வியாழன், 14 ஜனவரி, 2010

27000 பணியாளர் நியமனம்… இளைஞர்களுக்கு எஸ்பிஐ தரும் இன்ப அதிர்ச்சி!


நல்ல வேலை வேண்டும் என்ற கனவிலிருக்கும் ஆயிரக் கணக்கான இளைஞர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி மீண்டும் ஒரு அருமையான சந்தர்ப்பத்தை உருவாக்கித் தருகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கி, அரசாங்கத்துக்கு வங்கி என்ற பெருமையுடைய எஸ்பிஐ, இந்த ஆண்டு மட்டும் புதிதாக 27 ஆயிரம் பேரை பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளது.

மேலும் புதிதாக நாடு முழுவதும் 1000 கிளைகளை திறக்கவும் முடிவெடுத்துள்ளது.

இதுகுறித்து, பாரத ஸ்டேட் வங்கியின் துணைப் பொது மேலாளர் அனுப் பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியது:

கிளார்க் பணிக்கு 20 முதல் 22 ஆயிரம் பேரும், அதிகாரிகள் பணிக்கு 5500 பேரும் இந்த ஆண்டு மட்டும் தேர்வு செய்ய உள்ளோம்.

கிராமப்புற செயல்பாடுகளில் கவனத்தை அதிகரிக்கும் வகையில் 2000 அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் புதிதாகவும் நியமிக்கப்படலாம்… அல்லது ஏற்கெனவே உள்ள கிளைகளிலிருந்தும் அனுப்பப்படலாம்.

குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்காவது அவர்கள் கிராமப் புறங்களில் பணியாற்றுவார்கள். கிராமப் புறங்களில் வங்கிச் சேவைகளை அதிகரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தவே இந்த ஏற்பாடு.

நேரடி நியமனம்…

அவசியம் கருதி சில பணிகளுக்கு நேரடியாக பணியாளர்களை நியமிக்க உள்ளது வங்கி.

மேலும், கிளை மேலாளர் பொறுப்பு முதல் உதவிப் பொதுமேலாளர் வரையிலான பதவிகளுக்கு நேரடியாகவே ஆட்களை நியமிக்க உள்ளோம்,” என்றார்.

கடந்த ஆண்டில் மட்டும் பாரத ஸ்டேட் வங்கி 25 ஆயிரம் பேரை பணியமர்த்தியது குறிப்பிடத்தக்கது.

பாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை அதன் அதிகாரப்பூர்வ இணைய தளங்களை www.statebankofindia.com , www.sbi.co.in
தொடர்ந்து பாருங்கள்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக