திங்கள், 30 ஆகஸ்ட், 2010

மனித உரிமைகளுக்குக் காவலா? அச்சுறுத்தலா?


“காவல் துறையினரின் நடவடிக்கைகளின் காரணமாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனித உரிமைகள் மீறப்படாத ஒரு சூழலை உயர் அதிகாரிகளாகிய நீங்கள் உறுதி செய்ய வேண்டும்” என்று தேச மனித உரிமை ஆணைய்த்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

காவல்துறையினர் மக்களின் காவலர்களா? அல்லது ஆட்சியாளர்களின் கருவிகளா? என்ற கேள்வி நமது நாட்டு மக்களிடையே நீண்ட காலமாக ஒரு விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. ஏனெனில், மக்களின் பாதுகாவலன் என்ற நிலையில் காவல் துறையினர் செயல்படும் காலம் ஒன்றை இந்தியாவின் எந்த மாநிலத்து மக்களும் இதுவரை அனுபவிக்கவில்லை என்பதே!

உலகில் வேறு எந்த ஜனநாயக நாட்டையும் விட, இந்தியாவில் தான் மனித உரிமை மீறல்களில் அதிகம் ஈடுபடுவது காவல் துறையினராக உள்ளனர் என்பது வெளிப்படையான உண்மையாகும். அதனால்தான், இந்த நாட்டின் தேச மனித உரிமை ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள நீதிபதி பாலகிருஷ்ணன் அவர்கள் இவ்வாறு பேசியுள்ளார்.

தலைநகர் டெல்லியில், நமது நாட்டின் உள்நாட்டு உளவுத் துறை (இண்டலிஜன்ஸ் பியரூ) சமீபத்தில் ஏற்பாடு செய்த காவல் துறை தலைவர்கள், காவல் தலைமை ஆய்வாளர்கள் மாநாட்டில், முதல் முறையாக தேச மனித உரிமை ஆணையத்தின் தலைவர் உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி பாலகிருஷ்ணனுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கலந்துரையாடலில், காவல் துறைத் தலைவர்கள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் பல கேள்விகளைக் கேட்டுள்ளனர் என்றும், அதற்கெல்லாம் நீதிபதி பாலகிருஷ்ணன் உரிய விளக்கங்கள் அளித்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
இந்த மாநாட்டில் பேசிய நீதிபதி பாலகிருஷ்ணன், காவல் துறையினருக்கு அளித்துள்ள பல யோசனைகள், காவல் துறைத் தலைவர்களால் முழுமையாக பின்பற்றப்படுமானால், அது உண்மையிலேயே நமது நாட்டின் சமூகச் சூழலில், ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.

“சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்ற உணர்வோடு தங்களுக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளும், காவலர்களும் நடந்து கொள்வதை மூத்த அதிகாரிகள் உறுதி செய்தால், அதுவே மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பாதுகாப்பாக அமையும்” என்று நிதிபதி பாலகிருஷ்ணன் கூறியிருப்பது மிக முக்கியமானது.

இங்கே சட்டத்தின் ஆட்சி என்று கூறியிருப்பது, இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் ஆட்சி என்பதை காவல் துறையினரில் எத்தனை பேர் புரிந்துகொண்டிருப்பார்கள் என்பது கேள்விக்குறியே! சட்டத்தின் ஆட்சி என்றால், தங்களுக்குள்ள அதிகாரத்தை உச்சக்கட்ட அளவிற்குப் பயன்படுத்துவது என்ற புரிதல்தான் காவல் துறையிலுள்ள பெரும்பான்மையாளர்களுக்கு உள்ளது என்பதை அவர்களின் பேச்சிலும், மக்களுடனான அவர்களின் அணுகுமுறையிலும் வெகுவாக புலப்படுகிறது.

நமது நாட்டின் காவல் துறையினரின் பொதுவான மனப்பாங்கு, வெள்ளையன் காலத்து காலனி ஆதிக்க அரசில் பணியாற்றிய காவலர்களின் மனப்பாங்கோடுதான் இப்போதும் தொடர்கிறது. தங்களைக் கண்டு மக்கள் அஞ்சி, அடங்கி இருக்க வேண்டும் என்பதை மிரட்டலான நடத்தையின் மூலம் இன்றளவும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதேபோல், வெள்ளை துரைமார்களுக்கு எப்படி அதீத மரியாதை காட்டி நடந்துகொண்டார்கள் என்று சினிமாவில் பார்க்கிறோமா, அதேபோல்தான் இன்றளவும் ஆட்சியாளர்களுக்கு அதீத மரியாதை கொடுத்து நடந்துகொள்கிறார்கள். ஆட்சி மாறினால், அவர்களும் தங்களது மரியாதைகளை மாற்றிக் கொள்கிறார்கள். அது எந்த அளவிற்கு செல்லும் என்பதை முன்னாள் முதல்வர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது அந்தப் ‘பணி’யை நிறைவேற்றிய காவல் அதிகாரிகள் நடந்துகொண்டதே அதற்கு அத்தாட்சியாகும்.

நாம் இன்னமும் ஒரு விடுதலை பெற்ற நாட்டின் குடிமக்களாகவில்லை என்பதை பல நேரங்களில் நிரூபிப்பவர்கள் காவல் துறையினரே. சமீபத்தில் திருவள்ளுவர் மாவட்டம் திருப்பெரு்ம்புதூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்காக தங்கள் நிலங்களை கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கையை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்ற மக்கள் மீது, அவர்கள் போக்குவரத்திற்கு இடையூறு செய்கிறார்கள் என்று கூறி காவல் துறையினர் நடத்திய தடியடித் தாக்குதல்!

இதேபோல், தஞ்சை மாவட்டம் வடசேரி கிராமத்து மக்கள் தங்கள் ஊரின் வேளாண்மைக்கு வேட்டு வைக்கும் வகையில் அமையவிருந்த எரிசாராய தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு வந்தபோது ஏற்பட்ட ஒரு சிறு சம்பவத்தை சாக்காக வைத்து, பெரியவர்கள், பெண்கள் என்று பாராமல் காட்டுமிராண்டித்தனமாக அவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தடியடித் தாக்குதல். இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளரே ‘தலைமை’யேற்று நடத்தி முடித்ததுதான் வேதனையான வேடிக்கை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக