செவ்வாய், 21 செப்டம்பர், 2010

அதிக‌ம் சம்பாதிக்கும் மனைவிகள் கொடுக்கும் விலை "டைவோர்ஸ்"!


கணவனைக் காட்டிலும் அதிகம் சம்பாதிக்கும் பெண், அதற்கு விலையாக கொடுப்பது தனது திருமண வாழ்க்கையை என்று கூறி திடுக்கிட வைக்கிறது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று!

பொதுவாகவே கணவன் குடும்பத்தை விட அதிக செல்வ செழிப்புக் கொண்ட குடும்பத்திலிருந்து வரும் பெண்கள் அல்லது கணவனைக் காட்டிலும் அதிக சம்பாத்தியத்தியம் கொண்ட பெண்கள் இயல்பிலேயே சற்று கர்வம் கொண்டவர்களாக இருப்பர்.(இதில் விதி விலக்குகளும் உண்டு.)

சம நிலையில் உள்ள அல்லது கணவன் மட்டுமே சம்பாதிக்கும் தம்பதியர்களே முட்டிமோதிக்கொள்ளும் இன்றைய சமூக சூழலில், மேற்கூறிய கர்வம் கொண்ட பெண்கள் மனைவியாக இருக்கும்போது பிரச்சனைகள் வெடித்துக் கிளம்ப கேட்கவா வேண்டும்?

அதே சமயம் வேலைக்கே செல்லாத கணவனைக் கட்டி அழுதுகொண்டு அல்லது கணவனைக் காட்டிலும் அதிக சம்பாத்தியம் ஈட்டியும், அனைத்தையும் கணவனிடமும் அல்லது கணவன் குடும்பத்தினராலும் பறிகொடுத்து தினமும் அவஸ்தையில் தவித்துக்கொண்டிருக்கும் ரக பெண்களும் உண்டு!

இந்நிலையில், கணவனைக் காட்டிலும் அதிகம் சம்பாதிக்கும் பெண்,எவ்வித கர்வமோ அல்லது பெருமையோ கொள்ளாமல் இயல்பாகவே இருந்தாலும், மனைவியைவிட குறைவாக சம்பாதிக்கிறோமே என்ற தாழ்வு மனப்பான்மையில் உழலும் கணவன்கள், அந்த தாழ்வு மனப்பான்மையை மறைப்பதற்காக மனைவியை தனது கட்டுப்பாட்டில் வைக்கிறோம் பேர்வழி என்று அதட்டி, மிரட்டி சமயங்களில் அடித்தும் அடாவடியில் ஈடுபடுவதையும் இன்றைய சமூகம் ஒவ்வொரு வீதிகளிலும் கண்டுகொண்டுதான் உள்ளது.

மொத்தத்தில் இத்தகைய பிரச்சனைகளை சந்திக்கும் பெண்கள், விவாகரத்து கோரி நீதிமன்ற கதவுகள் தட்டுவது அதிகரித்து வருகிறதாம்.

இத்தகைய பிரச்சனைகள் நம் நாட்டில் மட்டும்தானா என்றால், உதட்டை பிதுக்கும் சமூக ஆர்வலர்கள், உலகம் முழுவதுமே இத்தகைய பிரச்சனைகள் காணப்படுவதாக கூறி, உதாரணத்திற்கு சமீபத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கைகளை தூக்கி போடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக