வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

கண் பார்வையைத் திருடும் கிளொகோமா!


கண் நரம்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதித்து, இறுதியில் கண் பார்வையை முற்றிலுமாக அழித்துவிடும் கிளொகோமா எனும் வியாதி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

இந்தியாவில் பார்வைக் கோளாறுகளால் கண் பார்வையைப் பறிக்கும் இரண்டாவது பெரிய அச்சுறுத்தலாக கிளொகோமா உள்ளது என்று கூறும் கண் மருத்துவர்கள், இதனை ஆரம்ப நிலையில் கண்டு பிடித்து சிகிச்சையளித்தால் பார்வையைக் காப்பாற்றிவிடலாம் என்று கூறுகின்றனர்.

ஆனால் தங்கள் பார்வை மங்கி வருவதை பொதுவாக மக்கள் அறிவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள். கண்ணின் பார்வை நரம்புகளைத் தாக்கும் இந்த நோய் மிக மெதுவாக பரவுவதால், பாதிக்கும் மேற்பட்ட அளவிற்கு பார்வை மங்கும் நிலையிலேயே மருத்துவர்களை நாடுகிறார்கள் என்றும், இதனால் அவர்கள் இறுதிவரை சிகிச்சையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும் கூறுகின்றனர்.

சென்னையில் கண் மருத்துவத்தில் சிறந்து விளங்கிவரும் சங்கர நேத்ராலயாவின் மருத்துவர் எல்.விஜயா, கிளொகோமாவை ஆரம்பத்தில் கண்டுபிடித்துவிட்டால் கண் பார்வையை காப்பாற்றிவிடலாம் என்று பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தங்களுக்கு கிளோகோமா உள்ளது என்பதையே பலரும் அறிவதில்லை, அது நன்கு பரவிய பிறகுதான் அறிந்து கொண்டு மருத்துவத்திற்கு வருகின்றனர் என்று கூறும் மருத்துவர் விஜயா, கிளொகோமாவை ‘மெளனப் பார்வைக கொல்லி’ என்று வர்ணிக்கிறார்.

கிளோகோமாவி்ற்கு கண்ணில் மருந்தை விடுதல், கதிர் சிகிச்சை, அறுவை ஆகியன உள்ளது. ஆனால் இவையாவும் கிளோகோமா பரவாமல் தடுப்பதற்கான சிகிச்சையாக மட்டுமே உள்ளன.

கிளோகோமா நன்கு பரவியவர்கள் குறித்த கால இடைவெளியில் கண் பார்வையை சோதித்துக் கொள்வது, தவறாமல் மருந்துகளை எடுத்துக் கொள்வது மிக அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கிளோகோமா என்று கூறி, அதற்கு அறுவை சிகிச்சை அவசியம் என்று கூறி பணம் கறக்கும் மருத்துவர்களும் உள்ளனர். என்வே கண் பார்வை சோதனையை நம்பத்தக்க, மிகச் சிறந்த மருத்துவமனைகளில் மட்டும் செய்துக்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக