திங்கள், 18 ஜனவரி, 2010

1 ரூபாய்க்கு குறைவாக பிச்சை வாங்க மாட்டோம்


கோவை: கோவை மாவட்டம் பேரூரில் புகழ் பெற்ற பட்டீஸ்வரர் மற்றும் பச்சைநாயகி அம்மன் கோயில் உள்ளது. இங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் ஆண்டு முழுவதும் வந்து செல்கின்றனர். பொங்கலை முன்னிட்டு கடந்த 5 நாள் கூட்டம் அலை மோதியது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் இங்கு குவிந்தனர்.

நேற்று முன்தினம் கோயில் பிரதான வாசல் முன்பு மற்றும் நொய்யல் ஆற்றுக்கு செல்லும் வழியில் அமர்ந்திருந்த பிச்சைக்காரர்கள் சத்தம் போட்டு பிச்சை கேட்டனர். இது பக்தர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தியதால் கோவில் நிர்வாகம் இரவோடு, இரவாக பிச்சைகாரர்களை அப்புறப்படுத்தியது. ‘சத்தம் போடாமல் பிச்சை கேட்போம்‘ என்று பிச்சைக்காரர்கள் உறுதி கூறியதால், மீண்டும் ரோட்டின் இருபுறமும் அமர அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பக்தர்கள் வழங்கிய 25, 50 பைசாவை ஏற்க மறுத்தனர். ‘25, 50 பைசா செல்லாது, டீ குடிக்கவே ரூ.5 தேவைப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.1 வழங்குங்கள்‘ என்று வற்புறுத்தினர்.

இது குறித்து பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். நிர்வாகத்தினர் பிச்சைக்காரர்களை அழைத்து விசாரித்தனர். ‘தமிழ்ப்புத்தாண்டு முதல் ரூ.1க்கு குறைவாக பிச்சை வாங்குவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம்‘ என பிச்சைக்காரர்கள் கூறினர். இதனால் கோயில் நிர்வாகமும் அதிர்ச்சியடைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக