செவ்வாய், 9 மார்ச், 2010

ஏர் இந்தியாவுக்கு ரூ.5,400 கோடி நஷ்டம் - பிரஃபுல் பட்டேல் தகவல்.


டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ. 5 ஆயிரத்து 400 கோடி நஷ்டம் ஏற்படும் என கணிக்கப்படுவதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேல் தெரிவித்தார்.

ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே கடந்த 2007-08ம் நிதியாண்டில் ரூ.2 ஆயிரத்து 226 கோடியும், 2008-09ம் நிதியாண்டில் ரூ.5 ஆயிரத்து 548 கோடியும் நஷ்டத்தை எதிர்கொண்டது.

இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் ஏற்பட்ட நஷ்டத் தொகையையும் சேர்த்தால் கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் மட்டும் ஏர் இந்தியா மொத்தம் ரூ. 13,174.16 கோடி நஷ்டம் அடைந்துள்ளது.

ராஜ்யசபாவில் நேற்று கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கையில் இத்தகவலை தெரிவித்த அமைச்சர் பிரஃபுல் பட்டேல், வரும் 2013ம் ஆண்டு வரை ஏர் இந்தியா நஷ்டத்தை எதிர்கொண்டாக வேண்டும் எனக் கூறினார்.

செலவு குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் வருமானத்தை பெருக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

2009-10ம் நிதியாண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ரூ.1,911 கோடி மிச்சப்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் ரூ.753 கோடி மட்டுமே ஏர் இந்தியாவால் சிக்கனப்படுத்த முடிந்தது என்றும் அமைச்சர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக