ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

வங்கிக் கடன்களுக்கான வட்டிகள் கடும் உயர்வு!


மும்பை: பல்வேறு முதலீட்டு மற்றும் நுகர்வோர் கடன்களுக்கான வட்டிகளை 100 புள்ளிகள் வரை உயர்த்த இந்திய வணிக வங்கிகள் முடிவு செய்துள்ளன. ஏற்கெனவே சில அரசு வங்கிகள் இந்த உயர்வை அமலுக்குக் கொண்டுவந்துவிட்டன.

சமீபத்தில் வைப்புத் தொகைகளுக்கான (டெபாஸிட்ஸ்) வட்டி வீதங்களை 75 புள்ளிகள் வரை வங்கிகள் உயர்த்தின. ஐசிஐசிஐ வங்கியும் இதே அளவு வட்டியை உயர்த்தியது. ஆனால் வாடிக்கையாளர்கள் இதற்கான மகிழ்ச்சியை அனுபவிக்கக் கூட அவகாசம் தராமல், கடன்களுக்கான வட்டிகளை கடுமையாக உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது அதே வங்கி.

இந்த முறை ஒரேயடியாக 100 புள்ளிகள் வரை, அதாவது 1 சதவிகிதம் வரை இந்த வட்டி வீத உயர்வு இருக்கும் என்று ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்சார் கூறியுள்ளார்.

அரசு வங்கிகள் ஏற்கெனவே இந்த வட்டி வீத உயர்வை அமல்படுத்தி விட்டன. இந்தியன் வங்கி போன்றவை ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வரும் வரை கூட காத்திருக்காமல் கடந்த வாரமே கடன்களுக்கான வட்டி வீதத்தை உயர்த்தி பரபரப்பைக் கிளப்பியது நினைவிருக்கலாம்.

இதுகுறித்து இதுவரை மத்திய நிதியமைச்சமோ, ரிசர்வ் வங்கியோ எதுவும் கூறாமலிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக