திங்கள், 11 அக்டோபர், 2010

தீப்பிடிக்காத அற்புதக் கூரைகள்!

இயற்கை நமக்குத் தந்த செல்வம் சம்பா புல்! சம்பங்கோரை என்று தமிழிலக்கியம் கூறும் இப்புல் ஏரிகளில்தான் வளரும் (விளையும்). இதன் சிறப்பு தீப்பற்றினால் பிறவகை புற்கள், கீற்றுகள் போல் கொழுந்து விட்டெரியாது. வீணர்களாலோ மற்றும் அறியாமலோ பிற வகையான கூரைகள் தீப்பிடித்தால் கூட நீண்ட நேரம் எரியும். ஆனால் சம்பா புல் மட்டும் தீப்பிடித்ல் ஓரிரு அடிகள் கூட பரவாது. கருகி அங்கேயே புகை மண்டும். புகையை நாம் பார்த்தமட்டில் தண்ணீர் விட்டு அணைக்கலாம். கருகிய சிறு பாகத்தை நீக்கிவிட்டு செலவின்றி அப்படியே சரிசெய்துவிடலாம்.

இயற்கை நமக்களித்த கொடை இதுவாகும். உலகில் இது போன்ற ஒருவகைப் புல் இனம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் திண்டிவனம் வட்டத்தில் உப்பு வேலூரில் அதை அடுத்த கிராம ஏரிகளில் இச்சம்பா புல் விளைகிறது. மஞ்சம் புல்லைவிட அடர்தியாக விளைகிறது. எடையும் குறைவானது. உப்பு வேலூர் பக்கமுள்ள கிராமங்களில் வீடு கட்ட, கல்நடைக் கொட்டகைகள் அமைக்க இப்புல்லை உபயோகிக்கின்றனர். கூரை வேய்ந்தால் கோடையிலும் குளிர்ச்சியாக இருக்கும். செலவின்றி ஏரியில் வளரும் சம்பா புல்லால் நீர் நிரம்பிய போது சுற்றியும் குளிர்ந்த காற்று வீசும்.

சிமெண்டு ஓடு கூரைக்குச் சார்பாகக் குரல் எழுப்புவோர், தென் ஓலைக் கூரையில் வாழ்க்கை நடத்துபவர்களையும் ஆதரித்துப் பேசுபவர்கட்கு இடையில் இந்த ஓர் அரிய செய்தியை அறிய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். சிமெண்ட் ஓடு கூரைக்கும், மஞ்சம்புல் வேய்ந்த கூரைக்கும் ஆகும் செலவையும் எண்ணிப் பார்த்தால் செலவு குறைவதுடன் சற்று நீடித்த கூரையின் ஆயுள், உடலாரோக்கியம், தீ பற்றிய பயமின்மை என அறிந்திடின் சம்பாபுல் கூரையே சிறந்ததாகும்.

மஞ்சம்புல் கூரையை விட மூன்றாண்டுகள் நீடித்த ஆயுள் சம்பா புல் கூரைக்கே உண்டு என்பது சிறப்பு. அரசு தற்போது ஏரிகளில் கருவேல் மரங்களை வளர்த்து வருகின்றனர். அதனால் தீங்கு அதிகம். அம்மரங்கள் நீரினை அதிகம் உறிஞ்சுகிறது. சுற்றுப்புறச் சூழலை கெடுக்கிறது. நிலவளமும் பாழ்படுகிறது. பதிலாக சம்பாபுல் ஏரிகளில் வளர்த்தால் தீமைகளின்றி குடிசைகள் செம்மைப்படும். இந்த அ‌ற்புதக் கூரைகளைப் பற்றி நாமும் சிந்திப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக