வெள்ளி, 29 ஜனவரி, 2010

ஒரு நிமிடம் பேசினால் ரூ.1.50 லட்சம் கட்டணம்


லண்டன் : பிரிட்டனின் முன்னாள் பிரதமரான டோனி பிளேர் ஒரு நிமிடச் சொற்பொழிவுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாகப் பெறுகிறார்.

லான்ஸ்டவுண் பார்ட்னர்ஸ் என்ற லண்டன் ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவன ஊழியர்கள் மத்தியில் பேசுவதற்காக இந்தக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாம்.
இந்தக் கட்டணம் உண்மைதானா என்ற கேள்விக்கு டோனியின் பேச்சாளர் பதில் கூறவில்லை. ஆனால் உலக அளவில் சிறந்த சொற்பொழிவாளராக டோனி திகழ்கிறார் என பெரும் சொற்பொழிவே நிகழ்த்திவிட்டார். அவரது கட்டுரைகளுக்காக அவது புத்தகத்தை வெளியிடும் நிறுவனம் 46 லட்சம் பவுண்டுகள் தந்துள்ளது என்றார்.

அமெரிக்க வங்கி ஜேபி மார்கன் மற்றும் ஜூரிச் பைனான்சியல் சர்வீசஸ் எனும் இரண்டு நிறுவனங்களுக்கு ஆலோசகராக டோனி இருக்கிறார். ஜேபி மார்கன் ஆண்டுக்கு 20 லட்சம் பவுண்டுகள் வழங்குகிறது. ஜூரிச் பைனான்சியல் சர்வீசஸ் 5 லட்சம் பவுண்டு வழங்குகிறது. இதைத் தவிர அவருக்கு ஆண்டுக்கு 63,000 பவுண்டுகள் ஓய்வூதியமும் கிடைக்கிறது.
ஸ்பெயின் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் நிகழ்த்திய 90 நிமிட சொற்பொழிவுக்காக 1,80,000 பவுண்டுகள் அவருக்கு கிடைத்துள்ளது என்று அவர் கூறினார்.

பிரதமர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு இதுவரை ஒரு கோடி பவுண்டுகள் டோனி பிளேர் சம்பாதித்திருக்கிறார் என கணக்கிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக