திங்கள், 15 பிப்ரவரி, 2010

புனே குண்டுவெடிப்பு: துப்பு கொடுத்தால் ரூ.1 கோடி பரிசு


புனே குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுப்பவருக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடலாமா என மத்திய அரசு ஆலோசித்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புனேவிலுள்ள கோரேகான் பகுதியில் உள்ள ஜெர்மன் பேக்கரி முன்பாக நேற்று முன்தினம் இரவு 7.15 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர்.மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் நடத்தப்பட்ட மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலாக இது கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுப்பவருக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கலாமா என அரசு, உயர்மட்ட அளவில் ஆலோசித்து வருவதாகவும், விரைவிலேயே இது குறித்த சாதகமான முடிவெடுக்கப்படலாம் என்றும், மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

" துப்பு கொடுப்பவருக்கு பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பை நாங்கள் வெளியிட்டால், தகவல் தெரிவிப்பவரது அடையாளம் பாதுகாக்கப்படும் என்ற உறுதியையும் தெரிவிப்போம்.

துப்பு கொடுப்பவரது பெயரைக் கூட நாங்கள் கேட்கமாட்டோம்.ஆனால் பரிசு கொடுக்கப்படும்.அதே சமயம் கொடுக்கும் தகவல் சரியானதாக இருக்க வேண்டும்" என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக