முருகப்பா குழும தலைவர் வெள்ளையன் தெரிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி ஜிஎம்ஆர் இன்டஸ்ட்ரீஸ் புரமோட்டர்கள் 74.85 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். இதில் 51 சதவீத பங்குகள் ரூ.57 வீதம் ஈஐடி பாரிக்கு விற்கப்படுகின்றன.

மீதி 23.85 சதவீத பங்குகளில் 20 சதவீதத்தை வெளிச் சந்தை விலையான ரூ.110.69 வீதம் பாரி நிறுவனம் வாங்கிக் கொள்ளும்.

ஜிஎம்ஆர் நிறுவனத்தை மீண்டும் லாபத்துக்கு திருப்பவே இந்த நடவடிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ. 58.43 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது.

ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு ஆந்திரா , கர்நாடகாவில் மட்டும் மூன்று சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றின் மொத்த பிழிதிறன் நாளொன்றுக்கு 11,000 டன். பாரி நிறுவனத்துக்கு 5 பெரும் ஆலைகள் உள்ளன. இவற்றின் மொத்த திறன் நாளொன்றுக்கு 19,000 டன் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக