வியாழன், 15 ஜூலை, 2010

'நரகத்துக்கு ஒப்பானவை இந்திய சிறைகள்'!


இந்தியாவில் உள்ள சிறைகள் நரகத்துக்கு ஒப்பானவை என ஐக்கிய அரபு எ‌மிரே‌ட் சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் இந்திய கைதிகள் தெரிவித்துள்ளனர்.

தங்களது எஞ்சியகால தண்டனையை இந்திய சிறைகளில் அனுபவிப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு எ‌மிரே‌ட் சிறைகளில் காணப்படும் தூய்மை, மருத்துவ பராமரிப்பு மற்றும் கண்ணியமான நடத்தை முறைகளை இந்திய சிறைகளில் எதிர்பார்ப்பது மிகவும் கடினம் என கைதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா- ஐக்கிய அரபு எ‌மிரே‌ட்டு இடையே கைதிகள் பரிமாற்றத்துக்கான ஒப்பந்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் பல்வேறு குற்றங்களுக்காக ஐக்கிய அரபு எ‌மிரே‌ட்டில் சிறை தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகள், தங்கள் எஞ்சிகால தண்டனையை இந்தியாவிலுள்ள சிறைகளில் கழிக்க முடியும்.

இதனிடையே, பெரும்பாலான கைதிகள் தங்கள் தண்டனை காலத்தை இங்குள்ள சிறைகளிலேயே கழிக்க விரும்புகின்றனர்.

இது தொடர்பாக, ஐக்கிய அரபு எ‌மிரே‌ட்டி‌லுள்ள மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த விநாயக் (76) என்பவர் கூறுகை‌யி‌ல், நானும், எனது கூட்டாளிகள் ஐந்து பேரும் இங்கு ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளோம். கடந்த 12 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறோம்.

இந்நிலையில், கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக நாங்கள் இந்தியாவிலுள்ள சிறைகளுக்கு அனுப்பப்படுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இங்கு எங்களுக்கு நல்ல உணவு, மருத்துவ வசதிகள், கழிப்பிட வசதிகள் செய்து தரப்படுகின்றன. சிறை வார்டன்களும் எங்களை நல்ல முறையில் நடத்துகின்றனர்.

இந்திய சிறைகளில் நிலவும் நடைமுறையே வேறு. இந்திய சிறைகளின் பராமரிப்பும், கைதிகளை அங்குள்ள அதிகாரிகள் நடத்தும் விதமும் இங்குள்ளதற்கு நேர்மாறனது. இன்னும் சொல்லப்போனால் நரகத்தில் வாழ்வதற்கு இணையானது என்றார்.

இதே கருத்தை, ஐக்கிய அரபு எ‌மிரே‌ட் சிறையிலிருக்கும் வேறு சில இந்திய கைதிகளும் தெரிவித்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக