வியாழன், 30 செப்டம்பர், 2010

வேலைவாய்ப்பு பதிவுக்கு புதிய சலுகை!

வேலைவாய்ப்பு பதிவுக்கு புதிய சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையாளர் ஏ.எஸ்.ஜீவரத்தினம் வெளியிட்ட அறிவிப்‌பி‌ல், பதிவு செய்தவர்கள் தங்களது பதிவினை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பிக்கும் மாதத்திலோ அல்லது அதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களிலோ தங்களது பதிவுகளை புதுப்பித்துக் கொள்ளலாம்.

அவ்வாறு பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு புதுப்பித்தல் மாதத்திலிருந்து 18 மாதங்கள் வரை கால அவகாசம் ஒரே ஒருமுறை மட்டும் சலுகையாக வழங்கப்பட்டு வந்தது. இப்போது அரசால் கம்ப்யூட்டர் வழியே ஒருங்கிணைப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், ஆன்லைனில் புதுப்பிக்க ஏதுவாக ஒரேசீரான நடைமுறை கடைப்பிடிக்கும் வகையில் 18 மாத புதுப்பித்தல் சலுகையை மறுமுறை கோரினாலும் அனுமதிக்கலாம் என உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்களுக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த 18 மாத புதுப்பித்தல் சலுகை தளர்த்தப்பட்டு அடுத்த புதுப்பித்தல் தேதிகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அவ்வாறு, விடுபட்ட பதிவினை 18 மாத சலுகையின்படி, புதுப்பிக்கையில் பழைய பதிவு மூப்பு கணக்கில் கொள்ளப்படும் என தனது அறிவிப்பில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக