திங்கள், 1 மார்ச், 2010

சென்னையில் ‘டம்மி’ குண்டுவெடித்து 3 வீடுகள் சேதம்: 6 பேர் காயம்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் திரைப்படங்களுக்காக பயன்படுத்தப்படும் ‘டம்மி’ குண்டு வெடித்ததில் 3 வீடுகளும் ஒரு கடையும் தரைமட்டமானது. இதில் கணவன்-மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னை மேற்கு மாம்பலம் காந்தி வீதியில் வசித்து வந்தவர் ரவி(42). இவர் தனது மனைவி ரத்னா(38) மற்றும் குடும்பத்தினரோடு வாடகை வீட்டில் வசித்து வந்தார். சினிமா சூட்டிங்கில் பயன்படுத்தும் ‘டம்மி’ வெடிகுண்டுகள் தயாரிக்கும் தொழிலை ரவி செய்து வந்தார்.

நேற்று இரவு 8 மணியளவில் ரவி வீட்டில் வைத்திருந்த டம்மி வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் திடீரென்று வெடித்து சிதறியது. அப்போது வீட்டில் ரவியும் அவரது மனைவி ரத்னாவும் இருந்தனர். அவர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் வசித்து வந்த வீடு இடிந்து தரைமட்டமானது.

அவர்கள் வீட்டிற்கு அருகே இருந்த குளிர்பானக் கடையும் சரிந்து விழுந்தது. ரவி வசித்து வந்த வீட்டின் மேல் மாடியும் பக்கத்தில் இருந்த இன்னொரு வீடும் இடிந்து தரைமட்டமானது. மொத்தம் 3 வீடுகளும், ஒரு கடையும் இடிந்து தரைமட்டமானது.

சத்தம் கேட்டு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். வெடித்தது டம்மி குண்டாக இருந்தாலும் உண்மையான குண்டு வெடித்தது போல பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக அந்த பகுதி மக்கள் கூறினார்கள்.

குண்டு வெடிப்பில் காயமடைந்த ரவியும், அவரது மனைவி ரத்னாவும் உடனடியாக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் உயிருக்கு போராடியதால் பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக