புதன், 6 ஜனவரி, 2010

நெல்லை இளம்பெண் சிங்கப்பூரில் மர்மசாவு


வி.கே.புரம் : நெல்லை மாவட்டம், வி.கே.புரம் வைத்திலிங்கபுரம் தெருவைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவரது மனைவி வடிவு. இவர்கள் மகள் முத்துலட்சுமி (21). மகன் மாரியப்பன் (19). மாரியப்பன் பாலிடெக்னிக் படித்து வருகிறார்.

வடிவுவின் உறவினரான கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பொன்னு ஸ்ரீதரன் என்பவர், சிங்கப்பூரில் உள்ள தனது மருமகன் ஆகாஷ் பாத்தியா வீட்டில் வேலை செய்ய முத்துலட்சுமியை அனுப்புமாறு கூறினார். இதற்கு வடிவு சம்மதம் தெரிவித்தார். மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் பேசி, முத்துலட்சுமி சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 2 மாதம் சம்பளம் அனுப்பிய முத்துலட்சுமி போனில் அடிக்கடி பெற்றோரிடம் பேசியுள்ளார்.
இந்நிலையில், 2 நாள் முன்பு சிங்கப்பூரில் இருந்து ஒருவர் சங்கரநாராயணனை போனில் தொடர்பு கொண்டு, முத்துலட்சுமி இறந்து விட்டதாக கூறிவிட்டு, தொடர்பை துண்டித்தார். சங்கரநாராயணன் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து, பொன்னு ஸ்ரீதரனிடம் பேசியதில், சரியான பதில் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று காலை சங்கரநாராயணன் முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், ‘முத்துலட்சுமி உடலை சிங்கப்பூரில் அடக்கம் செய்ய உங்கள் அனுமதி தேவைப்படுகிறது. இதில் கையெழுத்திட்டு பேக்ஸ் செய்ய வேண்டுகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த சங்கரநாராயணன், மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும், உடலை மீட்டு தருமாறும் கோரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக