வியாழன், 14 ஜனவரி, 2010

இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம்


லண்டன் : இடுப்பு, தொடை மற்றும் பின்புறத்திலும் சதைப்பிடிப்பாக இருந்தால் இதயநோய் வராது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.
உடலில் வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு, உடலின் பின்புற இருக்கைப் பகுதியில் சேரும் கொழுப்பு மற்றும் தொடைப் பகுதியில் உள்ள கொழுப்பு குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக நிபுணர்கள் குழு ஒன்று ஆய்வு நடத்தியது. ஆய்வு முடிவுகளை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

இதயம் மற்றும் ரத்தஓட்டம் தொடர்பான நோய்களைக் குறைக்க புதிய அணுகுமுறைகளை வகுக்க உடலில் கொழுப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிவதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இடுப்புக்கு கீழே உடலின் பின்புறத்தில் சேரும் கொழுப்பில் ஆபத்தான கொழுப்பு அமிலங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்தக் கொழுப்பில் அழற்சியைக் கட்டுப்படுத்தும் பொருள் ஒன்றும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பொருளும் உள்ளது. எனவே இந்தக் கொழுப்பு பாதுகாப்பு தரும் கொழுப்பாகும். இந்தப் பாதுகாப்புப் பொருள்கள் தொப்பைக் கொழுப்பிலோ, தொடையில் சேரும் கொழுப்பிலோ காணப்படுவதில்லை.

இடுப்புக்கு கீழே பின்புறத்திலும் தொடையிலும் சேரும் கொழுப்பு எளிதாகச் சிதைவதில்லை. வயிற்றுப் பகுதிக் கொழுப்பு தேவையான காலங்களில் எளிதாக சிதைந்து தேவையான சக்தியை வெளியிடுகிறது. அத்துடன் மற்ற நச்சுத் தன்மையுள்ள பொருள்களும் வெளியாகின்றன. இவை அழற்சியை ஏற்படுத்தக் கூடியவை. இதய நோய், சர்க்கரை நோய் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடியவை. எனவே வயிற்றுப் பகுதி கொழுப்பு எப்பொழுதும் அபாயமானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உடலும் இடுப்பின் பின் பகுதியும் கொழுப்பு இல்லாமல் இருக்கும் பொழுது தொடையில் கொழுப்பு இருந்தால் நல்லது. ஆனால் இயற்கையில் அப்படி இருப்பதில்லை. மூன்று பகுதிகளிலும் கொழுப்பு திரள்வது இயல்பாகவே சீரான விகிதப்படி நடக்கிறது ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக